என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா கடத்தல்"

    • 3 பேர் கைது செய்யப்பட்டதுடன் சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
    • துடியலூர் போலீசார் துடியலூர்-வெள்ளக்கிணர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் பெரிய நாயக்கன்பாளையம் டி.எஸ்.பி. நமச்சிவாயம் மேற்பார்வையில் துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குருசந்திரபிரசாத், காவலர்கள் வீரமணி உள்ளிட்டோர் துடியலூர் வெள்ளக்கிணர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 650 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து காரில் வந்த 3 பேரிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில், அவர்கள் அன்னூரை சேர்ந்த பொன்ராஜ், திருப்பூரை சேர்ந்த மதியழகன், கருமத்தம்பட்டியை சேர்ந்த கவுரி சங்கர் என்பது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் கருமத்தம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 650 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், ரூ.66 ஆயிரத்து 650 பணம் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • பாவூர்சத்திரம் அருகே அரசு பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
    • பாவூர்சத்திரம் கல்லூரணி பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பாவூர்சத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாவூர்சத்திரம் அருகே அரசு பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேக்கனிகோட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தன் (வயது 33), பாவூர்சத்திரம் அருகே உள்ள வடக்கு கொண்டலூரை சேர்ந்த வேல்முருகன் (27) என்பதும், காரில் 250 கிலோ குட்கா இருந்ததும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார் குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இவர்களுடன் தொடர்புடைய பாவூர்சத்திரம் கல்லூரணி பகுதியை சேர்ந்த ஜெயராமன் (28) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
    • தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோலப்பஞ்சேரி சோதனை சாவடியில் பூந்தமல்லி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தர வதனம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து காரில் இருந்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்த உசேன் (22) ஜெகன் (24) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து குட்கா, புகையிலையை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் உள்ள கடையில் குட்கா, புகையிலை விற்ற மகேந்திர குமாரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் கைது செய்தனர். அங்கு விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    • போலீசார் கயத்தாறு சுங்கச்சாவடியில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • காரை ஓட்டிவந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    கயத்தாறு:

    பெங்களூரில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் வழியாக காரில் குட்கா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் கயத்தாறு சுங்கச்சாவடியில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக 1,000 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து காரை ஓட்டிவந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி மெயின்ரோட்டை சேர்ந்த சுடலை காந்தி (வயது 35) என்பதும், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்த நெல்லை ரெட்டியார்பட்டிக்கு குட்காவை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. கடத்தி வந்த குட்காவின் மதிப்பு ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.

    இதைத்தொடர்ந்து டிரைவர் சுடலை காந்தியை கைது செய்த போலீசார் அவர் ஓட்டிவந்த கார் மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகம் முழுவதும் குட்கா பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது
    • ஐகோர்ட்டு உத்தரவுக்கு பிறகு குட்கா விற்பவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை பாயாமலேயே உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா விற்பனைக்கு கடந்த 10 ஆண்டுகளாக தடை இருந்து வந்தது.

    இது தொடர்பாக உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரம் இல்லை என்று கூறியுள்ள ஐகோர்ட்டு, அது தொடர்பான வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

    சென்னை உள்பட தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை பயந்து பயந்து பதுக்கி விற்பனை செய்து வந்த நபர்கள் தற்போது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் பயமின்றி விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் குட்கா பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்ட போது வெளியான தகவல்கள் வருமாறு:-

    குட்கா விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக தற்போது நடவடிக்கை எடுக்க முடியாத சூழலே உள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையே உள்ளது.

    இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் இருந்து என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி உரிய தகவல்கள் எதுவும் வரவில்லை. ஐகோர்ட்டு உத்தரவுக்கு பிறகு குட்கா விற்பவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை பாயாமலேயே உள்ளது.

    இதில் அடுத்த கட்டமாக மேல் முறையீடு செய்து அதில் எது மாதிரியான தீர்வு வெளியாகிறது என்பதை பொறுத்தே போலீஸ் நடவடிக்கை மீண்டும் தீவிரமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை ஐகோர்ட்டில் ஆணையரின் உத்தரவுக்கு எதிராக புகையிலை நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.
    • தடை நீக்கி உயர்நீதிமன்றம் ஆணையிட்டு உள்ள காரணத்தால் உணவு பாதுகாப்பு துறையின் நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளோம்.

    திருச்சி:

    தமிழகத்தில் பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு உணவு பாதுகாப்பு துறை ஆணையர் கடந்த 2011ல் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து குட்கா பொருட்களை கடத்தும் நபர்கள் மீதும், விற்பனை செய்யும் வியாபாரிகள் மீதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குட்கா பிடிபட்டால் அந்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் சீல் வைக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் ஆணையரின் உத்தரவுக்கு எதிராக புகையிலை நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இதில் ஆணையரின் குட்கா விற்பனை தடை ஆணையை கடந்த 25-ம் தேதி நீக்கி உத்தரவு பிறப்பித்தது.

    இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் தங்கள் அதிரடி சோதனையை நிறுத்தி உள்ளனர்.

    இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் பாபுவிடம் கேட்டபோது,

    தடை நீக்கி உயர்நீதிமன்றம் ஆணையிட்டு உள்ள காரணத்தால் உணவு பாதுகாப்பு துறையின் நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளோம். இனிமேல் அலுவல் ரீதியான அறிவிப்பு வந்த பின்னர் அதன்படி எங்களது நடவடிக்கை இருக்கும் என்றார்.

    அதேபோன்று காவல் துறையும் எல்லா கடைகளிலும் ரெய்டு நடத்த முடியாது. கோட்பா சட்டத்தின் கீழ் பள்ளிகள், அருகாமையில் உள்ள கடைகளில் குட்கா விற்கப்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

    இதற்கிடையே தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குட்கா தடை நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், முற்றிலும் தடை விதிப்பதற்கு சட்டம் ஏற்றுவது தொடர்பாகவும் ஆலோசனை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    தற்போதைக்கு உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையின் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதால் குட்கா வியாபாரிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • குட்கா, புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பொன்னேரி போலீசுக்கு தகவல்.
    • போலீஸ் சோதனை செய்த போது ஒரு வீட்டில் ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரி தாயுமான் செட்டி தெருவில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பொன்னேரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சோதனை செய்த போது ஒரு வீட்டில் ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக முசாம்பீர் (47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • காரை ஓட்டி வந்த நபரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
    • குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் பூபதியை காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நள்ளிரவில் 4 ஏ.டி.எம். மையங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் கொள்ளை தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் விடுதிகளில் சோதனை, வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அதன் அடிப்படையில் மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கமலக்கண்ணன், கோபிநாத், மணிகண்டன் ஆகியோர் களக்காட்டூர் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா 15 மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காரை ஓட்டி வந்த நபரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் வாலாஜாபாத் ஆறுமுகம் பேட்டையை சேர்ந்த பூபதி(வயது 34) என்பதும், குட்காவை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் பூபதியை காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • புகையிலை பொருட்களை அம்பை பகுதிக்கு கொண்டு செல்வதற்காக ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு மாற்றியது தெரியவந்தது.
    • புகையிலை மூட்டைகளை லோடு ஆட்டோவுக்கு மாற்றிக் கொண்டிருந்த போது போலீசில் சிக்கியது விசாரணையில் தெரிய வந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே லாரியில் இருந்து லோடு ஆட்டோவில் புகையிலை பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களை அம்பை பகுதிக்கு கொண்டு செல்வதற்காக ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு மாற்றியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் இருந்த 4 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். மேலும் ரூ. 4.10 லட்சம் மதிப்பிலான 530 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து 4 பேரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் அம்பையை சேர்ந்த சூர்யமாதவன் (23), எடிசன் (24), திருவாலீஸ் வரத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி (30), வி.கே.புரத்தை சேர்ந்த தியாகராஜன் (29) என்பது தெரியவந்தது.

    லாரி டிரைவரான தியாகராஜன், தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு சரக்கு ஏற்றி சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்தபோது திருவனந்தபுரத்திற்கு மெடிக்கல் பொருட்களை ஏற்றி உள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் அவரிடம் அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி புகையிலை பொருட்களை லாரியில் ஏற்றி நெல்லைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    நெல்லை வந்ததும், லோடு ஆட்டோ டிரைவரான எடிசன் அவரை முன்னீர்பள்ளத்திற்கு வரச்செய்து அங்கு வைத்து புகையிலை மூட்டைகளை லோடு ஆட்டோவுக்கு மாற்றிக் கொண்டிருந்த போது போலீசில் சிக்கியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • குட்கா கடத்தலில் ஈடுபட்ட சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • கைதான சுரேசிடம் இருந்து ரூ.50ஆயிரம் ரொக்கம், 2 மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

    போரூர்:

    கோயம்பேடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் குட்கா சப்ளை நடப்பதாக துணை கமிஷனர் குமாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    கோயம்பேடு நூறடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அவ்வழியே வந்த சரக்கு வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஏராளமான குட்கா மூட்டைகள் இருந்தன.

    இதையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட சுரேஷ் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் படி அப்பகுதியில் உள்ள ஒரு குடோனில் சோதனை நடத்தினர். அங்கு மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் கைதான சுரேசிடம் இருந்து ரூ.50ஆயிரம் ரொக்கம், 2 மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் பெங்களூரில் இருந்து பார்சல் சர்வீஸ் மூலம் குட்கா, புகையிலை பொருட்களை வரவழைத்து அதனை மாங்காட்டில் உள்ள குடோனில் பதுக்கி வைத்து சென்னை முழுவதும் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வருவது விசாரணையில் தெரிய வந்தது. குட்கா கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு வரும் கும்பல் குறித்து அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில் நேற்று மாலை சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • குட்கா பொருட்களுடன், ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் செய்தனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில் நேற்று மாலை சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.3,54,000-மதிப்பிலான 615 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரதீப் சிங் (22)மற்றும் பரத் சிங் (40) ஆகிய இருவரும், கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து சேலத்திற்கு விற்பனைக்காக 2 கார்களில் கடத்தி சென்றது, தெரியவந்தது. இதையடுத்து குட்கா பொருட்களுடன், ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் செய்தனர்.

    • பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • பான் மசாலா, ஹான்ஸ், கூலிப்பு போன்ற போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து பண்ணாரி சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீசார், வனத்துறையினர் இணைந்து கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த பகுதியில் சரக்கு லாரிகள் போக்குவரத்து அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    நேற்று இரவு வழக்கம் போல் பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இரவு 8 மணி அளவில் பண்ணாரி சோதனை சாவடி வழியாக சரக்கு வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்தி போலீசார் வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் லிங்கையாத்தார் தெருவை சேர்ந்த மகேந்திரன்(32) என்பவர் டிரைவராகவும், சாம்ராஜ் நகர் பண்டிகரையை சேர்ந்த பிரமோத் (22) என்பவர் கிளீனராகவும் இருந்தது தெரிய வந்தது. வேனில் வெங்காய லோடு இருப்பதாகவும் அவை கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு எடுத்து செல்வதாகவும் அவர்கள் கூறினர்.

    எனினும் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு வேனில் ஏறி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வெங்காய மூட்டை அடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட விமல் பாக்கு, பான் மசாலா, ஹான்ஸ், கூலிப்பு போன்ற போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். விமல் பாக்கு 30 சாக்கு மூட்டைகள், பான் மசாலா 30 சாக்கு மூட்டைகள், ஹான்ஸ் 15 சாக்கு மூட்டைகள், கூலிப்பு இரண்டு மூட்டைகள் என மொத்தம் 82 மூட்டைகளில் ரூ.8 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 1,281 கிலோ புகையிலை பொருட்கள் வெங்காய லோடு அடியில் மறைத்து வைத்து கடத்திச் செல்வது தெரிய வந்தது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேந்திரன், பிரமோத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1,281 கிலோ போதைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் இந்த போதைப் பொருட்களை மேட்டுப்பாளையத்திற்கு எடுத்துச் செல்வதாக கூறியுள்ளனர். மேட்டுப்பாளையத்திற்கு யார் சொல்லி அவர்கள் இந்த போதைப் பொருட்களை கடத்தி சென்றனர். இந்த கடத்தல் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×