search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    • தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றன.
    • கனிமொழி எம்.பி. தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் அட்டவணை இந்த மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    இதையொட்டி தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றன. தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரசின் இந்தியா கூட்டணிக்கும் இடையே பல தொகுதிகளில் போட்டி ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.


    தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியின் தேர்தல் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார். அந்த வகையில் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்டவைகள் குறித்து பேச பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் எம்.எல்.ஏ., கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்.பி., அயலக அணி செயலாளர் அப்துல்லா எம்.பி., மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அமையும் மத்திய அரசிடம் என்னென்ன எதிர்பார்ப்புகள், தேவைகள் இருக்கிறதோ அதனை தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்களிடம் கேட்க உள்ளனர். இதற்காக அந்த குழுவின் சுற்றுப்பயண விவரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அந்த குழுவினர் இன்று (திங்கட்கிழமை) தூத்துக்குடியில் இருந்து தங்களது சுற்றுப்பயணத்தை தொடங்கினார்கள். தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் காமராஜ் கல்லூரி எதிரி உள்ள மாணிக்கம் மகாலில் இதற்கான கூட்டம் நடை பெற்றது.

    இதில் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டனர். கூட்டத்தில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், செஞ்சி மஸ்தான், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் ஆலோசனை பெறப்பட்டது. கூட்டம் தொடங்கியதும் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-


    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டு அதன் முதல் கூட்டம் இன்று தூத்துக்குடியில் நடைபெற்றுள்ளது.

    இதில் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்களில் கருத்துக்கள் கேட்கப்பட்டு அவர்களுக்கு வேண்டிய திட்டங்கள் எதிர்பார்ப்புகள் குறித்து கேட்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் கேட்கப்படும்.

    பின்னர் இதுகுறித்து அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும். பொதுமக்களின் அனைத்து கருத்துக்களும் கேட்கப்பட்டு தயாரிக்கப்படும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்களின் தேர்தல் அறிக்கையாக வெளி வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோரிடம் தி.மு.க. குழுவினர் கருத்துக்களை கேட்டனர். பலரிடம் அவர்களது கோரிக்கைகள் மனுக்களாக எழுதி வாங்கப்பட்டன.

    கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும், தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், தூத்துக்குடி துறைமுகத்தில் வளர்ச்சி பணிகளை மேம்படுத்த வேண்டும், கப்பல் போக்குவரத்து வசதிகளை பெருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    செல்போன் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தி.மு.க. குழுவினர் பொதுமக்களிடம் தெரிவித்தனர். இன்று காலை 10 மணி முதல் நீண்ட நேரம் விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்ட பகுதி மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    அவர்களது அடிப்படை தேவைகள், எந்தெந்த பகுதிகளில் அரசு திட்டங்கள் தேவைப்படுகிறது மற்றும் முக்கிய எதிர்பார்ப்புகள் குறித்து கேட்கப்பட்டது. இன்று பிற்பகலில் ராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுகிறது.

    இந்த குழு நாளை கன்னியாகுமரிக்கும், நாளை மறுநாள் (7-ந்தேதி) மதுரைக்கும் செல்கிறது. தொடர்ந்து 8-ந்தேதி தஞ்சை, 9-ந்தேதி சேலம், 10-ந்தேதி கோவை, 11-ந் தேதி திருப்பூர். 16-ந்தேதி ஓசூர், 17-ந்தேதி வேலூர், 18-ந்தேதி ஆரணி, 20-ந் தேதி விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கிறார்கள். இறுதியில் 21, 22, 23-ந்தேதிகளில் 3 நாட்கள் சென்னையில் முகாமிட்டு மக்களிடம் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான கருத்துக்களை கேட்கிறார்கள்.

    தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முடித்ததும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் பொது மக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையாக இறுதி செய்யப்படும்.

    அடுத்த மாதம் முதல் வாரத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கை ஹீரோவாக இருக்கும் என்று கனிமொழி எம்.பி. ஏற்கனவே கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    தி.மு.க.வை போலவே அ.தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்துக்கள் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமி ஒரு குழு அமைத்துள்ளார்.


    இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் நந்தம் விசுவநாதன், பா.வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகைச்செல்வன் உள்ளிட்ட 10 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். இந்தக் குழுவும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பெற உள்ளது.

    இதற்காக சென்னையில் இருந்து தங்களது பயணத்தை இன்று (திங்கட்கிழமை) தொடங்கினார்கள். வேலப்பன்சாவடியில் இன்று காலை அ.தி.மு.க. குழுவினர் கட்சி நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக கருத்துக்களை கேட்டறிந்தனர்.

    பொதுமக்களிடம் எழுத்து பூர்வமாகவும் கருத்துக்களை கோரிக்கைகளை அ.தி.மு.க. தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.

    சென்னையை தொடர்ந்து வேலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை என மண்டலம் வாரியாக பிரித்து கருத்துக்களை பெற உள்ளனர். வருகிற 10-ந்தேதி கோவை மண்டலத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நிறைவடைய உள்ளது. அதன் பிறகு மக்களிடம் கேட்ட கருத்துக்களின் அடிப்படையில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாகும் சமயத்தில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

    • பாராளுமன்ற தேர்தலுக்காக தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
    • திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 5வது நாளாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்காக தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் இன்று தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனையில் ஈடுபட்டது.

    ஆலோசனையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

    தொகுதியின் கள நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

    திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 5வது நாளாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடியில் மீண்டும் திமுக வேட்பாளராக கனிமொழியை அறிவிக்க வேண்டுமென திமுக நிர்வாகிகள் ஒரு மனதாக கோரிக்கை விடுத்தனர்.

    கடந்த முறை பெற்ற வாக்குகளை விட இந்த முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் கனிமொழியை வெற்றி பெற வைக்க முழு முயற்சியில் உழைக்க வேண்டும் என்று திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றுள்ள ஐவர் குழுவினர் அறிவுறுத்தினர்.

    மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு உரிய நிவாரணம் பெற்று தருவதில் கவனம் செலுத்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினர்.

    • மக்களுக்காக, மொழிக்காக தி.மு.க. பல்வேறு போராட்டங்களை சந்தித்துள்ளது.
    • தி.மு.க. ஆட்சியில் தான் அதிக கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வருகை புரிந்த தூத்துக்குடி எம்.பி.யும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கனிமொழிக்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் பாவூர்சத்திரத்தில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து கூட்டத்தில் கலந்துக்கொண்ட கனிமொழி எம்.பி. தென்காசி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 400 குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களாக பாய், போர்வை, சேலை, அரிசி, பாத்திரம் உள்ளிட்ட பொருட்களையும், பொதுக்கூட்ட மைதானத்தில் மகளிரணியுடன் இணைந்து 100 கொடிக்கம்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் திட்டங்கள் தாங்கிய கட்சி கொடிகளை ஏற்றி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களுக்காக, மொழிக்காக தி.மு.க. பல்வேறு போரா ட்டங்களை சந்தித்துள்ளது. இந்தி மொழியை திணிக்க கூடாது. மொழி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்கள் மீது திடீரென அக்கறை உள்ளது போல பா.ஜ.க.வினர் திருக்குறள் பற்றி பேசுகின்றனர். கவர்னர் தத்துவம் சொல்கிறார்.

    சென்னை, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிப்பு பகுதியை மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்கள். மத்திய அரசு ஒரு பைசா நிதி கூட தமிழகத்திற்கு தரவில்லை.

    கோவிலை வைத்து அரசியல் செய்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் தான் அதிக கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா அரசை மக்கள் மாற்ற வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கும். தமிழக உரிமைகள், மொழி பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் தி.மு.க. அனைத்து அணி நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • பவதாரிணி இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பாகும்- தமிழிசை
    • தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும்- உதயநிதி

    இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இசையமைப்பாளர் இளையராஜா மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன்.

    தனது இனிமையான குரல் வளத்தால் பல இசை ரசிகர்களை கவர்ந்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதோடு சகோதரி பவதாரிணியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். #Bhavadharani

    என தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் செய்தில் கூறியிருப்பதாவது:-

    இசைஞானி இளையராஜாவின் அன்பு மகள் பின்னணி பாடகி சகோதரி பவதாரிணி, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

    தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும்.

    அவருடைய மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

    பவதாரிணியை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா சார், சகோதரர்கள் கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அவருடைய குடும்பத்தார் - நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில் கூறியிரப்பதாவது:-

    பிரபல திரைப்பட இசையமைப்பாளர் 'இசைஞானி' இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

    சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை இளம் வயதிலேயே பெற்ற சிறப்புக்குரியவர் பவதாரிணி. வித்தியாசமான குரல் வளத்தைக் கொண்டுள்ள பவதாரிணி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட பெருமைக்குரியவர். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

    பவதாரிணியை இழந்து வாடும் அவரது தந்தை இளையராஜா, அவரது கணவர், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    சிறந்த பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜாவின் புதல்வியுமான பவதாரிணி, உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

    தனது தனிச் சிறப்பான குரலால், இதயத்தை நெகிழச் செய்யும் பல பாடல்களைப் பாடியவர் பவதாரிணி. இளம் வயதிலேயே தேசிய விருது வென்ற பவதாரிணி இசையுலகில் பல சாதனைகள் படைப்பார் என்று அனைவரும் விரும்பியிருந்தபோது, அவரது எதிர்பாராத மறைவு சற்றும் ஏற்க முடியாததாக இருக்கிறது.

    பவதாரிணியை பிரிந்து வாடும் இசைஞானி இளையராஜா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தக் கடினமான நேரத்தில் அவர்களுக்கு இறைவன் துணையிருக்கட்டும்.

    ஓம் சாந்தி!

    இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

    மக்களவை எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இசைக் கலைஞர் பவதாரிணி மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பின்னணி பாடகராக தனித்துவமிக்க பாடல்களைத் தந்த அவரது மறைவு தமிழ் திரைத்துறைக்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

    இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.

    • அனைத்து தரப்பினரையும் சந்தித்து கோரிக்கைகளை மனுவாக பெறுவார்கள்.
    • ஓரிரு நாளில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது? பாராளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டிய பிரச்சனைகள் என்னென்ன? மக்களின் கோரிக்கைகள் என்னென்ன? என்பதை அறிந்து அதற்கேற்ப தேர்தல் அறிக்கையை தயாரிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    இதற்காக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்தில் கனிமொழி எம்.பி., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில் நுட்ப செயலாளர் டி.ஆர்.பி. ராஜா, வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், அயலக அணி செயலாளர் அப்துல்லா எம்.பி., மருத்துவர் அணி எழிலன் எம்.எல்.ஏ., சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி கனிமொழி எம்.பி. தலைமையில் இந்த குழுவினர் வருகிற 5-ந்தேதி முதல் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்து கேட்க உள்ளனர்.

    அதன்படி பிப்ரவரி 5-ந்தேதி தூத்துக்குடி, 6-ந்தேதி கன்னியாகுமரி, 7-ந்தேதி மதுரை, 8-ந்தேதி தஞ்சாவூர், 9-ந்தேதி சேலம், 10-ந்தேதி கோவை, 11-ந்தேதி திருப்பூர், 16-ந்தேதி ஓசூர், 17-ந்தேதி வேலூர், 18-ந்தேதி ஆரணி, 20-ந்தேதி விழுப்புரம் செல்கிறார்கள்.

    அதன் பிறகு பிப்ரவரி 21, 22, 23 ஆகிய 3 நாட்கள் சென்னையில் கருத்து கேட்க உள்ளனர்.

    தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து கோரிக்கைகளை மனுவாக பெறுவார்கள்.

    அதன் பிறகு ஓரிரு நாளில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

    • இன்றைய கூட்டத்தில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் முடிவானது.
    • தேர்தல் அறிக்கைக் குழுவின் சுற்றுப்பயண விவரங்களை தி.மு.க. இன்று வெளியிட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்தது.

    இந்த ஆலோசனையில் கனிமொழி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

    இன்றைய கூட்டத்தில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் முடிவுசெய்யப்பட்டது. அந்தப் பட்டியல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து ஒப்புதல் பெறப்பட்டது.

    இந்நிலையில், தேர்தல் அறிக்கைக் குழுவின் சுற்றுப்பயண விவரங்களை தி.மு.க. வெளியிட்டுள்ளது.

    தூத்துக்குடியில் பிப்ரவரி 5, கன்னியாகுமரியில் பிப்ரவரி 6, மதுரை பிப்ரவரி 7, தஞ்சாவூர் பிப்ரவரி 8, சேலம் பிப்ரவரி 9, கோயம்புத்தூர் பிப்ரவரி 10, திருப்பூர் பிப்ரவரி 11, ஓசூர் பிப்ரவரி 16, வேலூர் 17, ஆரணி பிப்ரவரி 18, விழுப்புரம் பிப்ரவரி 20 மற்றும் சென்னையில் பிப்ரவரி 21, 22 ,23 ஆகிய தேதிகளில் தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கு இருக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து அதன்பின் தேர்தல் அறிக்கை குழு கூடி அறிக்கை தயார் செய்யப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

    • முதலில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • எந்த விஷயத்தை முக்கியமான அடிப்படையாக கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படுகிறது என்பது முதல்வரிடம் அறிக்கையை கொடுத்த பிறகு தெரிவிக்கப்படும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

    ஆலோசனையில் டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

    ஆலோசனைக்குப்பிறகு கனிமொழி எம்.பி. கூறியதாவது:

    வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கு இருக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து அதன்பின் தேர்தல் அறிக்கை குழு கூடி அறிக்கை தயார் செய்யப்படும்.

    அதற்காக முதலில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பட்டியலை முதல்வரிடம் காண்பித்து ஒப்புதல் பெறப்பட்ட பிறகு அந்த ஊர்களுக்கு பயணம் செய்து எந்தெந்த கருத்துகளை எடுத்துக்கொண்டு நாங்கள் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்போகிறோம் என்பது குறித்து அடுத்தடுத்த கூட்டங்களில் முடிவு செய்யப்படும்.

    எந்த விஷயத்தை முக்கியமான அடிப்படையாக கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படுகிறது என்பது முதல்வரிடம் அறிக்கையை கொடுத்த பிறகு தெரிவிக்கப்படும்.

    அமைப்புகளின் கருத்துகளை பெற மின் அஞ்சல், அலைபேசி எண்கள் ஓரிரு நாட்களில் கொடுக்கப்படும்.

    தேர்தல் அறிக்கை எப்போதும் கதாநாயகனாக இருக்க வேண்டும் என்றில்லை கதாநாயகியாகவும் இருக்கலாம் என்று தெரிவித்தார்.

    • நாளை முதல் நாளில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் தொகுதிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய கருத்து கேட்கப்படுகிறது.
    • வேட்பாளர் தேர்வு பட்டியல் குழுவில் உதயநிதி ஸ்டாலினும் இடம் பெற்றுள்ளதால் அவரது நம்பிக்கையை பெற்றவர்களுக்கே சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அனேகமாக ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தேர்தலை சந்திக்க அகில இந்திய அளவில் காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் சேர்ந்து பா.ஜனதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளது.

    பாரதிய ஜனதா கட்சி அடுத்த வாரம் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்தியா கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான 'இந்தியா கூட்டணி'யில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள்,

    ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்று உள்ளன. கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியும் இந்த கூட்டணியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 குழுக்களை உருவாக்கி உள்ளார்.

    அதன்படி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா எம்.பி., எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி செழியன், ராஜேஸ்குமார் எம்.பி., எழிலரசன் எம்.எல்.ஏ. அப்துல்லா எம்.பி. எழிலன் எம்.எல்.ஏ. ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

    தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இதன் தொடக்கமாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் குழுவில் இடம் பெற்றிருந்த முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை கண்டறிந்து அதற்கேற்ப வேட்பாளர்களை தேர்வு செய்வது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அது மட்டுமின்றி தற்போது எம்.பி.யாக இருப்பவரின் செயல்பாடு எப்படி உள்ளது? அவருக்கே மீண்டும் சீட் கொடுக்கலாமா? அல்லது வேறு நபருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கலாமா? என்பது பற்றியும் அறிய முடிவு செய்யப்பட்டது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி நிலவரம் எவ்வாறு உள்ளது? எந்தெந்த தொகுதிகள் சாதகமாக இருக்கும் என்பது பற்றியும் எந்தெந்த தொகுதிகளில் பிரச்சனை உள்ளது என்பதையும் முதலில் கண்டறிய முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணைமேயர், மண்டலக்குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், நகரமன்ற தலைவர்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவழைத்து தொகுதி நிலவரத்தை தெரிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நாளை மதியம் 3 மணி முதல் ஒவ்வொரு தொகுதி வாரியாக நிர்வாகிகளை வரவழைத்து கருத்து கேட்டு வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    நாளை முதல் நாளில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் தொகுதிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய கருத்து கேட்கப்படுகிறது.

    அதன்பிறகு 27-ந்தேதி பொள்ளாச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய தொகுதிகளுக்கு கருத்து கேட்கப்படுகிறது. இப்படி தொடர்ச்சியாக 5-ந்தேதி வரை கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வேட்பாளர்களை இறுதி செய்கிறார்கள்.

    அதன் பிறகு 40 தொகுதிகளுக்கும் யார்-யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெற முடியும் என்ற பட்டியலை தி.மு.க. தலைவர், முதலமு.க. ஸ்டாலின் கவனத்துக்கு இந்த குழு கொண்டு செல்லும். அதன் அடிப்படையில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும்.

    பாராளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள இன்னும் 2 மாத காலமே உள்ளதால் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிட வாய்ப்புள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேலம் மாநாட்டில் பேசும்போது பாராளுமன்ற தேர்தலில் இளைஞரணியினர் போட்டியிட அதிக வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டிருந்தார்.

    இப்போது வேட்பாளர் தேர்வு பட்டியல் குழுவில் உதயநிதி ஸ்டாலினும் இடம் பெற்றுள்ளதால் அவரது நம்பிக்கையை பெற்றவர்களுக்கே சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் இன்று பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கூடியது. இக்கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து அதை தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    • திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி. தலைமையிலான தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி. தலைமையிலான தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது.

    ஆலோசனையில் டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., எம்.எம்.அப்துல்லா எம்.பி., டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    • கடவுள் வழிபாட்டை திணிக்கக் கூடாது.
    • மக்களின் வாழ்வை அந்த திட்டங்கள் என்றும் மாற்றாது.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கில் 'இறுதி நாயகர்கள்' புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகமாக நம்பிக்கை வைத்து திருச்செந்தூர் கோவிலுக்கு செல்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் முருகன்தான் நம்முடைய தெய்வம் என்று வந்து கொண்டிருக்கிறார்கள்.

    வழிபாடு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு விஷயம். நீங்கள் வழிபாடுகளை மதத்தை, கடவுளை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்பது வேறு ஒரு விசயம்.


    ஆனால் அதைத் தாண்டி அந்த கடவுள் யார்? அந்த கடவுள் உருவம் எது? என்பதை ஒவ்வொருவரும் முடிவு செய்ய வேண்டும். அது தனிப்பட்ட ஒரு விசயம். அந்த உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. கடவுள் வழிபாட்டை திணிக்கக் கூடாது.

    மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் பெயரளவில் மட்டும்தான் உள்ளது. மக்களின் வாழ்வை அந்த திட்டங்கள் என்றும் மாற்றாது.


    மக்களுக்கு போய் சேரக் கூடிய எல்லா திட்டங்களையும் இன்று அழித்து விட்டு வேறு ஒரு விசயத்தை மக்களுடைய வாழ்க்கைக்கு சம்பந்தம் இல்லாமல் மக்களுடைய வாழ்க்கையை எந்தவிதத்திலும் மாற்ற முடியாத சில விசயங்களை எடுத்து வைத்துக் கொண்டு அதை இந்த தேசமாக தேசியமாக மக்களின் அடையாளமாக மாற்ற நினைத்து கொண்டிருக்க கூடியவர்களை நாம் மாற்ற முடியும். அவர்களுடைய இடத்தை வேறு ஒன்றாக மாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாநாட்டுப் பந்தலைக் கடந்து, வளாகம் நிறைந்து, நெடுஞ்சாலை முழுவதும் திரண்டிருந்த இளைஞர் பட்டாளம், கழகத்தின் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது.
    • பா.ஜக. அரசை வரும் பாராளுமன்றத் தேர்தலில் வீழ்த்திட சூளுரை மேற்கொண்டிருக்கிறது உதயநிதி வழிநடத்துகிற இளைஞரணி.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்...,

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல்.

    இது தந்தை பெரியார் மண்! பேரறிஞர் அண்ணா மண்! முத்தமிழறிஞர் கலைஞர் மண்! அதுமட்டுமா, அருட்பிரகாச வள்ளலார் மண்! பண்டிதர் அயோத்திதாசர் மண்! பெருந்தலைவர் காமராசர் மண்! கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மண்! பொதுவுடைமைத் தோழர் ஜீவா மண்! சுருக்கமாகச் சொன்னால், சமூகநீதிக் கொள்கை வழியில் பயணிக்கும் மதநல்லிணக்க மண்தான் தமிழ்நாடு என்பதை சேலத்தில் எழுச்சியுடன் நடந்தேறிய கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உணர்த்தியிருக்கிறது.

    கடல் இல்லா சேலத்தில் கழக இளைஞரணியினரின் தலைகளே கடலாக, மாநகரத்திலிருந்து மாநாடு நடைபெற்ற இடம் வரை 30 கிலோ மீட்டர் நீளத்திற்கு அசைந்தாடிய கருப்பு சிவப்பு இருவண்ணக்கொடிகளே அலைகளாக இருந்ததைக் கண்டபோது, மாநாட்டினை எழுச்சியும் உணர்ச்சியுமாக நடத்திக்காட்டிய இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் தம்பி உதயநிதிக்கும், மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டிருந்த கழகத்தின் முதன்மைச் செயலாளரான அமைச்சர் கே.என்.நேருக்கும், சேலம் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும், இளைஞரணியின் மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கண்துஞ்சாமல் அயராது பாடுபட்டதன் அறுவடையைக் காண முடிந்தது.

    மாநாட்டு முகப்பில் சேலத்துச் சிங்கம் வீரபாண்டியார் நினைவுக் கொடி மேடையில் இருவண்ணக் கொடியை உயர்த்தி வைத்த கழகத் துணைப் பொதுச்செயலாளர் அன்புத் தங்கை கனிமொழி எம்.பி.க்கும், மாநாட்டுத் திறப்பாளர் மாணவரணிச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசனுக்கும், மொழிப்போர்த் தியாகிகள் படத்தைத் திறந்து வைத்த சட்டமன்றக் கொறடா கோவி. செழியன் உள்ளிட்ட அனைவருக்கும் கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


    மாநாட்டுப் பந்தலைக் கடந்து, வளாகம் நிறைந்து, நெடுஞ்சாலை முழுவதும் திரண்டிருந்த இளைஞர் பட்டாளம், கழகத்தின் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல் களத்திற்கு ஆயத்தமாக்கும் பயிற்சி அரங்கமாக இளைஞரணியின் மாநாடு அமைந்திருந்த அதேவேளையில், வெறும் தேர்தல் அரசியலை மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுப்பதில்லை என்பதையும், தேர்தல் களத்திலும் கொள்கை வழி அரசியலையே முன்னெடுக்கும் என்பதையும் மாநாட்டின் மையப் பொருளாக அமைந்த, 'மாநில உரிமை மீட்பு முழக்கம்' அமைந்திருந்தது.

    உதயநிதி முன்மொழிந்த மாநாட்டின் 25 தீர்மானங்களும் திராவிட மாடல் அரசு எந்தளவுக்கு மக்களுக்கான நன்மைகளைச் செய்து, மாநிலத்தின் வளர்ச்சியைப் பெருக்கியிருக்கிறது என்பதுடன், மாநில உரிமைக்கானப் போராட்டத்தில் நாம் முன்னெடுக்க வேண்டியவற்றையும் தீர்மானங்கள் வாயிலாகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இழந்த மாநில உரிமைகளை மீட்கவும், இருக்கின்ற மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநிலங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெறவும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் வகுத்தளித்த மாநில சுயாட்சிக் கொள்கையை நிறைவேற்றிட வேண்டும் என்பதையும், கல்வி - சுகாதாரம் இரண்டையும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டியதன் தேவையையும், பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தராக இருக்க வேண்டும் என்பதையும், எல்லாவற்றுக்கும் மேலாக அரசியலமைப்பில் தொங்கு சதையாக உள்ள நியமனப்பதவியான கவர்னர் பதவி முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்பதையும் இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உரக்கச் சொல்லியுள்ளன.

    மதவெறி அரசியலால் மக்களைப் பிளவுபடுத்துகிற ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது பத்தாண்டு கால ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் எதையும் நிறைவேற்றாமல் முழுமையாகத் தோல்வி அடைந்திருப்பதை மறைப்பதற்காக ஆன்மீகத்தையும் அரசியலாக்கும் வகையில் அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துகிறது என்பதை கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள் ஏற்கனவே அறிக்கையாக வெளியிட்ட நிலையில், இளைஞரணி மாநாட்டில் அதனைத் தீர்மானமாகவே முன்மொழிந்து, சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமின்றி, இந்து மதத்தில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட - மிக பிற்படுத்தப்பட்ட - பட்டியல் இன - பழங்குடி மக்களுக்கும் துரோகம் இழைத்து, உண்மையான இந்து விரோதியாக செயல்பட்டு வரும் பா.ஜக. அரசை வரும் பாராளுமன்றத் தேர்தலில் வீழ்த்திட சூளுரை மேற்கொண்டிருக்கிறது உதயநிதி வழிநடத்துகிற இளைஞரணி.

    சேலத்தில் நடந்த கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டின் மகத்தான வெற்றி கண்டு அலறுகின்ற கழகத்தின் அரசியல் எதிரிகளும், தமிழ்நாட்டின் நிரந்தர எதிரிகளும் வதந்திகளைப் பரப்பி திசைதிருப்ப நினைத்தாலும், கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும், வில்லில் தொடுக்கப்பட்ட கணை தனது இலக்கை மட்டுமே குறி வைப்பதுபோல செயல்படவேண்டும். மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள், பல்வேறு தலைப்புகளில் நடந்த சொற்பொழிவுகளில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளை முன்னெடுத்து, பாராளுமன்றத் தேர்தல் களத்தில் மதவெறி பாசிச சக்திகளை முறியடிக்கும் பணியில் முனைப்பாகச் செயல்படுங்கள். நம் திராவிட மாடல் கொள்கையை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்வோம். பாராளுமன்றத் தேர்தலில் வெல்வோம்!

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • மாநாட்டு திடலில் அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.
    • மாநாட்டு அரங்கில் அதிரும் கொள்கை முழக்கங்களும் நாளைய வெற்றிக்கு நமக்கு ஊக்க மளிக்கட்டு.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    "இன்று சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் தங்கை கனிமொழி எம்.பி. ஏற்றி வைத்துள்ள நம் கழகக் கொடியும், மாநாட்டு அரங்கில் அதிரும் கொள்கை முழக்கங்களும் நாளைய வெற்றிக்கு நமக்கு ஊக்க மளிக்கட்டும்! புது வரலாறு படைக்கப் புறப்படுவோம்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×