search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைத்தேர்தல்"

    • அ.தி.மு.க. பிரமுகர்களை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
    • தி.மு.க.வை விழ்த்துவது தான் அ.தி.மு.க.வின் நோக்கம்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெறுகிறது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து அக்கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வும் போட்டியிடவில்லை

    இதனால் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க.வினரின் வாக்குகளை சேகரிக்க பா.ம.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அ.தி.மு.க. பிரமுகர்களை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதே போல தே.மு.தி.க. பிரமுகர்களிடமும் ஆதரவு திரட்டி வருகிறார்.

    இந்த நிலையில் பா.ம.க. சார்பில் வாக்கு சேகரிக்கும் போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் அச்சிடப்பட்ட நோட்டீஸ், பேனர்களை பா.ம.க.வினர் எடுத்து செல்கின்றனர். மேலும், தி.மு.க.வை விழ்த்துவது தான் அ.தி.மு.க.வின் நோக்கம். இதனை நிறைவேற்ற மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசார கூட்டங்களில் பேசி அ.தி.மு.க.வினரிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.

    • பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.
    • பா.ஜ.க.விற்கு கால் பிடிக்கும் வேலையை செய்கின்றது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாசிச அரசியல், மதவாத அரசியல், ஜாதி அரசியலை, முன்னெடுத்த பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.

    நாட்டு மக்கள் விரும்புவது நாட்டின் முன்னேற்றம், வளம், சமூக வளர்ச்சி, ஆகியவற்றை முன்னெடுத்த திராவிட நாயகன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சமூக கட்டமைப்பு வளர்ச்சியைத்தான். இதனால் தான் இந்திய அளவில் 40-க்கு 40 தொகுதியிலும் வெற்றியினை பெற்று மகுடம் சூட்டி உள்ளனர்

    சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.க. கட்சியுடன் பா.ம.க. கட்சி கூட்டணி சேர்ந்து, பா.ஜ.க.விற்கு கால் பிடிக்கும் வேலையை செய்கின்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட சட்டசபையில் தனி தீர்மானம் நிறைவேற்றியுள்ள முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினால் மட்டுமே வன்னிய மக்களுக்கு பல நல்லதிட்டங்களையும், சிறந்த இட ஒதுக்கீட்டையும் வழங்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இடைதேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது.
    • மு.க.ஸ்டாலின் ஆட்சி, மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி நகர பகுதியில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள் பொன்முடி, சி.வெ.கணேசன், சேகர் பாபு ஆகியோர் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    வாக்கு சேகரிப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், இடைதேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி, மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தி.மு.க. அமைச்சர்கள் பல்வேறு தேர்தலில் பணியாற்றியவர்கள் என்பதால் எளிதில் வெற்றி பெற்று பெறுவோம். பா.ம.க. வினருக்கு வன்முறையில் ஈடுபடுவது தான் வேலை. அவர்களுக்கு அது தான் தெரியும்.

    பாலாற்றின் குறுக்கே அணைகட்டுவோம் என ஆந்திர முதல்வர் தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அவர்கள் தடுப்பனை கட்டுவோம், கட்டுவோம் என்பார்கள். நாங்கள் அதனை தடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருமங்கலம், ஈரோடு, இடைதேர்தல் பார்முலா போல நடக்கின்றது.
    • பிரச்சாரத்துக்கு செல்லும் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திக்க முடியாத நிலை.

    விழுப்புரம்:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜூனன் ஆகியோர் விழுப்புரத்திற்கு இன்று வந்தனர். அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திருமங்கலம், ஈரோடு, இடைதேர்தல் பார்முலா போல நடக்கின்றது. இதற்கு உதாரணம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டும் தமிழக அமைச்சர்கள் 33 பேர் ஒவ்வொரு தெருவிலும் சூழ்ந்து கொண்டு மக்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து அவர்களை மாலையில் விடுவிக்கின்றனர்.

    இதனால் பிரச்சாரத்துக்கு செல்லும் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திக்க முடியாத நிலை உள்ளது. இதுதான் தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் அவலமாகும். இப்படிப்பட்டவர்களுக்கு காவல்துறை முழு ஆதரவு அளிக்கின்றது. இதையெல்லாம் முன்பே உணர்ந்துதான் அ.தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 10 நாட்களாக சட்டசபையில் சாராயத்தை தவிர வேறு எதையும் பேசவில்லை.
    • அநீதி என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    விக்கிரவாண்டி:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விக்கிரவாண்டி இடைதேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து திருவாமத்தூர் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 10 நாட்களாக சட்டசபையில் சாராயத்தை தவிர வேறு எதையும் பேசவில்லை. இது சட்டசபை இல்லை சாராய சபை. வேறு ஒன்றையும் பேசவில்லை. சைதாப்பேட்டையில் 11 வயது சிறுவன் இறந்துவிட்டான். குடிநீரில் கழிவு நீர் கலந்துவிட்டது. தண்ணீர் விஷம் ஆகிவிட்டது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும்.

    சாராயம், குடிநீர் அனைத்தும் இப்பொழுது விஷமாகிவிட்டது. இதை மாற்ற வேண்டும் பெரியவர் முதல் சிறியவர் வரை ஒரு மாற்றம் வர வேண்டும் என சொல்கின்றனர்.

    அந்த மாற்றத்தை யார் கொண்டு வருவது, தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க நாங்கள் தயாராக இல்லை, 7அடி தாண்டுவதற்கு 70 அடி பின்னோக்கி செல்ல வேண்டியது உள்ளது. மாற்றம் மாற்றம் என சொல்லிக் கொண்டிருந்தால் மாறாது மாற்றம் என்பது ஒரு செயல், நாம் தான் அதை மாற்ற வேண்டும். மாற்றத்தை தொடங்க வேண்டும் என்றால் நம்மில் இருந்து தொடங்க வேண்டும்,

    கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களுக்கு 10 லட்சம், பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம், சாகித்யா அகாடமி விருது பெற்றவர்களுக்க ரூ,25 ஆயிரம். அப்படியென்றால் சாகித்ய அகாடமி விருதை விட கள்ளச்சாராயம் குடிப்பது உயர்வானதா?. இது அநீதி என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    தமிழக மக்கள் நீங்கள் நன்றாக சிக்கிக் கொண்டீர்கள் இதற்கு ஒரே ஒரு வாய்ப்பு மைக் சின்னத்திற்கு வாக்களிப்பது தான், உழைத்து கலைத்த மக்களுக்கு ஒரு பானம் தேவைப்படுகிறது என்கிறார் அமைச்சர் துரைமுருகன். இவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் நல்ல ஒரு அதிகாரத்தை, ஆட்சியை நம்மால் அளிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

    • இடைத்தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து பா.ஜ.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி. அன்புமணி போட்டியிடுகிறார். இது தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிடுகிறார்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்த நிலையில், அக்கட்சியினரின் ஓட்டுக்களை பெறவும், தே.மு.க.தி.வினரின் ஓட்டுக்களை பெறவும், பா.ம.க.வும், நாம் தமிழர் கட்சியும் முயற்சித்து வருகின்றன.

    மேலும், விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முகாமிட்டு தேர்தல் பணி செய்து வருகிறார்.

    தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக 10 அமைச்சர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

    அதேபோல பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி ஆகியோர் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

    மேலும், பா.ஜ.க.வின் உள்ளூர் நிர்வாகிகள் பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருவதால் பா.ம.க.வினர் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

    • நாட்டில் நடப்பது தவறு என்று தெரிந்தும் கூட்டணி கட்சியினர் துணை போய் வருகின்றனர்.
    • மத்திய அரசின் திட்டங்கள் எதிலும் தமிழ் இல்லை.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பிரசாரம் மேற்கொண்டார்.

    தமிழகத்தையும், தமிழர்களையும் காப்பாற்றுவதற்காக நாம் தமிழர் கட்சி சமரசம் இல்லாமல் கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித அரசியல் பின் புலமும் இல்லாமல் போராடி வருகிறது. நாட்டில் நடப்பது தவறு என்று தெரிந்தும் கூட்டணி கட்சியினர் துணை போய் வருகின்றனர். தேர்தல் களத்தை வைத்து தெளிவு பெற வேண்டும். இந்தியம் என்பது இந்தியை திணிக்கும், திராவிடம் அதை ஆதரிக்கும். அதனால் நாம் தமிழர் தமிழ் தேசியம் பேசுகிறது.

    தற்போது எந்த இடத்திலும் தமிழ் இல்லை. திராவிடம் தமிழர்களை பிரிக்கும். தமிழர்கள் ஒன்றுபட்டால் திராவிடம் இருக்காது. மத்திய அரசின் திட்டங்கள் எதிலும் தமிழ் இல்லை. இதை கேட்கும் தைரியம் திராவிடத்துக்கு இருக்கிறதா என்பதை மக்கள் அறிய வேண்டும். தமிழ் தேசியத்துக்கும், திராவிடத்துக்கும் பல்வேறு கருத்தியல் முரண்பாடு உள்ளது. தமிழ்மொழி, பாராளுமன்ற கட்டிடத்தில் இல்லை. அது குறித்தும் தி.மு.க. பேசவில்லை. திராவிடம், தேர்தலின் போது பணத்தை முன்நிறுத்தும். ஆனால் தமிழ் தேசியம் மானத்தையும், தன்மானத்தையும் முன்னிறுத்தும்.

    சமூகநீதி குறித்து பேசும் தி.மு.க. மாநில உரிமைகளையெல்லாம் விட்டுக்கொடுத்து விட்டனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது ஏன்? நாங்கள் கேட்பது இடஒதுக்கீடு அல்ல, இடபங்கீடு தான் கேட்கிறோம். இதை மாநில அரசு செய்யலாம் என உரிமை உள்ளபோது, மத்திய அரசிடம் இந்த உரிமையை திராவிடம் அடமானம் வைக்கிறது. அரசியல் மாற்றம் இலவசங்களை அளித்து மக்களை அடிமையாக்கி வைத்துள்ள தி.மு.க.வுக்கு முடிவு கட்ட வேண்டும்.

    நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலால் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படபோவதில்லை. ஆனால் இத்தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு முன்னோட்டமாக அமையும். எனவே தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ மக்கள், இத்தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நடைபெற்றது.
    • வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாளாகும்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி இறந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியை இந்திய தேர்தல் ஆணையம் காலியாக அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெறம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர். அபிநயா ஆகியோர் உட்பட பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    தேர்தல் நடத்தும் அதிகாரி சந்திரசேகர் கூறியிருப்பதாவது:-


    வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் 29 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாளாகும்.

    இன்று ஒருவர் கூட வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அவர் அறிவித்துள்ளார்.

    வாக்கு எண்ணிக்கை 13-ம் தேதி நடைபெற உள்ளது.

    • 38 லட்சம் தாலி அறுந்த இளம் விதவைகள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
    • நம்முடைய ஒட்டுமொத்த எதிரி தி.மு.க.வை வீழ்த்த நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து விக்கிரவாண்டி தாலுக்கா அலுவலகம் முன் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசியதாவது:-

    நாம் தமிழர் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் தான் இங்கு போட்டி , தீய திராவிடத்திற்கு தூய தமிழ் தேசியத்திற்கும் தான் இங்கு போட்டி . நாங்கள் தேர்தலுக்கு வந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. எவருக்கும் சமரசம் செய்ததில்லை நோட்டுக்கும் சீட்டுக்கும் பேரம் நடந்தது போனதில்லை. ஆனால் நாங்கள் 2000 முறை சிந்தித்து செயலாற்றி கொண்டு வருகிறோம். இடைத்தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் மீண்டும் 2026 தேர்தலில் அபிநயா தான் விக்கிரவாண்டியில் போட்டியிடுவார்.

    ஊழல் கூட்டத்தில் ஒருத்தரை அனுப்புவதை விட ஊழலை அழிக்க போராடும் ஒருவரை சட்டமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன். சாராயம் குடித்தவனுக்கு நிவாரணம் வழங்குவது சரியானஅரசா? குடும்ப தலைவிக்கு ஆயிரம் ஆனால் குடித்து இறந்தால் 10 லட்சம் வழங்கிகிறது. 38 லட்சம் தாலி அறுந்த இளம் விதவைகள் தமிழ்நாட்டில் உள்ளனர். எதிர்கட்சியாக இருக்கும் போது கனிமொழி விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என தெரிவித்தார்.

    சாதியை ஒழிக்க ஒரே வழி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அப்போது தான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் . கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பிற்கு மோடி, ராகுலின் பதில் என்ன? சாதி பார்த்து யாரும் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம். நம்முடைய ஒட்டுமொத்த எதிரி தி.மு.க.வை வீழ்த்த நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜேந்திரன் தாக்கல் செய்தார்.
    • போராட்டம் காரணமாக எம்.ஜி.ஆர். சிலை சிக்னல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    திருச்சி:

    திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகாமையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை பகுதி வழக்கம் போல் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது. மாணவர் சாலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்பவர்கள் குழுமி இருந்தனர். மார்க்கெட்டுக்கு சென்ற பொதுமக்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது 6 மணி அளவில் அங்குள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் முதியவர் ஒருவர் கோஷமிட்டபடி விறுவிறுவென ஏறினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மின் கோபுரத்தில் ஏறியவர் திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 68) ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் என்பது தெரிய வந்தது.

    சமூக ஆர்வலரான இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை மாலையாக அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜேந்திரன் தாக்கல் செய்தார். அவரது மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.

    இதைத் தொடர்ந்து ஊர் திரும்பிய ராஜேந்திரன் இன்று காலை அளவில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.

    பாராளுமன்றத் தேர்தலில் வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது திட்டமிட்ட சதி என குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ கணேஷ், தாசில்தார் விக்னேஷ் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இருப்பினும் அவர் கீழே இறங்கி வர மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மின் கோபுரத்தில் ஏறி ராஜேந்திரனை குண்டுக்கட்டாக தூக்கி கீழே இறக்கி கொண்டுவந்தனர். முன்னதாக அந்த பாதையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்த போராட்டம் காரணமாக எம்.ஜி.ஆர். சிலை சிக்னல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சேர்ந்து தொகுதியில் முழுவதும் வேட்பாளர்களை சந்தித்து வாக்குகளை கேட்டு வருகின்றனர்.
    • அன்னியூர் சிவாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கூறினார்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    தொகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்கள் தொண்டர்களுடன் சென்று வாக்குகளை சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சேர்ந்து தொகுதியில் முழுவதும் வேட்பாளர்களை சந்தித்து வாக்குகளை கேட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விக்கிரவாண்டியில் நேற்று தி.மு.க.வினர் நூதனப் பிரசாரம் மேற்கொண்டனர். இதில் தி.மு.க. பேச்சாளர் சேலம் கோவிந்தன் அகத்தியர் வேடம் அணிந்து அரிச்சுவடி, கமண்டலத்துடன், காட்சி அளித்து விக்கிரவாண்டியில் வீதி, வீதியாக சென்று பாட்டுப்பாடினார். அகத்தியர் வாக்கு பொய்க்காது, பலிக்கும் எனக்கூறிய இவர், முதலமைச்சரின் நல்லாட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அன்னியூர் சிவாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கூறினார்.

    நூதன முறையில் அகத்தியர் வேடமணிந்து பிரசாரம் செய்வதை அப்பகுதியில் உள்ள பெண்கள் அனைவரும் வியப்போடு பார்த்தனர்.

    • வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது.
    • வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாளாகும்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி இறந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியை இந்திய தேர்தல் ஆணையம் காலியாக அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெற உள்ளது.

    இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர். அபிநயா ஆகியோர் உட்பட பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் 29 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாளாகும். இதனை தொடர்ந்து தி.மு.க.வும், பா.ம.க.வும் விக்கிரவாண்டி தொகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர். அபிநயாவிற்கு ஆதரவாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிரவாண்டியில், தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று மாலை மேற்கொள்ளகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.விற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தான் போட்டி என சீமான் கூறி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×