search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97415"

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
    பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும்.

    இந்த ஆண்டிற்காக தீபத்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டு உள்ளதால் விழா நாட்களில் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலையில் விநாயகர், சந்திரசேகரர், வள்ளி-தெய்வானையுடன் முருகன், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு 5-ம் பிரகாரத்தில் உற்சவ உலா நடைபெற்று வருகின்றது.

    கார்த்திகை தீபத்திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று நேர்த்தி கடனாக கரும்பில் சேலையால் தொட்டில் கட்டி தங்கள் குழந்தையை சுமந்தபடி மாட வீதியை வலம் வருவார்கள். அதன்படி, நேற்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் முன்பும், மாட வீதியை சுற்றியும் பக்தர்கள் கூட்டம் இருந்தது.
    துறிஞ்சிப்பட்டியில் நடந்த மகாபாரத திருவிழாவில் துடைப்பத்தால் பக்தர்கள் தலையில் அடி வாங்கும் வினோத வழிபாடு நடந்தது.
    கிருஷ்ணகிரி அருகே உள்ள துறிஞ்சிப்பட்டி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகாபாரத மகோத்சவ விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து திரவுபதி அம்மன் திருக்கல்யாணத்துடன் விழா சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி துறிஞ்சிப்பட்டி, தின்ன கழனி, குட்டூர் உள்ளிட்ட 24 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய மகாபாரத நிறைவு விழா நடந்தது. இதையொட்டி தர்மபுரி ஓம் ஸ்ரீ விநாயகா நாடக சபா குழுவினரின் துரியோதனன் படுகளம் நாடகம் கோவிலின் முன்பு நடந்தது.

    இதையொட்டி துரியோதனனை வதம் செய்த பாஞ்சாலி தேவி, தலை முடிச்சு போடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து துடைப்பத்தால் பக்தர்கள் தலையில் அடி வாங்கும் வினோத வழிபாடு நடந்தது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திருநங்கையிடம் துடைப்பத்தில் தலையில் அடி வாங்கினார்கள். இந்த படுகளம் நிகழ்ச்சியை ஏராளமான கிராம மக்கள் பார்த்து ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கடல் மண் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு சுவாமி சுயம்புவாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது.

    இதனை முன்னிட்டு, அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் உச்சிகால பூஜை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவையொட்டி அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திரளான பக்தர்கள் கடல் மண்ணை ஓலைப்பெட்டியில் சுமந்து வந்து, அதனை கடற்கரையில் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

    மாலையில் சாயரட்சை பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவில் சமய சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி, வீதி உலா வந்து, மகர மீனுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் சுவாமிக்கு விடை ஆரத்தி பூஜை, அர்த்தசாம பூஜை நடந்தது.

    விழாவில் தேர் திருப்பணிக்குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார், ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன், செயலாளர் வெள்ளையா நாடார், நிர்வாகிகள் அழகானந்தம், ராஜமணி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவை முன்னிட்டு நெல்லை, நாகர்கோவில், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன் செய்து இருந்தார்.

    கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து சுவாமியை வழிபட்டனர்.
    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ந் திருநாளான நேற்று காலை சுவாமி பச்சை கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தகுடம், பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக வந்தனர். மேலும் பக்தர்களின் அங்கபிரதட்சணம், கும்பிடு நமஸ் காரம் ஆகியனவும் நடந்தது.

    முன்னதாக கல்லிடைக்குறிச்சி மாணிக்கவாசகர் நற்பணி மன்ற குழுவினரின் தேவாரம், திருவாசகம் பாட, பஞ்ச வாத்தியங்கள் முழக்கத்துடன் தீர்த்த குடம் கோவிலை வந்தடைந்ததும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    பின்னர் மாலையில் அன்ன மண்டபத்தில் அன்னம் சொரிதல் நிகழ்ச்சியும், இரவில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வீதிஉலாவும், தொடர்ந்து குமாரகோவில் தெருவில் அகஸ்தீஸ்வரருக்கு முருகப்பெருமான் உபதேச காட்சியும் நடந்தது. 
    திருச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவின் முக்கிய விழாவான ‘குட்டிக் குடிக்கும்’ நிகழ்ச்சி மற்றும் திருத்தேர் விழா நடந்தது.
    திருச்சி தென்னூரில் சோழ மன்னர்களால் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, பின்னர் கிராம தேவதையாக அமைய பெற்ற உக்கிரமாகாளியம்மன் மற்றும் சந்தன கருப்பு சுவாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 9-ந் தேதி காளிவட்டம் என்னும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சுத்தபூஜையும், அம்பாள் வீதியுலாவும் நடந்தது.

    முக்கிய விழாவான ‘குட்டிக் குடிக்கும்’ நிகழ்ச்சி மற்றும் திருத்தேர் விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மருளாளி ஆட்டுக்குட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சி குடித்தார். ஏராளமான ஆட்டுக்குட்டிகள் குட்டிக்குடித்தலுக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. பின்னர் மருளாளி அருள்வாக்கு கூறினார். பக்தர்கள் பலர் அருள்வாக்கு கேட்டனர். தொடர்ந்து அம்பாள் வீதியுலா நடந்தது. விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இன்று(வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், அம்பாள் வீதியுலாவும் நடக்கிறது. நாளை(சனிக்கிழமை) சுவாமி கோவிலுக்கு குடிபுகுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 
    அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழாவையொட்டி ஆகாச ராயருக்கு கிராம மக்கள் மண் குதிரைகளை சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேரோட்டம் நடை பெறும். அதேபோல் இந்த ஆண்டும் இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்குகிறது. நாளை (வியாழக்கிழமை) சூரிய, சந்திர மண்டல காட்சிகள். 12-ந்தேதி பூத வாகனம், அன்னவாகனம், அதிகார நந்தி, கிளி வாகன காட்சிகள் ஆகியன நடக்கிறது.

    13-ந்தேதி புஷ்பவிமானம் மற்றும் கைலாச வாகன காட்சிகளும் நடக்கிறது. 14-ந்தேதி இரவு 10 மணி அளவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடக்கிறது. 15-ந்தேதி கற்பக விருட்சம், திருக்கல்யாணம், யானை வாகன காட்சிகள் நடைபெறுகிறது. 16-ந்தேதி காலை 6 மணிக்குள் பூர நட்சத்திரத்தில் பஞ்சமூர்த்திகளும், பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 17-ந்தேதி காலை 7 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. 18-ந்தேதி மாலை 4 மணிக்கு அம்மன் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 19-ந்தேதி மாலை 6 மணிக்கு தெப்பத்தேர் உற்சாகமும், 20-ந்தேதி நடராசர் தரிசனமும், 21-ந்தேதி மஞ்சள் நீராட்டு மற்றும் இரவு மயில் வாகன காட்சியும் நடைபெறுகிறது.

    தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் அவினாசியை அடுத்த ராயம்பாளையம் கிராம மக்கள் மண் குதிரைகளை சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ராயம்பாளையத்திலிருந்து களி மண்ணால் செய்யப்பட்ட 4 மண் குதிரைகளை மலர்களால் அலங்கரித்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.

    இதையடுத்து அப்பகுதி மக்கள் காலை முதல் விரதமிருந்து தாரை, தப்பட்டை முழங்க பட்டாசுகள் வெடித்து மண்ணினால் அலங்காரமாக செய்யப்பட்ட 4 மண் குதிரைகளை சுமந்து கொண்டு ராயம்பாளையத்திலிருந்து சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் உள்ள ஊர்க்காவல் தெய்வமான ஆகாசராயர் கோவிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது வழிநெடுகிலும் சாலைகளில் தண்ணீர் ஊற்றி பொதுமக்கள் அவர்களை வரவேற்றனர். பக்தர்களுக்கு நீர்மோர், கம்மங்கூழ் மற்றும் சர்பத் ஆகியன வழங்கப்பட்டது.

    ஆகாச ராயருக்கு சிறப்பு பூஜை செய்து குதிரைகளை அங்கே வரிசையாக நிற்க வைத்து கிராம மக்கள் வழிபாடு செய்தனர். பின்னர் ஆகாசராயருக்கு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை மற்றும் பொங்கல் வைத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    மணப்பாறை அருகே மருங்காபுரி பகவதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    மணப்பாறையை அடுத்த மருங்காபுரியில் பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூக்குழி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 31-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு அக்னி குண்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் காப்பு கட்டிய பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்கினர்.

    முன்னதாக பக்தர்கள் அக்னி சட்டியும் எடுத்து வந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவை காண்பதற்காக சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஆங்காங்கே தண்ணீர் லாரிகளை நிறுத்தி பக்தர்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. 
    அவினாசி காவல் தெய்வமான ராயன் கோவிலுக்கு அவினாசி பொதுமக்கள் சார்பில் மண்குதிரை நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். நேற்று ஏராளமான பக்தர்கள் மண்குதிரை சுமந்து நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினார்கள்.
    அவினாசியில் புகழ்பெற்ற பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா வருகிற 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 17-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    தேரோட்டத்தையொட்டி எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க அவினாசி காவல் தெய்வமான ராயன் கோவிலுக்கு அவினாசி பொதுமக்கள் சார்பில் மண்குதிரை நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இது கடந்த 50 ஆண்டு காலமாக நடந்து வருகிறது.

    இந்த ஆண்டு தேர்த்திருவிழா தொடங்க இருப்பதால் அதற்கு முன்பாக ராயன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அவினாசி பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர். இதற்காக நேற்று மதியம் அவினாசி அருகே உள்ள கருணைப்பாளையத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அங்கு தயார் செய்யப்பட்ட மண்குதிரைக்கு எலுமிச்சை பழ மாலை, மலர் மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் மண்குதிரையை சுமந்த பக்தர்கள் அங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள ராயன் கோவிலுக்கு ஊர்வலமாக நடந்து வந்தனர். அப்போது வழியில் கிராம மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மங்கலம் ரோடு-பைபாஸ் சாலை சந்திப்பில் பட்டாசு வெடித்த போது சாலையோரம் குவித்து வைக்கப்பட்டு இருந்த குப்பையில் தீ கனல் பட்டு தீப்பிடித்தது. உடனே ஊர்வலத்தில் சென்றவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    அவினாசி ராயன் கோவிலுக்கு மண்குதிரையுடன் வந்த பக்தர்கள் அங்கு அதை இறக்கி வைத்தனர். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கூறும் போது, ராயன் அவினாசி மக்களின் காவல் தெய்வம் ஆவார். அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா தொடங்க இருப்பதால் ராயன் காவல் காக்கும் பொருட்டு சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக மண்குதிரை சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதன் அடிப்படையில் தான் மண்குதிரை சுமந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவிளாசி திருவிழா நாட்கள் முழுவதும் பக்தர்களுக்கு ராயன் காவல் காப்பார் என்பது ஐதீகம் என்றனர்.
    முதுகுளத்தூர் செல்வியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் 6 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

    முதுகுளத்தூர்:

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் வடக்கு வாசல் செல்வியம்மன் கோவில் உள்ளது. இந்தப்பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    செல்வியம்மன் கோவிலில் வருடந்தோறும் பூச் சொரிதல் விழா மிக விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

    விழா தொடங்கிய நாளில் இருந்து அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.

    கடந்த 18-ந் தேதி வருஷாபிஷேகமும், புண்ணிய தானமும் நடந்தன. தொடர்ந்து விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    சிறப்பு நிகழ்ச்சியாக அம்மனுக்கு அபிஷேகங்கள் மற்றும் வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் பொது அன்னதானம் நடைபெற்றது. வெங்கடேசன் பூசாரி சக்தி கரகம் தூக்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றார். மனிதனை நல்வழிப்படுத்துவது ஆன்மீகமா, அறிவியலா என்ற தலைப்பில் இன்னிசை மழலையர் பட்டிமன்றம் நடந்தது.

    அன்று மாலை அக்னிசட்டி ஊர்வலம் நடைபெற்றது. 150-க்கும் மேற்பட்ட பெண்கள் சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து செல்வியம்மன் கோவிலுக்கு அக்னிசட்டி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் நேர்த்திக்கடன் இன்று நடந்தது. முதுகுளத்தூர் செல்வநாயகபுரம், எம்.தூரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாளை (27-ந் தேதி) காலை 6 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    நாளை மாலை 3 மணிக்கு அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும் தொடர்ந்து பூப்பல்லக்கில் வீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது.

    நாளை மறுநாள் (28-ந் தேதி) முளைப்பாரி ஊர்வலத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கவுரவத் தலைவர் பாலகுருசாமி, தலைவர் வடமலையான், துணைத்தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் முருகானந்தம், பொருளாளர் பெருமாள், கமிட்டி உறுப்பினர்கள் ராஜ மாணிக்கம், தூரி மாடசாமி, முருகேசன், சத்யநாதன், செல்வநாயகபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் ஆனித்திருமஞ்சன திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருமஞ்சன திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 84-வது ஆண்டாக ஆனித்திருமஞ்சன திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை பக்தர்கள் தொட்டியம் காவிரி ஆற்றிக்கு சென்று நீராடி பால்குடம், தீர்த்தக்குடம், சந்தனக்குடம், அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தினர்.

    பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக தொட்டியம் மெயின் ரோடு, வளையல்காரத் தெரு, காந்தி ரோடு, வடக்கு ரதவீதி வழியாக கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். அதைத்தொடர்ந்து மதுரை காளியம்மனுக்கு தீர்த்தம், பால், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி திருநெல்வேலி அருகே உள்ள வீரவநல்லூர் மதுரைகாளியம்மன் வழிபாட்டு குழுவின் சார்பில் மதுரைகாளியம்மன் பற்றிய வில்லுப்பாட்டு சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டியம் ஆனித்திருமஞ்சன விழாக்குழுவினர் செய்திருந்தனர். 
    சங்கராபுரம் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கத்தி போடுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியின் போது, பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக உடலில் கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவர். அந்த வகையில் கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு இக்கோவிலில் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்நிலையில் 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கத்தி போடும் நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோவில் குளக்கரையில் இருந்து சக்தி கரகம் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து கோவிலில் விரதம் இருந்த திரளான பக்தர்கள், தங்கள் உடலில் கத்தி போட்டுக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் மூக்கனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். 
    ×