search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கச்சத்தீவு"

    • கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    • கச்சத்தீவில் புத்தர் கோவில்கள் அமைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.

    ராமேசுவரம்:

    தமிழகம்-இலங்கை இடையே உள்ள கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மார்ச் 3, 4 தேதிகளில் திருவிழா நடத்தப்படும். இதில் இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் கலந்து கொள்வார்கள்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் பக்தர்களின்றி விழா நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்துகொள்ள தமிழக மற்றும் இலங்கை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    தமிழகத்தை சேர்ந்த 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கடலோர பாதுகாப்பு படை போலீசார் சோதனைக்கு பின்னர் விழாவில் கலந்து கொண்டு திரும்பினர்.

    இந்த நிலையில் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு சென்ற தமிழக மீனவர்கள் அங்கு 2 புத்தர் கோவில்கள் கட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    கச்சத்தீவில் புத்தர் கோவில் அமைக்கப்பட்டது மதமோதலை ஏற்படுத்த வழி வகுக்கும், எனவே அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த பிரச்சினை தொடர்பாக இலங்கை பாராளுமன்றத்தில் சார்லஸ் நிர்மலநாதன் எம்.பி. பேசி உள்ளார். அப்போது அவர், "அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ள கச்சத்தீவில் இலங்கை கடற்படை அமைத்த புத்தர் கோவில் களை உடனடியாக அகற்ற வேண்டும். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

    ராமேசுவரம் அருகே உள்ள வேர்க்கோடு பங்கு தந்தை தேவசகாயம் கூறும்போது, "கச்சத்தீவில் புத்தர் கோவில்கள் அமைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதனால் அந்தோணியார் ஆலய திருவிழா நடத்து வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் கடல் எல்லை பகுதியில் இருநாட்டு கடற்படை, உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • கச்சத்தீவில் இருந்து பெண்கள் உள்பட 2193 பேர் இன்று மதியம் ராமேசுவரம் திரும்புகிறார்கள்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் தீவிலிருந்து 22 நாட்டிங்கல் மைல் கடல் தொலைவில் இந்திய-இலங்கை எல்லையையொட்டி கச்சத்தீவு அமைந்துள்ளது. இங்குள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயத்தில் மார்ச் மாதம் திருவிழா நடைபெறும். இதில் இந்திய, இலங்கை மக்கள் பங்கு கொள்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி எளிமையாக நடந்தது. இந்த ஆண்டு திருவிழாவை விமரிசையாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று விமரிசையாக தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக ராமேசுவரத்தில் இருந்து 362 பெண்கள், 65 சிறுவர், சிறுமியர் என மொத்தம் 2,193 பேர் 59 விசைப்படகுகள், 11 நாட்டு படகுகளில் கச்சத்தீவுக்கு வந்தனர்.

    நேற்று மாலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அப்போது இருநாட்டு மக்களும் பங்குபெற்ற சிறப்பு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து 14 இடங்களில் சிலுவை பாதை வழிபாடு நடந்தது. இதில் பங்கேற்ற ஏராளமானோர் சிலுவையை ஏந்தி ஆராதணை பாடல்களை பாடி வந்தனர். இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை பரிமாற்றி கொண்டார்கள். இரவு தேவாலயம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தல்களில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

    கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் கடல் எல்லை பகுதியில் இருநாட்டு கடற்படை, உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 2-வது நாளான இன்று காலை யாழ்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டன் ஞானபிரகாசம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இருநாட்டு மக்கள் பங்கு பெற்ற திருப்பலியில் தமிழ், சிங்கள மொழியில் ஆராதனை பாடல்கள் பாடப்பட்டது.

    தொடர்ந்து உலக நன்மை வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது. அதன்பின்னர் கச்சத்தீவில் இருந்து பெண்கள் உள்பட 2193 பேர் இன்று மதியம் ராமேசுவரம் திரும்புகிறார்கள். முன்னதாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இலங்கை அரசு செய்திருந்தது.

    • கச்சத்தீவுக்கு புறப்பட்டவர்களின் அடையாள அட்டை, ஆவணங்களை மாவட்ட அதிகாரிகள், போலீசார் சரிபார்த்தனர்.
    • கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை தொடங்குகிறது.

    ராமேசுவரம்:

    இந்தியாவின் தென் எல்லையான ராமேசுவரம் தீவிலிருந்து 22 நாட்டிங்கல் மைல் தொலைவில் மன்னார் வளைகுடா கடலில் இந்திய-இலங்கை எல்லையையொட்டி கச்சத்தீவு அமைந்துள்ளது. 1974-ம் ஆண்டு வரை இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த இந்த தீவு பின்னர் இலங்கையுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக கைமாறியது.

    இந்த தீவில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இங்கு வருடம் தோறும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் திருவிழா நடக்கும். 2 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் இந்திய-இலங்கையை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவில் இரு நாட்டு மக்களும் சகோதரத்துவத்துடன் சந்தித்து தாங்கள் கொண்டு வந்த பொருட்களை பரிமாற்றம் செய்வது வழக்கம்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி கச்சத்தீவு திருவிழா எளிமையாக நடைபெற்றது. இதனால் தமிழகத்தில் இருந்து மறை மாவட்ட பாதிரியார்கள் மட்டும் பங்கேற்றனர்.

    இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கச்சத்தீவு திருவிழாவை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட இருநாட்டு மறைமாவட்ட பாதிரியார்கள் முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றது.

    கச்சத்தீவு திருவிழாவில் தமிழகத்தில் இருந்து பங்கேற்க விரும்புவோர் விபரங்களை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சேகரித்தது. அதன்படி கச்சத்தீவு திருவிழாவில் பெண்கள், குழந்தைகள் உள்பட 2 ஆயிரத்து 408 பேர் செல்ல பதிவு செய்திருந்தனர்.

    கச்சத்தீவு திருவிழா இன்று (3-ந் தேதி) மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி ராமேசுவரத்தில் இருந்து பக்தர்கள் இன்று காலை 7 மணி முதல் புறப்பட்டு சென்றனர். ராமேசுவரம் துறைமுகத்தில் இதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தன. 60 விசைப்படகுகள், 12 நாட்டு படகுகள் என மொத்தம் 72 படகுகளில் 2408 பேர் இன்று காலை முதல் கச்சத்தீவுக்கு சென்றனர்.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பக்தர்களின் கச்சத்தீவு பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    முன்னதாக கச்சத்தீவுக்கு புறப்பட்டவர்களின் அடையாள அட்டை, ஆவணங்களை மாவட்ட அதிகாரிகள், போலீசார் சரிபார்த்தனர். தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு கவச உடை (லைப் ஜாக்கெட்) வழங்கப்பட்டது. பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன.

    மது பாட்டில்கள், பாலிதீன் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அளவு இந்திய பணம் மற்றும் திண்பண்டங்கள் போன்றவை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டன.

    ஒவ்வொரு படகுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் ஏற்றப்பட்டன. படகுகளில் ஏறிய அவர்கள் உற்சாகத்துடன் கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர். இன்று பிற்பகலுக்குள் அனைத்து படகுகளும் கச்சத்தீவுக்கு செல்லும் என தெரிவிக்கிறது.

    கச்சத்தீவு திருவிழாவையொட்டி இந்திய கடல் எல்லையில் கடற்படை, கடலோர காவல் படையினர், உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதேபோல் கச்சத்தீவு மற்றும் இலங்கை கடல் எல்லையிலும் அந்நாட்டு கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.

    கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. அப்போது அந்தோணியார் உருவம் பதித்த கொடியை நெடுந்தீவு பங்குசந்தை எமலிபால் ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து சிலுவை பாதை திருப்பலி நடைபெறுகிறது. இரவு அந்தோணியார் தேர்பவனி நிகழ்ச்சி நடக்கிறது. 2-ம் நாளான நாளை (சனிக்கிழமை) யாழ்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டன் ஞானபிரகாசம் தலைமையில் சிறப்பு திருப்பலியோடு விழா நிறைவு பெறுகிறது.

    அதனை தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது. விழா முடிந்த பின் இந்திய பக்தர்கள் நாடு திரும்புகிறார்கள். கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் கடல் பகுதியில் வருகிற 5-ந் தேதி வரை மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    • கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் விசைப்படகுகளை இன்று சுங்கத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • வருகிற 3, 4-ந்தேதிகளில் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடல் பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் கல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 18 மைல் கல் தொலைவிலும் இந்த தீவு அமைந்துள்ளது.

    இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் இந்த ஆலய திருவிழா பிப்ரவரி மாதம் இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 3-ந் தேதி தொடங்கி 4-ந்தேதி வரை 2 நாட்கள் நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு வருகிற 3-ந்தேதி மாலை 4.30 மணிக்கு அந்தோணியாரின் உருவம் பதித்த கொடி ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது. இதைத் தொடர்ந்து 14 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலி மற்றும் திருவிழா திருப்பலி, நற்கருணை ஆசீர், இரவு தேர்பவனி ஆகியவை நடக்கிறது.

    4-ந்தேதி காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. இதன் பின்னர் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமேசுவரத்தில் இருந்து 60 விசைப்படகுகள் மற்றும் 19 நாட்டுப் படகுகளில் 1,960 ஆண்களும், 379 பெண்களும், 38 ஆண் குழந்தைகளும், 31 பெண் குழந்தைகளும் கச்சத்தீவு செல்கின்றனர்.

    மொத்தம் 2 ஆயிரத்து 408 பேர் பதிவு செய்துள்ளனர். கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் படகுகள் அனைத்தும் நாளை மறுநாள் (3-ந்தேதி) காலை 8 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்படுகின்றன. திருவிழாவுக்கு செல்ல ஏற்கனவே பதிவு செய்தவர்களின் ஆவணங்களை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி வைக்கிறார்கள்.

    கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் விசைப்படகுகளை இன்று சுங்கத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். படகுகள் பழுதின்றி உள்ளதா? சட்டவிரோத பொருட்கள் எதுவும் வைக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை நடத்தினர். அதிகாரிகளின் இந்த ஆய்வு மற்றும் சோதனை நாளையும் தொடர்ந்து நடக்கிறது.

    கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று (1-ந்தேதி) முதல் வருகிற 4-ந்தேதி வரை 5 நாட்கள் ராமேசுவரம் பகுதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதேபோல் வருகிற 3, 4-ந்தேதிகளில் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ×