search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயநாடு நிலச்சரிவு"

    • இந்த குக்கிராமத்தில் 118 குடும்பத்தினர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • நிலச்சரிவுடன் ஆர்ப்பரித்து வந்த காட்டாற்று வெள்ளம் அந்த குக்கிராமத்தை மண்ணோடு மண்ணாக மூடியது.

    வயநாடு:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டகை, சூரல்மலை மற்றும் மேப்பாடி ஆகிய கிராமங்களில் கடந்த 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இன்னும் பலர் காணாமல் போயினர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில் அந்த கிராமங்கள் தவிர அதை சுற்றி இருந்த ஒரு சில குக்கிராமங்களும் நிலச்சரிவில் சிக்கி இருந்த இடம் தெரியாத அளவிற்கு சிதைந்து போயுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    அதில் ஒன்றுதான், பூஞ்சிரித்தோடு குக்கிராமம். இது முண்டகை கிராமத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் மலைபாங்கான இடத்தில் அமைந்து இருந்தது. இந்த குக்கிராமத்தில் 118 குடும்பத்தினர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரே நாள் இரவில் அந்த குக்கிராமம் காணாமல் போனது. நிலச்சரிவுடன் ஆர்ப்பரித்து வந்த காட்டாற்று வெள்ளம் அந்த குக்கிராமத்தை மண்ணோடு மண்ணாக மூடியது.

    அங்கு வசித்து வந்த மக்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. தமிழ் சினிமாவில் அஜித்குமார் நடித்த சிட்டிசன் திரைப்படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமம் காணாமல் போனது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். அந்த அத்திப்பட்டியை நினைவூட்டுவது போல பூஞ்சிரித்தோடு கிராமமும் அழிந்து போயிருக்கலாம் என்று அக்கம்பக்கத்து ஊரை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    • வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.
    • நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 லட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்கள்.

    சென்னை:

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர். வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.

    இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிதியை, கேரள முதல்-மந்திரி பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறார்.

    முன்னதாக, பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 லட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்கள். நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

    தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கி உள்ளார்.

    • நிலம்பூர் பகுதியில் சாலியாற்றில் மிதந்து வரும் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது.
    • 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

    வயநாடு:

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக்கட்சி கூட்டம் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வயநாட்டில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி காப்பாற்றப்பட வேண்டிய நபர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும், இனி அங்கிருந்து மீட்கப்பட வேண்டியவர்கள் இல்லை என்றும் ராணுவத்தினர் தெரிவித்தனர்.

    நிலம்பூர் பகுதியில் சாலியாற்றில் மிதந்து வரும் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இந்திய ராணுவம் மேற்கொண்ட மீட்பு பணி அளவிட முடியாதது.

    200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. முண்டகை, சூரல்மலை பகுதிகளுக்கு தேவையான பொக்லைன் எந்திரங்கள் செல்ல முடியாததால், மண்ணுக்குள் சிக்கிய உடல்களை மீட்க முடியவில்லை.

    இப்போது நாம் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்கால வாழ்க்கை குறித்து செய்ய வேண்டிய செயல்களே ஆகும். அதனை அரசு பொறுப்புடன் மேற்கொள்ளும்.

    இந்த பகுதியில் சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருபவர்கள் நேரடியாக வயநாடு வர வேண்டாம். இந்த பேரழிவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கோழிக்கோட்டில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் வயநாட்டிற்கு வந்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்தபடி வயநாட்டில் நிலச்சரிவு, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அவர் மேப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து முதல்-மந்திரி பினராயி விஜயன் மேப்பாடி, சூரல்மலை பகுதிகளுக்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேசினார். பின்னா் சூரல்மலையில் அமைக்கப்பட்ட பெய்லி பாலத்தை பார்வையிட்டார். மேலும் நடந்து வரும் மீட்பு பணிகள் குறித்து ராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முதல் கிராமத்த நாங்கள் இன்னும் சென்றடையவில்லை.
    • சாலியார் ஆறு தனது போக்கை மாற்றியதால் கிராமங்கள் நாசமாக்கப்பட்டன.

    கேரள மாநிலம் வயநாட்டில் 29-ந்தேதி கனமழை பெய்தது. மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மீட்புப்பணி இன்னும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், நிலச்சரிவு மீட்புப்பணி, பாதிக்கப்பட்ட கிராமங்கள் குறித்து கூறியதாவது:-

    உயிரிழந்தவர்களின் பெரும்பாலான உடல்கள் கிராமத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. கிராமங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டதற்கு காரணம் சாலியார் ஆறுதான். இந்த ஆறு நிலச்சரிவு காரணமாக தனது போக்கை மாற்றியது. இதனால் கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்து சூறையாடிவிட்டன. இருந்தபோதிலும் நிலச்சரிவால் நாசமான முதல் கிராமத்தை இன்னும் நாங்கள் சென்றடையவில்லை.

    ஏனென்றால் நிலச்சரிவால் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. ராணுவ பொறியாளர்கள் குழு பெய்லி பிரிட்ஜ் (குறுகிய பாலம்) கட்டிக்கொண்டு வருகிறார்கள். இன்னும் சில மணி நேரங்களில் இந்த பாலம் கட்டும் பணி முடிவடையும். பாலம் கட்டப்படும் வரை சேத அளவை சரியாக மதிப்பிட முடியாது. ஏனென்றால், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முதல் இடத்தை நாங்கள் இன்னும் சென்றடையவில்லை.

    முதலில் பாதிக்கப்பட்ட கிராமம் ரிமோட் (நகரத்தில் இருந்து மிகத் தொலையில் எளிதாக தொடர்பு கொள்ள முடியாத தூரத்தில்) கிராமம் கிடையாது. அது மலைப்பகுதி. இருந்தபோதிலும் ரிமோட் கிடையாது. நகரப் பகுதியின் ஒருபகுதி. 100 வருட பழமையாக குடியிருப்புகள் கொண்டது.

    தற்போது மீட்புப்பணி மற்றும் நிவாரணம் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லோரும் அங்கே அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆறு தன்னுடைய போக்கை மாற்றியுள்ளது. மீண்டும் பழைய இடத்திற்கு போக்கை மாற்றலாம். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல. ஆற்றங்கரையோரம் உள்ளவர்களும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    மேலும், அமித் ஷா ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், 30-ந்தேதி காலையில்தான் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார். இந்த விசயத்தில் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துபோல் தெரிகிறதே? என்ற கேள்விக்கு "இந்த விஷயங்களைக் கணக்கிடுவதற்கு நேற்று நேரம் இல்லை. எனவே அந்தப் பிரச்சினைக்குள் நான் செல்லக்கூடிய நிலையில் இல்லை. நோயாளிகள், அவர்களது உறவினர்களை சந்திக்க, மக்களின் துக்கத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது..

    உள்துறை மந்திரி அமித் ஷா எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அதில் சந்தேகம் அடைய எனக்கு எந்த காரணமும் இல்லை" என்றார்.

    • மாநில அமைச்சர்கள் பலரை சம்பவ இடத்திற்கு முதலமைச்சர் பினராய் விஜயன் அனுப்பி வைத்துள்ளார்.
    • ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் பினராய் விஜயன் இன்று வயநாட்டிற்கு சென்றார்.

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு தோண்ட தோண்ட மனித உடல்கள் கிடைத்து வருகின்றன. கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாக தற்போதயை நிலச்சரிவு மாறி வருகிறது.

    நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண நிதி வழங்குமாறு கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேலும் அம்மாநில கவர்னர் ஆரிப் முகம்மதுகானும் அனைத்து மாநில மக்களும் இணைந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலையை உடனடியாக அறிந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள வசதியாக மாநில அமைச்சர்கள் பலரை சம்பவ இடத்திற்கு முதலமைச்சர் பினராய் விஜயன் அனுப்பி வைத்துள்ளார்.

    மேலும், நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அமைச்சர்கள் கூட்டத்தையும் நேற்று நடத்தினார்.

    அதுமட்டுமின்றி இன்று அனைத்து கட்சி கூட்டத்தையும் நடைபெறுகிறது. அனைத்து கட்சியினரும் அதில் பங்கேற்றுள்ளனர். 

    இந்நிலையில் நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் பினராய் விஜயன் இன்று வயநாட்டிற்கு சென்றார்.

    அங்கு நிலச்சரிவு பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணிகள் குறித்து முகாமிட்டுள்ள அமைச்சர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும், மீட்புப்பணிகளை துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினருக்கு ஆணை பிறப்பித்தார். அது மட்டுமின்றி நிலச்சரிவில் குடும்பத்தினரை இழந்து தவிப்பவர்களையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு பாதித்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று கேரள வருவதாக இருந்தது.

    ஆனால் வயநாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக அவர்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்று கேரள வந்தனர். கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர்கள், ஒரே காரில் வயநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

    அவர்கள் நிலச்சரிவு பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுடன் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.
    • பெருந்துயரில் மீள முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.

    கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    நிலச்சரிவின் மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் காண்போர் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பெருந்துயரில் மீள முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.

    இந்த நிலையில், பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 இலட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக அதிமுக சார்பில் நிவாரனா நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கி, நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்.

    கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடுமையான மழைப் பொழிவின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச் சரிவில் தற்போதுவரை 246 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதேபோல், பொதுச் சொத்துகளுக்கு பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த இயற்கைச் சிற்றத்தின் காரணமாக வரலாறு காணாத பேரிழப்பை அப்பகுதி மக்கள் சந்தித்திருப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கடும் மழைப் பொழிவின் காரணமாக பேரிழப்பை சந்தித்துள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான நிதியுதவி மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கிடுமாறும்; மேலும் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    அதிமுக ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு தாயுள்ளத்தோடு உதவுவதிலும், அண்டை மாநிலங்களில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் நேரங்களில் உதவி செய்வதிலும் முன்னிலை வகித்து வருவதை அனைவரும் நன்கு அறிவர்.

    அந்த வகையில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக அதிமுக சார்பில் நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1958-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கோட்டயம் கூட்டிக்கல் பகுதியில் நடந்த நிலச்சரிவில் 29 பேர் பலியாகினர்.
    • 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இடுக்கி பெட்டி முடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 66 பேர் பலி யானார்கள்.

    கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் அடிக்கடி பேரழிவு ஏற்படுகிறது. கனமழை பெய்யும்போது நிலச்சரிவு, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்று நடக்கும்போது உயிர்ப்பலியும் ஏற்பட்டு பேரழிவு ஏற்படுகிறது.

    அதிலும் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களிலும், அதனையொட்டிய மாதங்களிலும் பல பேரழிவுகள் நடந்திருக்கின்றன. நேற்று (ஜூலை 30-ந்தேதி) வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

    இதேபோன்று 1974-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடுக்கி அடிமாலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 33 பேர் பலியாகினர். 1958-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கோட்டயம் கூட்டிக்கல் பகுதியில் நடந்த நிலச்சரிவில் 29 பேர் பலியாகினர்.

    2019-ம் ஆண்டு வயநாடு புதுமலை, மலப்புரம் காவலப்பாறை, கோழிக்கோடு விலங்காடு ஆகிய இடங்களில் ஆகஸ்டு மாதத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 60 பேர் இறந்து விட்டனர். 11 பேர் காணாமல் போயினர்.

    2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இடுக்கி பெட்டி முடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 66 பேர் பலி யானார்கள். இதேபோன்று 2001-ம் ஆண்டு திருவனந்தபுரம் ஆம்புரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 38 பேரும், 2021-ம் ஆண்டு இடுக்கி கொட்டிக்கல் மற்றும் கொக்கையார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேரும் பலியாகி இருக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கனமழை ஆகஸ்டு 3-ந்தேதி வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • அனைத்து பி.எஸ்.சி. தேர்வுகளும் நாளை மறுநாள் (2-ந்தேதி) வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வயநாடு மாவட்டத்தில் கொட்டிய கனமழையால் அங்கு கடும் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

    இந்த நிலையில் கேரளாவில் மேலும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வயநாடு, மலப்புரம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 204 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

    இதனால் அந்த 8 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நாளை தினம் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை ஆகஸ்டு 3-ந்தேதி வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அன்றைய தினம் வரை பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் வயநாடு, காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தினம்திட்டா ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    கோட்டயத்தில் உள்ள எம்.ஜி. பல்கலைக்கழகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக் கழகம் ஆகியவை இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளையும் ஒத்தி வைத்துள்ளன. மேலும் அனைத்து பி.எஸ்.சி. தேர்வுகளும் நாளை மறுநாள் (2-ந்தேதி) வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

    • கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மும்பையில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 67 பேர் பலியானார்கள்.
    • கேரள மாநிலம் அம்பூரியில் கனமழை காரணமாக கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 40 பேர் இறந்தனர்.

    கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேம்பாடி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் இதுவரை 150-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

    இந்தியாவில் கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அதில் பலர் மாண்டுள்ளனர்.

    கடந்த காலங்களில் நாட்டை உலுக்கிய மிக மோசமான நிலச்சரிவுகள் பற்றிய விவரம் வருமாறு:-

    * அசாம் மாநிலம் கவுஹாத்தி: கனமழை காரணமாக 1948-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவால் ஒரு கிராமம் முழுவதும் புதையுண்டது.

    * மேற்குவங்காள மாநிலம் டார்ஜிலிங்: கடந்த 1968-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 60 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை 91 பகுதிகளாக சிதைந்தது. நிலச்சரிவில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    * உத்தரகாண்ட் மாநிலம் மல்பா: 1998-ம் ஆண்டு ஆகஸ்டு 11 முதல் 17-ம் தேதி வரை இங்கு தொடர்ச்சியான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அதில் 380-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    * மகாராஷ்டிரா மாநிலம் மும்பை: கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இங்கு பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 67 பேர் பலியானார்கள். ரெயில்களும் தடம்புரண்டு விபத்துக்குள்ளாயின.

    * கேரள மாநிலம் அம்பூரி: கனமழை காரணமாக கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 40 பேர் இறந்தனர். அதே நேரம் பாதிப்புகளும் மிக அதிகமாக இருந்தன.

    * உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்: கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி உத்தரகாண்டில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏற்பட்ட நிலச்சரிவில் 5,700-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதில் தமிழகத்தில் இருந்து ஆன்மிக பயணம் செய்தவர்களும் அடங்குவார்கள். சுமார் 4,200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. நாட்டின் மிக மோசமான நிலச்சரிவாக கேதார்நாத் சம்பவம் பார்க்கப்படுகிறது.

    * மகாராஷ்டிரா மாநிலம் மாலின்: கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி மாலினில் உள்ள ஒரு கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 151 பேர் இறந்தனர் மற்றும் 100 பேர் காணாமல் போயினர்.

    * கேரள மாநிலம் மூணாறு: கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக நள்ளிரவு நேரத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 67 பேர் பலியானார்கள்.

    • இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.
    • கயிரை கட்டி உடல்கள் ஆற்றின் நடுவில் இருந்து கரைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

    இதையடுத்து கேரளா மாநிலம் வயநாடு சூரல் மலையில் ஆற்றின் நடுவே இரவிலும் தொடந்து மீட்புபணிகள் நடந்து வருகிறது. சாலி ஆற்றில் இருந்து இதுவரை 47 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கயிரை கட்டி உடல்கள் ஆற்றின் நடுவில் இருந்து கரைக்கு கொண்டு வரப்படுகிறது. மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு பணியானது நடைப் பெற்று வருகிறது.

    • முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
    • காளிதாஸ் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

    வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காளிதாஸ் என்பவர் கட்டிட வேலைக்காக அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் காளிதாஸ் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார் காளிதாஸின் உடல் மேப்படி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது சொந்த ஊரான கூடலூருக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.

    காளிதாஸ் என்பவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக கூறியுள்ளார்.

    காளிதாசின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    ×