search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96359"

    திண்டுக்கல் அருகே 4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே நத்தம்- துவரங்குறிச்சி இடையே 27 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக 4 சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால் 500 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும். அதோடு அந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிணறுகள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கூறினர். எனவே இந்த பகுதியில் 4 வழிச்சாலை அமைக்க தேவை இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனாலும் அதனை மீறி அதிகாரிகள் நிலம் சர்வே பணியில் ஈடுபட்டனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் இன்று காலை ஒன்று திரண்டனர். அவர்கள் நேரடியாக திண்டுக்கல் வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து பேரணியாக வந்து நெடுஞ்சாலை நிலம் எடுப்பு துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகளை சந்தித்து மனுகொடுத்தனர்.

    குத்தாலம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குத்தாலம்:

    குத்தாலம் அருகே உள்ள கோவில்குத்தி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். (வயது 60) விவசாயி. இவர் நேற்று காலை தன் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் கடலூர் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    வீட்டில் இருந்த இரண்டு பீரோவை திறந்து அதில் இருந்த 8 பவுன் நகை, ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளைபோனவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இந்த நிலையில் இரவு வீட்டிற்கு வந்த செல்வராஜ் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் குத்தாலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னையில் போராட்டம் நடத்தி கைதான விவசாயிகளை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். #Farmersstruggle

    சென்னை:

    கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் வழியாக சத்தீஸ்கர் மாநிலத்துக்கு உயர் மின் அழுத்த கோபுரங்கள் வழியாக மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக 11 உயர் மின் அழுத்த கோபுரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட உள்ளது.

    இந்த கோபுரங்கள் அமைக்கப்பட்டால் விவசாயம், கோழிப்பண்ணை, மாட்டுப்பண்ணை ஆகிய தொழில்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    மற்ற மாநிலங்களைப் போல் பூமிக்கடியில் புதைவடங்கள் மூலம் கொண்டு செல்லும்படி வலியுறுத்தி வருகிறார்கள். இதற்காக கடந்த 15 நாட்களாக பலகட்ட போராட்டங்களையும் நடத்தினார்கள்.

    போராட்டத்துக்கு தீர்வு கிடைக்காததால் சென்னைக்கு திரண்டு வந்து நேற்று சேப்பாக்கத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடத்தினார்கள். இந்தபோராட்டத்துக்கு கொங்கு ராஜாமணி, திருப்பூர் செந்தில், வக்கீல் ஈசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விவசாய பிரதிநிதிகளுடன் மின்துறை அமைச்சர் தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து அனைவரும் மீண்டும் நேற்று இரவு சேப்பாக்கத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 460 விவசாயிகளை போலீசார் கைதுசெய்தனர். அவர்கள் அனைவரும் சிந்தாதிரிபேட்டையில் உள்ள இரண்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மண்டபங்களில் இருக்கும் விவசாயிகளை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவருடன் கோவை தங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றனர்.

    விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஜி.கே.வாசன் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்களது நியாயமான கோரிக்கைக்கு அரசுசெவி சாய்க்க வேண்டும் என்றார். #Farmersstruggle

    உரிய நேரத்துக்குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்வது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. #centralgovernment
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை பறிகொடுத்தது. அங்கு ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

    இதனால், விவசாயிகள், காங்கிரசுக்கு ஆதரவாக திரும்பும் நிலை ஏற்படும் என்று பா.ஜனதா கருதுகிறது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், விவசாயிகள் பிரச்சினை முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விவசாயிகளை கவரும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    அதன்படி, விவசாயிகளின் பயிர் கடன்களுக்கு வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்யும் திட்டத்தை அறிவிப்பது பற்றி பரிசீலித்து வருகிறது. தற்போது, விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம்வரை குறுகிய கால பயிர் கடன் அளிக்கப்படுகிறது. உரிய நேரத்தில் கடனை திருப்பி செலுத்தினால், 3 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.

    இந்நிலையில், உரிய தேதிக் குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு மீதி 4 சதவீத வட்டியையும் தள்ளுபடி செய்யும் திட்டத்தை அறிவிக்கலாமா? என்று மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

    ஏற்கனவே, வட்டி தள்ளுபடி மூலம் மத்திய அரசுக்கு ஓராண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி சுமை ஏற்பட்டு வருகிறது. வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்தால், இந்த சுமை ரூ.30 ஆயிரம் கோடியாக உயரும் அபாயம் உள்ளது.

    விவசாயிகளுக்கு மற்றொரு சலுகையாக, உணவு தானிய பயிர்களின் காப்பீட்டுக்கு அவர்கள் செலுத்தி வரும் பிரிமியம் தொகையை தள்ளுபடி செய்யவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.



    இயற்கை காரணிகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு காப்பீடு வழங்கும்வகையில், ‘பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா’ என்ற பயிர் காப்பீட்டு திட்டம், 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இதில், விவசாயிகளிடம் இருந்து 2 சதவீதம், 1.5 சதவீதம், 5 சதவீதம் என பயிர்களுக்கு ஏற்ப குறைவான பிரிமியம் தொகையே வசூலிக்கப்பட்டு வருகிறது. மீதி பிரிமியத்தை மத்திய-மாநில அரசுகள் ஏற்று வருகின்றன.

    இனிமேல், விவசாயிகள் செலுத்தும் சொற்ப பிரிமியத்தையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனால், அவர்கள் ஓராண்டுக்கு செலுத்தும் ரூ.5 ஆயிரம் கோடி பிரிமியத்தை மத்திய அரசே ஏற்க வேண்டி இருக்கும்.

    அத்துடன், நடப்பு நிதியாண்டில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடன் அளவை ரூ.11 லட்சம் கோடியாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

    விவசாயிகளுக்கான சலுகைகளை வகுப்பது பற்றி உயர்மட்ட அளவில் ஆலோசனை கூட்டங்களை மத்திய அரசு நடத்தி வருகிறது. புத்தாண்டு பரிசாக இத்திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.#centralgovernment
    உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளை அரசு அழைத்து பேசாதது ஏன்? என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். #MKStalin #Farmers

    ஈரோடு:

    விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை உள்பட 8 மாவட்ட விவசாயிகள் கடந்த 17-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு அருகே மூலக்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சந்தித்து பேசினார்.

    அப்போது விவசாயிகளி டம் போராட்டத்தின் தன்மை குறித்தும், போராட்டத்தினால் அரசின் செயல் பாட்டில் மாற்றம் ஏற்பட்டு உள்ளதா? என்றும் கேட்டறிந்தார். கடந்த 5 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளையும் அவர் சந்தித்து பேசினார். அதன்பின்னர் விவசாயிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

    உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கூட்டியக்கம் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறீர்கள். வெறும் போராட்டம் மட்டும் நடத்தினால் இந்த அரசு செவி சாய்க்காது என்று கருதி, குறிப்பிட்ட சிலர் தங்களை வருத்திக்கொள்ள கூடிய உண்ணா நோன்பையும் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதற்கு வேதனைப்படுகிறேன்.


    இந்த செய்தியை கேள்விப்பட்டு ஏற்கனவே தி.மு.க. சார்பில் கண்டன அறிக்கையை வெளியிட்டு உள்ளேன். அதில் அரசு உடனடியாக தலையிட்டு போராட்டக்குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். இதே கோரிக்கையை ஆளும் கட்சி தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

    உயர்மின் கோபுரங்களை அமைக்க யாரையும் கலந்து பேசாமல் சர்வாதிகார தன்மையுடன் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை. உயர் அதிகாரிகளும் வந்து சந்திக்கவில்லை. மாவட்ட கலெக்டர் கூட வந்து சந்திக்க வில்லை என்று வேதனையுடன் போராட்டக்குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    சென்னையில் கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை நேரில் சந்தித்து பேசினேன். அவர்களையும் அரசு அழைத்து பேசவில்லை. அதே நிலைதான் விவசாயிகளுக்கும் உள்ளது.

    வருகிற 2-ந் தேதி சட்டமன்றம் கூட இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் உங்களுக்காக நான் குரல் கொடுக்க முடிவு செய்து இருக்கிறேன். உங்களுடைய போராட்டம் வெற்றி பெற தி.மு.க. உறுதுணையாக இருக்கும்.

    தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்களை சந்தித்து பேசும்போது, உடலை வருத்திக்கொண்டு கண்டிப்பாக போராட்டம் நடத்த வேண்டுமா? கொஞ்சம் யோசியுங்கள் என்றேன். போராட்டம் நடத்துங்கள். ஆனால் உண்ணாவிரதம் என்ற போராட்டத்தை ஏன் கைவிடக்கூடாது? என்று கேட்டேன்.

    அதற்கு அவர்கள், எங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு தான் முக்கியம். எங்களது உயிரே போனாலும் பரவாயில்லை. போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்று சொன்னது, விவசாயிகளின் வேதனை எவ்வளவு என்று புரிகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுவதற்கு உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக சட்டமன்றத்தில் நிச்சயமாக நாங்கள் குரல் எழுப்புவோம்.

    தி.மு.க. துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி உள்பட பலர் உடனிருந்தனர். #MKStalin #Farmers

    விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க ஈரோடு மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மூலக்கரை பிரிவில் இன்று விவசாயிகள் 11-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையொட்டி 11 விவசாயிகள் தொடர் உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்கள்.

    இன்று (வியாழக்கிழமை) அவர்களின் உண்ணாவிரதம் 5-வது நாளாக நீடித்து வருகிறது.

    காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று ஈரோடு அடுத்த மேட்டுக் கடை பகுதியில் உள்ள வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் காலை முதல் எந்த கடையும் திறக்கப்பட வில்லை. 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு கிடந்தன. இதனால் மேட்டுக்கடை பகுதி இன்று வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதற்கிடையே உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று காலை 10 மணி முதல் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

    விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நீடித்தது.

    கோவை:

    கோவையில் சுல்தான் பேட்டையிலும், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் கள்ளிப் பாளையத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    பல்லடத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. கடுங்குளிர் மற்றும் கடும் பனிப் பொழிவு ஆகியவற்றை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்ட பந்தலிலேயே தங்கி அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்ட பந்தலில் படுத்து உறங்கினர்.

    காலையில் பந்தலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த 23-ந்தேதி முதல் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி, விஸ்வநாதன், பச்சியப்பன், பால்ராஜ், சிவக்குமார், நாச்சிமுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட விவசாயிகள் 16 பேர் தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுல்தான் பேட்டையில் 17 பேரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த தொடர் உண்ணா விரதப்போராட்டம் இன்று 4- வது நாளாக நடை பெற்று வருகிறது. விவசாயிகள் காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரதம் என தனிதனியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    காத்திருப்பு தொடர் போராட்டத்தில் போராட்ட பந்தலின் முன்பு, விவசாயிகள்தூக்கு போட்டுக் கொண்டு நூதன போராட்டம் நடத்தினர்.

    காத்திருப்பு தொடர் போராட்டத்தை இதுவரை கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். உண்ணாவிர போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உடல் நிலை மோசமடைந்தது. இதை தொடர்ந்து அவர்களுக்கு உண்ணாவிரத பந்தலிலேயே குளுக்கோஸ் செலுத்தப்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வே.கள்ளிப்பாளையத்தில் கடந்த 10 நாட்களாக காத்திருப்பு தொடர் போராட்டம், மற்றும் தொடர் உண்ணா விரதப்போராட்டம் நடை பெற்று வருகிறது.

    போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பொங்கலூரில் அனைத்து கடைகள்,மற்றும் நிறுவனங்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு செய்தனர்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேசன் சாவடியில் விவசாயிகள் கடந்த 17-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

    இன்று 10-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் உண்ணாவிரத போராட்டத் தின்போது விவசாயிகள் ஆறுகளூரை சேர்ந்த ராஜேஷ்(வயது 26), இளையப்பன் (40), பெரியகுட்டிமடுவு பகுதியை சேர்ந்த குமார் (30), ராமகிருஷ்ணன்(32) ரத்த அழுத்தம், உடல் நிலை கோளாறு காரணமாக மயங்கி விழுந்தனர்.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு சாமாண்டூர் பகுதியில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்தது.

    நாமக்கல் மாவட்ட விவசாய சங்க செயலாளர் படைவீடு பெருமாள் தலைமையில் நடைபெற்றுவரும் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று பெருமாள், பொன்னுசாமி, முருகவேல், கே.சுப்ரமணியம், நடராஜன், முத்துசாமி, சி.சுப்ரமணியம், பழனிசாமி, சுரேஷ், பச்சியப்பன் ஆகிய 10 பேர் பங்கேற்றனர். இதில் சுப்ரமணியம், நடராஜன், பழனிசாமி ஆகிய 3 பேருக்கு ரத்தஅழுத்தம் குறைவின் காரணமாக திடீரென தலைச்சுற்றல், மயக்கம் ஏற்பட்டது.

    ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள மூலக்கரை பிரிவில் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று (புதன்கிழமை) 10-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. பல்வேறு நூதன வகையிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    6 பெண்கள் உள்பட 11 விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களின் உண்ணா விரதம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது.

    இதனால் 6 பெண்கள் உள்பட 11 பேரும் தொடர் உண்ணாவிரதத்தால் சோர்வாக உள்ளனர்.

    இவர்கள் உண்ணா விரதத்துடன் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர். உண்ணாவிரதம் ஒரு புறம் நடக்க விவசாயிகள் தங்கள் இடுப்பில் வேப்பிலை கட்டி கொண்டு வாயில் அருகம் புல்லை வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை-கரூரில் விவசாயி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலநெம்மக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (22). ஆலங்குடி அற்புத மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (25).

    நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்றிரவு ஆலங்குடி பள்ளிவாசல் தெரு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு தனியார் திருமண மண்டபத்தின் மாடியில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது போதையில் இருவருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அப்துல்ரகுமான், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து சிவசுப்பிரமணியனை சரமாரி தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்தார்.

    ரத்தக்கறை படித்த சட்டையுடன் அப்துல்ரகுமான் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கேட்டபோது, கீழே விழுந்து விட்டதால் காயம் ஏற்பட்டதாக கூறி விட்டு திடீரென்று அங்கிருந்து தப்பியோடினார்.

    சந்தேகமடைந்த பொது மக்கள் மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு சிவசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி தப்பியோடிய அப்துல் ரகுமானை கைது செய்தனர்.

    கைதான அப்துல்ரகுமான் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. 2 முறை சிறைக்கு சென்று வந்துள்ளார். அடிக்கடி குடிபோதையில் பலரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் போதையில் நண்பனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ராக்கத்தம்பட்டியை சேர்ந்தவர்கள் போசங்கு, ரவி (வயது 49). அண்ணன் தம்பிகளான இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் பொது கிணற்றில் தண்ணீர் எடுப்பது தொடர்பாக அடிக்கடி அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வந்தது. நேற்றிரவு ரவி வீட்டிற்கு, அவரது மருமகன் மனோகரன் மற்றும் உறவினர்கள் கமல், தேவராஜ், ராஜேஷ், போதும் பொண்ணு, குரோசி ஆகியோர் அரிவாள், கம்பி மற்றும் ஆயுதங்களுடன் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    தகராறு முற்றியதில் தாங்கள் கொண்டு வந்த ஆயுதங்களால் ரவி மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி, அவர்களது மகன் அஜித் (19) ஆகியோரை தாக்கியுள்ளனர். உயிருக்கு பயந்து அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அப்போது ரவியை விரட்டி விரட்டி சென்று தாக்கியதில் அவருக்கு நெற்றியில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மகேஸ்வரி, அஜித் காயங்களுடன் உயிர் தப்பினர்.

    தகவல் அறிந்ததும் உடையாளிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த அஜித், மகேஸ்வரியையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த கரூர்- திண்டுக்கல் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது மணல் மேடு கிராமம். இதனையொட்டிய தனியார் பேக்கரிக்கு பின்புறம் இன்று காலை வாலிபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர்.

    கொலையுண்ட வாலிபருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவரது தலை மற்றும் முகம் கல்லால் தாக்கி சிதைந்த நிலையில் இருந்தது. அருகிலேயே மோட்டார் சைக்கிள் ஒன்றும் கிடந்தது. கொலையுண்டு கிடந்தவர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்ற விபரம் எதுவும் தெரிய வில்லை.

    அந்த வழியாக வந்த வாலிபரை மர்ம நபர்கள் வழிமறித்து தாக்கி கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பெண் பிரச்சினையில் தொடர்புடையவராக இருக்கலாம் என்றும், அதனால் ஆத்திரத்தில் முகத்தை சிதைத்து கொடூரமாக மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேதிக்கிறார்கள்.

    தொடர்ந்து அந்த வாலிபரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அரவக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    சென்னையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டத்தில் ப.சிதம்பரம் தலைமை தாங்கினார். #Congress #PChidambaram

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு நாடு முழுவதும் பொது மக்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயார் செய்ய ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.

    இதற்காக ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று மக்களிடம் கருத்து கேட்டு வருகிறார்கள்.

    அதன்படி சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. ப.சிதம்பரம் தலைமை தாங்கினார். தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர் ராஜீவ்கவுடா எம்.பி. முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் தொகுத்து வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் கல்வியாளர்கள், விவசாய சங்க நிர்வாகிகள், வணிகர் அமைப்புகள், நெசவாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் உள்பட 73 அமைப்புகள் பங்கேற்றன.

    முன்னாள் துணைவேந் தர்கள் டாக்டர் வசந்தி தேவி, டாக்டர் திருவாசகம் மற்றும் டாக்டர் பரசுராமன், பழனித்துரை, ஜனகராஜன், விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜ்குமார், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, வணிகர் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும், பெட்ரோல்- டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும்.

    மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும், மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது, கல்வியும், மருத்துவமும் தனியார் மயமாகி விட்டதால் வியாபார நோக்கில் நடக்கிறது. இதை தடுக்க கல்வியையும், மருத்துவத்தையும் அரசே வழங்க வேண்டும்.

    காப்பீடுகள் வழங்குவதை அரசு நிறுவனங்களே ஏற்று நடத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

    நாடு முழுவதும் திரட்டப்படும் கோரிக்கைகள் மத்திய கமிட்டியில் வைத்து எவை, எவை நிறைவேற்ற முடியுமோ அவற்றை தேர்தல் அறிக்கையாக வெளியிடுவோம் என்றனர்.

    முடிவில் தமிழக காங்கிரஸ் பொருளாளர் நாசே.ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி மற்றும் கோபண்ணா, முன்னாள் எம்.பி. அழகிரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உ.பலராமன், முருகானந்தம், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ஏ.ஜி.சிதம்பரம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரங்கபாஷ்யம், நிர்வாகிகள் ஜோதி, செல்வ பெருந்தகை, வில்லிவாக்கம் சுரேஷ், எம்.ஆர். ஏழுமலை, செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Congress #PChidambaram

    மேகதாது அணை தமிழக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் என்று கர்நாடக மந்திரி சிவக்குமார் கூறியுள்ளார். #MekedatuDam #DKShivakumar

    சென்னை:

    மேகதாது அணை பிரச்சினை பற்றி “தந்தி டி.வி.” சார்பில் கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி சிவக்குமாருடன் சிறப்பு நேர்காணல் நடத்தப்பட்டது.

    அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- கர்நாடகாவிற்கு மேகதாது அணை ஏன் தேவை?

    பதில்:- இது கர்நாடகாவுக்கு அல்ல. காவேரி இந்த நாட்டின் நதி. இந்த வருடம், கொடுக்க வேண்டிய 177 டி.எம்.சியை தாண்டி, கிட்டத்தட்ட 450 டி.எம்.சி நீர் தமிழ்நாட்டிற்கு சென்றுள்ளது. நாங்களும் பயன்படுத்த முடியவில்லை, தமிழ்நாடும் பயன்படுத்த முடியவில்லை. வீணாக கடலுக்கு சென்றுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டிற்கு தான் அதிகம் உதவும். தமிழக விவசாயிகளை பாதுகாக்கவும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கவும் தான் இந்த அணை கட்டப்படுகிறது.

    கேள்வி:- தற்போது கபினி, ஹாரங்கி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் காவிரி ஆணைய கட்டுப்பாட்டில் வருகிறது. நீங்கள் கட்டும் புதிய அணையும் அதன் கட்டுப்பாட்டில் வருமா?

    பதில்:- ஆம், நிச்சயமாக. அது அவர்கள் கடமை.

     


     

    கேள்வி:- கர்நாடகாவில் புதிய அணைகள் கட்டப்படும் போதெல்லாம், தமிழக விவசாயிகளுக்கு அச்சம் ஏற்படுகிறது. விவசாயம் செய்யப்படும் பகுதிகளின் பரப்பளவு குறைந்து விடும் என்ற கவலை எழுகிறது. இப்போது மறுபடியும் ஒரு புதிய அணை பற்றி நீங்கள் பேசும்போது, இந்த அச்சம் மீண்டும் ஏற்படுகிறது.

    பதில்:- இல்லை. இதை பற்றி கவலை தேவையில்லை. தமிழகத்திற்கு இந்த அணை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த அணை தமிழக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும்.

    கேள்வி:- மேகதாது திட்ட வரைவு நகலில், பெங்களூர் நகருக்கு 5 டி.எம்.சி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 14 டி.எம்.சி எடுத்து கொண்டிருக்கும்போது,  இந்த 5 டி.எம்.சி கூடுதலாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதா?

    பதில்:- இல்லை அப்படி எடுக்க முடியாது. ஏற்கனவே என்ன ஒதுக்கப்பட்டுள்ளதோ அதைதான் எடுக்க முடியும்.

    கேள்வி:- அப்போது இந்த 5 டி.எம்.சி என்பது ஒதுக்கப்பட்ட 14 டி.எம்.சி நீரின் ஒரு பகுதி தானே ?

    பதில்:- ஆம், இது அனுமதிக்கப்பட்ட நீரின் ஒரு பகுதி தான்.

    கேள்வி:- உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுங்கள் என்று சொன்னபோதெல்லாம் அதை கேட்க கூடாது என்று தீர்மானம் போட்டீர்கள்... இப்போது உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று சொல்வது முரணாக இல்லையா?

    பதில்:- ஆதரவு இல்லை. எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நினைக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MekedatuDam #DKShivakumar

    விவசாய கல்லூரி ஊழியர் கீழே விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை ஒத்தக்கடை வவ்வால் தோட்டத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது58). ஒத்தக்கடை விவசாய கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் அய்யனார் சம்பவத்தன்று காலை பணிக்கு வந்தார். அப்போது தலைசுற்றல் காரணமாக மயங்கி விழுந்தார்.

    இதில் அய்யனாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு இருந்தவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யனார் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக அய்யனாரின் மனைவி ஆயம்மாள் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


    செங்குன்றத்தில் விவசாயியின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.1¾ லட்சம் கொள்ளையடித்தது குறித்து போலீசார் தேடி வருகின்றனர்.
    செங்குன்றம்:

    சோழவரத்தை அடுத்த நாரனம்பேடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி விவசாயி.

    இவர் நேற்று செங்குன்றத்திற்கு வந்து திருவள்ளுர் கூட்டுசாலை அருகே உள்ள அரசு வங்கி ஒன்றில் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப்பணம் எடுத்தார். அதை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பூட்டினார்.

    செங்குன்றம் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார். சாப்பிட்டுவிட்டு வந்தார். அப்போது மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை கொள்ளையடித்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கிருஷ்ண மூர்த்தி செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
    ×