search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைத்தேர்தல்"

    • இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது.
    • வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகின்றன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகின்றன. இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடி வடைந்தது.

    இத்தேர்தலில் போட்டி யிட தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா. பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

    இவர்கள் அனைவரும் தாங்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தங்களுடைய சொத்துப் பட்டியல் விவரங்களையும் தாக்கல் செய்துள்ளனர். அதில் முக்கிய வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியல் விவரம் வருமாறு:-

    தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 8 ஆயிரத்து 944-க்கும், அவரது மனைவி வனிதா பெயரில் ரூ.2 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 336-க்கும், மகள் ஹர்ஷதாகடர் பெயரில் ரூ.47 லட்சத்து 30 ஆயிரத்து 733-க்கும், மகன் திரி லோக்ஹரி பெயரில் ரூ.19 லட்சத்து 58 ஆயிரத்து 317-க்கும் அசையும் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் அன்னியூர் சிவா பெயரில் ரூ.90 லட்சத்து 96 ஆயிரத்துக்கும். அவரது மனைவி வனிதா பெயரில் ரூ.33 லட்சத்து 6ஆயிரத்து 370-க்கும் அசையா சொத்துக்கள் இருப்பதா கவும். இதுதவிர வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அன்னியூர் சிவாவுக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 92 ஆயிரத்து 19-ம், அவரது மனைவி பெயரில் ரூ.55 லட்சத்து 4 ஆயிரத்து 409-ம் கடன் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    பா.ம.க.

    பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு ரூ.II லட்சத்து 61 ஆயிரத்து 187-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.17 லட்சத்துக்கு அசையா சொத்துக்கள் இருப்பதாக வும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.15 லட்சத்து 84 ஆயிரத்து 100 மதிப்பில் கடன் இருப்பதாகவும், அவரது மனைவி ஜெயலட்சுமி பெயரில் ரூ.16 லட்சத்து 54 ஆயிரத்து 23-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.39 லட்சத்து 23 ஆயிரத்துக்கு அசையா சொத்துக்கள் நிறுவனங்களில் ரூ.1 லட்சம் இருப்பதாகவும், வங்கி, நிதி கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா பெயரில் ரூ.4 லட்சத்து 82 ஆயிரத்து 500-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.2 லட் சத்து 62 ஆயிரம் மதிப்பில் நகைக் கடன் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    • அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது.
    • இடைத்தேர்தலில் தி.மு.க. வழக்கம் போல் அதே கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்கிறது.

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்த காரணத்தால் அங்கு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா, பா.ம.க. வில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா ஆகியோர் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி 93,730 ஓட்டுகளும் பா.ம.க. கூட்டணியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 84,157 ஓட்டுகளும் வாங்கி இருந்தனர். சுமார் 9 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில்தான் தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்றிருந்தார்.

    தற்போது இடைத்தேர்தலில் தி.மு.க. வழக்கம் போல் அதே கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்கிறது.

    அ.தி.மு.க., தே.மு.தி.க. போட்டியிடாததால் அக்கட்சி வாக்குகள் பா.ம.க. வேட்பாளருக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர். அதற்கு அடுத்த படியாக ஆதி திராவிடர் வாக்குகளும், முதலியார், உடையார் வாக்குகளும் உள்ளன. அதன் காரணமாக வன்னியர்களை ஒவ்வொரு கட்சியும் வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

    இந்த தொகுதியை பொறுத்தவரையில் தி.மு.க. அ.தி.மு.க. சம பலத்துடன் உள்ளன. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 72,188 ஓட்டுகளும், அ.தி.மு.க. 65,365 ஓட்டுகளும், பா.ஜனதா 32,198 ஓட்டுகளும் பெற்றுள்ளன.

    இதனால் இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளும் கட்சியான தி.மு.க. கடந்த 10 நாட்களுக்கு முன்னதாகவே தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துவிட்டது. அதில் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், அமைச்சர் பொன்முடி ஆகியோர் தலைமையில் 9 அமைச்சர்களை தேர்தல் பணிக்குழுவில் அறிவித்து அதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில்மகேஷ் பொய்யாமொழி, டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் விக்கிரவாண்டியில் கடந்த வாரம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளனர். அதில் எந்தெந்த அமைச்சர்கள் எந்தெந்த ஒன்றியத்தை பார்க்க வேண்டும் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

    கானை மத்திய ஒன்றியம்-அமைச்சர் கே.என்.நேரு, விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம், எ.வ.வேலு, மேற்கு ஒன்றியத்துக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கானை வடக்கு ஒன்றியம்-சக்கரபாணி, கோலியனூர் மேற்கு ஒன்றியம்-தா.மோ.அன்பரசன், விக்கிரவாண்டி மத்திய ஒன்றியம்-சிவசங்கர், விக்கிரவாண்டி பேரூர்-சி.வி.கணேசன், கானை தெற்கு ஒன்றியத்துக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, லட்சுமணன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக 9 ஆயிரம் ஓட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் மூலம் 2 லட்சம் ஓட்டுகளுக்கு தி.மு.க.வில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த 9 அமைச்சர்களின் கீழ் மற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்கள் பணியாற்ற பஞ்சாயத்துகள், ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு ஊராட்சி பூத் வாரியாக ஓட்டுகள் திரட்டுவதற்கு இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி அமைச்சர் தா.மோ.அன்பரசன் 7 ஊராட்சிகளில் 11 பூத்தில் உள்ள 8,942 ஓட்டுகளை கவனிக்க வேண்டும்.

    அமைச்சர் பெரிய கருப்பன் 2 ஊராட்சிகளில் 5 பூத்தில் 4,310 வாக்குகளையும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 ஊராட்சிகளில் உள்ள 3,694 வாக்குகளையும் பார்க்க வேண்டும்.

    அமைச்சர் பி.மூர்த்திக்கு 3,700 ஓட்டுகளும், செஞ்சி மஸ்தானுக்கு 5,805 ஓட்டுகளும் கொடுக்கப்பட்டு உள்ளன.

    இதே போல் ஒவ்வொரு அமைச்சர்கள், எம்.எல்.ஏ. க்கள், மாவட்டச் செயலாளர்களுக்கும் 'பூத்' வாரியாக பணியாற்ற ஒட்டுகள் பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    இதனால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் தங்கி பணியாற்றுவதற்காக விக்கிரவாண்டி விழுப்புரத்தில் ஒவ்வொருவருக்கும் வாடகை வீடு பார்க்கும் படலமும் தொடங்கி உள்ளது.

    அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி வரை தங்குவதற்கு ரூ.1 லட்சம் வரை வாடகை கொடுக்க தயாராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    ஆனாலும் வசதியான வீடு கிடைப்பதில் சிரமம் உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    எப்படியானாலும் நடப்பு சட்டசபைக் கூட்டத் தொடர் முடிவதற்குள் ஏதாவது ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து தர வேண்டும் என்று உதவியாளர்களுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

    அதனால் விக்கிரவாண்டி-விழுப்புரம் பகுதிகளில் வாடகை வீடு தேடி கொடுக்கும் புரோக்கர்களுக்கு தேவை, மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது.

    • பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகின்றது.
    • கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 10-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கள் கடந்த 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. பா.ம.க. சார்பில் சி. அண்புமணி போட்டியிடுவதாகவும் அறிவிப்பு வெளியானது. இத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அக்கட்சி தலைமை அறிவித்தது.

    இந்நிலையில் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்னியூர் சிவா இன்று காலை 11 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி. விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியில் வந்த பின்னர் அமைச்சர் பொன்முடி கூறுகையில், கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார். அப்போது, அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடது. அந்த நேரத்திலேயே 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்றது.

    தற்போது, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகின்றது. இவர்களுடன் அ.தி.மு.க. இல்லை. எனவே, தி.மு.க. வேட்பாளர் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் நீண்ட கால பல கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.
    • நந்தன் கால்வாய் திட்டம் முழுமை பெறாமல் முடங்கி கிடக்கிறது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகிற ஜூலை 10-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 14-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்ததால், தி.மு.க., பா.ம.க.விடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இவ்விரு கட்சிகளும் அ.தி.மு.க.வினரின் ஓட்டுகளை பெற பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்படுத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி தொகுதி மக்கள் நீண்ட கால பல கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். அவை பின்வருமாறு:-

    விக்கிரவாண்டி தொகுதியில் நந்தன் கால்வாய் திட்டம் முழுமை பெறாமல் முடங்கி கிடக்கிறது. இந்தத் திட்டம் முழுமை பெற்றால் இந்த தொகுதியில் சுமார் 40 ஏரிகள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.

    இந்த தொகுதியில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைகளை தேடி வெளி மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் செல்கின்ற நிலை உள்ளது. இந்த பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குறுதி கொடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இங்கு விவசாயம் சார்ந்த தொழிற்சாலை உருவாக்கப்பட வேண்டும்.

    விக்கிரவாண்டி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு புதிய கட்டிட வசதியோடு இயங்கி வருகிறது. இந்த தாலுகாவை இணைக்கும் வகையில் காணை ஒன்றிய பகுதிகளில் இருந்து இந்த தொகுதியின் கடைக்கோடி பகுதி அன்னியூர், நல்லாபாளையம், கண்டாச்சிபுரம், கடையம், லட்சுமிபுரம், முண்டியம்பாக்கம் வழியாக விக்கிரவாண்டி தாலுகாவை அடையும் வகையில் பஸ் வசதி மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் வருவதற்கு லட்சுமிபுரம், முண்டியம்பாக்கம் அல்லது நரசிங்கனூர், புதுப்பாளையம், விக்கிரவாண்டி, வழியாக வருவதற்கு பஸ் வசதிசெய்து தர வேண்டும்.

    முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அகற்றப்படும் மருத்துவ கழிவுகள் மலை போல் குவிந்து பல்வேறு நோய்கள் பரப்பும் விதமாக உள்ளது. இந்த மருத்துவக் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    செஞ்சி பகுதியில் இருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரத்தூர் முண்டியம்பாக்கம் வழியாக வரும் பொழுது முண்டியம்பாக்கம் ரெயில்வே கேட் அடிக்கடி மூடுவதால் ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர் ஆகவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.

    சமீபத்தில் விக்கிரவாண்டி பேரூராட்சி காணை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் கடல் குடிநீர் ஆகும் திட்டம் மரக்காணம் பகுதியில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை இருப்பினும் மேற்கண்ட பகுதிகள் பயன்பெறு வகையில் கூட்டு குடிநீர் திட்டம் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் .

    தமிழகத்தின் தென்மாவட்டம் கன்னியாகுமரி முதல் தலைநகரான சென்னைக்கு விழுப்புரம் விக்கிரவாண்டி வழியாகத்தான் செல்ல வேண்டும். விக்கிரவாண்டியில் சென்னை செல்லும் அரசு பஸ்களும், சென்னையில் இருந்து திருச்சி வரைக்கும் செல்லும் அரசு பஸ்களும் புறவழிச் சாலையில் நின்று செல்வதில்லை.

    பயணிகள் விக்கிரவாண்டியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இறக்கிவிடப்படுகின்றனர். நிரந்தரமாக விக்கிரவாண்டி புறநகர் பஸ்கள் கட்டாயம் நின்று செல்லும் வசதி செய்து தர வேண்டும் மற்றும் விக்கிரவாண்டியில் உள்ளஅரசு பஸ் பணிமனை விரிவாக்கப்பட்ட அரசு பணிமனையாக அமைக்க வேண்டும்.

    விவசாயம் மற்றும் விவசாய நிலத்தடி நீர் மற்றும் உயரம் வகையில் பம்பை ஆறு மற்றும் வராக நதி ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்

    விக்கிரவாண்டி தாலுகா அன்னியூர் குறு வட்டத்தைச் சேர்ந்த நல பாளையம், கடையம், புது கருவாச்சி , பழைய கருவாச்சி,டி.என்.பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் விக்கிரவாண்டி தாலுகாவுக்கு வரவேண்டும் என்றால் கண்டாச்சிபுரம் வந்து கண்டாச்சி புரத்திலிருந்து விழுப்புரம் வந்து, பின்னர் விக்கிரவாண்டி வரவேண்டிய நிலை உள்ளது. சுமார் 40 கிலோ மீட்டர் 3 பஸ் மாறி வர வேண்டிய நிலை உள்ளது.

    தற்போது கண்டாச்சிபுரம் தாலுக்கா அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருவதால், இந்த தாலுக்காவை சேர்ந்த கிராமங்களை கண்டாச்சிபுரம் தாலுகாவில் இணைத்தால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தாலுக்கா சம்பந்தப்பட்ட பணிகள் மேற்கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் இப்பகுதி மக்கள் காணை ஒன்றியத்திற்கு செல்வதற்கு நேரடி பஸ் வசதியும் செய்து தர வேண்டும்.

    இது மட்டுமல்லாமல் தாலுக்கா கருவூலம், மாவட்ட நூலகம், உட்கோட்ட காவல்துறை, அரசு கலைக்கல்லூரி, தீயணைப்பு நிலையத்திற்கு தனி இட வசதி. அரசுதொழிற்கல்லூரி, கிராமங்களை இணைக்கும் கிராம சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இத்தொகுதி மக்களின் கனவு கோரிக்கைகளாகவே இருக்கிறது.

    • எடப்பாடி பழனிசாமியால் பா.ம.க.வுக்கு வைக்கப்பட்டுள்ள செக்.
    • தி.மு.க., பா.ம.க., தேர்தல் களத்தில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ள நிலையில் தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் இடையே அங்கு நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா களமிறங்கியுள்ள நிலையில் பா.ம.க. வேட்பாளராக வன்னியர் சங்க துணைத் தலைவரான சி.அன்புமணி நிறுத்தப்பட்டுள்ளார்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிட்ட போதிலும் தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் இடையே தான் அங்கு நேரடி மோதல் ஏற்பட்டு உள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்திருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் அ.தி.மு.க.வின் இந்த முடிவு தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் தேர்தல் களத்தில் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    விக்கிரவாண்டி தொகுதி பா.ம.க.வுக்கு மிகவும் சாதகமான தொகுதியாகவே பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 72 ஆயிரத்து 188 வாக்குகள் கிடைத்துள்ளன. இது 39.57 சதவீதமாகும்.

    அதேநேரத்தில் அ.தி.மு.க.வுக்கு 65 ஆயிரத்து 365 ஓட்டுகள் கிடைத்துள்ளன. இது 35.83 சதவீதமாகும். இந்த தொகுதியில் பா.ம.க.வுக்கு 32,198 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இது 17.54 சதவீதமாகும்.

    தி.மு.க. கூட்டணிக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 6823 வாக்குகளே வித்தியாசமாகும். இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டு இருந்தால் தி.மு.க.வுக்கு கடும்போட்டியை ஏற்படுத்தி இருக்க முடியும் என்கிற கருத்தும் உள்ளது.

    இந்த தொகுதியில் வன்னியர்கள் ஓட்டு அதிகமாக இருப்பதால் பா.ம.க.வும் அ.தி.மு.க.வும் இணைந்து தேர்தலை சந்தித்தால் தி.மு.க.வை தோற்கடித்திருக்க முடியும் என்றே கூறப்படுகிறது.

    2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு விக்கிரவாண்டி தொகுதியில் 93 ஆயிரத்து 670 வாக்குகள் கிடைத்தன.பா.ம.க. உடன் இணைந்து தேர்தலை சந்தித்த அ.தி.மு.க. 84 ஆயிரத்து 157 ஓட்டுகளை பெற்றது. இதன் மூலம் பா.ஜ.க., பா.ம.க. அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இணைந்து விக்கிரவாண்டி தொகுதி தேர்தலை சந்தித்திருந்தால் நிச்சயம் அது தி.மு.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி இருக்கும் என்பதும் கட்சி நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.

    2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் இந்த தொகுதியில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு 41,428 வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலி லும் அதிக வாக்குகளை பா.ம.க. பெற்றுவிட்டால் அ.தி.மு.க. வுக்கு 3-ம் இடம் தான் கிடைக்கும் என்று கருதியும் அ.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் இது எடப்பாடி பழனிசாமியால் பா.ம.க.வுக்கு வைக்கப்பட்டுள்ள செக் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். அ.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த வாக்குகள் யாருக்கும் செல்லாமல் தடுக்கப்படும் சூழலில் பா.ம.க. குறைவான வாக்குகளையே பெற முடியும் என்பதும் அ.தி.மு.க.வின் கணக்காக உள்ளது.

    பா.ம.க.வால் வன்னியர்கள் நிறைந்த தொகுதியில் தடம் பதிக்க முடியவில்லை என்கிற பிரசாரத்தை அ.தி.மு.க.வால் முன்வைக்க வசதியாக இருக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். இது வரும் காலங்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதாயத்தை தேடித்தரும் என்றும் அவர் நம்புகிறார்.

    இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பா.ம.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் தேர்தல் பணியாற்ற வேண்டிய நிலையும் அந்த கட்சிக்கு ஏற்பட்டு இருக்கிறது.

    அதேநேரத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. எப்போதும் இல்லாத வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. தி.மு.க. அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    2016-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற வேண்டும் என்கிற எண்ணத்தோடு தேர்தல் பணியாற்றி வருகிறது.

    இதனால் தி.மு.க.வுக்கும் பா.ம.க. வுக்கும் தேர்தல் களத்தில் கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் எப்போதுமே ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியிலும் அது நீடிக்குமா? இல்லை பா.ம.க. அதிரடி மாற்றத்தை ஏற்ப டுத்துமா? என்பதே இப்போது பலத்த கேள்வியாக எழுந்துள்ளது.

    பா.ம.க.வுக்கு நிகராக தி.மு.க. வினரும் வன்னியர் வாக்குகளை பிரிப்பதால் சாதி ரீதியிலான வாக்குகள் சிதறி அங்கு கடும் பலப்பரீட்சை நடத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    • விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் ஒரு விரல் உருவம் பொருத்திய செல்பி பாயிண்ட் வைக்கப்பட்டடுள்ளது.
    • கிராம நிர்வாக அலுவலர்கள் அண்ணாமலை, சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜீலை 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் ஒரு விரல் உருவம் பொருத்திய செல்பி பாயிண்ட் வைக்கப்பட்டடுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று மதியம் நடைபெற்றது.

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி கலந்து கொண்டு விழிப்புணர்வு செல்பி பாயிண்ட்டில் உள்ள ஏறி நின்று ஒரு விரல் உயர்த்தி செல்பி எடுத்துக்கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    இதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், தனி தாசில்தார் ஜெயலட்சுமி, விக்கிரவாண்டி தாசில்தார் யுவராஜ், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், கிராம நிர்வாக அலுவலர்கள் அண்ணாமலை, சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • இடைத்தேர்தலில் மக்கள் தி.மு.க.வுக்கு தான் ஓட்டு போடுவார்கள்.
    • சமூக நீதி பற்றி பேசும் ராமதாஸ், அதைப்பற்றி மோடியிடம் தான் பேச வேண்டும்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் காணை அடுத்த கொசப்பாளையத்தில் நடந்தது. தேர்தல் பணிக்குழு தலைவரும் அமைச்சருமான பொன்முடி தலைமை தாங்கி வேட்பாளர் அன்னியூர் சிவாவை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

    இந்த இடைத்தேர்தலில் மக்கள் தி.மு.க.வுக்கு தான் ஓட்டு போடுவார்கள். காரணம் மகளிர் உரிமைத் தொகை, புதுமை பெண், இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு அரசின் திட்டங்களில் பயனடைந்துள்ளனர்.

    இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது. அவர்களை பற்றி நமக்கு கவலையில்லை. அ.திமு.க.வினர் ஓட்டுகள் அனைத்தும் நிச்சயமாக இம்முறை தி.மு.க.,விற்கு தான் வரும்.

    சமூக நீதி பற்றி பேசும் பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ், இத்தேர்தலில் பா.ஜ.க, வுடன் கூட்டணி வைத்துள்ளார். ஜாதி வாரி கணக்கு எடுப்பு பற்றி பேசும் ராமதாஸ், அதை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என்பது தெரிந்தும், தெரியாத மாதிரி நடிக்கிறார்.

    சமூக நீதி பற்றி பேச தி.மு.க.,விற்கு தான் தகுதி உண்டு, காரணம் ஜாதி, மதம் பார்த்து தி.மு.க., எதையும் செய்வதில்லை. சமூக நீதி பற்றி பேசும் ராமதாஸ், அதைப்பற்றி மோடியிடம் தான் பேச வேண்டும்.

    தி.மு.க., மாதிரி தோழமை கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுகிற கட்சிகள் ஏதுவும் கிடையாது. சமூக நீதிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதால் தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராக வாய்ப்பளித்தார்.

    இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.

    • பா.ஜனதாவுடன் மறைமுக உறவுக்கு அடித்தளம் அமைக்க பார்க்கிறார்.
    • 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொடுத்ததே எங்கள் தலைவர்தான்.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில்தான் எந்த கலவரமும் இல்லாமல் வாக்குப்பதிவு நடந்தது.

    ஜனநாயகத்தை காப்பாற்றியது தமிழ்நாடு என்று சொல்லத்தக்க அளவில் தேர்தல் நடந்தது.

    ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் போக வேண்டும் என்பதற்கு ப.சிதம்பரம் குறிப்பிட்டது போல, ஒரு நொண்டி சாக்கை கூறி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறுகிறது.

    ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பல இடங்களில் டெபாசிட் போய்விட்டது. இந்த தேர்தலிலும் டெபாசிட் போனால் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் சிக்கலாகி விடும்.

    சசிகலா அ.தி.மு.க.வினரை ஒன்று சேர்க்க போவதாக கூறுகிறார். இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு உங்கள் மூலமாக நான் சவால் விடுகிறேன். விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிப்புதாக கூறுகிறீர்களே? அப்படி புறக்கணிக்கிறது என்றால் அக்கட்சியில் உள்ள யாரும் ஓட்டு போடக்கூடாது. அதை அவரால் சொல்ல முடியுமா? நாங்களும் ஒரு கணக்கு எடுக்க போகிறோம்.

    தேர்தலில் அன்றைய தினம் யார்-யார் ஓட்டு போடுகிறார்கள் என்பது ஏஜெண்டுக்கு தெரியும். அ.தி.மு.க.வில் உள்ள ஒன்றிய செயலாளர்கள் கிளை கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் இவர்கள் அனைவரும் ஓட்டு போட்டார்களா? என்று கணக்கெடுப்போம்.

    அப்படி அவர்கள் ஓட்டு போட்டிருந்தால் அவர்கள் எல்லோரும் எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்து விட்டதாக அர்த்தம்.

    எடப்பாடி பழனிசாமி தேர்தலை புறக்கணியுங்கள் என்று கட்சிக்கு சொல்லி விட்டு அதையும் மீறி கட்சிக்காரர்கள் ஓட்டு போட்டால் என்ன செய்வீர்கள்? உங்களை கட்சியை விட்டு நீக்கி விடுவேன். நடவடிக்கை எடுப்பேன் என சொல்ல எடப்பாடி பழனிசாமி தயாரா? ஆனால் அவர் அப்படி சொல்ல மாட்டார்.

    ஏதோ அவர் பா.ஜனதாவுடன் மறைமுக உறவுக்கு அடித்தளம் அமைக்க பார்க்கிறார். ஆனால் எதையும் சந்திக்கிற ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது.

    காரணம் வன்னிய பெருமக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைவர் கலைஞர் செய்தது போல வேறு யாரும் செய்யவில்லை என்பது அவர்களுக்கு தெரியும். 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொடுத்ததே எங்கள் தலைவர்தான். இதன் மூலம் எத்தனை பேர் டாக்டர் ஆனார்கள். என்ஜினீயர்கள் ஆனார்கள்.

    குரூப்-1 தேர்வு எழுதி பணியாற்றி அதன்பிறகு ஐ.ஏ.எஸ். ஆனார்கள். இதையெல்லாம் அங்குள்ள மக்கள் மறந்திடுவார்களா என்ன?

    ஒன்றை மட்டும் சொல்கிறேன். இந்த தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கி வரும் நிகழ்வு தாய்மார்கள் எப்படி நன்றி உணர்வோடு வாக்களித்து வெற்றிபெற செய்தார்களோ அதேபோல் வன்னிய பெருமக்கள் இந்த ஆட்சியின் மூலமாக 20 சதவீதத்தால்தான் இவ்வளவு பெரிய வளர்ச்சி பெற்றோம் என்பதை உணர்ந்து ஆயிரம் ராமதாஸ் சொன்னாலும், மனசாட்சி உள்ளவர்கள், நல்லவர்கள், இதயம் படைத்த வன்னியர்கள் அத்தனை பேரும் தி.மு.க. கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள்.

    எங்களுக்கு விக்கிரவாண்டியில் அடித்தளம் நன்றாக உள்ளது. நிர்வாகிகள் எழுச்சியோடு உள்ளனர். கூட்டணியும் ஒன்றாக உள்ளது. போன தேர்தலில் ஒரு சின்னத்தில் ஓட்டு கேட்டு விட்டு இந்த இடைத்தேர்தலில் இன்னொரு சின்னத்தில் ஓட்டு கேட்டால் அவர்களை மதிப்பார்களா? எங்களுக்கு அப்படி இல்லை.

    தி.மு.க. 2019-ல் இருந்து ஒரே அணியில் ஓட்டு கேட்கிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியதே அ.தி.மு.க.தான். ஆனால் இப்போது அவர்கள் தேர்தல் நேர்மையாக நடைபெறாது. அதனால் புறக்கணிப்பதாக கூறுவதற்கு தோல்வி பயம் மட்டுமின்றி வேறு காரணமும் உள்ளது.

    இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    • ஓட்டுகள் பா.ம.க. வேட்பாளருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
    • தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி (தி.மு.க.) மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. பா.ம.க. மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா நிற்கிறார்.

    இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்.

    ஆளும் தி.மு.க. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் என்பதால் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்று விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

    அ.தி.மு.க.வை தொடர்ந்து அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், `ஆட்சியாளர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகிறது. தொண்டர்களின் உைழப்பு, நேரம், பணம் என அனைத்தையும் விரயம் செய்ய விரும்பவில்லை.

    எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தே.மு.தி.க. புறக்கணிக்கிறது என்று கூறிவிட்டார். விக்கிர வாண்டி இடைத் தேர்தலை பிரதான எதிர்க் கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்து உள்ளதால் பா.ம.க. தலை வர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். காரணம் அ.தி.மு.க. ஓட்டுகள் இம்முறை பா.ம.க.வுக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிககையில் உள்ளனர்.

    இந்த தொகுதியை பொறுத்தவரையில், தி.மு.க. அ.தி.மு.க. சம பலத்துடன் உள்ளன. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் தி.மு.க. ஆதரவுடன் 39.57 சதவீத ஓட்டுக்களை பெற்றது. அ.தி.மு.க. 35.83 சதவீதம், பா.ம.க. 17.64 சதவீதம், நாம் தமிழர் கட்சி 4.57 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.

    அதாவது பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட 3.7 சதவீதம் மட்டுமே அ.தி.மு.க. குறைவாக பெற்றுள்ளது.

    எனவே இப்போது இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ள நிலையில் அக்கட்சியின் ஓட்டுகள் பா.ம.க. வேட்பாளருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    1996க்கு பிறகு தமிழ கத்தில் பெரும்பாலான இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெறுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க., தே.மு.தி.க. வாக்குகள் ஒட்டு மொத்தமாக பா.ம.க. வேட்பாளருக்கு சென்றால் அது தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பேசப்படுகிறது.

    பா.ம.க. வேட்பாளரை ஆதரிப்பதற்காகவே அ.தி.மு.க., தே.மு.தி.க. மறைமுக மாக தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளதாக தி.மு.க. வினர் கூறி வருகின்றனர். அ.தி.மு.க., தே.மு.தி.க. ஓட்டுகள் அவ்வாறு ஒருசேர பா.ம.க.வுக்கு செல்லாமல் தடுப்பதற்கு இப்போதே தி.மு.க. தேர்தல் வியூகம் வகுக்க தொடங்கி உள்ளது.

    அங்கு தேர்தல் பணி யாற்றுவதற்காக ஒன்றியம் வாயிலாக 9 அமைச்சர்களை தேர்தல் பொறுப்பாளர் களாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார்.

    ஒவ்வொரு அமைச்ச ருக்கும் 20 ஆயிரம் ஓட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அங்கு வீடு எடுத்து தங்கி ஊழியர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு தெருவிலும் உள்ள ஓட்டுக்களை கவனித்து யார்-யாரை நியமிக்க வேண்டும் என்ற பட்டியலும் தயார் செய்து வைத்துள்ளனர்.

    இடைத் தேர்தலில் போட்டியிடாமல் அ.தி.மு.க. ஒதுங்கியதற்கு பா.ஜனதா வுடன் இருக்கும் மறைமுக உறவு தான் காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்து உள்ள நிலையில் தி.மு.க. இந்த தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது.

    ஏனென்றால் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இடையிலான ஓட்டு வித்தியாசம் மிக குறைவாகவே உள்ளது. தி.மு.க. (வி.சி.க.) 72,188 ஓட்டுகளும், அ.தி.மு.க. 65,365 ஓட்டுகளும் பா.ஜனதா 32,198 ஓட்டுகளும் பெற்றுள்ளன.

    4 முனை போட்டி நிலவினால் ஓட்டுகள் பிரிந்து எளிதில் தி.மு.க. வெற்றி பெற்று விடும் என்று கருதப்பட்ட நிலையில் இப்போது தி.மு.க., பா.ம.க. நாம் தமிழர் கட்சி இடையே மும்முனைப் போட்டி தான் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் அ.தி.மு.க., தே.மு.தி.க. ஓட்டுகள் பா.ம.க.வுக்கு தான் செல்லும் என்று பலரும் கணித்து வருகின்றனர். இதெல்லாம் மறைமுக காரணமாக இருக்கும் என்று அ.தி.மு.க. தொண்டர்களும் பேசி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு தனி செல்வாக்கு உண்டு. அப்படிப்பட்ட நிலையில் அவரே தேர்தலை சந்திக்காமல் புறக்கணிக்கும் ஆலோசனையை கட்சி மேலிடத்திற்கு வழங்கி இருக்கிறார் என்றால் இதில் ஏதோ உள்குத்து இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதன் காரணமாக தி.மு.க. இந்த தேர்தலில் தான் தன் செல்வாக்கை நிலைநிறுத்த கடுமையாக போராட வேண்டி இருக்கும். இதற்காக 9 அமைச்சர்கள் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் இருந்து தி.மு.க.வினர் தேர்தல் பணியாற்ற விக்கிரவாண்டிக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

    • தொண்டர்களிடையே விவாதம் நடக்கிறது.
    • இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது எளிதானதல்ல.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்த இந்த முடிவு சரியா? தவறா? கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதுதானா? என்று தொண்டர்களிடையே விவாதம் நடக்கிறது.

    ஏற்கனவே பாராளு மன்றத் தேர்தலில் படு தோல்வியை சந்தித்து இருக்கும் இந்த நேரத்தில் இந்த தேர்தல் புறக்கணிப்பு தொண்டர்களை சோர்வடையச் செய்யும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

    கடந்த காலங்களில் சட்டமன்ற, உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை தி.மு.க.வும் புறக்கணித்த வரலாறு இருக்கிறது. எனவே இது ஒரு பிரச்சினையாக இருக்காது. எல்லாவற்றையும் வெற்றிகரமாக சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்கிறார்கள் அதி.மு.க.வினர்.

    பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறும் போது, `ஆளுங்கட்சியின் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகத்தை பார்த்து ஒரு கட்சி இவ்வாறு முடிவெடுப்பது சரியாக இருக்காது.

    இப்போது போட்டிக் களத்தில் இருந்து அ.தி.மு.க. விலகி இருப்பதன் மூலம் பா.ஜ.க. மேலும் வளர வழிபிறக்கும். அதேநேரம் சமீபகாலமாக பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வரும் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு விவாதத்துக்குள்ளாகும்.

    தற்போதைய நிலையில் அ.தி.மு.க. கட்சிக்கு உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் தாக்கப்படுகிறது. கட்சிக்குள்ளும் ஒருங்கிணைப்பு இல்லை என்பதையே காட்டுகிறது.

    அதனால்தான் புறக்கணிப்பு முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்திருப்பார் என்று கூறுகிறார்கள்.

    இதற்கிடையில் தேர்தலை புறக்கணித்தது தவறு என்றும் கட்சியை ஒருங்கிணைக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போவதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

    இதை அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கடுமையாக விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு சரியானது என்பது தொண்டர்களுக்கு புரியும். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது எளிதானதல்ல. தேவையில்லாமல் தொண்டர்களின் உழைப்பையும் பொருளையும் வீணடிக்க அவர் விரும்பவில்லை.

    அம்மா காலத்திலும் தேர்தல் புறக்கணிப்பு நடந்துள்ளது. 2009-ல் 5 தேர்தல்களை அவர் புறக்கணித்தார். எனவே இதனால் கட்சி பலவீனமாகி விடும் என்ற வாதம் சரியானதல்ல.

    சசிகலாவும் பேசி பேசி பார்க்கிறார். ஆனால் யாரும் அவர் பக்கம் போகவில்லை. எனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் அ.தி.மு.க.வுக்கு தலைமை வகிப்பது எடப்பாடி பழனிசாமிதான் என்பதை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றார்.

    எழுத்தாளர் துரைகருணா கூறும்போது, ஆளுங்கட்சியின் அதிகார அத்துமீறல்கள் இருந்தாலும் அதை எதிர்த்து நின்று ஆளும் கட்சிக்கு எதிராக இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை தேர்தல் மூலம் வெளிப்படுத்தினால் தான் கட்சி வலுப்பெறும். மக்கள் நம்பிக்கையை பெறும் என்றார்.

    அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சமரசம் இந்த கருத்துக்களை மறுத்தார். எடப்பாடி பழனிசாமி எடுத்திருப்பது சரியான முடிவுதான். அ.தி.மு.க.வின் இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தல்தான். இடைத்தேர்தல் அல்ல.

    திருமங்கலம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்கள் எப்படி நடந்தது என்பது தொண்டர்களுக்கு தெரியும். எனவே தேவையற்ற சிரமத்தை தொண்டர்களும் விரும்பமாட்டார்கள் என்றார்.

    மேலும் சில கட்சி நிர்வாகிகள் கூறும்போது, `ஒரு தொகுதி இடைத்தேர்தலை வைத்து கட்சி பலவீனமாகிவிடும் எனறு கணிக்க முடியாது. தொண்டர்களை பொறுத்தவரை கட்சி தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதை ஆதரிப்பார்கள்.

    முக்கியமாக தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வால்தான் முடியும் என்பது கட்சியினரையும் தாண்டி பொதுமக்களுக்கும் தெரியும். எனவே செல்வாக்கு எந்த வகையிலும் குறையாது' என்றனர்.

    • தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.
    • பொருட்களை சீலிட்டு விழுப்புரம் துணை கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம்(ஜூலை) 10-ந் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அத்தொகுதியில் அமல்படுத்தப்பட்டன.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரகுராமன் தலைமையில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் கப்பியாம்புலியூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் .

    அப்போது சென்னையிலிருந்து நெய்வேலிக்கு சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி 160 சில்வர் டிபன் பாக்ஸ், 48 பிளாஸ்க் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் காரில் வந்தவர் நெய்வேலியை சேர்ந்த செந்தில்குமார் என்பதும் , பணி ஓய்வு பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு பரிசு பொருட்களை கொண்டு செல்வதும் தெரிய வந்தது.

    எனினும் அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அந்த பரிசு பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விக்கிரவாண்டி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் யுவராஜிடம் ஒப்படைத்தனர். பின்னர் அலுவலக அதிகாரிகள் அந்த பொருட்களை சீலிட்டு விழுப்புரம் துணை கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.

    • பறக்கும் படையினர் நடத்தி வரும் வாகன சோதனையைகலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 10-ந் தேதி நடக்கிறது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர், "நேர்மையுடனும், பாரபட்சமின்றியும் வாகன சோதனை நடத்துங்கள்" என்று தேர்தல் பறக்கும் படைக்கு உத்தரவிட்டார்.

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும், தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையையும் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பழனி ஆய்வு செய்தார். அந்த வகையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் பறக்கும் படையினர் நடத்தி வரும் வாகன சோதனையைகலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வாகன சோதனையின்போது நேர்மையுடனும், கணிவுடனும் நடந்து கொள்ள வேண்டும், அதேநேரத்தில் எந்தவித பாரபட்சமும் பாராமல் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளும்படியும், உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் பறக்கும் படையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    ×