search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96345"

    • பழனி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூச திருவிழா முக்கிய சிறப்பு வாய்ந்தது.
    • தைப்பூச தேரோட்டம் பிப்ரவரி 4-ம் தேதி நடக்கிறது.
    • 48 நாட்கள் மண்டல பூஜை 11 கலசங்கள் வைத்து நடைபெறும்.

    முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். கும்பாபிஷேகத்திற்கு பிறகு அவர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடந்த ராஜகோபுரம், தங்ககோபுரம் மற்றும் உப சன்னதிகளில் வழிபட்டு சென்றனர்.

    பழனி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூச திருவிழா முக்கிய சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவிற்காக மதுரை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருது நகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு வருகை தருவார்கள். கும்பாபிஷேக நிகழ்ச்சியால் பக்தர்கள் வருகை கடந்த சில நாட்களாக குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் பழனி நோக்கி பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

    தைப்பூச திருவிழா இன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கிழக்கு ரதவீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் பிப்ரவரி 4-ம் தேதி நடக்கிறது. அன்றுகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி தோளுக்கிணியாலில் சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்த நிகழ்ச்சியும், மதியம் 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டம், தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    பிப்ரவரி 5ம் தேதி திருக்கல்யாணமும், அன்று இரவு சாமி வீதிஉலாவும் நடைபெறும். பிப்ரவரி 7ம் தேதி தெப்பத்தேர் உற்வசத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    தைப்பூச திருவிழாவால் மண்டல பூஜை எந்த வகையிலும் தடை படாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்ப்பட்டது. அதன்படி 48 நாட்கள் மண்டல பூஜை 11 கலசங்கள் வைத்து நடைபெறும். இறுதி நாளில் 1008 சங்கு பூஜைகள் நடைபெறும். ஆகம விப்படி அனைத்து பூஜைகளும் நடைபெற்று வருவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    தைப்பூசத்தையெட்டி பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பழனிக்கு படையெடுத்து வருகின்றனர். எனவே குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்து வருகின்றனர். மேலும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
    • பழனிக்கு ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி, ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதற்கிடையே கும்பாபிஷேகத்தையொட்டி மூலவர் தரிசனம் இல்லை என்பதால் பக்தர்கள் வருகை குறைந்தது.

    இந்தநிலையில் கும்பாபிஷேகம் முடிந்ததாலும், தைப்பூச திருவிழா தொடங்க உள்ளதாலும் தற்போது பழனிக்கு மீண்டும் பக்தர்கள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர். அதன்படி, நேற்று பழனிக்கு ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். குறிப்பாக கோவை, சேலம், திருப்பூர், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பழனிக்கு அதிக அளவில் வந்தனர். அதேபோல் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்தனர்.

    அவ்வாறு வந்த பக்தர்களில் ஏராளமானோர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து முருகப்பெருமானை வழிபட்டனர். முன்னதாக கிரிவீதி, வெளிப்பிரகாரத்தில் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் ஒரே வழியில் சென்று சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 3-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 4-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருகை தருவார்கள். அதேபோல் ஏராளமான பக்தர்கள் பஸ், ரெயில்களிலும் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

    இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா, பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், முதல் நாளன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து கொடிபூஜை, வாத்திய பூஜை நடைபெற்று கொடியேற்றம் நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு மேல் உச்சிக்கால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவார பாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறுகிறது.

    தைப்பூச திருவிழாவையொட்டி தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி வீதிஉலா நடக்கிறது. அதேபோல் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது. திருவிழாவின் 6-ம் நாளான வருகிற 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்குமேல் வெள்ளிரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது.

    மறுநாள் 4-ந்தேதி (சனிக்கிழமை) தைப்பூசம் அன்று அதிகாலையில் சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    வருகிற 7-ந்தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • 29-ம்தேதி தைப்பூசத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடக்கிறது.
    • இன்று மாலை சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது..

    பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 18-ந் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. இதனையடுத்து மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதனையடுத்து மூலவர் சன்னதி மூடப்பட்டு கலசங்களில் ஆஹாகனம் செய்யப்பட்ட முருகன் யாகசாலை பூஜையில் ராஜஅலங்காரத்தில் எழுந்தருளினார்.

    இதனையடுத்து பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய முடியாமல் யாகசாலையில் எழுந்தருளிய முருகப்பெருமானை மட்டும் தரிசனம் செய்து சென்றனர். இன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 5.40 மணிக்கு மூலவர் சன்னதி திறக்கப்பட்டது.

    இதனையடுத்து விநாகயகர் பூஜையுடன் தொடங்கி மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பின் மூலவருக்கு தங்கத்தால் புதிய வேல் சாற்றப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. ராஜகோபுரம், தங்ககோபுரம், கைலாசநாதர், மலைக்கொழுந்து அம்மன், மலைக்கொழுந்து சிவன், போகர் சன்னதி, சண்முகர் சன்னதி, பள்ளியறை, சின்னக்குமாரர் ஆகிய 9 சன்னதிகளுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதன் பின் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மூலவரை தரிசனம் செய்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் பழனியில் விடுதியில் தங்கி காத்திருந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்துக்கு குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு பக்தர்கள் அனைவரும் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரெயில், ரோப்கார் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை பழனி மலைக்கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் தைப்பூசத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற உள்ளதால் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி நடந்து வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக குறைவாக காணப்பட்ட பக்தர்கள் கூட்டம் மீண்டும் அதிகரித்து வருகிறது.

    • பழனி உலகப்புகழ் பெற்ற ஆன்மிக திருத்தலம்.
    • புகழ்பெற்ற புண்ணிய நதியான சண்முகநதி ஓடுகிறது.

    பழனி உலகப்புகழ் பெற்ற ஆன்மிக திருத்தலம். பழனி "இயற்கை எழில்" ததும்பும் புண்ணிய பூமி. பழனி ஆண்டவனின் அருளைப்பெற நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பழனியை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

    பக்தர்களின் பழனி "திருத்தலப் பயணம்" பாவங் களைப் போக்கி நல்வினையைக் காட்டுகின்றது. ஆன்மிக பூமியான பழனி திருத்தலத்தில் புகழ்பெற்ற புண்ணிய நதியான சண்முகநதி ஓடுகிறது.

    சண்முகநதியில் புனித நீராடி பழனி ஆண்டவனை வழிபட்டால் இம்மையிலும் மறுமையிலும் வீடுபேறு கிட்டும்.

    • சித்தர்கள் வழி சென்றால் இறைவனுடன் ஐக்கியம் ஆகலாம்.
    • இறைவனுக்கே ‘எல்லாம் வல்ல சித்தர்' என்ற பெயரும் உண்டு.

    உலகில் அரியதாக மனித பிறவி எடுத்த நமக்கு உண்ணவும், உரையாடவும் பழகி கொடுத்தவள் தாய். நல்வழிப்படுத்தி வழிகாட்டுபவர் தந்தை. அறிவு காட்டுபவர் ஆசான். ஆனால் வாழ்வாங்கு வாழ்ந்து இறுதியில் இறை அருளை பெற வழிகாட்டுபவர்கள் சித்தர்களே. ஆண்டவனின் கிளை சக்திகளாக திகழும் சித்தர்கள் காட்டாற்று வெள்ளம் போல் சென்ற மக்களை கரையுள்ள நதியாய் நல்வழிப்படுத்தி நற்பயனை அடைய செய்வார்கள்.

    மலையில் உற்பத்தியாகும் நீர் கடலுடன் சங்கமம் ஆவதற்கு ஒழுங்குபடுத்துவது நதி. அதுபோல அறநெறிகளை வகுத்து காட்டிய நம் சித்தர்கள் வழி சென்றால் இறைவனுடன் ஐக்கியம் ஆகலாம். சீ(ஜீ)வன் சிவனாவது தான் சித்து. தம்மை தாமே அறிந்து தலைவனை அறிபவனே சித்தர். அவர்கள் சாகா கலை என்ற மருந்தை சரப்பயிற்சி மூலம் அடைந்து பேரின்பத்தில் திளைப்பவர்கள். எண்ணியதை எண்ணியாங்கு எய்தி வரும் பொருள் அறிந்து செயற்கரிய செய்பவர்கள். சித்தத்தை அடக்கி மூவாசைகளை துறந்து சுத்தமாக்கி திடநம்பிக்கையோடு இறைவன் பால் மனதை வைத்தவர்கள் சித்தர் பெருமக்கள். எனவேதான் இறைவனுக்கே 'எல்லாம் வல்ல சித்தர்' என்ற பெயரும் உண்டு.

    சித்தர்கள் சாதி, சமய வேறுபாடுகளை கடந்தவர்கள், மூட நம்பிக்கைக்கு இடம் அளிக்காதவர்கள். சடங்குகளோடு ஒட்டிய வழிபாடுகளை போற்றாதவர்கள். தத்துவஞானிகள். மெய்யுணர்வு பெற்றவர்கள். பொதுவாக சித்தர்கள் நம் தமிழ்நாட்டில் பரவலாக வாழ்ந்துள்ளார்கள் என்பது உண்மை. இதில் குறிப்பாக பழனி மலைப்பகுதி, பொதிகை, கொல்லிமலை, திருவண்ணாமலை ஆகியவை சிறப்பிடம் பெற்றவையாக உள்ளது. சித்தர்கள் தங்கள் குருவாக முருகப்பெருமானை ஏற்று வணங்கியவர்கள். அதிலும் பழனியாண்டவன் சித்தனாக, ஞானகுருவாக, குருமூர்த்தியாக எழுந்தருளி உள்ளான். எனவே தான் முருகப்பெருமானை சித்தர்களுக்கெல்லாம் சித்தன் என்றும், சித்தநாதன் என்றும் ஆன்மிக பெரியோர்கள் போற்றி வணங்குகின்றனர்.

    • முத்தமிழின் முதல்வன் முருகப்பெருமான்.
    • முருகன், தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படுகிறான்.

    "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி" என்ற சிறப்பு பெற்றது தமிழினம். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கலைகளை வளர்த்தவர்கள், பண்பாட்டை கொடுத்தவர்கள். காதல், வீரம் இரண்டையும் கண்களாக போற்றி மண்ணின் பெருமையை காத்தவர்கள். இந்த சிறப்பு பெற்ற தமிழர்களின் வழிபாட்டு கடவுளாக இருப்பவன் அறுபடை அழகன், முத்தமிழின் முதல்வன் முருகப்பெருமான். இந்து சமயத்தின் உருவ கடவுள்களுள் ஒருவனாக திகழ்ந்தாலும், அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே. இதனால் முருகன், தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படுகிறான்.

    நம் நாட்டில் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்திருக்கின்றன. தமிழகத்தை பிற சமயத்தினர் ஆட்சி செய்திருக்கின்றனர். பிற மதத்தினர் நம் தமிழக வளங்களை கொள்ளை அடித்திருக்கின்றனர். அரசர்களின் ஆட்சி, அந்நியர் ஆட்சி என அரசுகள் பலவாறு மாறி இருக்கின்றன. ஆனால் தெய்வ வழிபாடு எவ்வித மாற்றமும் பெறவில்லை. இன்றைக்கு எத்தனை விஞ்ஞான முன்னேற்றமும், வளர்ச்சிகளும் வந்த பிறகும் கூட ஆன்மிகம் தனது வேரை ஆழமாக பரப்பி இருக்கிறது.

    புராணங்கள் முருகப்பெருமானை சிவனின் மகனாக உரைக்கின்றன. அதன்படி சிவனிடம் இருந்து புறப்பட்ட தீப்பொறி சரவண பொய்கையில் 6 பகுதிகளாக விழ, அப்பொறிகளானது குழந்தை வடிவம் ஏற்கிறது. 6 கார்த்திகை பெண்களால் ஆறு குழந்தைகளும் வளர்க்கப்படுகின்றன. பின்னர் கார்த்திகை திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை திருநாளே முருகப்பெருமானின் விசேஷ தினமாக கொண்டாடப்படுகிறது.

    அதேபோல் வைகாசி மாத விசாக நட்சத்திர தினம், முருகப்பெருமானது ஜென்ம நட்சத்திர தினம். இந்த தினத்தை பக்தர்கள் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். முருகப்பெருமான் குடிகொண்ட கோவில்கள் தமிழகத்தில் பல இருந்தாலும் அறுபடை வீடுகளுக்கு தனிச்சிறப்பு உண்டு. ஏனெனில் அந்த அறுபடை வீடுகளிலும் முருகப்பெருமான் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு முதல்வனாக காட்சி தந்து அருள்பாலிக்கிறான்.

    • பழனியாண்டவனை தங்கள் குல தெய்வமாக கருதி வழிபடுகின்றனர்.
    • பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர்.

    பழனி முருகன் கோவிலில் ஆண்டு முழுவதும் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பழனி முருகன் கோவிலில் நிகழும் விழாக்களைப் பெரு விழாக்கள், சிறு விழாக்கள் என்று பாகுபாடு செய்யலாம். பழனியைப் பொறுத்த அளவில் தைப்பூசமும், பங்குனி உத்திரமும் பெரு விழாக்களாக கருதப்படுதற்குரியவை.

    ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் கந்தசஷ்டி, பங்குனி மாதம் வரும் பங்குனி உத்திர விழா, சித்திரை, வைகாசியில் நடைபெறும் அக்னி நட்சத்திர விழாவும், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை விழாவும் குறிப்பிடத்தக்கவை. தைப்பூச திருவிழாவின் போது தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். அதேபோல் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் கூட்டம், கூட்டமாகப் பழனிக்கு வருகின்றனர். இவர்கள் பழனியாண்டவனை தங்கள் குல தெய்வமாக கருதி வழிபடுகின்றனர்.

    அதேபோல் பங்குனி உத்திர விழாவும் 10 நாள் கொண்டாடப்படும் பெருவிழா ஆகும். இந்த விழாவின்போது கொங்குநாட்டுப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து பழனியாண்டவனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்கின்றனர்.

    தைப்பூசம், பங்குனி உத்திரம், அக்னி நட்சத்திர விழாக்களின் போது பக்தர்கள் பழனி முருகனுக்கு காவடி எடுத்து வருகின்றனர். காவடி எடுத்து வரும் பக்தர்கள் பழனியாண்டவன் மீது காவடிப்பாட்டு பாடிக்கொண்டு வருகின்றனர். இப்பாடல்கள் பழனியாண்டவன் மீது பாடப்படும் தாலாட்டுப் பாடல்களாகும். திருவிழா காலங்களில் கோவில் வளாகத்தில் காவடியாட்டம், கும்மி, ஓயிலாட்டம் முதலிய ஆட்டங்கள் நடைபெறுவதை காணலாம். இதனாலேயே பழனி திருவிழா நகரமாக போற்றப்படுகிறது.

    • பக்தியோடும், மகிழ்ச்சியோடும் காணிக்கைகளை செலுத்துகின்றனர்.
    • இதனால் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன.

    முருக பக்தர்கள் திருவிழாக்களில் பழனிக்கு வேண்டுதலை மட்டும் முருகனிடம் வைக்காமல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னரும் முருகனை கண்டு வழிபட்டு உண்டியலில் பக்தியோடும், மகிழ்ச்சியோடும் காணிக்கைகளை செலுத்துகின்றனர். இதனால் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன.

    காணிக்கைகளை அளிப்பதால் செல்வம் பெருகும். சேவல், புறா போன்ற பறவைகளை காணிக்கையாக செலுத்துவதால் நோய்கள், பில்லி, சூனியம், தரித்திரம் உள்ளிட்ட தீய வினைகள் நீங்கும், ஆயுள் பெருகும். விவசாயிகள் தங்கள் உழவு செழிக்க வேண்டும் என்பதற்காக பசு, எருது போன்றவற்றையும் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். வேளாண்மை செழிப்பதோடு, குடும்ப கஷ்டங்கள் விலகி தொழிலில் உற்பத்தி பெருகும்.

    அதேபோல் முருகன் கோவிலில் அன்னதானம் என்பது சிறப்பாக நடைபெற்று வருகிறது. அன்னதானம் செய்வதால் ஆயுள் பெருகும், குடும்பத்தில் முருகப்பெருமானே ஆண்குழந்தையாகி பிறப்பான் என்பது ஐதீகம். பழனி பகுதியை ஆண்ட மன்னர்கள் முருகப்பெருமானுக்காக இடைவிடாது பூஜைகள் பல செய்தும், நிலங்களை தானமாகவும் வழங்கினர். இதற்கான கல்வெட்டுகள் பல விளக்குகின்றன. நிலங்களை காணிக்கை போன்று தானம் செய்வதால் தலைமுறைகள் சிறக்கும்.

    வேலின் மகத்துவம்

    முருகனின் கரத்தில் இருக்கும் வேல், அநீதி அழிக்கும் ஆயுதம். முருகப்பெருமானை நாடுகிற மனிதர்களின் மனத்துணிவு வேலை விட உறுதியாக இருந்தால் வாழ்வின் துன்ப கணைகளை தகர்க்க முடியும். முருகனை வழிபடுபவர்கள் அக அழகோடு சென்றால், அவர்கள் வாழ்வை பொருளுடையதாக மாற்றி கருணை வழங்குபவன் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.

    • பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
    • நேற்று இரவு முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவியத் தொடங்கினர்.

    முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 வருடங்களுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 25-ந் தேதி நடந்தது.

    அதனைத் தொடர்ந்து கடந்த 18-ந் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் 94 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான படிப்பாதை பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து இன்று மலைக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 4.30 மணிக்கு 8ம் கால வேள்வியுடன் தொடங்கி திருக்குட நன்னீராட்டுப்பெருவிழா, மங்கள இசை, முதல்நிலை வழிபாடு, ஐங்கரன் வழிபாடு, சந்திரன் வழிபாடு, நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து பெருநிறை வேள்வி, நறும்புகை விளக்கு, படையல், திருஒளி வழிபாடு, வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், காவியம், கட்டியம், கந்தபுராணம், திருஒளி வழிபாடு, பன்னிரு திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது.

    அதன் பின் காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் புறப்பாடாகி ராஜகோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், பரமாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது கூடி இருந்த பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து ராஜகோபுரம் மீதும் பக்தர்கள் மீதும் மலர்கள் தூவப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதிகளுக்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்த 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இவை தவிர போலீசார், அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட 4 ஆயிரம் பேர் என மொத்தம் 6 ஆயிரம் பேர் மட்டுமே கும்பாபிஷேகத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மற்ற பக்தர்களுக்கு 16 இடங்களில் அகண்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு சிரமம் இன்றி கும்பாபிஷேகத்தை நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    நேற்று இரவு முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவியத் தொடங்கினர். அவர்கள் அடிவாரம், கிரி வீதி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த எல்.இ.டி. திரை முன்பு அமர்ந்து கும்பாபிஷேகத்தை கண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர். பக்தர்கள் வசதிக்காக 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தன. அந்த பஸ்கள் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து பழனி கோவில் வரை இயக்கப்பட்டது. கூட்ட நெரிசலை கண்காணிக்க ஹெலிகேம் பறக்க விடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி நகரில் பிறநகர் பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

    முக்கிய இடங்களில் 300 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 7 கண்காணிப்பு மையங்கள் மூலம் பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன், இணை ஆணையர் நடராஜன், நீதிபதிகள், அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நாளை ராஜகோபுரத்தில் குடமுழுக்கு நடக்கிறது.
    • இன்று பக்தர்களுக்கும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நாளை 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 16-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

    மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் 90 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 300 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்கி வருகின்றனர். நேற்று 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை பழனி கோவில் படிப்பாதை மற்றும் உபசன்னதிகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    காலை பாதவிநாயகர் கோவில், இடும்பன், கதம்பன், கிரிவீதியில் உள்ள 5 மயில்கள், படிப்பாதையில் உள்ள சேத்ரபாலகர், சண்டிகாதேவி, விநாயகர், குராவடிவேலர், அகஸ்தியர், சிவகிரிஸ்வரர், வள்ளிநாயகி, வேலாயுதசாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருக்குடஞானதிருவுலாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் பக்தர்களுக்கும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

    பழனி மலைக்கோவிலில் ராஜகோபுரம் உள்பட பிற சன்னதிகளில் நாளை காலை 8 மணிமுதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகத்தை காண 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மலைக்கோவிலுக்கு வரமுடியாத பக்தர்கள் கீழே இருந்து கும்பாபிஷேகத்தை காண வசதியாக அடிவாரம், கிரிவீதிகள், பஸ்நிலையம் உள்பட 18 இடங்களில் அகண்ட எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மலைக்கோவிலில் கோபுர விமான தளத்திற்கு சென்று கும்பாபிஷேகத்தை பார்க்க முடியாதவர்கள் பிரகாரத்தில் இருந்தபடியே பார்க்கவும் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டும், தைப்பூச விழாவை முன்னிட்டும் மதுரை-பழனி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இன்றும், நாளையும், பிப்ரவரி 3,4,5-ந்தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பழனி வந்து சேரும், மறு மார்க்கத்தில் பழனியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரையை வந்து சேரும்.

    இந்த ரெயில் சோழவந்தான், கொடைரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரெயில்நிலையங்களில் நின்றுசெல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    பழனி கோவிலில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கண்ணன், கலெக்டர் விசாகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    கும்பாபிஷேகத்திற்கு அதிகளவு பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கோவில் மற்றும் பழனி நகருக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது, தற்காலிக பஸ்நிலையத்திலிருந்து இலவசமாக பஸ்களை இயக்குவது, டிரைவர்கள், கண்டக்டர்களை 3 சிப்டுகளாக பிரித்து இயக்குவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. தீயணைப்புத்துறையினர், மருத்துவக்குழுவினர் ஆகியோர் தயார் நிலையில் இருக்கவும், பழனி அரசு தனியார் ஆஸ்பத்திரிகளில் போதுமான மருந்துகள் இருப்பு வைக்கவும், ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம், அடிவாரப்பகுதிகளில் போதுமான ஆம்புலன்சுகளை நிறுத்தி வைக்கவும் அறிவுறுத்தினர்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 3 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேகத்திற்கு மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வழிகாட்டி பலகைகள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளது.

    நகரில் சேரக்கூடிய குப்பைகளை உடனுக்குடன் சேகரித்து அப்புறப்படுத்த தூய்மை பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பழனி பகுதியில் டிரோன்கள் பறக்க போலீசார் தடைவிதித்துள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன், செந்தில்குமார் எம்.எல்.ஏ, அறங்காவலர் குழுதலைவர் சந்திரமோகன், கோவில் இணைஆணையர் நடராஜன், சுதர்சன், பாரதி, சுரேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வருகின்றன.
    • பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு முருகப்பெருமான் மலை மீது தண்டாயுதபாணியாக காட்சி அளித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சிறப்பு வாய்ந்த பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் பழனி முருகன் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதையொட்டி கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தையொட்டி நாளை காலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. பின்னர் காலை 7.15 மணிக்கு பெருநிறை வேள்வி, தீபாராதனை, கட்டியம், கந்தபுராணம், பன்னிரு திருமுறை விண்ணப்பம் ஆகியவை நடக்கிறது. காலை 8.15 மணிக்கு மங்கல இசையுடன் யாகசாலையில் இருந்து சக்தி கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து தேவாரம் பன்னிசை, திருப்புகழ் பாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமியின் ராஜகோபுரம், தங்கவிமானத்தில் உள்ள கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    அதன்பிறகு 8.45 மணிக்கு மலைக்கோவிலில் உள்ள தெய்வங்களின் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    தொடர்ந்து காலை 9.15 மணிக்கு மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் மதியம் 12.05 மணிக்கு அன்னப்படையல், தீபாராதனை, திருமறை, சிவஆகமம், கட்டியம், கந்தபுராணம், திருமுறை விண்ணப்பம் பாடப்படுகிறது.

    16 ஆண்டுகளுக்கு பிறகு பழனியில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    மேலும் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு போலீஸ் சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    ×