search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#ஒகேனக்கல்"

    • மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவியில் ஆகிய அருவிகளில் செம்மண் நிறத்தில் புதுவெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை காரணமாக மெயின் அருவில் செல்லும் பாதையை மாவட்ட நிர்வாகத்தினர் பூட்டுபோட்டு அடைத்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலையில் இருந்து வந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு அணைகளில் இருந்து உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக கர்நாடாகவில் உள்ள கபினி அணைக்கு 25 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை சற்று சரிந்து 21,107 கனஅடியாக குறைந்தது. தொடர்ந்து நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடிக்கு இருப்பதால் கபினி அணையின் முழு கொள்ளளவான 84 அடியின் நீர்மட்டம் இன்று 82.27 அடியாக எட்டியுள்ளது. இதன்காரணமாக கபினி அணையில் இருந்து உபரி நீரை 20 ஆயிரம் கனஅடி அளவில் திறந்து விடப்பட்டுள்ளது.

    கே.ஆர்.எஸ். அணையில் இன்று காலை நிலவரப்படி 33,600 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. கே.ஆர்.எஸ். அணைக்கும் தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 110.82 அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1,362 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளில் இருந்து மொத்தம் 21,362 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 26-ந் தேதி மாலை இருமாநில எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு வந்தடைந்தது. இதன்காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. ஒகேனக்கல்லில் நேற்று காலை 16,500 கன அடியாகவும், மாலையில் 18,500 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து இன்று காலை படிப்படியாக உயர்ந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் அங்குள்ள மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவியில் ஆகிய அருவிகளில் செம்மண் நிறத்தில் புதுவெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு கடந்த 26-ந் தேதி நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடிக்கு மேல் வந்ததால், மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று 3-வது நாளாகவும் பரிசல் இயக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கும் நிலையில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும், காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்வதாலும், இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை காரணமாக மெயின் அருவில் செல்லும் பாதையை மாவட்ட நிர்வாகத்தினர் பூட்டுபோட்டு அடைத்தனர். இதனால் மெயின்அருவிக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதேபோன்று காவிரி ஆற்றிலும் யாரும் இறங்கி விட கூடாது என்பதற்காக தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நீர்வரத்து அதிகரிப்பால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளான முதலைபண்ணை, ஊட்டமலை, ராணிப்பேட்டை, நாடார்கொட்டாய், கூத்தப்பாடி ஆகிய பகுதிகளிலும், காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளிலும் வாகனத்தில் ஒலிப்பெருக்கியை கட்டி சென்று பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    • 22 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
    • பரிசல்கள் இயக்கத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டதால் ஒகேனக்கல் பரிசல்துறை அருகே பரிசல்கள் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன.

    ஒகேனக்கல்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் 22 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

    இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் அதிகரித்து வந்தது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்தை அளவீடு செய்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
    • சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் சாந்தி தடை விதித்தார்.

    தருமபுரி:

    கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய இரு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதையடுத்து இன்றுகாலை 8 மணி நிலவரப்படி தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

    மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் சாந்தி தடை விதித்தார். இதனால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் பரிசல் மூலம் சென்று கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கேரளா, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

    இதனால் கபினி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவான 2284 அடியை எட்டியுள்ளது.

    இதன் காரணமாக காவிரி ஆற்றில் கபினி அணையில் இருந்து உபரி நீர் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 49 ஆயிரம் கனஅடி அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் தற்போது 102.35 அடியை எட்டியுள்ளது.

    தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அதன் முழு கொள்ளளவை விரைவில் எட்டி விடும் என்பதால், அணையில் இருந்து வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரிநீர் நேற்று மதியம் 2 மணி அளவில் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தானது நேற்று நிலவரப்படி விநாடிக்கு 2,500 கன அடியாக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 5000 கன அடியாக அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்த வண்ணமாக உள்ளது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    தற்போது கர்நாடகா அணைகளில் இருந்து 22,600 கனஅடி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும். எனவே, காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேறவும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், அதேபோல சுற்றுலா பயணிகள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்றும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கின் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தப்படி சென்றனர்.

    கர்நாடகா அணைகளில் மேலும் தண்ணீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இன்று திறந்து விடப்பட்ட 22,600 கனஅடி தண்ணீர் இன்று மாலைக்குள் விரைவில் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் பரிசல் மூலம் சென்று கண்காணித்து வருகின்றனர்.

    • காவிரி ஆற்றின் பல்வேறு இடங்களில் குவியல் குவியலாக மக்கிய நிலையில் கிடக்கிறது.
    • காவிரி ஆற்றில் தூக்கி எறியப்படும் துணி வகைகளை குவியல்களை கட்டுப்படுத்த நிரந்தர வழிமுறைகள் ஏதும் ஏற்படுத்தவில்லை.

    ஒகேனக்கல், 

    தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலமாக விளங்கும் ஒகேனக்கல் பகுதிக்கு வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லுகின்றனர்.

    இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளான முதலைப் பண்ணை, நாகர்கோவில், பெங்களூர் ஜால், மாமரத்துக்கடவு பிரதான அருவி செல்லும் நடைபாதை, பெண்கள் குளிக்கும் அருவி உள்ளிட்ட பகுதிகளில் குளித்துவிட்டு தாங்கள் பயன்படுத்திய ஆடைகளை அப்படியே காவிரி ஆற்றில் கழற்றி விடுகின்றனர்.

    ஆற்றில் அடித்துச் செல்லப்படும் ஆடைகள் பாறை திட்டுக்கள், கரையோரப் பகுதியில் உள்ள மரங்களின் வேர்கள் ஆகியவற்றால் தடுத்து நிறுத்தப்பட்டு காவிரி ஆற்றின் பல்வேறு இடங்களில் குவியல் குவியலாக மக்கிய நிலையில் கிடக்கிறது.

    தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து காணப்படுவதால், சுற்றுலா பயணிகளால் தூக்கி எறியப்பட்ட துணிகள் ஆங்காங்கே காணப்படுவதோடு மட்டுமல்லாமல் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அனைத்து தரப்பினரையும் முகம் சுளிக்கச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    மேலும் காவிரி கரையோரப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளால் தூக்கி எறியப்படும் துணிகள் போட தொட்டிகள், விழிப்புணர்வு பலகைகள் அமைக்கப்படாததால் காவிரி ஆற்றில் சுகாதார சீர்கேடு நிகழ்வதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    மேலும் தனியார் அமைப்புகள் தன்னார்வலர்கள் மற்றும் மாணவர் அமைப்பினர்கள் ஒன்றிணைந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரையோரப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களால் தூக்கி எறியப்படும் துணிகளை ஆண்டுக்கு ஒரு முறை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது பல ஆயிரம் டன் துணி வகைகள் அகற்றப்பட்டது.

    ஆனால் காவிரி ஆற்றில் தூக்கி எறியப்படும் துணி வகைகளை குவியல்களை கட்டுப்படுத்த நிரந்தர வழிமுறைகள் ஏதும் ஏற்படுத்தவில்லை. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால், ஆங்காங்கே குவியல் குவியலாக கிடக்கும் துணிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
    • இன்றுகாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    ஒகேனக்கல்,

    கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.

    இதனால் இன்றுகாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது. மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    • விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர்.
    • கடைகள் ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    ஒகேனக்கல்:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

    அவர்கள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வார்.

    இதனிடையே இன்று காலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் குறைந்து வந்தது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றனர்.

    மேலும் முதலைப் பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் கடைகள் ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் மீன் மார்க்கெட் மற்றும் மீன் வறுவல் கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார், ஊர்காவல் படையினர் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • விலைமதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுகிறது.
    • ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி ஆபத்தில் சிக்குபவர்களை நிரந்தர மாக கட்டுப்படுத்த தேவை யான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலத்துக்கு ஆண்டின் பெரும்பகுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை இருந்து கொண்டே இருக்கும்.

    தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், சில நேரங்களில் வெளிநாட்டவர்களும் கூட இங்கே சுற்றுலா வந்து செல்கின்றனர்.

    இங்கு, காவிரியாற்றின் சில பகுதிகள் சுழல் மற்றும் இழுவை நிறைந்த பகுதியாக உள்ளன. இதுதவிர, சில பகுதிகளில் ஆற்றில் முதலைகள் உள்ளன.

    ஒகேனக்கல் அடுத்த ஆலம்பாடி உட்பட இது போன்ற பகுதிகளை தேர்வு செய்து, ஆபத்தான பகுதி.

    இங்கு குளிக்கவோ, ஆற்றில் இறங்கவோ கூடாது' என 5-க்கும் மேற்பட்ட மொழிகளில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இருப்பினும் இந்த அறிவிப்புகளையும் மீறி சிலர் காவிரியாற்றில் குளிப்பது உள்ளிட்ட நடவடிக் கைகளில் ஈடுபடுகின்றனர்.

    இவர்களை கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவோரில் பெரும் பாலானவர்கள் ஒகேனக்கல் காவிரி ஆற்றோர பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை மதித்து நடக்கின்றனர்.

    ஒரு சிலர் எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு ஆற்றின் அருகில் செல்வது, ஆற்றில் இறங்குவது, குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரில் சிலர் சில நேரங்களில் ஆபத்தில் சிக்குகின்றனர். இதனால் விலைமதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுகிறது.

    உயிரிழப்பு நிகழ்ந்த குடும்பங்களில் நீண்ட காலத்துக்கு சோகம் தொடரும் நிலை உருவாகி விடுகிறது. எனவே, அப்பகுதிகளில் காவல்துறை மூலம் கண்காணிப்பை அதிகரித்து இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும்.

    அறியாமை, அதீத நம்பிக்கை போன்றவற்றால் காவிரியாற்றில் உள்ள ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி ஆபத்தில் சிக்குபவர்களை நிரந்தரமாக கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

    • ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்து காணப்படுகிறது.
    • சுற்றுலா பயணிகள் பிரசித்தி பெற்ற மீன் சமையல் ருசித்து சாப்பிட்டு விடுமுறை நாளை கழித்து செல்கின்றனர்.

    ஒகேனக்கல்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் சுற்றுலா தலம் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது.

    இங்கு வெளிமாநிலம், வெளி மாவட்டம் மற்றும் உள் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 400 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்து காணப்படுகிறது.

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை ரசித்தும், தொங்கு பாலத்தில் நின்று அருவிகளில் தண்ணீர் விழுவதையும் பார்த்தனர்.

    மேலும் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சீனி அருவி ஆகிய அருவிகளில் குளித்தும் மகிழ்கின்றனர். பின்னர் இங்கு பிரசித்தி பெற்ற மீன் சமையல் ருசித்து சாப்பிட்டு விடுமுறை நாளை கழித்து செல்கின்றனர்.

    • கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பெய்யாததால் காவிரியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
    • ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டி வருகிறது.

    தருமபுரி:

    கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு 290 கிலோ மீட்டா் பயணித்து தமிழகத்தில் பிலிகுண்டுலு பகுதியில் நுழைந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆறு வழியாக மேட்டூர் அணையை சென்றடைகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து சுமார் 12-க்கும் மேற்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பயன்பாட்டுக்கும் காவிரி நீர் பயன்படுகிறது.

    ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும்.

    கர்நாடக மாநிலத்தில் மழை பெய்ய தொடங்கினால் அங்குள்ள கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, ஆகிய அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை சென்றடையும்.

    இந்த ஆண்டு பருவ மழை தொடங்காத காரணத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்றைய நிலவரப்படி வினாடிக்கு 300 கன அடியாக குறைந்துள்ளது.

    நீர்வரத்து குறைந்ததன் காரணமாக பறந்து விரிந்த காவிரி ஆறு, சிறு ஓடை போல சுருங்கி தண்ணீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நின்று காட்சி அளிக்கிறது.

    தண்ணீர்வரத்து இல்லாத காரணத்தால் ஆற்றுப்பகுதி பாறைகளாக காட்சியளிக்கிறது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி முதல் 2.85 கன அடி வரை தண்ணீா் ஒகேனக்கல் பகுதியை கடந்து சென்றது.

    தற்போது தண்ணீா் வழிந்தோடிய பகுதிகள் வறண்டு பாறை முகடுகளாக காணப்படுகிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கூட்டு குடிநீர் ஏற்றும் பகுதிக்கு தண்ணீர் வராததால் மணல் மூட்டைகளை அடுக்கி சிறு ஓடைகளாக ஓடும் தண்ணீரை தேக்கி நீர் ஏற்றப்படுகிறது.

    400 கன அடியில் இருந்து 300 கன அடியாக நீர் வரத்து குறைந்துள்ளது.

    கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என அம்மாநில துணை முதலமைச்சரும், நீர்வளத் துறை அமைச்சருமான சிவகுமார் தெரிவித்து வருகிறார்.

    தற்பொழுது காவிரி ஆற்றில் குறைந்து வரும் நீரால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும்.

    உடனடியாக தமிழக, மத்திய அரசு மற்றும் கர்நாடகா அரசிடம் பேசி மத்திய அரசின் நதி நீர் ஆணையம் பிறப்பித்துள்ள ஆணையின் படி தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பெய்யாததால் காவிரியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

    இந்த ஆண்டு நீர்வரத்து இல்லாததால் ஒகேனக்கல் காவிரி ஆறு வறண்டு வருகிறது. ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டி வருகிறது.

    கடந்தாண்டு ஜூலை 15-ம் தேதி காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் முதல் 2.85 கனஅடி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கணிசமாக கொட்டியது.
    • ஆலம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர்.

    பென்னாகரம்:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.

    இந்த நிலையில் நேற்று கோடை விடுமுறையின் கடைசி வார ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, முதலை பண்ணை காவிரி ஆறு உள்ளிட்ட இடங்களில் குளித்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

    மேலும் அவர்கள் முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தனர். தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    ஆலம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர்.

    இந்த நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இதன் காரணமாகஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கணிசமாக கொட்டியது.

    இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • மதுவுடன் அசைவ விருந்தினை பரிமாறி சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தி பரிசல் ஓட்டிகள் கூடுதல் பணம் கேட்கின்றனர்.
    • அருவியின் அருகில் நின்று புகைப்படம் எடுப்பதற்காக ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் சென்று குழுவாக புகைப்படம் எடுக்கும் போது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லுகின்றனர்.

    ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளின் பெரும்பாலானோர் காவிரி ஆற்றின் அழகை காண்பதற்காக பரிசில் பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளனர். வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையில் ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

    சுற்றுலாப் பயணிகளில் ஒரு சிலர் பிரதான அருவி, தொங்கு பாலம் ஆகியவற்றை பார்வையிட்ட பிறகு பரிசல் பயணம் மேற்கொள்வதும், பெரும்பாலானோர் மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து நேரிடையாக காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டு மணல்மேடு பகுதி வரை அழைத்துச் செல்கின்றனர்.

    பரிசல் துறைக்கு வரும் பயணிகளிடம் ஒரு சில பரிசல் ஓட்டிகள் தாங்களாகவே அசைவ உணவிற்கான ஏற்பாடுகள் செய்வதாகவும், சமைத்த பின்பு உணவு பரிசலில் எடுத்துக்கொண்டு காவிரி ஆற்றின் கரை ஓரத்தில் குளித்த பிறகு உணவை உட்கொள்ளலாம் என கூறி அழைத்து செல்கின்றனர்.

    பின்னர் பரிசல் பயணம் மேற்கொண்டு பிறகு சினி அருவியை கடந்து காவல்துறையினரால் தடை செய்யப்பட்ட பெரியபாணி, பிரதான அருவி அருகில் உள்ளிட்ட ஆபத்தான இடங்களில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று மதுவுடன், அசைவ உணவுகளை பரிமாறுவதாகவும், ஐந்தருவி பகுதியில் ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் சென்று புகைப்படம் எடுப்பதால் உயிரிழப்பு நிகழ வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலா வரும்போது காவல் நிலையம் அருகே பரிசல் ஓட்டிகள் வாகனத்தினை நிறுத்தி பரிசல் பயணம் அழைத்துச் செல்வதாகவும், அதனுடன் மீன் குழம்புடன் உணவு, மசாஜ் செய்வது ஆகியவற்றை தாங்களே ஏற்பாடு செய்வதாக கூறுகின்றனர்.

    புதிதாக ஒகேனக்கல் பகுதிக்கு வருவார்கள், தனிநபரே அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்வதால் விரைவாக பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு அலைச்சல் இன்றி எளிதில் வீடு திரும்பலாம் என ஒருவரிடமே அனைத்தையும் ஏற்பாடு செய்யுமாறு தெரிவிக்கின்றனர்.

    மாமரத்து கடவு பரிசல் துறையில் இருந்து பரிசல் பயணம் மேற்கொள்ளும் போது ஐந்தருவி பகுதிக்கு அருகில் சென்று புகைப்படம் எடுப்பதற்காக அருவியின் மிக அருகில் அழைத்துச் செல்கின்றனர்.

    பின்னர் மீண்டும் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் போது உணவு தயாராகி உள்ளதாகவும், சினி அருவியில் குளித்துவிட்டு அங்கேயே அமர்ந்து உணவு அருந்த ஏற்பாடு செய்வதாக தெரிவிக்கின்றனர்.

    இதில் மது பிரியர்கள் இருப்பின் அவர்களிடம் மது வகைகளை தாங்களே ஏற்பாடு செய்வதாக கூறி ஒகேனக்கல் பகுதியில் கள்ளத்தனமாக விற்கப்படும் மதுவினை பெற்று அருவிக்கு அருகிலும், தடை செய்யப்பட்ட இடங்களில் அமர வைத்து, மதுவுடன் அசைவ விருந்தினை பரிமாறி சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தி கூடுதல் பணம் கேட்கின்றனர்.

    இதில் ஒரு சிலர் பரிசல் பயணத்தின் போது பரிசலில் மது அருந்த அனுமதிப்பதால் போதையில் சுற்றுலாப் பயணிகள் பரிசல்களை இயக்குகின்றனர். அதனை சுற்றுலாப் பயணிகள் தராவிடில் அங்கேயே வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது மது போதையில் உள்ள சுற்றுலாப் பயணிகள் நிலை தடுமாறி அருவியில் விழுந்தும், ஐந்தருவி பகுதியினை பார்வையிட அழைத்துச் செல்லும் போது அருவியின் அருகில் நின்று புகைப்படம் எடுப்பதற்காக ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் சென்று குழுவாக புகைப்படம் எடுக்கும் போது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    எனவே ஐந்தருவி பகுதியில் ஆபத்தான இடங்களில் விபத்துகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள், சுற்றுலா பயணிகளை ஆசை வார்த்தை கூறி ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பரிசல் ஒட்டிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×