search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரந்தூர் விமான நிலையம்"

    • 13 கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று தெரிகிறது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதனால் புதிய விமான நிலையத்துக்கு பரந்தூரம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே புதிய விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு வெளியிட்டது. விமான நிலைய திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக டிட்கோ எனப்படும் தமிழக தொழில்வளர்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. புதிய விமான நிலையத்திற்கு 5700 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இந்த நிலங்களை பரந்தூரை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து நிலத்தை கையகப்படுத்த தலா 3 டி.ஆர்.ஓ.க்கள், துணை கலெக்டர்களின் கீழ் 24 தாசில்தார்கள் உள்பட மொத்தம் 326 வருவாய்த்துறை அதிகாரிகளை அரசு நியமித்து உள்ளது.

    இந்த நிலையில் அவர்களுக்கு உதவியாக பணியாற்ற டிட்கோ மூலம் 87 உதவியாளர்கள், 58 டைப்பிஸ்டுகள், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், 12 அலுவலர்கள் உள்பட மொத்தம் 237 பேர் ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதைத்தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று தெரிகிறது.

    • குழந்தைகளை அரசு பள்ளிகூடத்திற்கு அனுப்பாமல் காலவரையற்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து உள்ளனர்.
    • ஏகனாபுரம் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 111 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. புதிய விமான நிலையத்துக்கு எதிராகவும், விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக புதிய விமான நிலைய அறிவிப்பு வந்த நாள் முதல் போராட்டம் நீடித்து வருகிறது. மேலும் இது தொடர்பாக கிராமசபை கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

    இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும் அரசாணையை கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்டது. இதனால் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 13 கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதற்கிடையே ஏகனாபுரத்தை மையமாக வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் பரந்தூர் உள்ளிட்ட 13 கிராம மக்கள் புதிய போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

    பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் எடுக்க போடப்பட்ட அரசாணையை திரும்ப பெறும்வரை நாளை (1-ந்தேதி)முதல் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகூடத்திற்கு அனுப்பாமல் காலவரையற்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து உள்ளனர்.

    ஏகனாபுரம் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 111 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்வதில்லை என்று தெரிவித்து உள்ளனர்.

    இதேபோல் விமான நிலையம் நில எடுப்பில் அதிகம் பாதிக்கப்படும் கிராமங்களான நாகப்பட்டு நெல்வாய், மேலேறி கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர். இதனால் பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில்துறை அனுமதி அளித்துள்ளது.
    • வீடுகளை அப்புறப்படுத்த மாட்டோம், நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என்று எங்களிடம் கூறிவிட்டு அரசு எங்களை ஏமாற்றி விட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5,746 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு உள்ளன.

    இதனால் வீடுகள், விளைநிலம், நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்று கூறி பரந்தூரை சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 487-வது நாளாக அவர்களின் போராட்டம் நீடிக்கிறது.

    இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில்துறை அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்காக தனியார் பட்டா நிலம் 3,774 ஏக்கர், அரசு நிலம் 1,972 ஏக்கர் கையகப்படுத்தப்பட உள்ளது.

    தனியாரிடம் இருந்து கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்படி ரூ.1,822.45 கோடி இழப்பீடு கணக்கிடப்பட்டு உள்ளது. நிலம் எடுப்பு பணிக்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், சிறப்பு துணை ஆட்சியர், சிறப்பு வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உள்பட 326 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியை தொடங்க மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை அறிந்ததும் பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு குழுவை சேர்ந்த போராட்டக்காரர்கள் 12 பேர் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர்.

    அவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு வழங்கிய நிர்வாக அனுமதிக்கான நகலை அவர்களிடம் வருவாய் அலுவலர் வழங்கினார்.

    இதையடுத்து நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட குழுவினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள். பின்னர் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசை கண்டித்ததும், விவசாயிகளை வஞ்சிக்கக்கூடாது என்றும் கோஷம் எழுப்பினார்கள்.

    தகவல் அறிந்ததும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்திய அனைவரையும் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    12 பேர் கைது செய்யப்பட்ட தகவல் பரந்தூர் கிராமத்தில் பரவியது. இதையடுத்து பெண்கள் பரந்தூரில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு திரண்டு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 12 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து பரந்தூர் கிராம மக்கள் கூறியதாவது:-

    அரசு நிர்வாகம் எங்களிடம், உங்களை கைவிட மாட்டோம், உங்கள் குடியிருப்புகளை பாதுகாப்போம், நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது நிலம் கையகப்படுத்த அனுமதி வழங்கி இருப்பது ஏமாற்றம் தருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பரந்தூர் போராட்டக்குழு செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

    வீடுகளை அப்புறப்படுத்த மாட்டோம், நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என்று எங்களிடம் கூறிவிட்டு அரசு எங்களை ஏமாற்றி விட்டது. எனவே கிராம மக்கள் நாளை (26-ந்தேதி) ஒன்று கூடி பேசி அடுத்தகட்ட போராட்டத்துக்கு தயாராவோம். என்னென்ன போராட்டங்களில் ஈடுபடலாம் என்று நாளை ஆலோசனை நடத்த உள்ளோம்.

    ஆலோசனையில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் இனிவரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். தொடர்ந்து வெவ்வேறு போராட்டங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து வருகிற திங்கட்கிழமை முதல் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தீவிரம் அடைய உள்ளது.

    • விவசாய நிலங்களை கையகப்படுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • பரந்தூரை சுற்றி உள்ள 20 கிராமங்களில் மொத்தம் 5746 ஏக்கர் நிலம் கையக்கப்படுத்தப்பட உள்ளன.

    சென்னை:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு சுற்றி உள்ள கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

    விவசாய நிலங்களை கையகப்படுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டு உள்ளது.

    பரந்தூரை சுற்றி உள்ள 20 கிராமங்களில் மொத்தம் 5746 ஏக்கர் நிலம் கையக்கப்படுத்தப்பட உள்ளன. இதற்காக அரசு ரூ.19.24 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

    • நீர்நிலைகள் கெடாமல் விமான நிலையம் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் மச்சேந்திர நாதனை சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும்.
    • விமான நிலையம் அமைப்பது சம்பந்தமான எதிர்ப்புகளை தெரிவிக்க அரசின் தலைமைச் செயலாளரை சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்பட சுற்றி உள்ள 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பரந்தூரை சுற்றியுள்ள கிராம மக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் விமான நிலைய எதிர்ப்பு குழுவும் அமைக்கப்பட்டு போராட்டங்கள் நீடித்து வருகிறது. இந்தநிலையில் பரந்தூர் விமான நிலைய போராட்ட எதிர்ப்பு குழுவின் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் அக்குழுவைச் சேர்ந்த 15 பேர் இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்தனர்.

    அப்போது விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் கூறும்போது, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பரந்தூரில் பழமையான கட்டிடமாக இருந்த கிராம நிர்வாக அலுவலகத்தின் இடித்த கட்டிடத்தை திருப்பி கட்டி தர வேண்டும். நீர்நிலைகள் கெடாமல் விமான நிலையம் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் மச்சேந்திர நாதனை சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும். விமான நிலையம் அமைப்பது சம்பந்தமான எதிர்ப்புகளை தெரிவிக்க அரசின் தலைமைச் செயலாளரை சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • இன்று 3- வது முறையாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
    • கூட்டத்தை புறக்கணித்ததால் தீர்மானம் எதுவும் நிறைவேற்ற முடியாமல் போனது.

    சென்னை:

    சென்னையை அடுத்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி மற்றும் அக்டோபர் 2-ந்தேதி நடந்த கிராம சபை கூட்டத்தை ஏகனாபுரம் கிராம மக்கள் புறக்கணித்தனர். இதையடுத்து இன்று 3- வது முறையாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்காக அந்த ஊர் முழுவதும் நோட்டீசுகள் வழங்கப்பட்டது.

    இன்று காலை கிராமசபை கூட்டம் தொடங்கியது. இதில் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆனால் கிராம மக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்ததால் தீர்மானம் எதுவும் நிறைவேற்ற முடியாமல் போனது.

    • புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களிலும் கிராமசபை கூட்டங்களில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
    • பரந்தூர் விமான நிலையத்தை சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதிய விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், வளத்தூர், தண்டலம் உள்ளிட்ட 13 கிராமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் 400 நாட்களை தாண்டி நீடித்து வருகிறது.

    மேலும் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களிலும் கிராமசபை கூட்டங்களில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான நிலையம் அமைய உள்ள பகுதி நீர்நிலைகளை ஆய்வு செய்ய வந்த ஓய்வு பெற்ற அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையிலான ஐ.ஐ.டி. குழுவினரை பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கத்தினர் மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள் தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரந்தூரை சுற்றி உள்ள கிராமங்களில் தொடர்ந்து பரபரப்பான நிலையே நீடித்து வருகிறது. இதற்கிடையே பரந்தூர் விமான நிலைய பணிக்கு மாநில அரசுக்கு நிர்வாக அனுமதியை 2 வாரத்தில் வழங்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே புதிய விமான நிலையம் தொடர்பான திட்ட அறிக்கைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

    பரந்தூர் விமான நிலையத்தை சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. எனவே இதற்கான நிலையங்கள் கையகப்படுத்துதல், எல்லைகள் வரையறுத்தல், விரைவில் இறுதி செய்யப்பட இருக்கிறது. நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பின்னர் விமான நிலையத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கப்படும் என்று தெரிகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பரந்தூர் விமான நிலையம் தொடர்பான விரிவான தொழில்நுட்பம்-பொருளாதார அறிக்கையை நிறைவு செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.

    • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்து இருந்தார்.
    • பொதுமக்கள் யாரும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய விமான நிலையத்துக்கு பரந்தூர், ஏகனாபுரம், மேலேறி நெல்வாய் உள்ளிட்ட சுற்றி உள்ள கிராமங்களை ஒன்றி ணைத்து 4,750 ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்த அரசு சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கு பரந்தூர், ஏகனா புரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று அவர்களது போராட்டம் 433-வது நாளாக நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்து இருந்தார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் பொதுமக்கள் கிராமசபை கூட்டங்களை புறக்கணித்தனர்.

    பொதுமக்கள் யாரும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த 13 கிராமங்களிலும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் மட்டும் கலந்து கொண்டனர். இதனால் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கிராமங்கள் பரபரப்பாக காணப்படுகிறது.

    ஏற்கனவே நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. நேற்று பரந்தூர் விமானநிலையம் அமைய உள்ள இடத்தை தமிழக அரசின் உயர்மட்ட குழு ஆய்வு செய்ய வருவதை எதிர்த்து ஏகனாபுரம் கிராமத்தில் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    • விவசாயிகள் ஆகியோர் கடந்த 424 நாட்களாக அறவழியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
    • ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

    காஞ்சிபுரம்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் கட்டுவதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோர் கடந்த 424 நாட்களாக அறவழியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பொதுமக்களின் போராட்டத்தையும் மீறி, நீர்நிலைகளை மட்டுமே அளக்கிறோம் என்று கூறி அதிகாரிகள் ஒட்டுமொத்த விமான நிலைய திட்டத்தை குறிக்கும் வரைபடத்தை மார்க் செய்து உள்ளனர். போராட்டம் நடத்தும் மக்களிடம் முறையான அறிவிப்பு ஏதும் செய்யாமல் விமான நிலைய திட்ட வரைபடத்தை வரைந்தது யார் என்ற கேள்விக்கு இதுவரை மாவட்ட நிர்வாகத்தால் பதில் அளிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் நீர்நிலைகளை ஆய்வு செய்ய பேராசிரியர் மச்சநாதன் தலைமையிலான வல்லுநர்களை கொண்ட உயர்மட்ட குழு வருகிற 26-ந்தேதி பரந்தூருக்கு வருகிறது. இந்த குழுவினருடன் விமான நிலைய திட்டத்திற்காக நிலங்களை ஒப்படைக்க கூடிய டிட்கோவின் இயக்குனரும் வருவதால், இந்த குழு வருவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், டாக்டர் அம்பேத்கார் சிலை அருகே நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கருப்பு கொடியுடன் சாலைமறியல் போராட்டம் நடத்த இருக்கிறார்கள்.இந்த போராட்டத்துக்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

    • விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்து பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர்.

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்து பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் விமான நிலையம் அமைய உள்ள பகுதிக்கு மஞ்ச நாதன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இன்று காலை ஆய்வு செய்ய வந்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமக்கள் அம்பேத்கர் சிலையில் இருந்து மதுரமங்கலம் செல்லும் சாலையில் கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். அவர்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். திடீரென சிலர் சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டாலும் அதன் எல்லைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
    • கடந்த 10 ஆண்டுகளில் மழைப்பொழிவு, வெள்ளம், நிலத்தடி நீர் தன்மை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து சென்னையின் 2-வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

    ரூ.20 ஆயிரம் கோடி செலவில் சுமார் 4700 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் இந்த திட்டத்தை கைவிடக்கோரி ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடங்களில் நீர் நிலைத் தன்மை குறித்து அறிய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதைத் தெடர்ந்து பரந்தூரை சுற்றி உள்ள பகுதிகளில் மழைப்பொழிவு, நிலத்தடி நீர், பருவமழையின் போது வெள்ளம் மற்றும் புவியியல் நிலைத்தன்மை பற்றிய விரிவான ஆய்வறிக்கையை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) நீர்வளத்துறையிடம் கேட்டு வந்தது. இதனை 6 மாதத்தில் முடிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    எனவே பரந்தூரை சுற்றி உள்ள பகுதிகளில் நீர்நிலை தன்மை தொடர்பாக விரைவில் ஆய்வு செய்யப்படும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, "பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டாலும் அதன் எல்லைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நீர்நிலைத்தன்மை குறித்து ஆய்வறிக்கையை நீர்வளத்துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். இது 6 மாதத்தில் முடிவடையும். கடந்த 10 ஆண்டுகளில் மழைப்பொழிவு, வெள்ளம், நிலத்தடி நீர் தன்மை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    புதிய விமானநிலைய திட்டத்திற்கான பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க டிட்கோ விரைவில் ஒரு ஆலோசகரை நியமிக்கும் என்றார்.

    • புதிய விமானநிலையம் அமைப்பதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட விவசாய நிலங்கள், வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன.
    • புதிய விமான நிலையத்துக்கு எதிரான ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் இன்று 264-வது நாளாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 4,700 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    புதிய விமானநிலையம் அமைப்பதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட விவசாய நிலங்கள், வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு 13 கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    விவசாய நிலங்களை கையகப்படுத்தி புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கிராமசபை கூட்டத்தின் போது தீர்மானங்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

    புதிய விமானநிலையம் அறிவிப்பு வந்த நாள் முதல் ஏகனாபுரம் கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்கள் மொட்டையடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று காலை ஏகனாபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை அருகே கிராமத்தை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மொட்டை அடித்தனர். மேலும் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது புதிய விமான நிலையத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் பெண்கள் ஒப்பாரி வைத்து போராட் டம் நடத்தினர். இதனால் ஏகனாபுரம் கிராமம் பரபரப்பாக காணப்படுகிறது.

    புதிய விமான நிலையத்துக்கு எதிரான ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் இன்று 264-வது நாளாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×