search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா கூட்டணி தேர்தல்"

    • அரசியலைமப்பை திருத்துவது பா.ஜனதாவின் நோக்கம் ரகசியமாக இருந்ததில்லை.
    • பா.ஜனதா தலைவர்களின் தனிப்பட்ட உரையாடல்களில் இந்தியா ஒரு இந்து நாடாக இருக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    அரசியலைமப்பை திருத்துவது பா.ஜனதாவின் நோக்கம் ரகசியமாக இருந்ததில்லை. பா.ஜனதா தலைவர்களின் தனிப்பட்ட உரையாடல்களில் இந்தியா ஒரு இந்து நாடாக இருக்க வேண்டும், இந்தியாவின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டப்படி அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டால் அது பாராளுமன்ற ஜனநாயகம், கூட்டாட்சி, சிறுபான்மையினரின் உரிமைகள் ஆகியவற்றுக்கு முடிவு கட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என்று சந்தேகம் எழுந்து உள்ளது.
    • தேர்தல் பத்திரம் மூலம் பாரதிய ஜனதா பெரியளவில் ஆதாயம் பெற்று உள்ளது.

    கோவை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவை மாவட்டம் அன்னூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டுமெனில் பா.ஜனதா ஆட்சி அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் நாடு பேராபத்தை சந்திக்க வேண்டி வரும். இந்த தேர்தலை இந்தியா கூட்டணி கொள்கைரீதியாக எதிர்கொள்ளும். 3 பேர் அடங்கிய தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒருவர் பதவி விலகிய நிலையில் தற்போது அருண்கோயல் என்பவரும் ராஜினாமா செய்து உள்ளார். எனவே தேர்தல் ஆணையத்தில் தலைவர் மட்டுமே உள்ளார். தேர்தல் ஆணையம் என்பது அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய உரிமை. இதனை பிரதமர் மோடி கேள்விக்குறியாக்கி விட்டார். இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என்று சந்தேகம் எழுந்து உள்ளது.


    தேர்தல் பத்திரம் மூலம் பாரதிய ஜனதா பெரியளவில் ஆதாயம் பெற்று உள்ளது. மார்ச் 13-ந்தேதிக்குள் யார்-யாருக்கு தேர்தல் பத்திரம் வழங்கப்பட்டு உள்ளது என்பதை வலைத்தளங்களில் வெளியிட வேண்டும் எனற சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்திய பிறகும், பாரத ஸ்டேட் வங்கி காலஅவகாசம் கேட்பது சரியல்ல.

    கேரளா மாநிலத்தில் இந்தியா கூட்டணி மட்டும் தான் போட்டியிடுகிறது. மூன்றாவது அணி இல்லை. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியும், கம்யூனி ஸ்டு சார்பில் ஆனிராஜாவும் போட்டியிடுகிறார்கள். அங்கு ராகுல் காந்தி வெற்றி பெற்றாலும், ஆனி ராஜா வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி இந்தியா கூட்டணியின் வெற்றி தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பல மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
    • பா.ஜ.க. எல்லா மாநிலங்களையும் போதை பழக்கங்கள் உள்ள மாநிலமாக மாற்றுவதற்காக முயற்சிக்கிறார்கள்.

    தூத்துக்குடி:

    தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நெல்லை, கன்னியாகுமரி, மதுரை மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். அப்போது அவருக்கு மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பல மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மழை வெள்ளத்தை எதிர்கொள்வதற்காக தமிழக அரசு ரூ.27 ஆயிரம் கோடி நிவாரண உதவி கேட்டும், ஒரு பைசா கூட நிதி அளிக்காத பா.ஜ.க.வை தமிழக மக்கள் வரும் தேர்தலில் புறக்கணிப்பார்கள்.

    இன்று தமிழகம் வரக்கூடிய பிரதமர் மோடி இந்த மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார். தமிழகத்தில் தி.மு.க.வுடன், காங்கிரஸ் நம்பிக்கையான உறவு கொண்டுள்ளது. இந்த கூட்டணி தொடரும். நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என அந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    போதைப் பொருட்கள் மத்திய அரசின் உளவுத்துறை போன்ற துறைகளின் கட்டுப்பாடுகளை மீறி குஜராத், ஆந்திரா, தமிழகம் என அனைத்து பகுதிகளுக்கும் வருகிறது என்றால் இதற்கு காரணம் பா.ஜ.க. தான். பா.ஜ.க. எல்லா மாநிலங்களையும் போதை பழக்கங்கள் உள்ள மாநிலமாக மாற்றுவதற்காக முயற்சிக்கிறார்கள்.

    பாரதிய ஜனதா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்று கூறியது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்தது. எந்த வாக்குறுதியும் செயல்படுத்தவில்லை. ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழகத்திற்கு உள்ள நிதியை ஒதுக்கீடு செய்யாதது ஏன்?.

    ஊழலில் திளைத்துள்ள பா.ஜ.க.வினர் ஊழலைப் பற்றி பேச அருகதை இல்லாத கட்சி. எனவே பா.ஜ.க. அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    நாங்கள் தி.மு.க. கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் சுமூகமாக இருக்கிறோம். அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம். நாங்கள் 5 தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறோம். தி.மு.க.- காங்கிரஸ் உறவு நம்பிக்கையான உறவாக இருக்கிறது. எங்களை ஒருபோதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறைத்து மதிப்பிட மாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது விஜயதாரணி பா.ஜ.க.வில் சேர்ந்தது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரே தோல்வி பயத்தில் ஓட்டம் பிடிக்கிறார். இவர் போய் அங்கே என்ன பண்ணப் போகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றார்.

    • தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய அரசு செய்துள்ளது.
    • இந்தியா தகவல் தொழில் நுட்ப முறையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்து உள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய மந்திரி வி.கே.சிங் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளேன். தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி உள்ளேன்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதாவிற்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் வருவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்து மாநில அரசுதான் தெரிவிக்க வேண்டும். ஆனால் இது குறித்து மாநில அரசு எந்த முயற்சிகளையும் எடுக்க வில்லை.


    மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தலில் எங்களுடன் அதி.மு.க. அல்லது தி.மு.க. யார் வந்தாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தி தலைமை முடிவு செய்யும்.

    தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய அரசு செய்துள்ளது. ஆனால் அந்தத் திட்டத்திற்கு மாநில அரசு தாங்கள் செய்தது போன்ற ஒரு போலியான சூழலை உருவாக்கியுள்ளது. இந்தியா தகவல் தொழில் நுட்ப முறையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்து உள்ளது. பேரிடர் நிவாரண நிதி தமிழகத்தில் வழங்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதன்படி மத்திய அரசு நிவாரணம் வழங்கும்.

    தேர்தல் பயத்தில் மோடி உள்ளார் என மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. தேர்தல் பயத்தினால் அவர் இது போன்ற கருத்துக்களை பேசி வருகிறார். தமிழகத்தில் தி.மு.க. குடும்ப அரசியல் நடத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., மாநிலச் செயலாளர் மீனாதேவ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொண்டு வந்ததாக பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
    • இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

    மதுரை:

    புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு பிரதமர் எந்த அளவுக்கு பொய் செல்ல வேண்டுமோ அந்த அளவையும் மீறி பிரதமர் மோடி பொய் சொல்லி வருகிறார். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலங்களை பிரதமர் புறக்கணித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னை மற்றும் தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்து மக்கள் பாதிக்கப்பட்டனர். அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒன்றாக சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.

    ஆனால் பிரதமர் மோடி தலைமையில் உள்ள மத்திய அரசு தமிழக மக்களை புறக்கணித்ததுடன் இதுவரை நிவாரணத்துக்கான எந்த உதவியைுயம் செய்யவில்லை. தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொண்டு வந்ததாக பொய் பிரசாரம் செய்து வருகிறார். அவ்வாறு செய்திருந்தால் அதை பட்டியலிட்டு கூற வேண்டும். ராமேசுவரம், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற பிரதமர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களை சந்திக்கவில்லை.

    10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலின்போது கூறிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டு வங்கியில் இருந்து பணத்தை கொண்டு வந்து ஒவ்வொரு கணக்கிலும் 15 ஆயிரம் ரூபாய் செலுத்துவோம் என்று கூறினார். அதை நிறைவேற்றவில்லை. வேலையில்லா திட்டாட்டம், வறுமையால் மக்கள் அவதிப்படுகின்றனர். சிறு-குறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. மின் கட்டணம் உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு என மக்கள் அவதிப்படுகின்றனர்.


    மாநில கட்சிகள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை குறை சொல்வதை மட்டுமே பிரதமர் செய்து வருகிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு எந்த வேலையும் நடக்கவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

    தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. தற்போது புதுச்சேரியில் சாராய ஆறு தான் ஓடிக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் செய்த சாதனைகளை பா.ஜனதா அரசு செய்ததாக மோடி கூறி வருகிறார்.

    இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். அப்போது பா.ஜனதா வீட்டுக்கு அனுப்பப்படும். பா.ஜனதாவிடம் கூட்டணி சேர ஒரு கட்சிக்கூட முன்வரவில்லை. இந்தியா கூட்டணியில் 28 கட்சிகள் உள்ளன. அமெரிக்காவில் கூட இன்றும் வாக்குச்சீட்டு முறையே உள்ளது. அதே போல் இந்தியாவிலும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பாரதிய ஜனதா அரசு தவறிவிட்டது.
    • ஆந்திர பிரதேச மறு சீரமைப்புக்கு பிறகு வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் கலந்து கொண்டு பேசியதாவது :-

    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பாரதிய ஜனதா அரசு தவறிவிட்டது. இது கண்டிக்கத்தக்கது. ஆந்திர மாநில நலன்களை பணயம் வைத்து தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வுடன் இணக்கமாக செயல்பட்டு வருகின்றனர்.

    ஆந்திர பிரதேச மறு சீரமைப்புக்கு பிறகு வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஆந்திர மாநிலத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த தடவை போட்டியிட்ட தொகுதிகளில் சிலவற்றை இந்த தடவை தர இயலாது.
    • 12 தொகுதிகள் தரவேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. மற்றும் இடது சாரி கட்சிகள் பிரதானமாக இடம் பிடித்துள்ளன.

    இந்த கூட்டணியில் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கு மட்டுமே ராமநாதபுரம், நாமக்கல் தொகுதி பங்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    மற்ற கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. மற்றும் இடது சாரி கட்சிகள் கடந்த தேர்தலை விட இந்த தடவை கூடுதல் தொகுதி கள் கேட்பதால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அந்த கட்சி கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆரணி, திருவள்ளூர், கரூர், திருச்சி, கன்னியாகுமரி, சிவகங்கை, தேனி ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் தேனி தொகுதியை தவிர மற்ற 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    இந்த தடவை தங்களுக்கு 12 தொகுதிகள் தரவேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. 3 வாரங்களுக்கு முன்பு தி.மு.க.-காங்கிரஸ் தலைவர்கள் தொகுதி பங்கீடு சம்பந்தமாக சந்தித்து பேசியபோது 15 தொகுதிகள் கொண்ட பட்டியலை கொடுத்து அதில் 12 தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.


    ஆனால் இதை தி.மு.க. ஏற்கவில்லை. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் சேர்த்து மொத்தம் 8 தொகுதிகள் மட்டுமே தர இயலும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் சந்தித்து பேசலாம் என்று முடிவு செய்தனர்.

    ஆனால் 3 வாரம் கடந்த நிலையில் தி.மு.க.- காங்கிரஸ் தலைவர்கள் இன்னமும் 2-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு உட்காரவில்லை. மற்ற தோழமை கட்சிகளுடன் தி.மு.க. தலைவர்கள் 2-வது கட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்து விட்ட நிலையில் காங்கிரசுக்கு மட்டும் இன்னமும் அழைப்பு அனுப்பப்படவில்லை. இதன் காரணமாக தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எதிர்பாராத தேக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி மாற்றப்பட்டு புதிய தலைவராக செல்வபெருந்தகை பொறுப்பு ஏற்றதும் மீண்டும் பேச்சு வார்த்தையை தீவிரப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க. தரப்பில் 8 தொகுதிகள் மட்டுமே தர இயலும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதால் இந்த இழுபறியை முடிவுக்கு கொண்டு வர தமிழக காங்கிரஸ் தலைவர்கள் செல்வபெருந்தகை, ராஜேஷ்குமார், ரூபி மனோகரன் ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    நேற்று அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் அஜோய்குமாருடன் ஆலோசனை நடத்தினார்கள். பிறகு அஜோய்குமார், செல்வபெருந்தகை, ராஜேஷ்குமார், ரூபி மனோகரன் ஆகிய 4 பேரும் நேற்று மாலை 6.30 மணிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார்கள். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக அவர்களது ஆலோசனை கூட்டம் நீடித்தது.

    கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் அஜோய்குமாரும், செல்வபெருந்தகையும் பேசுகையில், "தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை" என்று கூறினார்கள். ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பது தெரிய வந்துள்ளது.


    தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள தேக்கத்துக்கு 3 விதமான பிரச்சினைகளே முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இந்த 3 முக்கிய பிரச்சினைகள் வருமாறு:-

    1. காங்கிரஸ் கேட்கும் 12 தொகுதிகளை தர இயலாது என்று தி.மு.க. உறுதிப்பட கூறி இருக்கிறது. 8 தொகுதிகள் மட்டுமே தர இயலும் என்று தெளிவுப்படுத்தி உள்ளது.

    2. கடந்த தடவை போட்டியிட்ட தொகுதிகளில் சிலவற்றை இந்த தடவை தர இயலாது. சுழற்சி முறையில் இந்த தடவை வேறு தொகுதிகள் ஒதுக்கப்படும். அதை ஏற்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை காங்கிரஸ் ஏற்க தயங்குகிறது.

    3. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியையும் கூட்டணியில் சேர்க்க சம்மதித்து உள்ள தி.மு.க. கமல்ஹாசனுக்கான தொகுதியை காங்கிரஸ் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளது. இது காங்கிரஸ் தலைவர்களை கூடுதல் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    இந்த 3 பிரச்சினைகளும் நாளுக்கு நாள் இடியாப்ப சிக்கலாகவே மாறி வருகிறது. உதாரணத்துக்கு தொகுதிகளை மாற்றுவதால் காங்கிரஸ் தலைவர்கள் தவிப்புக்குள்ளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. திருச்சி தொகுதியை துரை வைகோவுக்காக ம.தி.மு.க. கேட்கிறது. இதனால் அந்த தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார்.

    ஆனால் அதற்குள் ராமநாதபுரம் தொகுதி முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. அதுபோல கமல்ஹாசனுக்கு எந்த தொகுதி கொடுப்பது என்பதில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த தேக்கத்துக்கு யார் காரணம்? என்பது தி.மு.க.விலும், காங்கிரசிலும் தலைவர்கள் மட்டத்தில் புரியாத புதிராக இருந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் காங்கிரசுக்கு 5 தொகுதிகள் மட்டுமே தர இயலும் என்று தி.மு.க. புதிதாக உறுதி செய்யப்படாத ஒரு தகவலும் உலா வந்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய யூகங்களுக்கும், தேக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் தி.மு.க. தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் மீண்டும் அமர்ந்து பேச வேண்டும். ஆனால் தி.மு.க. இதுவரை காங்கிரஸ் தலைவர்களை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    அவர்கள் அழைக்காமல் நாம் எப்படி மீண்டும் செல்வது என்று காங்கிரஸ் தலைவர்கள் தடுமாற்றத்துடன் தயங்கி கொண்டு இருக்கிறார்கள். டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்களும் இந்த சூழ்நிலையை சற்று கவலையுடன் பார்க்கிறார்கள். நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட, "தி.மு.க. என்ன முடிவு செய்யும்? அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?" என்பது பற்றிதான் நீண்ட நேரம் விவாதம் செய்து இருக்கிறார்கள்.

    கடைசியில் இன்னும் 2 நாட்கள் பொறுமையாக காத்திருக்கலாம். ஓரிரு நாட்களில் தி.மு.க.விடம் இருந்து நல்ல பதில் வரும் என்று டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் இருந்து நேற்று இரவே சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.

    அவர்கள் தி.மு.க.வுடன் மீண்டும் எப்போது பேசுவார்கள் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது இதே மாதிரியான சூழ்நிலைதான் தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகள் இடையே நிலவியது. அந்த சமயத்தில் மத்திய மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்தின் மீது தி.மு.க. தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

    இதன் காரணமாகவே காங்கிரசுடன் பேச்சுவார்த்தையில் நீண்ட இழுபறி நீடித்தது. கடைசியில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அதிரடியாக தி.மு.க. அறிவித்தது. இதனால் வேறு வழியில்லாமல் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.

    மீண்டும் அத்தகைய நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். எனவே தி.மு.க.வுடன் சுமூகமான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க எதிர்பார்ப்புடன் உள்ளனர். சென்னையிலும், டெல்லியிலும் மாறி மாறி நடந்த ஆலோசனையில் இதுவரை எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படாத நிலையில் இந்த தேக்கத்துக்கு எப்போது விடை கிடைக்கும் என்ற கேள்விக்குறி தி.மு.க.-காங்கிரஸ் இரு கட்சி நிர்வாகிகளிடமும் எழுந்து உள்ளது.

    • மற்ற கட்சிகள் அனைத்தும் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகிறது.
    • கட்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கினார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    மற்ற கட்சிகள் அனைத்தும் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகிறது. இதனால் உடன்பாடு ஏற்படுவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் பற்றி ஆலோசிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    அடுத்ததாக கூட்டணி கட்சியினரை எந்தெந்த தேதிகளில் பேச்சு வார்த்தைக்கு அறிவாலயத்துக்கு அழைப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

    மேலும் வருகிற 1-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக் கூட்ட ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    அறிவாலயம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அப்போது கட்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கினார்.

    • தேர்தல் நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகளின்போது இதுபோன்று காலதாமதம் ஏற்படுவது இயல்புதான்.
    • தி.மு.க. தலைமையுடன் டெல்லி மேலிட தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எத்தனை? என்பது இன்னும் முடிவாகாமலேயே உள்ளது.

    இதுதொடர்பாக தி.மு.க.வுடன் தமிழக காங்கிரசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.

    இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஸ்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    காங்கிரஸ் மேலிட தலைவர்களின் அழைப்பை ஏற்று டெல்லிக்கு பயணமான இருவரும் தமிழக அரசியல் நிலவரம் பற்றியும், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின்போது நடந்த விஷயங்கள் குறித்தும் எடுத்துக் கூறினார்கள்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இருவரும் சென்னை திரும்பினார்கள்.

    தொகுதி பங்கீடு தொடர்பாக செல்வபெருந்தகையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தேர்தல் நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகளின்போது இதுபோன்று காலதாமதம் ஏற்படுவது இயல்புதான். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது? எந்தெந்த இடங்களில் களம் காண்பது என்பது பற்றியெல்லாம் தி.மு.க. தலைமையுடன் டெல்லி மேலிட தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

    இந்த பேச்சுவார்த்தையில் விரைவில் சுமூக உடன்பாடு எட்டப்படும். காங்கிரசுக்கு கவுரவமான தொகுதிகளை தி.மு.க. தலைமை ஒதுக்கி தரும் என்கிற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு செல்வ பெருந்தகை கூறினார்.

    • போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை கட்சித் தலைவர் திருமாவளவன் குழுவிடம் வழங்கினார்.
    • 2-வது கட்ட பேச்சுவார்த்தை கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.விடம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை உறுதி செய்வதில் தீவிரமாக உள்ளன. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த முறை 2 தனி தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகிறது.

    முதல் கட்ட பேச்சுவார்த்தையின் போது போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை கட்சித் தலைவர் திருமாவளவன் குழுவிடம் வழங்கினார்.

    2-வது கட்ட பேச்சுவார்த்தை கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.விடம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் கடந்த தேர்தலைவிட கூடுதலாக தொகுதிகளை கேட்பதால் தி.மு.க.விற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. திருமாவளவனும் கடந்த முறையைவிட கூடுதலாக தொகுதிகளை கேட்டு பெறுவதில் உறுதியாக உள்ளார்.

    இந்த நிலையில் 2-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு தி.மு.க.விடம் இருந்து நாளை அழைப்பு வரும் என்று முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். நாளை நடக்கும் பேச்சு வார்த்தையின் போது எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தி.மு. க. தரப்பில் வலியுறுத்தப்படும்.

    கடந்த முறை திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் தொகுதியை தவிர மேலும் ஒரு பொதுத் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்த உள்ளார்.

    • திமுக-காங்கிரஸ் இடையே ஓரிரு நாட்களில் 2ம் கட்ட பேச்சுவார்தை நடக்க போகிறது.
    • தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு இன்று பிற்பகல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை டெல்லி செல்கிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    திமுக-காங்கிரஸ் இடையே ஓரிரு நாட்களில் 2ம் கட்ட பேச்சுவார்தை நடக்க போகிறது.

    இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு இன்று பிற்பகல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை டெல்லி செல்கிறார்.

    அங்கு டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை நேரில் சந்திக்கிறார்.

    • 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் பொது மக்களை சந்திக்க உள்ளனர்.
    • 750-க்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான 11 பேர் கொண்ட குழு பிப்ரவரி 5-ந் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளை அறிந்து வருகின்றனர்.

    உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்-பாராளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ் நாட்டின் கருத்துக்கள் என்ற தலைப்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு கோரிக்கை மனுக்களையும் பெற்று வருகின்றனர்.

    பிப்ரவரி 5-ந் தேதி தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள், 6-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள், பிப்ரவரி 7-ந் தேதி மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், 9-ந்தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள், 10-ந் தேதி காலையில் கோவை, நீலகிரி, பிற்பகலில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்கள், 11-ந் தேதி சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்து பரிந்துரைகளை பெற்றனர்.

    அடுத்தக்கட்டமாக 23-ந் தேதி வேலூர், ஆரணியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கவுள்ளனர். 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் பொது மக்களை சந்திக்க உள்ளனர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை எழுத்துப்பூர்வமாகவும், தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள், ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகளை அனுப்புவதற்கான முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த பதிவீடுகளுக்கான காலக்கெடு பிப்ரவரி 25-ந் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு மதிப்பீடு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பார்வைக்கு கொண்டு சென்று அதன்பிறகு அதிகாரப்பூர்வத் தேர்தல் அறிக்கையாக தயாரிக்கப்பட உள்ளது.

    இப்போது வணிகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சிறு குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பெண்கள் நல அமைப்பு நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், ஓட்டல் உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள், மாற்று திறனாளிகளின் அமைப்பு நிர்வாகிகள், மற்றும் பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் நேரிலும், எழுத்துப்பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாக, ஆன்லைன் மூலமாகவும் தங்கள் கோரிக்கைகளை அளித்து வருகின்றனர்.

    இதுவரை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை சந்தித்துள்ளனர். 750-க்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

    கோரிக்கைகள் தொடர்பாக தொலைபேசி வாயிலாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் மக்களிடம் இருந்து வந்துள்ளதுடன், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள்; சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளது.

    தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு 500க்கும் மேற்பட்ட கடிதங்களும் பெறப்பட்டு உள்ளதாக இக்குழுவினர் தெரிவி்த்துள்ளனர்.

    ×