search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • ராஜபாளையம் கருப்பஞானியார் கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது.
    • 25 கிலோ எடையிலான காய்கறிகள், பழங்கள் மற்றும் புஷ்ப அலங்காரமும் செய்யப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் சாலியர்களுக்கு பாத்தியப்பட்ட கருப்பஞானியார் சுவாமி கோவிலில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

    கருப்பஞானியார் மற்றும் பொன்னப்பஞானியார் சுவாமிகளுக்கு மாலை 6 மணிக்கு மேல் 20 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கருப்பஞானியார் சுவாமிக்கு 15 கிலோ எடையிலான காய்கறிகள் மற்றும் பழங்களில் அலங்காரமும், பொன்னப்பஞானியார் சுவாமிக்கு 25 கிலோ எடையிலான காய்கறிகள், பழங்கள் மற்றும் புஷ்ப அலங்காரமும் செய்யப்பட்டது.

    அலங்காரம் செய்த பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. 8 மணிக்கு மேல் சுவாமிகள் மீது சாத்தப்பட்ட சாதத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சாதத்தை சாப்பிடுவதால், பல்வேறு நோய்கள் குணமாகும் என்றும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பூஜைக்கு பின்னர் 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் வைத்தீஸ்வரன், தர்மகர்த்தா ஞானகுரு செய்திருந்தனர்.

    • அலங்காநல்லூர் அருகே நயினார் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை நயினப்பன் அம்பலம் வகையறா மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள கீழசின்னனம்பட்டி கிராமத்தில் நயினார் சுவாமி, நொண்டிசுவாமி, ஆண்டிசுவாமி, பட்டவர் சுவாமி, அக்காயிசுவாமி, உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேக விழா நடந்தது. 3 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, புண்ணியாசனம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தன. 4 கால யாக பூஜையுடன் மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி பீடத்தின் மீது அமைந்துள்ள நயினார் சுவாமி மீது சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேம் செய்தனர். சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நயினப்பன் அம்பலம் வகையறா மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • இந்த ஆலயத்திற்கு சாலை வழியாக செல்ல முடியாது.
    • சுமார் 500 மீட்டர் உயரத்தில் இருக்கிறது இந்த கோவில்.

    உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் என்ற இடத்தில் அமைந்துள்ளது, 'கேதாரீஸ்வரர் திருக்கோவில்.' இந்த ஆலயத்திற்கு சாலை வழியாக செல்ல முடியாது. கவுரிகுண்ட் என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திற்கு மலை மீது ஏறித்தான் செல்ல வேண்டும். இங்கிருந்தும் சுமார் 500 மீட்டர் உயரத்தில் இருக்கிறது, புகுர்ந்த் பைரவர் கோவில்.

    இந்த இடத்தில் சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கியமானவராக கருதப்படும், பைரவர் வழிபடப்படுகிறார். மலை உச்சியில் உள்ள ஒரு பாறையில், பைரவர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த பைரவருக்கு மேற்கூரை கிடையாது. திறந்தவெளியில்தான் இவர் வீற்றிருக்கிறார்.

    கேதார்நாத் கோவிலுக்கு தெற்கே மலை உச்சியில் அமைந்துள்ள இந்தக் கோவிலை, கேதார்நாத் கோவிலில் இருந்து பார்க்க முடியும். அதே போல் மலை உச்சியில் இருந்து கேதார்நாத் ஆலயமும் அழகாகத் தெரியும். கேதார்நாத் கேதாரீஸ்வரர் கோவிலில் காலையில் நடை திறந்து வழிபாடு செய்யப்படுவதற்கு முன்பாகவே, மலை உச்சியில் உள்ள இந்த பைரவர் கோவிலுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஒருவர் கேதார்நாத் ஆலயத்திற்கு பயணம் சென்றால், அவர் புகுர்ந்த் மலை மீதுள்ள பைரவரை வழிபாடு செய்யாமல், அந்த பயணமும், தரிசனமும் முழுமை பெறாது என்கிறார்கள்.

    • கோவிலில் உள்ள முக்கிய பெரிய தீட்சிதர்கள் நடத்தினர்.
    • குடந்தை, நாங்கூர் அண்ணன் கோவில், திருவிளத்தூர் முதலிய தீட்சிதர்கள் கலந்து கொண்டனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோ பாலசாமி கோவிலில் ஆச்சார்ய அபிஷேக தீட்சை நடைபெற்றது.

    சென்ட் அலங்கார குடும்பம், ஸ்ரீ ராஜா வள்ளல், செண்பகவள்ளல் குடும்பம், ராஜகோபால் வள்ளல் ஆகிய குடும்பத்தாரின் 6 பேருக்கு ஆச்சார்யா அபிஷேகம் நடைபெற்றது. கோவிலில் உள்ள முக்கிய பெரிய தீட்சிதர்கள் நடத்தினர்.

    ஸ்ரீராமன்தீட்சிதர், பிரசன்னா தீட்சிதர், செல்லப்பா தீட்சிதர், பத்ரி தீட்சிதர், கல்யாணம் தீட்சிதர், ரவி தீட்சிதர், ஜெகன் தீட்சிதர், ரகு தீட்சிதர், ஸ்ரீ வித்யாசாகர் தீட்சிதர், முதலிய தீட்சிதர்களும் இதற்காக வெளியூரில் இருந்து ஆசீர்வாதம் வழங்க வந்திருந்த குடந்தை, நாங்கூர் அண்ணன் கோவில், திருவிளத்தூர் முதலிய தீட்சிதர்கள் கலந்து கொண்டனர்

    அனைவருக்கும் கோயில் பிரசாதம் மாலை மரியாதைகள் செய்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் மற்றும் உள்துறை சிப்பந்திகள், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

    முன்னதாக தம்பி தீட்சிதர் வரவேற்றார்.

    • நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக இந்த கோவில் விளங்குகிறது.
    • நாகராஜா கோவிலில் 2 கருவறைகள் உள்ளன.

    நாட்டின் தெற்கு எல்லையாக இருப்பது குமரி மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைநகராக நாகர்கோவில் நகரம் அமைந்துள்ளது. இந்த நகருக்கு நாகர்கோவில் என்று பெயர் வரக்காரணம், நகரின் நடுவே அமைந்துள்ள நாகராஜா கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலின் நுழைவு வாயில்களில் ஒன்றான மகாமேரு மாளிகை தான் நாகர்கோவில் மாநகராட்சி சின்னமாக இருப்பது சிறப்புக்குரியது.

    பரிகாரத்தலம்

    நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக நாகராஜா கோவில் விளங்குகிறது. இக்கோவில் கிழக்கு திசையை நோக்கி அமைந்து இருந்தாலும், தெற்கு முகமாக உள்ள கோபுர வாசல் (மகாமேரு மாளிகை) வழியாகவே அதிகமான மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். கிழக்கு வாசல் வழியாகவும் கோவிலுக்கு செல்லலாம். நாகராஜா கோவிலில் 2 கருவறைகள் உள்ளன. ஒரு கருவறையில் நாகராஜரும், மற்றொரு கருவறையில் அனந்த கிருஷ்ணரும் எழுந்தருளியுள்ளனர். நாகராஜர் கருவறையின் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டு உள்ளது. மூலவராக உள்ள நாகராஜா சுயம்புவாக உருவானதாக ஐதீகம். சுயம்பு வடிவில் உள்ள சுவாமிக்கு 5 தலைகளை கொண்ட ஐம்பொன் நாகர் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்ததாக அனந்த கிருஷ்ணர் நின்ற கோலத்தில் தலைக்கு மேல் 5 தலை நாகத்துடன் காட்சி தருகிறார். அதில் நாகம், இடுப்பில் இருந்து தலைக்கு மேல் படமெடுத்தபடி நிற்கும். அனந்த கிருஷ்ணரின் இடது மற்றும் வலது புறங்களில் பத்மாவதி, அம்பிகாவதி நின்ற கோலத்தில் உள்ளனர். இவர்களின் தலைமேல் 3 தலை நாகம் உள்ளது. நாகராஜா கருவறைக்கும், அனந்த கிருஷ்ணர் கருவறைக்கும் இடையே சிறிய சன்னிதானத்தில் லிங்க வடிவில் சிவன் இருக்கிறார். எதிரே நந்தி சிலையும் உண்டு.

    குழந்தை பாக்கியம்

    கோவில் வளாகத்தில் அரச மரம் பரந்து விரிந்தபடி காணப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் விநாயகர் சன்னதி உள்ளது. மரத்தை சுற்றிலும் நாகர் சிலைகள் வரிசையாக அமைக்கப்பட்டு உள்ளன. நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பதும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், திருமணத்தடை உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.நாகதோஷ பரிகாரத்துக்காக உப்பு, நல்லமிளகு, வெளியில் உள்ள நாகர் சிலைக்கும், மூலவரான நாகராஜருக்கு வெள்ளியால் ஆன முட்டைகள், நாகம், மனித உருவபொம்மை ஆகியவற்றை தோஷ பரிகாரமாக பக்தர்கள் செலுத்துகிறார்கள்.

    மன்னர் நோய் நீங்கியது

    இந்த கோவில் கட்டுமானம் தொடர்பாக சில தகவல்கள் கூறப்படுகின்றன. அதாவது இந்த கோவிலை முதலில் வைணவ கோவிலாக கட்ட தொடங்கியவர் பூதலவீர வீர உதயமார்த்தாண்டன் என்ற அரசர் ஆவார். இவர் 1516 முதல் 1585-ம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் சோழகுல வல்லிபுரம் என்ற களக்காட்டை (திருநெல்வேலி மாவட்டம்) தலைநகராக கொண்டு வேணாட்டை ஆட்சி செய்து வந்தவர்.

    அவருக்கு தீர்க்க முடியாத சரும நோய் இருந்ததாம். இந்த நோயானது நாகதோஷத்தால் வந்தது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் வழிபாடு செய்தால் சரும நோய் தீரும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அரசரும் நாகராஜா கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தார். அப்போது கோவிலின் தலவிருட்சமான ஓடவள்ளி செடியை தனது உடலில் தேய்த்து கொண்டு 41 மண்டலங்கள் கோவிலில் இருந்தார். அங்கு தங்கி இருந்த காலக்கட்டத்தில் கோவிலில் சில பகுதிகளை கட்டினார் என்று கூறப்படுகிறது. இந்த கோவிலின் புற்றுமண் முக்கிய பிரசாதமாகும். புற்று மண் எவ்வளவோ எடுத்தும் இன்னமும் குறையாமல் இருப்பது அதிசயமாகும். இந்த கோவிலில் உள்ள நாகலிங்கப்பூவை நாகராஜரின் உருவகமாக பக்தர்கள் கருதுகிறார்கள்.

    சன்னதிகள்

    இந்த கோவிலில் 8-க்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. தெற்கு வெளிப்பிரகாரத்தில் நாகமணி பூதத்தான் காவல் தெய்வமாக இருக்கிறார். வடக்கு வெளிபிரகாரத்தில் சாஸ்தா சன்னதி உள்ளது. இங்கு சாஸ்தா அமர்ந்த கோலத்தில் தலையில் கிரீடத்துடன் காட்சி தருகிறார். உள் பிரகாரத்தில் கன்னி மூல கணபதி உள்ளார். இதுதவிர கோவிலுக்கு வடபுறத்தில் சிறு, சிறு சன்னதிகளும் உள்ளன. இங்கு துர்க்கை அம்மன் சங்கு சக்கரத்தை கையில் ஏந்தியபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த சன்னதி 1965-ம் ஆண்டு கட்டப்பட்டது. துர்க்கை அம்மன் அருகே உள்ள பாலமுருகன் சன்னதி 1979-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தெற்கு பகுதியில் குழல் ஊதியபடி கிருஷ்ணர் சிலை உள்ளது. இதுதவிர கோவிலின் மகா மண்டபம், உள் பிரகார மண்டபங்களில் சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக கிருஷ்ணன் கோவில் கொடிமரத்தின் உச்சியில் கருடன் தான் காணப்படும். ஆனால் இந்த ஆலயத்தின் கொடி மர உச்சியில் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான கூர்ம (ஆமை) அவதாரத்தை நினைவு கூறும் வகையில் ஆமை உருவம் வைக்கப்பட்டுள்ளது.

    நாகராஜா கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து நிர்மால்ய தரிசனம், 4.30 மணிக்கு அபிஷேகம், 5.30 மணிக்கு உஷபூஜை, காலை 10 மணிக்கு பால் அபிஷேகம், 11 மணிக்கு கலசாபிஷேகம், 11.30 மணிக்கு உச்ச பூஜை, அதைத்தொடர்ந்து ஸ்ரீபலி, 12 மணிக்கு நடை சாத்தப்படும். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அர்த்தசாம பூஜை, 8 மணிக்கு ஸ்ரீபலி முடிந்து நடை அடைக்கப்படும்.

    பொதுவாக ஞாயிற்றுக்கிழமை இங்கு பக்தர்கள் அதிகமாக வருவார்கள். அதிலும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை திருவிழா கூட்டமாக இருக்கும். குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, பிற மாவட்ட பக்தர்கள், கேரளா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் அதிகமாக வருவார்கள். இதனால் பகலிலும், இரவிலும் நடை அடைக்க சில மணி நேரங்கள் தாமதமாகும். தினமும் நாகராஜருக்கு பூஜை செய்த பிறகு தான் அனந்தகிருஷ்ணருக்கும், சிவனுக்கும் பூஜைகள் நடக்கின்றன. அர்த்த சாம பூஜை மட்டும் அனந்த கிருஷ்ணருக்கு முதலில் நடக்கிறது. பூஜையானது கேரள பாரம்பரியப்படி தாந்திரீக ஆகமப்படி நடக்கிறது. சைவ, வைஷ்ணவ ஆராதனை நடைபெறும் கோவில் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

    நாகராஜா கோவிலில் தை மாதம் நடைபெறும் 10 நாள் திருவிழா, ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை விழாக்கள், கார்த்திகை விழா, ஐப்பசி மாத ஆயில்ய நாட்களில் விசேஷ பூஜைகள், கந்தசஷ்டி விழா ஆகியவை முக்கிய விழாக்களாகும்.

    • அலங்காநல்லூர் அருகே முருகன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை கரட்டு காலனி சிவனடியார்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் வெள்ளிமலை கரட்டு காலனியில் அமைந்துள்ள சிவன், அங்காள ஈஸ்வரி அம்மன், பெருமாள், அனுமார், முருகன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 2 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களுடன் யாகவேள்வி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. அனைத்து தெய்வங்களுக்கும், கோபுர கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கரட்டு காலனி சிவனடியார்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • பள்ளி கொண்ட பெருமாள் அனந்த சயனத்தில், 30 அடி நீளத்தில் திருமேனியுடன் சேவை அளிக்கிறார்.
    • புதுக்கோட்டையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பெருமாள் கோவில்கள் பலவற்றில் மூலவர் நின்ற கோலத்திலோ அல்லது சயன கோலத்திலோ காணப்படுவது உண்டு. ஆனால் இந்த ஆலயத்தில் நின்ற கோலத்திலும், அனந்த சயனத்திலும் பெருமாள் எழுந்தருளி காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும்.

    தல வரலாறு

    முற்காலத்தில் திருமயம் மூங்கில் காடாக இருந்துள்ளது. பூலோகத்தை அசுரர்கள் ஆக்கிரமித்த போது, ரிஷிகள் எல்லாம் பயந்து மலைகள், குகைகளில் மறைந்து கொண்டனர். இதனால் உலகத்தில் யாகம் முதலான நல்ல காரியங்கள் நடைபெறவில்லை. தேவர்கள் கலக்கம் அடைந்தனர். சத்திய தேவதையும், தர்ம தேவதையும் வறுமையால் மிகுந்த துன்பமுற்றன. அந்த நேரத்தில் தர்ம தேவதை, காளையின் உருவம் கொண்டு அழகர் கோவிலை அடைந்து சித்திபெற்றது.

    சத்திய தேவதையோ மானாக மாறி, மூங்கில் காடான திருமயத்தை அடைந்தது. இங்குள்ள அழகிய மெய்யனை, சத்தியமூர்த்தியை வணங்கி வழிபட்டது. மேலும் உலகில் சத்தியம் நிலைக்க வேண்டும். வாய்மை வெல்ல வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன், இங்குள்ள சத்திய தீர்த்தக்கரையில் தவம் செய்து சித்தி அடைந்தது.

    ஆலய அமைப்பு

    இந்தக் கோவிலின் உள்ளே நுழைந்து, கொடிமரத்தை தாண்டி செல்லும் போது, பள்ளி கொண்ட திருமெய்யன் சன்னிதியை காணலாம். அதற்கு அடுத்ததாக சத்தியமூர்த்தி பெருமாள் நின்ற கோலத்தில் காணப்படும் சன்னிதி உள்ளது. இதில் பள்ளி கொண்ட பெருமாள் சன்னிதி கருவறை, மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி கொண்ட நிலையில் பெருமாள் சேவை அளிக்கும் கருவறையில், வைகுண்டத்தை காட்சிப்படுத்தும் வகையில் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. 5 தலைகளை உடைய ஆதிசேஷன் மீது அனந்த சயனத்தில் இருக்கிறார் பெருமாள். அவரது காலடியில் பூதேவி, இதய கமலத்தில் ஸ்ரீதேவி, இடமிருந்து வலமாக கருடன், எம தர்மராஜன், சித்திரகுப்தன், சந்திரன், சூரியன், ராகு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள், வலது கடைக்கோடியில் அசுரர்கள் உள்ளனர். பள்ளி கொண்ட பெருமாள் அனந்த சயனத்தில், 30 அடி நீளத்தில் திருமேனியுடன் சேவை அளிக்கிறார்.

    கோவிலின் சத்திய புஷ்கரணி தீர்த்த குளம், தாமரை மலர் தோற்றத்தில் எண் கோண வடிவில் 8 படித்துறைகளுடன் அமைந்துள்ளது. இங்கு இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலான அஷ்டதிக்கு பாலகர்கள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர். இந்த தீர்த்த குளத்தில் தண்ணீரை தொட்டாலோ அல்லது சத்திய தீர்த்தம் என வாயினால் சொன்னாலோ போதும் பாவங்கள் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த தீர்த்தகுளத்தில் தண்ணீர் எப்போதும் வற்றாத நிலையில் காணப்படும்.

    இந்தக் கோவிலில் வைகாசி விசாக திருவிழா, வைகுண்ட ஏகாதசி திருவிழா, ஆடிப்பூர திருவிழா, ஆவணி மாதத்தில் பவித்ர உற்சவம், சித்ரா பவுர்ணமி விழா ஆகியவை விமரிசையாக நடை பெறும்.

    திருமணம் மற்றும் குழந்தைப்பேறு வேண்டி வரும் பக்தர்கள் சத்தியமூா்த்தி பெருமாள் மற்றும் தாயாரை மனதால் வேண்டினால், அவர்கள் கேட்ட வரம் கிடைக்கும்.

    புதுக்கோட்டையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    • கோவில் வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. பெரம்பலூர்
    • நாட்டு நலப்பணி திட்ட முகாம்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் புது விராலிப்பட்டி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. முகாமில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்டு, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதனை பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பொன்னுத்துரை பார்வையிட்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி ஊக்கப்படுத்தினார். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்."

    • இந்த ஆலயம் சுமார் 6½ கோடி திர்ஹாம் செலவில் கட்டப்பட்டிருக்கிறது.
    • ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் வரை உள்ளே நின்று வழிபாடு செய்ய முடியும்.
    • ஆலயத்தில் சிவன் - பார்வதி சிலைகளுடன் சிவலிங்கம் பிரதானமாக அமைந்துள்ளது.

    அரபு நாடு என்றாலே கடுமையான சட்ட திட்டங்களும், குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளும் நிறைந்தது என்ற மாயத் தோற்றம் பலரிடம் இருக்கிறது. ஆனால் பலாப்பழத்தின் உள்ளே இருக்கும் தித்திப்பைப் போல, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டு அனைத்து நாட்டினரையும் அரவணைத்துச் செல்லும் பண்பும் அங்கே உள்ளது என்பதை பறைசாற்றி இருக்கிறது, சமீபத்தில் துபாயில் திறக்கப்பட்டுள்ள இந்து கோவில். அதிலும் அந்த ஆலயத்தை, அமீரக சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுத்துறை மந்திரி ஷேக் நஸ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் திறந்துவைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

    ஐக்கிய அரபு அமீரகம் இஸ்லாமிய நாடாக இருந்தாலும், மதநல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மையை வலியுறுத்தும் விதமாக பல்வேறு மதங்களை சேர்ந்த சமூகத்தினர் அவரவர் பின்பற்றும் முறைப்படி வழிபடுவதற்கு ஏற்ற வகையில் வழிபாட்டு தலங்களை அமைத்துக்கொள்ள அனுமதி அளித்து வருகிறது. ஏற்கனவே தேவாலயங்கள், சீக்கிய குரு தர்பார், புத்தர் கோவில், இந்து கோவில் என அனைத்தும் இங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்து சமயத்தை பின்பற்றும் மக்கள் அதிகமாக உள்ளதால் அதற்கு மதிப்பளிக்கும் வகையில், துபாயில் ஜெபல் அலி பகுதியில் ஷேக் ஜாயித் சாலை அருகில் 70 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில், வழிபாட்டு பகுதியுடன் பிரமாண்டமான கோவில் வளாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக துபாய் அரசு கடந்த 2019-ம் ஆண்டில் நிலம் கொடுத்தது. அதேபோல இந்தக் கோவிலுக்கு சமூக மேம்பாட்டு ஆணையம் முறையான உரிமமும் வழங்கி உள்ளது.

    இந்த ஆலயம்தான் சமீபத்தில் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்தக் கோவில், ஏற்கனவே பர்துபாய் பகுதியில் அமைந்துள்ள சிந்தி குரு தர்பார் கோவில் அமைப்பின் சார்பில், சுமார் 6½ கோடி திர்ஹாம் செலவில் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் வரை உள்ளே நின்று வழிபாடு செய்ய முடியும். இந்த ஆலயத்தின் கட்டிடக் கலையானது, அரபு- இந்திய கலாசாரத்தை பிரபதிபலிக்கும் அம்சமாக அமைந்திருக்கிறது. ஆலயத்தில் சிவன் - பார்வதி சிலைகளுடன் சிவலிங்கம் பிரதானமாக அமைந்துள்ளது. கோவில் வளாகத்தின் பிற பகுதிகளில் விநாயகர், மகாலட்சுமி, கிருஷ்ணர், ஐயப்பன், பாலாஜி, லட்சுமி நாராயணர், துர்க்கை, சாய்பாபா, மூகாம்பிகை, சீதை மற்றும் லட்சுமணனுடன் கூடிய ராமபிரான், அனுமன் உள்பட 16 தெய்வங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பூஜை செய்வதற்காக 12 குருக்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இங்குள்ள சிலைகள் அனைத்தும் வெள்ளை மற்றும் கருப்பு மார்பிள் கற்களால் உருவானவை. அனைத்து சிலைகளும், இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்திற்குள் ஒரு பகுதியின் மேற்பரப்பில் பிரமாண்டமான விரிந்த தாமரை போன்ற அமைப்பு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. அதேபோல மற்றொரு பகுதியின் மேற்பரப்பில் ஏராளமான மணிகள் தொங்கவிடப்பட்டுள்ளது. இவை பார்ப்பதற்கு சிறப்பான அலங்காரத் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.

    தலைநகர் அபுதாபி நெடுஞ்சாலை அருகே ஜெபல் அலி பகுதியில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளதால், அங்கு இருந்தும் பொதுமக்கள் எளிதாக வாகனங்களில் வந்து செல்ல முடியும். தற்போது பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இணையத்தளத்தில் முன்பதிவு செய்து வழிபடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இந்து கோவிலில் திருமணங்கள் மற்றும் சுப காரியங்களை நடத்திக்கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது. மதநல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மைக்கு உதாரணமாக திறக்கப்பட்டுள்ள இந்த கோவிலுக்கு, உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது. உலக அளவில் எதிர்காலத்தில் சகோதரத்துவம், சமத்துவம், சகிப்புத்தன்மை ஆகிய பண்புகளை பறைசாற்றுவதாக துபாயில் உள்ள இந்து கோவில் விளங்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

    அபுதாபியில் பாப்ஸ் அமைப்பு மூலம் மற்றுமொரு பிரமாண்டமான இந்து கோவிலும் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலானது அடுத்த ஆண்டு (2023) திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆலயத்தின் கோபுர உச்சியில் பித்தளையால் உருவாக்கப்பட்ட கலசங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் மைய கோபுரத்தின் மீதுள்ள பெரிய கலசம் 120 கிலோ எடையும், 6 அடி உயரமும் கொண்டது. இது தவிர சிறிய அளவிலான 8 கலசங்களும் உள்ளது. இவை ஒவ்வொன்றும் தலா 90 கிலோ எடையும், 4 அடி உயரமும் கொண்டதாகும்.

    - மர்யம்.சா

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
    • நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு 160-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட வெட்டுமணி ஒய்.எம்.சி.ஏ. கலையரங்கில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறும் தீர்வுதளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் அந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத் துறைக்கென ரூ.165 கோடியும், பழுதடைந்த நெடுஞ்சாலைகளை சீரமைப்பதற்காக ரூ.15 கோடியும் நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் நடைபெற்று வருகிறது. ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி சாலைகளை சீரமைப்பதற்கென ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்திற்குட்பட்ட திருக்கோவில்களை சீரமைப்பதற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கியிருந்த நிலையில் தற்போது அந்த குப்பைகளை படிப்படியாக அகற்றிவருவதோடு, பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றுவதற்கு பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாக மாற்றிட பொதுமக்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க தலைவர் அல்அமீன், செயலாளர் கார்த்திகேயன் முதல் மனுவை கொடுத்தனர். மனுவில், மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையை முழுமையாக தார் போட்டு சீரமைத்து அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு 160-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றனர்.

    • இத்தலம் காங்கேயன்பாளையம் என முருகனின் பெயரால் அமைந்துள்ளது.
    • கார்த்திகை கடைசி திங்களன்று சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கும்.

    ஈரோடு மாவட்டத்தில், காங்கேயன்பாளையத்தில் அமைந்துள்ள 600 ஆண்டுகளுக்கு மேல் பழமையான நல்லநாயகி உடனருள் நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் சிவனின் அரங்கமாகவே திகழ்கிறது. மூர்த்தி மற்றும் காவிரி தீர்த்தத்தால் சிறப்புப் பெற்றுள்ள இத்தலம் காங்கேயன்பாளையம் என முருகனின் பெயரால் அமைந்துள்ளது. இத்தலத்தில் காவிரி ஆறு இரு புறமும் சுழித்துக் கொண்டு ஓட, நடுவில் உயர்ந்து, அகத்தியர் வியாக்ரபாதர், பதஞ்சலி முதலிய முனிவர்கள் திருவடி பதிந்த பாறைமீது அமைந்துள்ள திருக்கோயிலாகும்.

    காவிரியின் நடுவிலுள்ள குன்றின் மீது, ஓம்கார வடிவில் விளங்கும் கோயில் இது. கொங்கு நாட்டு பஞ்சபூதத் தலங்களில் அகத்தியரால் மணலில் வடிக்கப்பட்ட லிங்கமாக இத்தல இறைவன் இருப்பதால், இத்தலம் கொங்குநாட்டு பிருத்வி (மண்) தலமாகக் கருதி வழிபடப்படுகிறது. இதுவரை இத்திருக்கோயிலுக்குச் செல்பவர்கள் வருடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் காவிரி ஆற்றில் பரிசலில் பயணித்துச் சென்றுதான் தரிசனம் செய்து வரவேண்டும்.

    குடகிலிருந்து கடலின் முகத்துவாரம் வரையில் உள்ள நீளத்தின் மையப்புள்ளி அமைந்துள்ள இடமே தற்போது நட்டாற்றீஸ்வரர் கோயில்கொண்டிருக்கும் பகுதியாகும். மேலும் இரு கரைகளுக்கு இடையிலும் நடு ஆற்றில் அமைந்துள்ள பகுதியாக இருப்பதால் நடு ஆற்று ஈஸ்வரர் என்ற காரணப் பெயர் ஏற்பட்டு, தற்போது நட்டாற்று ஈஸ்வரர் என வழங்கி வருகிறது. இந்த நட்டாற்றீஸ்வரர், அகத்தியரால் அவர்தம் பூஜைக்கென உருவாக்கப்பட்டு வணங்கப்பட்ட லிங்கமாகும்.

    அகத்தியரால் வணங்கப்பட்ட சிவலிங்கம் நடு ஆற்றில் குடி கொண்டதால், 'நட்டாற்றீஸ்வரர்' எனவும், அகத்தியரால் மணலால் பிடித்து வைத்து வணங்கப்பட்டதால் அகத்தீஸ்வரர் எனவும் வழங்கப்பட்டார். பின்னர் சிவலிங்கத்திற்கு மேல் விமானம் கட்டப்பட்டது சிவகுடும்பத்தின் அங்கமாக அருகில் உமையம்மை, 'நல்லநாயகி' என்ற பெயரோடு, சிவன் சந்நதிக்கு வலப்புறம் தனி சந்நதியில் எழுந்தருளினாள். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நற்பலன்களைத் தருபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர் வழங்குகிறது. அன்னபூரணி என்றும் பெயருண்டு.

    சின்னமைந்தன் முருகன், வலது காலை முன்வைத்தும், இடக்காலை பின் வைத்தும் நடப்பது போன்ற பாவனையில் காட்சி தருகிறார். அகத்தியர் இங்கு சிவனைத் தரிசிக்க வந்தபோது, முருகன் அவரை முன்னின்று வரவேற்று அழைத்து வந்து ஆற்றின் நடுவில் அமைந்திருந்த குன்றைக் காட்டியதால் இக்கோலத்தில், அதாவது நடக்கும் பாவனையில், காட்சி தருகின்றார். இவர் இடது கையில் கிளி ஒன்றை வைத்திருப்பது வித்தியாசமான தரிசனம். இது 'தகப்பன் சாமி' எனப் பெயர்பெற்ற ஞானஸ்கந்தன் என்னும் முருகப் பெருமானின் ஞானக்கோலம் ஆகும். கோயில் வளாகத்திலுள்ள பாறை மீது தலவிருட்சமான ஆத்திமரத்தைக் காணலாம். மிகவும் பழமையான இம்மரத்தில் புதிய கிளைகள் தோன்றுவதில்லை என்பது அதிசயம்.

    இம்மரத்தின் கீழ் தல விநாயகராக காவிரி கண்ட விநாயகர் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தின் பிராகாரத்தில் காவிரி கண்ட விநாயகரோடு, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர், நால்வர், பைரவர். ஆகியோர் எழுந்தருளி அருளுகின்றார்கள். ஸ்ரீதேவி-பூதேவியுடனான ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் தனி சந்நதியில் சேவை சாதிக்கிறார்.தினமும் காலை 6.30 முதல் இரவு 7.00 மணிவரை திருக்கோயில் தரிசனத்திற்காக திறந்திருக்கும் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அகத்தியர் பிருத்வி லிங்கம் செய்து சிவபூஜை செய்தபோது, சுவாமிக்கு கம்பு தானியத்தை படைத்து வழிபட்டார்.

    இதன் அடிப்படையில் அச்சம்பவம் நிகழ்ந்த சித்திரை முதல்நாள் மட்டும் சிவனுக்கு தயிர் கலந்த கம்பங்கூழ் நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது. அன்று பக்தர்களுக்கு இதுவே பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. சித்திரை முதல்நாள், ஆடிப்பெருக்கு மற்றும் கார்த்திகை கடைசி திங்களன்று சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கும். ஆடிப்பூரத்தன்று மதியவேளை பூஜையில் நல்லநாயகி அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம் நடக்கும். காவிரியாற்றின் நடுவில் அமைந்த தலம் என்பதால், ஆடிப்பெருக்கன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அன்று கமண்டலத்தின் மூலம் காவிரி நதியைக் கொண்டு வந்த அகத்தியருக்கு தலைப்பாகை மற்றும் வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

    இத்திருக்கோயில் சிறிய பாறைமீது அமைந்திருந்தாலும், அந்தப் பாறையிலேயே ஆத்திமரம் தலவிருட்சமாகத் துலங்குகிறது. அனைத்து நட்சத்திரங்களும், ராசிகளும் இறைவனின் இயக்கத்துக்குக் கட்டுப்பட்டவை என்பதால் அந்தந்த நட்சத்திரத்துக்கும் ராசிக்கும் உரிய தாவரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவரவர் தமக்குரிய விருட்சத்தை வணங்கி பின்னர் வந்து இறைவனை வணங்கிச் செல்லும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது.

    செவ்வாய், வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில் நல்லம்மை, துர்க்கை வழிபாடும், சோமவாரத்தில் சிவனுக்கு அபிஷேகமும், சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடும், சஷ்டி, கிருத்திகை, செவ்வாய் நாட்களில் ஞானவடிவாக உள்ள சுப்ரமணியருக்கு கல்வியில் தேர்ச்சிபெற மாணவர்கள் வந்து வணங்கிவிட்டுச் செல்கிறார்கள். தீயதை அழித்து நல்லது நடைபெற அகத்தியர் மூலமாக எழுந்தருளி அருள்பாலித்துவரும் அகத்தீஸ்வரர் என்னும் நல்லம்மை உடனாய நட்டாற்றீஸ்வரரைத் தொழ நம்மைச் சுற்றி இருக்கும் தீமைகள் அழிந்து, நமக்கு நன்மையே விளையும்.

    • இந்த கோவிலில் மும்மூர்த்திகளும் ஒருசேர அருள்பாலிக்கிறார்கள்.
    • இந்த கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒருசேர அருள்பாலிக்கிறார்கள். அதனால்தான் தாணுமாலயன் கோவில் (தாணு என்றால் சிவன், மால் என்றால் திருமால், அயன் என்றால் பிரம்மா) என்ற பெயருடன் இந்த கோவில் அழைக்கப்படுகிறது.

    இந்திரன் சாபம் நீங்கியது

    இந்திரன் தனது சாபம் நீங்க மும்மூர்த்திகளையும் ஒருசேர பூஜித்து வணங்கிய இடமே (அறிவுக்கானகம் என்று போற்றப்பட்ட ஞானாரண்யம் என்ற பகுதிதான்) சுசீந்திரம் என்பது புராண வரலாறு. அதனால் இந்திரன் இந்த கோவிலுக்கு அர்த்தசாமத்தில் வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அத்திரி மகரிஷி முனிவருக்கும், அவரது மனைவி அனுசூயாவிற்கும் மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் இங்கு காட்சி அளித்ததாக தல வரலாறு கூறுகிறது.

    இறைவன் மீது அளவற்ற பற்றுக்கொண்ட அறம்வளர்த்தாள் என்ற பெண்ணை இறைவன் உயிரோடு ஆட்கொண்ட இடம் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் என்றும் தலப்புராணம் கூறுகிறது. அதன்காரணமாக அறம்வளர்த்த நாயகி அம்மன் சன்னதி அமைந்துள்ளது என்றும், இந்த சம்பவத்தின் நினைவாக ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா நடைபெறுகிறது என்றும் கூறுகிறார்கள்.

    சன்னதிகள்

    இந்த கோவிலின் பிரதான சன்னதியாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் இணைந்த தாணுமாலய சாமி சன்னதி அமைந்துள்ளது. இதுதவிர கொன்றையடி சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, அறம் வளர்த்த நாயகி சன்னதி, கால பைரவர் சன்னதி, கங்காளநாதர் சன்னதி, கைலாசநாதர் சன்னதி, சேரவாதல் சாஸ்தா சன்னதி, ராமர் சன்னதி, முருகன் சன்னதி, பஞ்சபாண்டவர் சன்னதி, நீலகண்ட விநாயகர் சன்னதி, நவக்கிரக சன்னதி அமைந்துள்ளது), இந்திர விநாயகர் சன்னதி, உதயமார்த்தாண்ட விநாயகர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி, ஸ்ரீகிருஷ்ணர் சன்னதி, துர்க்கை அம்மன் சன்னதி, ஸ்ரீசக்கரம் சன்னதி, விக்னேஸ்வரி (பெண் கணபதி- முகம் விநாயகர் உருவிலும், உடல் பெண் தோற்றத்திலும் காட்சி தரும்) சன்னதி, மன்னருக்கு தலைவலியை போக்கிய ஜூர தேவமூர்த்தி சன்னதி (3 தலை, 3 கால், 4 கைகளைக் கொண்ட சாமி சிலையுடன் கூடியது), நந்தீஸ்வர் சன்னதி போன்ற சன்னதிகள் இக்கோவிலில் அமைந்துள்ளன. இத்தகைய சிறப்புகள் மிகுந்த இந்த கோவிலுக்கு தினமும் குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட, வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும், பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    பழம்பெருமை மிக்க இந்த கோவிலில் அமைந்துள்ள விஷ்ணு சிலை கடுசர்க்கரை மருந்தால் ஆனது. இதனால் விஷ்ணுவின் திருமேனி எப்போதும் வெள்ளி கவசம் தாங்கி இருக்கும். எனவே விஷ்ணுவுக்கு அபிஷேகம் கிடையாது. இதனால் அவர் அலங்காரப்பிரியராகவும், சிவன் அபிஷேகப் பிரியராகவும் இங்கு காட்சி தருகின்றனர். இங்குள்ள உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ நாட்களில் மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

    ராஜகோபுரம்

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலின் முகப்பில் உள்ள ராஜ கோபுரம் 135 அடி உயரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது. கோபுரம் 10 அடி உயர கருங்கல் பீடத்தில் 7 நிலைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் உள்புறத்தில் மர வேலைப்பாடுகள் நிறைந்துள்ளது. உட்புற சுவர்களில் மூலிகைச் சாற்றில் இருந்து எடுக்கப்பட்ட வண்ணங்களில் ஆன ராமாயணம், மகாபாரத இதிகாச ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் ராமாயணம், மகாபாரதம், சிவபுராண கதாபாத்திரங்களின் சுதை சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் கடுசர்க்கரை, நவபாஷாண மூலிகைகளால் தயாரிக்கப்பட்டதாகும். கோவிலில் உள்ள நந்தி சிலை முழுக்க, முழுக்க கடற்சங்கை மாவாக்கி அதில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை மாக்காளை என்றும், பிரமாண்டமாக காட்சி தருவதால் மகாக்காளை என்றும் அழைக்கப்படுகிறது.

    ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 22 அடி உயரம் ஆஞ்சநேயரின் சிலையுடன் கூடிய சன்னதி இந்த கோவிலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். சிலை பாதத்தின் கீழே உள்ள 4 அடி பூமிக்குள் பதித்து வைக்கப்பட்டுள்ளது. வெளியில் தெரிவது 18 அடி உயரங்கொண்ட ஆஞ்சநேயர் மட்டும்தான். பாதத்தில் இருந்து உச்சிவரை எந்தவித பிடிப்பும் இல்லாமல் இந்த சிலை நிற்கிறது. சுசீந்திரம் கோவிலில் மண்ணிலிருந்து கிடைத்த மாணிக்கமாக திகழ்கிறார் மாருதி. கோவிலின் தின வழிபாடுகளிலும், காணிக்கை வசூலிலும் இந்த கோவிலில் முதலிடம் வகிப்பவர் இவரே என கோவில் பணியாளர்கள் பெருமையோடு கூறுகிறார்கள். கோவிலின் அலங்கார மண்டபத்தில் 36 இசைத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லும் கவிபாடும் என்பதற்கேற்ப இந்த தூண்களை தட்டினால் இசை ஒலி எழும்பும். கை தாளத்துக்கு ஏற்ப நாதஓசை எழும்பும் வகையில் இசைத்தூண்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற வியக்க வைக்கும் சுற்றுப்பிரகார மண்டபத்தைக் கொண்டது இக்கோவில். 2 பெரிய கொடிமரங்கள் இந்த கோவிலில் அமைந்துள்ளன.

    மார்கழி திருவிழா தேரோட்டம், சித்திரை திருவிழா தெப்போற்சவம், ஆவணி மாத தேர்திருவிழா, மாசித்திருக்கல்யாண திருவிழா, மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அமாவாசை திதியில் வரும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா ஆகியவை இந்த கோவிலின் முக்கிய விழாக்களாகும். இந்த விழாக்காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். கோவிலில் தினமும் காலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு மற்ற சன்னதிகளும், 1 மணிக்கு ஆஞ்சநேயர் சன்னதியும் நடை அடைக்கப்படும். மாலை 4 மணிக்கு ஆஞ்சநேயர் சன்னதி நடைதிறக்கப்படும். மற்ற சன்னதிகள் மாலை 5 மணிக்கு திறக்கப்படும். இரவு 8 மணிக்கு அனைத்து சன்னதிகளும் நடை அடைக்கப்படும்.காலை, மாலை 6.30 மணிக்கு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறும்.

    ×