search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரத்பவார்"

    • இந்தியாவில் இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
    • மத பிரச்சினைகளுக்கு மக்கள் ஒருபோதும் தங்கள் வாக்குகளை அளிக்க மாட்டார்கள்.

    மும்பை :

    பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்-மந்திரியாக இருந்தபோது குஜராத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து சமீபத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி. செய்தி நிறுவனம் ஆவணப்படத்தை வெளியிட்டது.

    இதற்கு பா.ஜனதா கட்சி தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவில் இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுவன தலைவர் சரத்பவார் கூறியதாவது:-

    பி.பி.சி. ஊடக குழுவால் வெளியிடப்பட்ட ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடை என்பது ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல். கடந்த சில நாட்களாக இதுபோன்ற சம்பவம் நடந்து வருகிறது. மத பிரச்சினைகளுக்கு மக்கள் ஒருபோதும் தங்கள் வாக்குகளை அளிக்க மாட்டார்கள்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். நாட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். ஆனால் மத்திய அரசு இந்த நடைபயணத்திற்கு மாறுபட்ட கோணத்தில் சாயம் பூச முயன்றது. சாதாரண மக்களின் பெரும் ஆதரவு காரணமாக இந்த முயற்சி தோல்வி அடைந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவியில் இருந்து விலக விரும்புவதாக கூறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சரத்பவார் பதில் அளித்து கூறுகையில், "மராட்டியத்தை சேர்ந்த பெரிய தலைவர்களான சத்ரபதி சிவாஜி மற்றும் பலர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நபரிடம் இருந்து மராட்டிய மாநிலமும், மக்களும் விடுபடுவது நல்ல விஷயம். அடுத்து யார் கவர்னராக வருவார் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை" என்றார்.

    • எல்லை பிரச்சினை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.
    • குடியரசு கட்சி மற்றும் சில கட்சிகளும் சோ்க்கப்படும்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக சென்றதால் மகாவிகாஸ் ஆட்சி கவிழ்ந்தது. தற்போது மகாராஷ்டிராவில் பா.ஜனதா ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

    இந்தநிலையில் அடுத்து நடைபெற உள்ள பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி தொடரும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

    இது குறித்து நேற்று கோலாப்பூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் பால்தாக்கரே சிவசேனா வருகிற பாராளுமன்ற, சட்டமன்ற தோ்தலை ஒன்றாக சந்திக்க வேண்டும் என்ற புரிதல் உள்ளது. குடியரசு கட்சி மற்றும் சில கட்சிகளும் சோ்க்கப்படும்.

    இதுதொடர்பான ஆலோசனைகள் நடந்து வருகிறது. பல விவகாரங்களில் நாங்கள் சேர்ந்து முடிவு எடுத்து உள்ளோம். எனவே எந்த பிரச்சினையும் இல்லை.

    சிவசேனா உடைந்து உள்ள போதும், பெரும்பான்மையான தொண்டர்கள் உத்தவ் தாக்கரேக்கு ஆதரவாக உள்ளனர். பிளவின் போது எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஷிண்டே அணிக்கு சென்று இருக்கலாம். ஆனால் தேர்தல் வரும் போது மக்களின் மனநிலையை அவர்கள் புரிந்து கொள்வார்கள். மகாராஷ்டிரா-கர்நாடக எல்லை பிரச்சினை தொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

    எல்லை பிரச்சினை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அந்த வழக்கை மூத்த சட்ட வல்லுநர்களை வைத்து நமது தரப்பு வாதத்தை பலமாக முன்வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது.
    • மகாராஷ்டிராவில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    புனே :

    பா.ஜனதா கட்சி 2024-ம் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இப்போதே தயாராகி வருகிறது. மகாராஷ்டிராவில் 45 தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்கை அந்த கட்சி நிர்ணயித்து உள்ளது. இதனை "மிஷன் 45" என்று மராட்டியத்தில் சுற்றுப்பயணம் செய்த பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா குறிப்பிட்டார்.

    இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதில் அளித்து அவர், "எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதனால் பா.ஜனதா "மிஷன் 48" என்று தான் தொடங்கி இருக்க வேண்டும். 45 அல்ல.

    ஜே.பி. நட்டா அந்த கட்சியின் தலைவர். அவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கும் உரிமை கூட அந்த கட்சிக்கு உள்ளது. ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோதும் அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

    எனவே பா.ஜனதா தலைவர்களின் இதுபோன்ற பேச்சுகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்றார்.

    மேலும் 'லவ் ஜிகாத்'துக்கு எதிராக சட்டம் இயற்ற கோரி இந்து அமைப்பினர் ஊர்வலம் நடத்துவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது. அவர்கள் முடிவெடுக்கலாம். யார் எதிர்ப்பு தெரிவித்தனர்?" என்றார்.

    இதேபோல தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் சமீபத்தில் சட்டசபையில் பேசியபோது, சம்பாஜி மகாராஜாவை மதப்பாதுகாவலர் இல்லை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டும் இன்றி அஜித் பவார், சம்பாஜி மகாராஜாவை அவமதித்துவிட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது.

    இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த சரத்பவார், "சுயராஜ்யத்தின் பாதுகாவலராக சத்ரபதி சாம்பாஜியை சமுதாயத்தில் சிலர் நினைப்பதில் எந்த தவறும் இல்லை. அதேபோல ஒரு சிலர் அவரை மத பாதுகாவலர் என அழைத்து அவரது பணிகளை மத கோணத்தில் பார்த்தாலும் அதிலும் எனக்கு எந்த புகாரும் இல்லை. ஆனால் அவருக்கு தர்ம ரட்ஷகர் அல்லது தர்மவீரர் என்று அடைமொழியை பயன்படுத்தாதது குறித்து சிலர் புகார் கூறுவது கவலை அளிக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளை விவாதிக்க எந்த காரணமும் அல்ல" என்றார்.

    • காங்கிரசின் சித்தாந்தத்தையும், பங்களிப்பையும் புறக்கணித்துவிட முடியாது.
    • சிலர் காங்கிரஸ் இல்லாத பாரதம் வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

    மும்பை :

    மூத்த அரசியல் தலைவர் சரத்பவார் கடந்த 1999-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அவர் காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கிய பிறகு, மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள காங்கிரஸ் பவனுக்கு செல்லவில்லை.

    இந்தநிலையில் சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் அவர் புனேயில் உள்ள காங்கிரஸ் பவனுக்கு சென்றார். காங்கிரஸ் நிறுவன நாளையொட்டி அங்கு நடந்த விழாவில் அவர் கலந்து கொண்டார்.

    விழாவில் சரத்பவார் பேசியதாவது:-

    சிலர் காங்கிரஸ் இல்லாத பாரதம் வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆனால் காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க முடியாது. அது சாத்தியமில்லை. காங்கிரசின் சித்தாந்தத்தையும், பங்களிப்பையும் புறக்கணித்துவிட முடியாது. கொள்கைகளில் முரண் இருக்கலாம், ஆனாலும் நாங்கள் காங்கிரசுடன் இணைந்து பயணிப்போம்.

    புனேயில் பல காங்கிரஸ் தலைவர்கள் அப்போது இருந்தனர். 'புனே என்றால் காங்கிரஸ், காங்கிரஸ் என்றால் புனே' என இருந்தது. ஆனால் தற்போது ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அவர்களை எதிர் கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் கூட வேண்டாம்.
    • இவர் இதற்குமுன் வாய் புற்றுநோய்க்கான சிகிச்சையும் எடுத்துள்ளார்.

    மும்பை :

    தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவாருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டரின் அறிவுரையின் பேரில் அவர் மும்பையில் உள்ள பிரிச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சிவாஜிராவ் கார்ஜே வெளியிட்டுள்ள அறிக்கையில், "3 நாட்களுக்கு சரத்பவார் ஆஸ்பத்திரியில் தான் இருப்பார்.

    2-ந் தேதி அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 3-ந் தேதி நடைபெறும் கட்சி கூட்டத்தில் சரத்பவார் கலந்து கொள்வார். கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் கூட வேண்டாம்" என்றார்.

    81 வயதான சரத்பவாருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல வாய் புற்றுநோய்க்கான சிகிச்சையும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடகாவை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்திற்குள் நுழைந்தது பாத யாத்திரை.
    • சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பவார் தகவல்

    மும்பை:

    தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்று வந்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரை நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தை பாத யாத்திரை சென்றடைந்தது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் அனுமூலரேவந்த் ரெட்டியிடம் தேசிய கொடியை கர்நாடகா எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோர வழங்கினர். 

    இந்நிலையில் மகாராஷ்டிராவில் நடைபெறும் ராகுல்காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்க போவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசோக் சவான் உள்பட மாநில காங்கிரஸ் தலைவர்கள் தன்னைச் சந்தித்து, நவம்பர் 7 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் பாத யாத்திரை நுழையும் போது, ​​ஒரு பயணத் திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளதாக  தெரிவித்தார்.

    பாத யாத்திரை காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி என்றாலும் இதன் மூலம் சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது, எனவே, இங்கு அது நடைபெறும்போது அதில் இணைவோம் என்றும் சரத்பவார் குறிப்பிட்டுள்ளார்.

    • ராகுல்காந்தியின் பாதயாத்திரை காங்கிரசுக்கு பயனுள்ளதாக அமையும்.
    • எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள்.

    மும்பை

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று சோலாப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராகுல்காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரை குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

    ராகுல்காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரை வரும் நாட்களில் அரசியலில் விளைவுகளை ஏற்படுத்தும். இது காங்கிரஸ் கட்சிக்கு பயனுள்ளதாக அமையும். முன்னாள் பிரதமர் சந்திரசேகர் இதுபோன்ற பாதயாத்திரை நடத்தியபோது, நல்ல வரவேற்பு கிடைத்தது. நான் கூட 1980-ம் ஆண்டில் ஜல்காவில் இருந்து நாக்பூருக்கு விவசாயிகளுக்காக பாதயாத்திரை மேற்கொண்டேன். ஜல்காவில் பாதயாத்திரையை தொடங்கியபோது 5 ஆயிரம் பேர் வந்தனர். புல்தானா சென்றபோது அந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்தது. பின்னர் அகோலா மற்றும் அமராவதியில் யாத்திரை நடத்தியபோது 1 லட்சம் பேர் திரண்டனர். மாநிலம் முழுவதும் இது அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்தது.

    இதுபோன்ற நிகழ்ச்சிகளை மிகுந்த முயற்சியுடன் நடத்தினால் மக்கள் வரவேற்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2024-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுப்படுமா? என்ற கேள்விக்கு சரத்பவார் பதிலளிக்கையில், "எதிர்கால ஏற்பாடுகள் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது" என்றார்.

    இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், "எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். இது தொடர்பாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் என்னை சந்தித்து பேசினார். அதற்கு முன்னதாக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் என்னை சந்தித்தார். கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்கள். இவை அனைத்து தலைவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை.

    அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரசை சேர்க்கக்கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். எனது கருத்து என்னவென்றால், ஒரு கட்சியை கூட்டணியில் சேர்ப்பதை, மற்றவர்கள் எதிர்க்கக்கூடாது" என்றார்.

    • மத்திய அரசை ஜனநாயக ரீதியாக எதிர் கொள்வது சவாலான ஒன்றாகும்.
    • ஒருமித்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி குறித்து வியூகம்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எட்டாவது தேசிய மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்பவார் உரையாற்றினார். நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் போராட்டங்களைக் கையாள்வது மற்றும் நாட்டில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பைத் தூண்டுவது குறித்து மோடி அரசாங்கத்தை சரத்பவார் கடுமையாக சாடினார்.

    அமலாக்க இயக்குநரகம், சிபிஐ போன்ற மத்திய அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் தற்போதைய மத்திய அரசை நாம் ஜனநாயக ரீதியாக எதிர்கொள்வது சவாலான ஒன்றாகும். நாம் போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும்.

    ஒரு மித்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி குறித்து வியூகம் வகுக்க வேண்டும். சாமானியர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் கூட்டு போராட்டத் திட்டங்களை மேற்கொள்வது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


    இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல் கூறியுள்ளதாவது: வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக சரத்பவார் போட்டியிட மாட்டார். பவார் ஒரு போதும் பிரதமர் பதவிக்கு உரிமை கோரவில்லை.

    மற்றவர்களுடன் ஒப்பிடும் போது எங்கள் கட்சி சிறியதாக இருக்கலாம், ஆனால் எங்கள் கட்சியின் தலைவர் நாடு முழுவதும் மதிக்கப்படுகிறார். காங்கிரசுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை, கடந்த காலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உடன் இணைந்து பணியாற்றியுள்ளோம். இவ்வாறு படேல் குறிப்பிட்டார்.

    • பா.ஜனதா தனது பிராந்திய கூட்டணி கட்சிகளை படிப்படியாக அழித்து வருகிறது.
    • பா.ஜனதா போன்ற சித்தாத்தம் கொண்ட கட்சிகள் தான் இனி உயிர் வாழும்.

    மும்பை :

    பா.ஜனதா போன்ற சித்தாத்தம் கொண்ட கட்சிகள் தான் இனி உயிர் வாழும், குடும்ப கட்சிகள் அழிந்து போகும் என்று சமீபத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியிருந்தார். மேலும் பீகாரில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறியதுடன், புதிய ஆட்சியை அமைத்த நிதிஷ்குமார் நாட்டின் அரசியல் அரங்கை பரபரப்பாக்கி உள்ளார்.

    இவற்றை மேற்கோள் காட்டி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று புனே மாவட்டம் பாராமதியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிராந்திய கட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை, அவர்களது கட்சியை (பா.ஜனதா) போன்றவை மட்டும் நாட்டில் இருக்கும் என்று பா.ஜனதா தேசிய தலைவர் கூறியிருப்பதன் மூலம் ஒன்று தெளிவாகிறது. இதுவும் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் அதிருப்தியாக இருக்கலாம். பா.ஜனதா தனது பிராந்திய கூட்டணி கட்சிகளை படிப்படியாக அழித்து வருகிறது.

    பா.ஜனதாவின் தனி சிறப்பு என்னவென்றால், அவர்கள் எந்த பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைக்கிறார்களோ, அந்த பிராந்திய கட்சிகள் பா.ஜனதாவை விட குறைவான இடங்களில் தான் வெற்றி பெறுகிறது. பஞ்சாப்பில் பிரகாஷ் சிங் பாதலின் அகாலி தளத்துடன் பா.ஜனதா கூட்டணி வைத்திருந்தது. இன்று அகாலி தளம் ஏறக்குறைய முடிந்து விட்டது.

    மராட்டியத்தில் சிவசேனாவுடன் நீண்ட காலமாக கூட்டணி வைத்திருந்தார்கள். இன்று சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தி, அந்த கட்சியை எப்படி பலவீனப்படுத்தலாம் என்று பா.ஜனதா முயற்சித்து வருகிறது.

    பீகாரில் இதே காட்சி இருந்தது. அங்கு பா.ஜனதாவும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும் கடந்த தேர்தலில் கூட்டணி வைத்தது. ஐக்கிய ஜனதாதளம் குறைவான இடங்களே பிடித்தது.

    நிதிஷ்குமாரை பா.ஜனதா தலைவர்கள் எவ்வளவு வேண்டுமென்றாலும் விமர்சிக்கலாம். ஆனால் அவர் புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளார். பா.ஜனதா நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து அவர் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளார். அவரது மாநிலத்திற்கும், அவரது கட்சிக்கும் இது ஒரு சிறந்த முடிவு என்று நான் கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மகாராஷ்டிரா மழை வெள்ளத்தை சந்தித்து வருகிறது.
    • புதிய அரசு அமைந்து ஒரு மாதமாகி விட்டது.

    மும்பை :

    மக்கள் வெள்ளத்தில் தவிக்கும் நிலையில் மந்திரி சபை விரிவாக்கத்துக்கான அறிகுறி எதுவும் இல்லை என்று சரத்பவார் குற்றம் சாட்டினார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாசிக்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    மகாராஷ்டிரா மழை வெள்ளத்தை சந்தித்து வருகிறது. மக்கள் பரிதவிக்கிறார்கள். குறிப்பாக விவசாயிகள் பெருந்துயரத்தை சந்தித்து வருகிறார்கள். இதுபோன்ற சூழலில் மந்திரிகள் நேரில் சென்று மக்கள் துயர் துடைக்க வேண்டும்.

    ஆனால் மகாராஷ்டிராவில் மந்திரி சபை விரிவாக்கத்துக்கான அறிகுறி எதுவும் இல்லை. புதிய அரசு அமைந்து ஒரு மாதமாகி விட்டது. முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி ஆகிய இருவர் மட்டுமே அரசை நடத்தி செல்லலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகிறார்கள். இவர்களிடம் இருந்து முதல்-மந்திரி ஷிண்டே பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிய அரசு கவிழுமா? என்று நிருபர் ஒருவர் சரத்பவாரிடம் கேட்டார்.

    அதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், "இதை கணிக்க நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல. தேர்தல் எப்போது வந்தாலும், அதை சந்திக்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விரைவில் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக சோனியா காந்தி கருத்து.
    • ராகுல் காந்தியும் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நாட்டின் 15வது குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், அவரையும் விரைவில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் எம்.பி.ரா குல் காந்தியும் திரவுபதி முர்மு தேர்வுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு நமது அரசியல் சாசனத்தின் கொள்கைகளைப் பாதுகாப்பார் என நாடே எதிர்நோக்கி உள்ளதாக மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

    சரத் ​​பவார் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், குடியரசு தலைவர் பொறுப்பை ஏற்க தயாராகும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். உங்கள் பதவிக்காலம் முழுவதும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவும் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    • சரத்பவார் இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை.
    • மார்கரெட் ஆல்வாவை, கெஜ்ரிவால் ஆதரிப்பார் என சரத்பவார் நம்பிக்கை,

    குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ந் தேதி முடிகிறது. அதற்கு முன்பாக புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு வேட்பமனு தாக்கல் செய்வதற்கு நாளை மறுநாள் (19-ந் தேதி) கடைசி நாள்.

    இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மேற்கு வங்காள ஆளுநர் ஜெகதீப் தன்கர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


    இந்த நிலையில், பாராளுமன்ற கூட்டத் தொடர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இல்லத்தில் நடைபெற்றது.

    காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என சரத் பவார் தெரிவித்தார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவை அறிவித்த கெஜ்ரிவால், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவை தெரிவிப்பார் என்றும் சரத் பவார் நம்பிக்கை தெரிவித்தார்.

    ×