search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா செய்திகள்"

    • பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்லலாம்.
    • மற்றவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு செல்ல அனுமதிக்க்ப்பட மாட்டார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்தமாத இறுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    அந்த பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன. அது மட்டுமின்றி மண்ணுக்குள் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். இந்த கோர சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது.

    அதே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்களின் கதி என்ன? என்பது தெரிவில்லை. அவர்களை தேடும் பணி 20 நாட்களுக்கு மேலாக நடந்தது. ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 1,200 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இறுதிக்கட்டமாக நிலச்சரிவில் சிக்கி உயிர் தப்பியவர்களை வைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதிலும் ஏராளமானோர் என்ன ஆனார்கள்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் வர தொடங்கினர். கட்டுப்பாடுகளில் சிறிது தளர்வு அமல்படுத்தப்பட்டதால் அவர்களின் வருகை அதிகரித்தது.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சில வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பாதி இடிந்தநிலையில் இருப்பதால், அவை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய அபாயம் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நிலச் சரிவு பாதித்த இடங்களை பார்ப்பதற்கு வருகிறார்கள்.

    அதனை தடுக்கும் விதமாக முண்டகை மற்றும் சூரல்மலை பகுதிகளுக்கு பார்வையாளர்கள் செல்ல வயநாடு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் பாலத்தின் நுழைவு பகுதியில் போலீசார் தடுப்புகளை வைத்து கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வயநாடு மாவட்ட கலெக்டர் மேகஸ்ரீ கூறியிருப்பதாவது:-

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல பல்வேறு படைகளை சேர்ந்த பணியாளர்கள், அதிகாரிகள், தன்னார் வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்லலாம். மற்றவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு செல்ல அனுமதிக்க்ப்பட மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • முகாம்களில் உள்ளவர்களில் ஆண்கள் 571 பேர், பெண்கள் 566 பேர், குழந்தைகள் 368 பேர் ஆவர்.
    • மாநில பேரிடர்மேலாண்மை துறை வெளியிட்டுள்ள உத்தரவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்ட நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கின்றனர். அவர்களை தேடும் பணி 16-வது நாளாக இன்று நீடிக்கிறது.

    கண்டுபிடிக்காமல் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தேடும் பணியில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த விரிவான தேடுதல் பணி கடந்த 9-ந்தேதி முதல் நடந்து வருகிறது.

    சூரல்மலை பகுதியில் நேற்று பிற்பகலில் கனமழை கொட்டியது. இதனால் சாலியாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ராணுவ வீரர்கள் அமைத்திருந்த தற்காலிக தரைப்பாலம் மூழ்கியது.

    இதனால் அந்த வழியாக மீட்பு குழுவினர் செல்ல முடியவில்லை. வெள்ளம் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்ல ராணுவவீரர்கள் அமைத்திருந்த பெய்லி பாலம் மூடப்பட்டது. இந்த மழையால் தேடுதல் பணி பாதிக்கப்பட்டது.

    வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மறுகுடிய மர்த்தும் பணிகளை அரசு தொடங்கியிருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கி உள்ளது.


    நிலச்சரிவில் சிக்கி பலியான பலரது உடல்கள் சிதைந்து உருக்குலைந்த நிலையிலும், பலரது உடல்கள் துண்டுதுண்டாகிய நிலையிலும் மீட்கப்பட்டதால் பலியான பலரை அடையாளம் காண முடியவில்லை. இதனால் அந்த உடல்கள் மற்றும் உடல் பாகங்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரி சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தநிலையில் நேற்று அந்த பணி நடைபெற்றது. அடையாளம் காணப்படாத 401 உடல்கள்-உடல் உறுப்புகளுக்கான டி.என்.ஏ. பரிசோதனை நிறைவடைந்தது. இதுகுறித்து கேரள மாநில வருவாய்த் துறை மந்திரி ராஜன் கூறிய தாவது:-

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்கப்பட்ட 401 உடல்கள்-உடல் பாகங்களின் டி.என்.ஏ. பரிசோதனை நிறைவடைந்துள்ளது. 52 உடல் உறுப்புகள் மிகவும் சிதைந்துள்ளதால் அவை கூடுதல் பரிசோதனை செய்யவேண்டும். மீதமுள்ள 349 பேரில் 194 உடல் உறுப்புகள் வெவ்வேறு நபர்களுடையது.

    மீதமுள்ள உடல் உறுப்புகள் 54 நபர்களுடையது என்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. டி.என்.ஏ. சோதனைகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட 248 உடல் உறுப்புகள் 121 ஆண்களுக்கும், 127 பெண்களுக்கும் சொந்தமானது.

    நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களில் 1,505 பேர் 12 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ளவர்களில் ஆண்கள் 571 பேர், பெண்கள் 566 பேர், குழந்தைகள் 368 பேர் ஆவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிலச்சரிவில் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளவர்களை வாடகை வீடுகளுக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு வாடகை வீட்டிற்கு செல்பவர்களுக்கு மாத வாடகையாக ரூ6ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    உறவினர்களின் வீடுகளுக்கு மாறுபவர்களுக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் வாடகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர்மேலாண்மை துறை வெளியிட்டுள்ள உத்தரவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    • குடியிருக்கும் வீட்டின் அருகில் உள்ள பொதுமக்களிடம் நேரடியாக சென்று நிதி பெற்றனர்.
    • மாணவிகளின் இந்த செயலை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் திருக்குமரன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மாணவிகள் நபிஷா, சுபிக்ஷா.இருவரும் வாவிபாளையம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய முன்வந்தனர். அதற்காக 2 பேரும், தாங்கள் குடியிருக்கும் வீட்டின் அருகில் உள்ள பொதுமக்களிடம் நேரடியாக சென்று நிதி பெற்றனர். அவ்வாறு பெற்ற நிதியை இன்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வழங்கினர். மாணவிகளின் இந்த செயலை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.

    • பள்ளியில் அளித்த ஆலோசனையின்போது தனக்கு நேர்ந்த அவலத்தை சிறுமி கூறியிருக்கிறார்.
    • சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்த திருவனந்தபுரம் நீதிமன்றத்தின் உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

    திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு நபர், 13 வயது நிரம்பிய தனது மகளை 2 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறைக்கு புகார் வந்தது. பள்ளியில் அளிக்கப்பட்ட ஆலோசனையின்போது தனக்கு நேர்ந்த அவலத்தை அந்த சிறுமி கூறியிருக்கிறார். இதையடுத்து பள்ளி நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தந்தையை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம், மாணவியின் தந்தையை சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் குற்றவாளி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளிக்கு கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. 

    ×