search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிப்பூரம்"

    • எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது.
    • ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசைகள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

    மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம். எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது.

    காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்தப் பண்டங்களாகும்.

    வெற்றிலை அலங்காரம்!

    ஆடிப்பூரம் அம்மனுக்கு மட்டுமல்ல வீரபத்திரருக்கும் உண்டு. வீரபத்திரருக்குரிய அலங்காரங்களுள் ஒன்று வெற்றிலையைக் கொண்டு செய்யப்படுகிறது. அதாவது வெற்றிலையை அடுக்கடுக்காக தைத்து மாலை போல் சூட்டுவர். சில ஆலயங்களில் வெற்றிலைக்குள் பாக்கு வைத்து சுருட்டி, அந்தச் சுருளை மாலையாக்கி அணிவிப்பர்.

    பல தெய்வங்கள் வீராவேசம் கொண்ட போர் தெய்வங்களாக, வெற்றிக் கடவுளாகத் திகழ்ந்தாலும் வீரபத்திரருக்கு மட்டுமே வெற்றிலைப்படல் உற்சவம் உண்டு. ஆடிப்பூரமே அதற்குரிய விசேஷ நாள். அன்று, அனுமந்தபுரம் வீரபத்திரருக்கு 12,800 வெற்றிலைகளால் வெற்றிலைப்படல் அணிவித்து வழிபடுவது பாரம்பரிய பழக்கமாக உள்ளது.

    தினந்தோறும் அமாவாசை!

    மயிலாடுதுறைக்கு அருகில் சிதலப்பதியில் உள்ளது முக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு அமாவாசை கோவில் என்று ஓர் ஆலயம் உள்ளது. இதில் மனிதமுக விநாயகர் அருள்கிறார். இக்கோவிலில் முக்தீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்கிறார். இவரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர்.

    சூரியன், சந்திரன் இவ்விருவரும் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே இவர்கள் அருகருகே உள்ளதால், இக்கோவில் முன்பு ஓடும் அரசலாற்றில் தினமும் அமாவாசை தர்ப்பணம் செய்யலாம். இதை 'நித்ய அமாவாசை' என்பார்கள். இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் பார்க்கத்தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிராத்தம், தர்ப்பணம் செய்யலாம். சூரிய, சந்திர தீர்த்தங்கள் பிராகாரத்தில் உள்ளது. இங்கு ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசைகள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு சிராத்தம் செய்வது, கயாவில் சிராத்தம் செய்ததற்கு ஒப்பாகும்.

    ஆடியில் அவதாரம்!

    * ஆடிப்பூரம், உமாதேவிக்கு விசேஷமான நாள். தேவியின் ருது சடங்கு நிகழ்ந்த தினம் என்று புராணம் சொல்வதால், அன்று சிவாலயங்களில் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். அன்று வளைகாப்பு நடத்துவார்கள்.

    * சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தார். ஆடி மாதத்தில் தான் சிவபெருமான், சுந்தரமூர்த்தி நாயனாரை மீண்டும் கயிலைக்கு அழைத்து வர வெள்ளை யானையை அனுப்பியதாக புராணம் கூறுகிறது.

    * பட்டினத்தார், ஆடி மாத உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தார். புகழ்ச்சோழர், பெருமழைக்கதும்பர், சேரமான் பெருமான், கழறிற்றறிவார், கோட்புலியார் போன்ற நாயன்மார்களும் ஆடி மாதத்தில் அவதரித்தவர்கள்தாம்.

    • திருப்பரங்குன்றம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிப்பூரம் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பூரத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரா தனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள், திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள், திருமணம் ஆகாத பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பூஜை முடிந்தவுடன் அனைத்து பெண்களுக்கும் வளையல் மற்றும் குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு 5 வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் வேட்டையார், செயலாளர் கார்த்திக், பொருளாளர் காசிராஜன், துணைச்செயலாளர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியாருடன் வைர வைடூரிய அலங்காரத்தில் எழுந்தருளினார்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் திருவாடிப்பூரம் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியார் ஆகியோருடன் வைர வைடூரிய அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    இதைத்தொடர்ந்து மேளதா ளங்கள் முழங்க, இரட்டைக் குடையுடன், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியாருடன், வரதராஜ பெருமாள் நான்கு மாட வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • அம்மனுக்கு அணியப் பட்டிருந்த வளையல்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் வாங்கி கொடுக்கப்பட்ட வளையல்களால் அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வளையல்கள் கொண்டு வந்து அம்மனுக்கு மாலையாக அணிவித்தனர். அம்மனுக்கு அணியப் பட்டிருந்த வளையல்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. அம்பாளுக்கு சாத்திய வளையல்கள் பெற்று செல்பவர்கள் வீடுகளில் அனைத்து மங்கள காரியங்களும் நடக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆடிப்பூர விழாவில் கிழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    • இவ்விழாவில் கலந்து கொள்வதன் மூலம் நீண்ட நாள்கள் கல்யாணம் ஆகாதவர்களுக்கு, திருமணம் விரைவில் நடைபெறும் என்பது ஐதீகம்.
    • முப்பெரும்தேவியருக்கு 21 வகையான அபிஷேகங்களும்,சிறப்பு அலங்காரங்கள், பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    புளியங்குடி:

    புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள அருள் வாக்கிற்கு பிரசித்திப் பெற்ற முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், பாலநாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் ஆடிப்பூரம் வளைகாப்பு நடைபெற்றது.

    இவ்விழாவில் கலந்து கொள்வதன் மூலம் நீண்ட நாள்கள் கல்யாணம் ஆகாத ஆண்கள், பெண்களுக்கு, திருமணம் விரைவில் நடைபெறும் என்றும் குழந்தை பாக்கியம், இல்லாத திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    விழாவை முன்னிட்டு மாலை 5 மணிக்கு ஆடிப்பூரம் வளைகாப்பு பற்றி குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்.

    அதனைத்தொடர்ந்து முப்பெரும்தேவியருக்கு பால், பச்சை அரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம், உள்பட 21 வகையான அபிஷேகங்களும், தொடர்ந்து முப்பெரும் தேவியருக்கு சிறப்பு அலங்காரங்கள், பெரிய தீபாதரனை காண்பிக்கப்பட்டது.

    கோவில் குருநாதர் சக்தியம்மா முப்பெரும் தேவியர் அம்மாக்களுக்கு வளைகாப்பு அணியும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு 21 வகையான சிறப்பு வளைகாப்பு சாதமும் படைக்கப்பட்டது.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக் காளி, செங்காளியம்மனுக்கும் வளைகாப்பு பூட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    முடிவில் அனைத்து பக்தர்களுக்கும் அம்மாக்களின் வளைகாப்பு சாதம், வளையல்கள், மஞ்சள் கயிறு, குங்குமம், பிரசாத மாக வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். முககவசம், சமூக இடைவெளியுடன் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற கோவில் ஆகும்.
    • அபிராமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்த கடேஸ்வரர் கோவில் உள்ளது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி தீர்த்தவாரி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர தீர்த்தவாரி கோவிலில் உள்ள திருக்குளத்தில் நேற்று நடந்தது.

    இதையொட்டி விநாயகர், சண்டிகேஸ்வரி, சோமாஸ்கந்தர் அபிராமி ஆகியோர் கோவில் குளக்கரையில் எழுந்தருளினர். அப்போது அஸ்திரதேவருக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் அபிராமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது. முன்னதாக தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு, ஆராதனையும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பொகடா மரத்துக்கு சடாரி மரியாதை செய்யப்பட்டது.
    • திருமலையில் திருவாடிப்பூர சாத்துமுறை உற்சவம் நடந்தது.

    தமிழகத்தில் பாண்டிய நாட்டில் வாழ்ந்த திருமால் பக்தரான விஷ்ணு சித்தருக்கு சொந்தமான துளசி வனத்தில் பூதேவியின் அம்சமாக தமிழ் ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் ஆண்டாள் என்ற கோதாதேவி அவதரித்தார். அவருடைய அவதார தினத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் ஏழுமலையான் கோவிலில் திருவாடிப்பூர சாத்துமுறை உற்சவத்தை நடத்தி வருகிறது.

    அதன்படி நேற்று திருமலையில் திருவாடிப்பூர சாத்துமுறை உற்சவம் நடந்தது. கோவிலில் மாலை சகஸ்ர தீபலங்கார சேவைக்கு பின் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி திருமலையில் உள்ள புரசைவாரி தோட்டத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டார்.

    அங்கு, உற்சவர்களுக்கு நிவேதனம் முடிந்ததும் மேள தாளம் மற்றும் மங்கள இசை முழங்க புரசைவாரி தோட்டத்தில் இருந்து ஊர்வலமாகக் கோவிலுக்குப் புறப்பட்டனர். போகும் வழியில் உள்ள பொகடா (மகிழ மரம்) மரத்துக்கு அர்ச்சகர்கள் மாலை அணிவித்து, சிறப்பு அர்ச்சனை செய்தனர். சடாரிக்கு அபிஷேகம் செய்து, பொகடா மரத்துக்கும் சடாரிக்கும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பொகடா மரத்துக்கு சடாரி மரியாதை செய்யப்பட்டது. அதன்பிறகு உற்சவர்கள் நான்கு மாடவீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர்.

    அப்போது பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், "அனந்தாழ்வார் வைபவம்" என்ற நூலை வெளியிட்டனர்.

    • வளைகாப்பு நிகழ்ச்சியையொட்டி சுவாமி அம்பாளுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
    • தர்மஸம்வர்த்தினி அம்பாள் கோவில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சிதந்தார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை குலசேகர நாதசுவாமி கோவிலில் ஆடிப்பூரம் வளைகாப்பு உத்சவ விழா நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான வளைகாப்பு நிகழ்ச்சியையொட்டி சுவாமி அம்பாளுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து தர்மஸம்வர்த்தினி அம்பாள் கோவில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சிதந்தார். பின்னர் அழகிய மணவாளப் பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசைகள் மேளதாளங்களுடன் எடுத்து வரப்பட்டது.

    அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் வளைகாப்பு உத்சவ நிகழ்ச்சி நடைபெற்று. பின் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.

    முடிவில் பிரசாதத்துடன் வளையல்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மண்டலதாரர்கள் செய்திருந்தனர்.

    • பஞ்சபூத தலங்களில் பூமிக்கான தலமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் திகழ்கிறது.
    • தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. பெரிய கோவில், திருமூலட்டானம், பூங்கோவில் என இக்கோவிலை அழைக்கிறார்கள். இங்கு மூலவராக வன்மீகநாதர் எனும் புற்றிடங்கொண்டாரும், உற்சவராக தியாகராஜரும் அருள்பாலித்து வருகிறார்கள். நீலோத்பலாம்பாள், கமலாம்பிகை ஆகிய அம்மன் சன்னதிகளும் உள்ளன.

    சப்த விடங்க தலங்களில் முதன்மையான தலமாகவும், பஞ்சபூத தலங்களில் பூமிக்கான தலமாகவும் திருவாரூர் தியாகராஜர் கோவில் திகழ்கிறது.

    பங்குனி உத்திர திருவிழா மற்றும் திருவாதிரை திருவிழா சமயங்களில் தியாகராஜரின் பாத தரிசன நிகழ்ச்சி இக்கோவிலின் சிறப்பம்சமாகும். ஆழித்தேர், கமலாலய குளம் என பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கமலாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பூர விழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கேடக உற்சவம், பூத வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், கைலாச வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்தது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று அம்பாள் தேரோட்ட விழா நடந்தது. விழாவையொட்டி காலை 9.30 மணி அளவில் கோவிலில் இருந்து மனோன்மணி அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். மாலை 3.30 மணிக்கு ஆரூரா, கமலாம்பாள் என பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் கீழவீதியில் இருந்து புறப்பட்டு தெற்குவீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக தேர் நிலையை அடைந்தது. இதனை தொடர்ந்து தேரில் இருந்து அம்பாள் புறப்பட்டு கோவிலை அடைந்தார். தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தாய் வீட்டு கஞ்சி பங்காரு அடிகளார் முன்னிலையில் கருவறை அம்மனுக்கு படைக்கப்பட்டது.
    • பக்தர்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் தொடர்ந்து வந்து அபிஷேகம் செய்தனர்.

    சென்னை

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழாவை முன் னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மீக இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தொடங்கி வைத்தார்.

    நேற்று காலை 6 மணிக்கு கஞ்சி தயாரிக்கப்படும் கேசவராயன்பேட்டை வளாகத்தில் இருந்து மண் கலயங்களில் புதிய கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியை ஆன்மீக இயக்க துணைத்தலைவர் கோ.ப. செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    காலை 8.30 மணிக்கு ஆன்மீக குரு பங்காரு அடிகளார் வீட்டில் இருந்து லட்சுமி பங்காரு அடிகளாரால் தாய் வீட்டு கஞ்சி எடுத்துவரப்பட்டு பங்காரு அடிகளார் முன்னிலையில் கருவறை அம்மனுக்கு படைக்கப்பட்டது.

    மதியம் பங்காரு அடிகளார் பால் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், ஓய்வு பெற்ற ரெயில்வே உயர் அதிகாரி ஜெயந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பால் அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் தொடர்ந்து வந்து அபிஷேகம் செய்தனர். நேற்று மதியம் தொடங்கிய பால் அபிஷேகம் இரவு முழுவதும் விடிய விடிய நடந்தது. இன்று மதியம் வரை பால் அபிஷேகம் நடைபெற்றது.

    வரிசையில் வரும் பக்தர்களுக்கு உணவு பொருட்களும், தேநீர், இட்லி, பழ பானங்களும், குழந்தைகளுக்கு பிஸ்கட், பால் முதலியவைகளும் செவ்வாடை தொண்டர்கள் வழங்கினர்.

    • மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது.
    • சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.

    திருத்தணி கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா இன்று நடைபெற்றது.

    இதையொட்டி மூலவருக்கு அதிகாலை, 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து, தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    ஆடிப்பூரத்தையொட்டி சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால் பக்தர்கள் பொதுவழியில் மூலவரை தரிசிக்க சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடல் முழுவதும், அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பஸ், கார்களில் படையெடுத்து வந்ததால் திருத்தணி நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது. மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் உத்தரவின் பேரில், திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில்போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஆடிப்பூரத்தில்தான் அம்மன் அவதரித்ததாக சொல்லப்படுகிறது.
    • இன்று அம்பாளுக்கு வளையல்கள் அணிவிக்கும் நிகழ்வு நடத்தப்படும்.

    ஆடி மாதம் அம்பாளை வழிபாடு செய்வதற்கான உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் ஆடிப்பூரத்தில்தான் அம்மன் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. அன்றைய தினம், அம்மன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு நடைபெறுவதோடு, அம்பாளுக்கு வளையல்கள் அணிவிக்கும் நிகழ்வும் நடத்தப்படும். இந்த நாளில் பக்தர்கள், குறிப்பாக பெண்கள் பலரும் வளையல்களை வாங்கிச் சென்று, அம்பாள் வழிபாட்டிற்கு கொடுப்பார்கள்.

    பலரும் கொடுக்கும் வளையல்கள் ஒன்றாக பூஜையில் வைக்கப்பட்டு, வழிபாட்டிற்கு பின்னர் அந்த வளையல்கள் பக்தர்களுக்கே மீண்டும் பிரசாதமாக வழங்கப்படும். அந்த வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால், மனம் போல் மாங்கல்யம் அமையும். திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும். அம்பிகை வளையல் அணிந்து, தாய்மை கோலம் கொண்ட நாளாகவும் ஆடிப்பூரம் இருப்பதால், இந்த நாளில் வழிபடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

    * திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு 10 நாள் விழா நடத்தப்படும். அதில் 4-ம் நாளில் காந்திமதி அம்மனுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வளையல் அலங்காரம் நடத்துவார்கள்.

    * திருவாரூர் - கமலாம்பாள், நாகப்பட்டினம் - நீலாயதாட்சி, திருக்கருகாவூர் - கர்ப்பரட்சாம்பிகை ஆகிய சிறப்புமிக்க அம்மன்கள் அருளாட்சி புரியும் திருக்கோவில்களிலும், ஆடிப்பூரத்தை முன்னிட்டு 10 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

    * சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில், கற்பகவல்லி அம்மனுக்கு ஆடிப்பூரம் அன்று சந்தனக் காப்பு அலங்காரமும், இரவு வளையல் அலங்காரமும் செய்யப்படும்.

    * திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும், திரிபுரசுந்தரி அம்மன் சுயம்பு வடிவானவர். இங்குள்ள அம்மனின் மூர்த்தமானது, அஷ்ட கந்தகம் என்ற எட்டுவிதமான வாசனைப் பொருட்களால் உருவாக்கப்பட்டதாகும். இந்த அம்மன் தன்னுடைய மார்பில் ஸ்ரீசக்கரத்தை பதக்கமாக அணிந்திருக்கிறாள். இந்த அம்மனுக்கு, வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே முழுமையாக அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும் பூஜை நடைபெறும். பங்குனி உத்திரம், நவராத்திரியில் வரும் நவமி மற்றும் ஆடிப்பூரம் ஆகியவையே அபிஷேகம் நடைபெறும் நாட்களாகும்.

    ×