search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • கோ சாலையில் தினம் தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோ பூஜை நடைபெறுகிறது.
    • பித்ரு தோஷம், பிரம்ம தோஷம் ஆகியவை நீங்கும் என்பது ஐதீகம்.

    திருப்பதி அலிபிரி அருகே பக்தர்கள் நடைபாதையாக திருமலைக்கு செல்லும் இடத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கோசலை அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 13-ந் தேதி, ஏகாதசி அன்று திறக்கப்பட்டது.

    கோ சாலையில் ஓங்கோல், அல்லி காரு, கிர், ஹாசிவாதா, காங்கேயன், காங்கேஜ், ராயிடி என 7 வகையான பசுக்கள் உள்ளன.

    கோ சாலையில் தினம் தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோ பூஜை நடைபெறுகிறது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை 7-30 மணி முதல் 9-30 மணி வரை கிருஷ்ணருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. கோ பூஜையில் கலந்து கொண்டால் வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.

    தோஷங்கள் நீங்கும். மேலும் பித்ரு தோஷம், பிரம்ம தோஷம் ஆகியவை நீங்கும் என்பது ஐதீகம். பூஜையில் கலந்து கொள்ள ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர். தினமும் கோ பூஜையில் கலந்து கொள்கின்றனர்.

    மேலும் அங்குள்ள பசுக்களுக்கு துலாபாரம் மூலம் எடைக்கு எடையாக புல் வழங்கி வருகின்றனர்.

    • இன்று வெளியிடப்பட்ட ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் குறைந்த அளவு மட்டுமே பக்தர்கள் பதிவு செய்துள்ளனர்.
    • ஆன்லைன் தரிசன டிக்கெட் பெறுவதில் பக்தர்கள் ஆர்வம் செலுத்தவில்லை.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியி்டப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனம் வி.ஐ.பி. தரிசனத்தை சேர்த்து கடந்த 2 மாதங்களாக சராசரியாக தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான ரூ.300 தரிசனம் டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் செப்டம்பர் மாதத்திற்கான 6 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

    திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுவதால் ஆன்லைன் தரிசன டிக்கெட் பெறுவதில் அதிக அளவில் பக்தர்கள் ஆர்வம் செலுத்தவில்லை. இதற்கு முந்தைய மாதங்களில் ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 2, 3 மணி நேரங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும்.

    ஆனால் இன்று காலை வெளியிடப்பட்ட ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் குறைந்த அளவு மட்டுமே பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். இருந்தாலும் பக்தர்கள் டிக்கெட்டுகளை புக்கிங் செய்து வருகின்றனர்.

    • கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி முதல் முறையாக ரூ.6.28 கோடி உண்டியலில் வருவாயாக கிடைத்தது.
    • உண்டியலில் நகை, பணங்களை அதிக அளவில் பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 மாதங்களாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பள்ளி, கல்லூரி விடுமுறை முடிந்தும் பக்தர்கள் எண்ணிக்கை குறையாமல் உள்ளது.

    கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த அளவு பக்தர்கள் தரிசனம் செய்து வந்ததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

    தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பிரார்த்தனை நிறைவேற்றுவதற்காக உண்டியலில் நகை, பணங்களை அதிக அளவில் பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.

    இதனால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு தினசரி சராசரியாக ரூ.4 கோடிக்கு குறையாமல் உண்டியல் வருவாய் கிடைத்து வருகிறது.

    இந்த நிலையில் திருப்பதியில் நேற்று 77,907 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 38,267 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.6.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி முதல் முறையாக ரூ.6.28 கோடி உண்டியலில் வருவாயாக கிடைத்தது. தற்போது ரூ.6.18 கோடி உண்டியல் வருவாய் கிடைத்துள்ளது 2-வது அதிகபட்சமாகும்.

    • திருப்பதி திருமலையில் ஏராளமான தீர்த்தங்கள் காணப்படுகின்றன.
    • தீர்த்தங்களைப் பற்றியும், அதில் நீராடுவதன் பலனையும் பார்க்கலாம்.

    சுவாமி புஷ்கரிணி: ஆதிவராக மூர்த்தி சன்னிதிக்கு அருகில் இந்த தீர்த்தம் உள்ளது. இதனை 'தீர்த்தங்களின் அரசி' என்று அழைக்கிறார்கள். இங்கு சரஸ்வதிதேவி தவம் இயற்றியதாக தல புராணம் சொல்கிறது. மிகவும் புனிதத் துவம் பெற்ற தீர்த்தம் இது. மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூரிய உதயத்திற்கு 6 நாழிகை முன்பிருந்து, சூரிய உதயத்திற்கு பின்பான 6 நாழிகை வரை திருப்பதி மலையில் உள்ள அனைத்து தீர்த்தங்களும், இந்த தீர்த்தத்தில் கூடுகின்றன. எனவே அன்றைய தினம் இதில் நீராடி வழிபட்டால் இறைவனின் திருவடியை அடையலாம்.

    குமார தீர்த்தம்: மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசி பவுர்ணமி), சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. மனதிற்கு உற்சாகமும், உடலுக்கு இளமையும் தரும் இத்தீர்த்தத்தில் நீராடுபவர்கள், ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுவர்.

    தும்புரு தீர்த்தம்: இறைவனை தன்னுடைய நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர், திருப்பதி வெங்கடாஜலபதியை நினைத்து தவம் இருந்த இடத்தில் இருப்பதால் இதற்கு 'தும்புரு தீர்த்தம்' என்று பெயர். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பவுர்ணமி), இதில் நீராடுவோருக்கு பரமபதம் உண்டு.

    ஆகாச கங்கை: தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சகல பாபங்களையும் போக்கும் இத்தீர்த்தத்தின் அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில் வேங்கடவனுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்துக்கொண்டு நடந்தே வருவாராம். கோவிலில் இருந்து சுமார் 2 மைல் தூரம். எம்பெருமான் இவரது தீர்த்த கைங்கர்யத்தை மெச்சி காட்சி கொடுத்தார். சகல சித்திகளையும் அளிக்கும் இத்தீர்த்தத்தில் சித்திரைமாதம் பவுர்ணமியன்று நீராடுவது மிக விஷேசம்.

    பாண்டு தீர்த்தம்: வைகாசி மாதம் சுக்கிலபட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய்க்கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால், அப்போது இதில் நீராடுவோர் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.

    பாபவிநாசன தீர்த்தம்: இத்தீர்த்தம் இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. மிக சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியும் உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய தினத்தில் இதில் நீராடுவோர் பெறுவதற்கரிய ஞானம் பெறுகின்றனர். பாவங்களினின்றும் விடுபடுகின்றனர்.

    • திருப்பதியில் 2 ஆண்டுக்கு பிறகு பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களுக்கு அனுமதி.
    • வி.ஐ.பி பிரேக் தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
    • 2-ந்தேதி தங்க தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற செப்டம்பர் மாதம் 27-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

    செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது. இதில் ஆந்திர மாநில முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்கிறார்.

    அக்டோபர் மாதம் 1-ந்தேதி கருட சேவை, 2-ந் தேதி தங்க தேரோட்டம், 4-ந்தேதி தேரோட்டம், 5-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர பிரமோற்சவ விழாவில் பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவில் உள்ளே நடந்தது.

    மாட வீதிகளில் வாகன சேவை நடக்கவில்லை. கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திலேயே உற்சவர்களை அலங்காரம் செய்து ஒரு சில பக்தர்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    ஆனால் இந்த ஆண்டு நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் 4 மாட வீதிகளில் வாகன சேவை பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது.

    இந்த முறை அதிகளவில் பக்தர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கு ஏற்ப பிரமாண்ட ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கருட சேவை புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை நடப்பதால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்பார்கள். சாதாரண பக்தர்கள் அதிக நேரம் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

    வி.ஐ.பி பிரேக் தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்படும். முக்கியமான வி.ஐ.பி.களுக்கு மட்டும் பிரேக் தரிசனம் வழங்கப்படும்.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் தூய்மையாக வைத்திருக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கருட சேவை அன்று பக்தர்கள் இருசக்கர வாகனங்களில் திருமலைக்கு வர தடை விதிக்கப்படுகிறது. திருப்பதியில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பக்தர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு அரசு பஸ்களில் திருமலைக்கு வரலாம்.

    கருட சேவைக்கு முன்தினமும், கருட சேவை அன்றும் கருட சேவைக்கு மறுநாளும் பக்தர்களுக்கு ஆன்லைனில் தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கப்பட மாட்டாது. மற்ற நாட்களில் 50 சதவீத அறைகள் பக்தர்களுக்கு நேரில் வழங்கப்படும்.

    பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். கேலரியில் அமர்ந்திருக்கும் பக்தர்களுக்கு உணவ கவுண்டர்கள் அமைத்து 3 வேளை உணவு, குடிநீர், மோர் ஆகியவை விநியோகம் செய்யப்படும்.

    திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க வரும் பக்தர்கள் கண்ணாடி அல்லது தாமிரம் அல்லது ஸ்டீல் குடிநீர் பாட்டில்களை கொண்டுவர வேண்டும்.

    இந்து தர்ம பிரச்சார பரிஷத் சார்பில் 9 நாட்களும் திருமலையில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பக்தி சேனல் மூலம் அனைத்து வாகன சேவைகளும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் உற்சவர் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
    • விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.

    உடுமலை தளி சாலையில் பள்ளபாளையம் அருகில் இயற்கை எழில் சூழ்ந்துள்ள செங்குளம் கரைப்பகுதியில் அமைந்துள்ளது உடுமலை திருப்பதி ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கோவில். இந்த கோவில் கும்பாபிஷேக 4-ம் ஆண்டு விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. விழாவையொட்டி பத்மாவதி தாயார், ஆண்டாள், விஷ்வக்சேனர், லட்சுமி ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரிப் பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலையில் கள்ளப்பாளையம் சீனிவாசப்பெருமாள் பஜனை கோஷ்டியினரின் பஜனை மற்றும் பிருந்தாவனம் நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று ஹோமம், நவகலசஸ்தாபிதம், வேங்கடேசப்பெருமாள் மூலவர், உற்சவர் திருமஞ்சனம், வேங்கடேசப்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, மகாதீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் உற்சவர் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

    விழாவையொட்டி புலவர் குரு.சுபாசு சந்திரபோசு எழுதிய பெருமாள் திருமொழி என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவிற்கு உடுமலை திருப்பதி ஸ்ரீபாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் அறங்காவலர் எம்.வேலுச்சாமி தலைமை தாங்கினார். உடுமலை வர்த்தக சபை தலைவர் ஆர்.அருண்கார்த்திக் வரவேற்று பேசினார். உடுமலை திருப்பதி ஸ்ரீபாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் வி.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்து, பெருமாள் திருமொழி நூலின் முதல்பிரதியை வெளியிட அதை அறங்காவலர் எம்.அமர்நாத் பெற்றுக்கொண்டார்.

    2-வது பிரதியை அர்ச்சுனேஸ்வரர் அறக்கட்டளை தலைவர் யு.கே.பி.முத்துக்குமாரசாமியும், 3-வது பிரதியை உடுமலை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஶ்ரீதரும் பெற்றுக்கொண்டனர். டி.கோவிந்தராஜ், நந்தகோபால் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். நூலாசிரியர் புலவர் குரு.சுபாசு சந்திரபோசு ஏற்புரையாற்றினார். சற்குருநாதன் நன்றி கூறினார். கோவில் கும்பாபிஷேக ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீபாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர், அறங்காவலர்கள் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.

    • ஏழுமலையானை கோடை காலத்தில் சராசரியாக தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
    • புரட்டாசி மாதத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 1 லட்சம் பக்தர்கள் தரிசிப்பார்கள்.

    திருப்பதி

    திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் 2 நாள் பயிற்சி முகாமை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி தொடங்கி வைத்தார்.

    இதில் தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் பேசியதாவது:-

    ஏழுமலையான் கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் உள்ளதால் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பை அதிகரிக்க திருப்பதி திருமலை இடையே உள்ள மலைப்பாதையில் வேக கட்டுப்பாடு அமைக்கப்படும். வாகனங்கள் அதிவேகமாக வந்தால் உடனுக்குடன் அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாகன எண் பலகை ஸ்கேனர் அமைக்கப்படும். இதன் மூலம் விபத்து நடந்தாலோ அல்லது திருட்டு நடந்தாலோ உடனடியாக விவரம் அறிய இது உபயோகமாக இருக்கும்.

    உண்டியல் பணம் எண்ணும் இடத்தில் குண்டு துளைக்காத கண்ணாடி அமைக்கப்படும். இதேபோன்று ஏழுமலையானின் நகைகளை கொண்டு செல்லும் வாகனத்திற்கும் குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்படும்.

    ஏழுமலையானை கோடை காலத்தில் சராசரியாக தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 1 லட்சம் பக்தர்கள் தரிசிப்பார்கள். பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களில் 10 லட்சம் பக்தர்கள் தரிசிப்பார்கள். இதில் கருட சேவைக்கு மட்டுமே 3 லட்சம் பக்தர்கள் வருவார்கள். ரத சப்தமியன்று ஒரு லட்சம் பேர் தரிசனம் செய்வார்கள்.

    தற்போது தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கின்றனர். சேவாக்கள் மூலம் 3,500 பேரும், விஐபி தரிசனம் மூலம் 4 முதல் 5 ஆயிரம் பேரும், சர்வ தரிசனம் மூலம் 25 முதல் 45 ஆயிரம் பேரும், முதியோர், மாற்று திறனாளி பக்தர்கள் என 2 ஆயிரம் பேரும் என சராசரியாக 80 ஆயிரம் பக்தர்கள் தினமும் தரிசித்து வருகின்றனர். இதனால் ஏழுமலையானுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஓய்வு அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் வரை தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.
    • பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காப்பி உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர்.

    திருமலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    இலவச தரிசன வரிசையில் சுமார் 3 கிலோமீட்டர் வரை தரிசனத்துக்காக இரவு பகல் பாராமல் வரிசையில் பக்தர்கள் காத்து நிற்கின்றனர்.

    மேலும் ரூ.300 டிக்கெட்டில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களும் சுமார் 8 மணி நேரம் வரை தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.

    பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காப்பி உள்ளிட்டவைகளை இலவசமாக அதிகாரிகள் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கி வருகின்றனர்.

    • பக்தர்கள் வழக்கம்போல் இன்று மாலை 4 மணி முதல் 29ம் தேதிவரை ஆன்லைனின் முன்பதிவு செய்யலாம்.
    • சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை போன்றவற்றுக்கான டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் தரிசனம் செய்யாததால் தற்போது ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். இதனால் தரிசனத்திற்கு நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலை உள்ளது. பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காப்பி உள்ளிட்டவைகளை இலவசமாக அதிகாரிகள் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கி வருகின்றனர்.

    ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் தீர்ந்த நிலையில், செப்டம்பர் மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் (ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்) இன்று மாலை 4 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் வழக்கம்போல் இன்று மாலை 4 மணி முதல் 29ம் தேதிவரை ஆன்லைனின் முன்பதிவு செய்யலாம். மொத்தம் உள்ள 46470 ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளில் 8070 டிக்கெட்டுகள் குலுக்கல் முறை தேர்வுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 38400 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவுக்காக ஒதுக்கப்படுகிறது.

    சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை போன்றவற்றுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு, அதுபற்றிய தகவல் அவர்களுடைய செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக விஐபி பிரேக் தரிசனம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.
    • 2 லட்சத்து 74 ஆயிரத்து 840 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகிறது. இதனால் பக்தர்கள் இரவு பகல் பாராமல் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், காபி பால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 90,471 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ 4.13 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வந்ததால் கூடுதலாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லட்டுகள் நபர் ஒருவருக்கு இலவச லட்டுடன் ரூ. 50 விலையில் 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக விஐபி பிரேக் தரிசனம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 லட்சத்து 47 ஆயிரத்து 708 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 2 லட்சத்து 74 ஆயிரத்து 840 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.29.68 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

    கடந்த 3 வாரங்களாக வார இறுதி நாட்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்த நிலையில் இந்த வாரம் பக்தர்கள் கூட்டம் ஓரளவிற்கு குறைவாக உள்ளது.

    • ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனது ஏழு தலைகள்தான் ஏழுமலையாக விளங்கி வருவதாக ஐதீகம்.
    • திருமலைவாசனின் பெருமைக்கு அணிகலனாக ஏழு மகிமைகள் உள்ளன.

    ஏழு மலைகள்

    திருவேங்கடவன் கோவில் கொண்டுள்ள சப்தகிரி எனப்படும் ஏழுமலைகளின் பெயர்கள் கருடாத்ரி, வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி ஆகியவையாகும்.

    ஏழு நாமங்கள்

    பெயரற்ற பரம்பொருளாகவும், அடியார்களால் பல்வேறு நாமங்களால் அழைக்கப்பட்டாலும் திருமலைவாசனுக்கு ஏழு முக்கிய பெயர்கள் இருக்கின்றன. அவை: ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி.

    ஏழு தீர்த்தங்கள்

    திருப்பதியில் உள்ள முக்கியத்துவம் பெற்ற தீர்த்தங்கள் 108 இருந்தாலும், அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக ஏழு தீர்த்தங்கள் உள்ளன. குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாச கங்கை, பாண்டு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம்,

    சுவாமி புஷ்கரணி என்பவைதான் அவை.

    ஏழு தலை ஆதிசேஷன்

    ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனது ஏழு தலைகள்தான் ஏழுமலையாக விளங்கி வருவதாக ஐதீகம். பிரமோற்சவத்தில் கொடியேற்றத்திற்கு பிறகு வேங்கடவன் 'பெத்தசேஷ வாகனம்' என்ற ஏழுதலை நாக வாகனத்தில் திருவீதி உலா வருவது வழக்கம்.

    ஏழு மகிமைகள்

    திருமலைவாசனின் பெருமைக்கு அணிகலனாக ஏழு மகிமைகள் உள்ளன. அவை, ஸ்ரீனிவாச மகிமை, ஷேத்ர மகிமை, தீர்த்த மகிமை, பக்தர்கள் மகிமை, கோவிந்த நாமத்தின் மகிமை, பகுளாதேவியின் மகிமை, பத்மாவதியின் மகிமை ஆகியவையாகும்.

    ஏழு கலச ராஜகோபுரம்

    திருவேங்கடவன் சன்னிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ராஜ கோபுரத்திற்கு சப்த லோகங்களுடனும் தொடர்பு கொள்வது போல ஏழு கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஏழு முக்கிய இடங்கள்

    கோவிந்தராஜர் சன்னிதி, பூவராக சுவாமி சன்னிதி, திருச்சானூர் கோவில், ஸ்ரீபேடி ஆஞ்சனேயர் கோவில், ஸ்ரீவாரி சிகர தரிசனம், சிலாதோரண பாறைகள், ஸ்ரீவாரி பாதாள மண்டப கோவில் ஆகியவை திருப்பதியில் நாம் அவசியம் தரிசிக்க வேண்டிய இடங்களாக விளங்குகின்றன.

    • இலவச தரிசனத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    • தற்போது தரிசன டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் தீர்ந்தது.

    தற்போது தரிசன டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் தரிசனம் செய்யாததால் தற்போது ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதற்கு முன்பு சென்னையில் இருந்து ஒரு நாளைக்கு 100 பக்தர்கள் வரை தரிசனத்திற்கு சென்று வந்தனர். ஆனால் தற்போது தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி சென்று வருகின்றனர்.

    இதேபோல் அனைத்து ஊர்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்வதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நீண்ட தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    எனவே இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்க வேண்டும் என பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேவஸ்தான அதிகாரிகளும் இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 76,425 பேர் தரிசனம் செய்தனர்.36,053 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.15 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

    ×