search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்காயம்"

    • சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலையில் கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை உயர்ந்துள்ளது.
    • கோயம்பேடு சந்தைக்கு வெங்காய வரத்து கடந்த ஒரு மாதமாக குறைந்துள்ளது.

    சென்னை:

    நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சத்திற்கு சென்ற தக்காளி விலை உயர்வு பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளிலும் எதிரொலித்தது. இதனை தொடர்ந்து தக்காளியின் விலை படிப்படியாக வீழ்ச்சி அடைந்தது. தற்போது மத்திய, மாநில அரசுகளின் கவனம் விலை உயர்ந்த வெங்காயத்தின் பக்கம் திரும்பி உள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வருவதுடன், வடமாநிலங்களில் உள்ள ஒரு சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் நடக்க இருப்பதால், வெங்காயத்தின் விலை உயர்வு மத்திய, மாநில அரசுகளை மட்டும் அல்லாது இல்லத்தரசிகளையும் கவலைக்குள்ளாக்கி வருகிறது.

    வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவதற்காக வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு வரி விதித்திருப்பது மட்டுமல்லாது, தனது சேமிப்பில் உள்ள வெங்காயத்தை மொத்தச் சந்தையில் விடுவித்து சில்லறை விலையைக் குறைக்கும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் தாராளமாகக் கிடைப்பதை உறுதிப்படுத்தும் முயற்சியிலும் மத்திய, மாநில அரசுகள் இறங்கி உள்ளது.

    நாட்டிலேயே மிகப்பெரிய வெங்காய மொத்த விலை சந்தையான மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.42 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலையில் கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை உயர்ந்துள்ளது. வெளிசந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. அதேபோல் சின்ன வெங்காயமும் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் பண்டிகை காலத்தில் இதுபோன்று விலை உயர்ந்து, தேவையான அளவு வெங்காயத்தை வாங்க முடியாததால் இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கோயம்பேட்டில் உள்ள வெங்காயம் விற்பனையாளர்கள் கூறும்போது, 'கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மராட்டியம் மாநிலங்களில் இருந்தும் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. நாளொன்றுக்கு 7 ஆயிரம் டன் வெங்காய வரத்து இருந்து வந்ததால் விலையும் சீராக இருந்தது. தற்போது திடீரென வெங்காய வரத்து குறைந்துவிட்டது. இதனால் வெங்காய விலை கிடுகிடுவென உயரத் தொடங்கிவிட்டது.

    நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை மகாராஷ்டிர மாநிலத்தில் முறையாக பெய்யாததால், காரிப் பருவத்தில் (ஜூலை - ஆகஸ்டு) வெங்காயம் நடவு நடைபெறவில்லை. அதனால் அக்டோபர் மாதம் வெங்காய அறுவடை நடைபெறாததால், கோயம்பேடு சந்தைக்கு வெங்காய வரத்து கடந்த ஒரு மாதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, இருப்பில் வைத்துள்ள வெங்காயத்தை விடுவித்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அடுத்த சில தினங்களில் வெங்காயம் வரத்து அதிகரித்து விலை குறையும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

    • விளைச்சல் குறைவின் காரணமாக பல்லாரி, சின்னவெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • பல்லாரியின் விலை ஒரு கிலோ ரூ.35 லிருந்து 65 ஆக உயர்ந்துள்ளது.

    தென்காசி:

    பாவூர்சத்தி ரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் பல்வேறு காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விளைச்சல் குறைவின் காரணமாக பல்லாரி, சின்னவெங்காயம் மற்றும் மாங்காய் உள்ளிட்டவையின் விலையானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    ரூ.60-க்கு ஒரு கிலோ சின்னவெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.80 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தென்காசி மாவட்டத்தில் இலத்தூர் பகுதிகளில் இருந்து வரும் சின்ன வெங்காயமே அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ள னர்.

    மேலும் பல்லாரி விளைச்சலானது தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 15 சதவீதம் மட்டுமே இருந்ததாகவும், அண்டை மாநிலமான கர்நாடகா விலும் 40 சதவீத விளைச்சல் இருந்ததால் அனைத்து விவசாயிகளும் மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள சந்தையில் இருந்து கொள்முதல் செய்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனால் பல்லாரியின் விலையும் ஒரு கிலோ ரூ.35 லிருந்து 65 ஆக உயர்ந்துள்ளது.

    அதேபோன்று மாங்காயின் விளைச்சல் மற்றும் வரத்து குறைவின் காரணமாக ஒரு கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.78 ஆக உயர்ந்துள்ளது.

    வாழை இலை கட்டுகளின் விலையும் ரூ.400 லிருந்து 750 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றமானது தொடர்ந்து இன்னும் ஒரு வாரம் நீடிக்க வாய்ப்புள்ளது எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • விரதம் இருந்தும் வழிபாட்டில் ஈடுபடுவார்கள்.
    • பூண்டு, வெங்காயத்தையும் ஒதுக்கி வைப்பதுண்டு.

    நாடு முழுவதும் கொண்டாடப்டும் பண்டிகைகளுள் ஒன்று நவராத்திரி. பலரும் வீட்டில் கொலு வைத்து வழிபாடு நடத்துவார்கள். விரதம் இருந்தும் வழிபாட்டில் ஈடுபடுவார்கள். அதற்கு ஏற்ப உணவுக்கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பார்கள். சில உணவுப்பொருட்களை அறவே தவிர்ப்பார்கள். பெரும்பாலும் அசைவத்தை தவிர்க்கும் நிலையில் பூண்டு, வெங்காயத்தையும் ஒதுக்கி வைப்பதுண்டு.

    நவராத்திரியின் போது பூண்டு, வெங்காயத்தை தவிர்ப்பதற்கு காரணங்களும் இருக்கின்றன. இந்து மதத்தில் உணவுப்பொருட்கள் ராஜசம், தமாசம், சாத்வீகம் என மூன்று விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் சாத்வீக உணவுகள் ஆன்மிக உணர்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

    பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், நட்ஸ் வகைகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், இறைச்சி அல்லாத புரத உணவுகள் சாத்வீக உணவுகளாக குறிப்பிடப்படுகின்றன. இவற்றை சாப்பிடுவதன் மூலம் மனதை அடக்க முடியும். சகிப்பு தன்மை, கருணை, மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் இயல்பாகவே வெளிப்படவும் செய்யும். உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியையும் அளிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை விரைவாக நீக்கும்.

    விரதத்தின்போது சாத்வீக உணவுகளை உட்கொண்டால் எளிதில் ஜீரணமாகும். அதனால் சாப்பிட்ட உணவுகள் செரிமானமாவதற்கு குறைந்த நேரமே செலவாகும். அதனால் குடல் இயக்கங்களுக்கு ஓய்வு கிடைக்கும். உடலும் சோர்வின்றி இருக்கும். மேலும் சாத்வீக உணவு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும். மன நலனையும் மேம்படுத்தும். அதனால்தான் நவராத்திரியின்போது சாத்வீக உணவுகளை சாப்பிடுவதற்கு பரிந்துரைக்கிறார்கள்.

    ஆயுர்வேதத்தின்படி வெங்காயம், பூண்டு இவை இரண்டும் தாமசம் வகை உணவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகை உணவுகள் மனம், ஆன்மாவிற்கு இடையூறு ஏற்படுத்ததக்கூடியவையாக குறிப்பிடப்படுகின்றன. உணர்ச்சிகள், ஆசைகளை தூண்டுவது, பேராசை கொள்ள வைப்பது, மந்தநிலை, மனச்சோர்வு அடைவது போன்ற குணங்களை தூண்டக்கூடியவையாக கருதப்படுகின்றன.

    வெங்காயத்தை பொறுத்தவரை உடல் உஷ்ணத்தையும் ஏற்படுத்தக் கூடியது. பூண்டு உணர்ச்சிகளை, ஆசைகளை கட்டுப்படுத்தும் விஷயத்தில் எதிர்மறையாக செயல்படக்கூடியது. அதனால் நவராத்திரி விரதத்தின்போது அவைகளை உட்கொள்வது நல்லதல்ல என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

    • கடந்த சில நாட்களுக்கு முன் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.40 ஆக இருந்தது.
    • கோவை மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக வந்திருந்த இல்லத்தரசிகள் மிகுந்த கவலைக்கு ஆளாகி உள்ளனர்.

    கோவை,

    கோவையின் புறநகர் பகுதிகளில் தக்காளி, வெண்டை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்பட்டு உள்ளன. அவற்றை வியாபாரிகள் சந்தைக்கு கொண்டுவந்து ஏலமுறையில் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் வெளி மாவட்டம்-மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    கோவை தியாகி குமரன் காய்-கனி சந்தையில் தற்போது காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளன. குறிப்பாக சின்ன வெங்காயத்தின் விலை 2 மடங்கு உயர்ந்து உள்ளது.

    இங்கு கடந்த சில நாட்களுக்கு சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.40 ஆக இருந்தது. அது தற்போது கிலோவுக்கு ரூ.80 ஆக அதிகரித்து உள்ளது. தரத்துக்கு ஏற்ப விலையும் மாறுபடுகிறது. இதனால் சில்லரை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 வரை விற்பனையாகிறது.மேலும் காய்கறிகளின் விலையும் கணிசமான அளவுக்கு உயர்ந்து உள்ளது. இதனால் கோவை மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக வந்திருந்த இல்லத்தரசிகள் மிகுந்த கவலைக்கு ஆளாகி உள்ளனர்.

    கோவை தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை கிலோவுக்கு வருமாறு (அடைப்புக்குறிக்குள் பழைய விலை): தக்காளி- ரூ.15 (10), வெண்டை-ரூ.40 (30), கத்தரிக்காய்-ரூ.30, முருங்கைக்காய்-ரூ.90 (60), சின்னவெங்காயம்-ரூ.80 (40), பெரிய வெங்காயம்-ரூ.30, உருளைகிழங்கு-ரூ.25, சேனை-ரூ.60, சிறுகி ழங்கு-ரூ.80, இஞ்சி-ரூ.100, சேம்பு-ரூ.70, காளிபிளவர்-ரூ.35 (30), பீன்ஸ்-ரூ.60 (80), எலுமிச்சை-ரூ.80 (100), புடலை-ரூ.30 (40), பீர்க்கங்காய்-ரூ.40 (50), சீனிஅவரை-ரூ.30, அவரை-ரூ.40, பூசணி-ரூ.15.

    • 2014-ம் ஆண்டு 8.4 கிலோவில் பெரிய வெங்காயம் வளர்க்கப்பட்டதே சாதனையாக இருந்தது.
    • சாதனை முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் கிரிபின் தோட்டத்தில் வளர்ந்த வெங்காயத்துடன் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்படுகிறது. இதில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன.

    அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்த தோட்ட விவசாயி கரேத் கிரிபின் என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த பிரமாண்டமான வெங்காயத்தை கொண்டு வந்து காட்சிபடுத்தினார். அந்த வெங்காயம் 8.97 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்த வெங்காயம் உலகிலேயே பெரிய வெங்காயம் என்று உலக சாதனை படைத்துள்ளது.

    இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு 8.4 கிலோவில் பெரிய வெங்காயம் வளர்க்கப்பட்டதே சாதனையாக இருந்தது. அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் கிரிபின் தோட்டத்தில் வளர்ந்த வெங்காயத்துடன் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    இதனை பார்த்த பயனர்கள் சிலர், இவ்வளவு பெரிய வெங்காயத்தை எப்படி வளர்க்க முடிந்தது? என கேட்டு வருகின்றனர்.

    • வெங்காயம் மீதான ஏற்றுமதி வரி 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • ஏற்றுமதி வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த சில வாரங்களாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்து வந்தது. வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பண்டிகை காலம் என்பதால் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது

    இந்நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

    உள்நாட்டில் வெங்காய விநியோகத்தை மேம்படுத்துவதற்காகவும் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெங்காயம் மீதான இந்த ஏற்றுமதி வரி விதிப்பு வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

    • விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை வெங்காயம் வழங்கப்பட உள்ளது
    • வேளாண் விற்பனை வணிகத்துறை இயக்குநர் ச. நடராஜன் தகவல்

    குன்னம்,

    வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் ச. நடராஜன் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் உள்ள வெங்காயம் வணிக வளாகத்தில் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் முடிவில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் ச. நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;தமிழக முதலமைச்சர் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக ஆக்க வேண்டும் எனும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதைத் தொடர்ந்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரின் உத்தரவின்படி செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தை பார்வையிட வந்திருக்கிறேன்.சின்ன வெங்காயத்தை மதிப்பு கூட்டுதல், பேக்கேஜ் செய்தல், அதை பத்திரமாக ஏற்றுமதி செய்தல் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். உள் நாட்டிலும் வெங்காயத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் வணிகர்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம். இங்குள்ள வணிக வளாகத்தில் தினந்தோறும் வெங்காயம் ஏலம் நடைபெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். குளிர் பதன கிடங்கில் வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளை நீண்ட நாட்கள் இருப்பு வைப்பதில் சிக்கல் உள்ளது. வெங்காயத்தை குளிர் பதன கிடங்கில் நவீன தொழில்நுட்பம் மூலம் இருப்பு வைக்க முடியுமா என ஆலோசித்து வருகிறோம். சின்ன வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்பது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. அது குறித்து அரசுதான் முடிவு செய்ய முடியும்.விவசாயிகளுக்கு விதை வெங்காயம் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தெரிவித்தார். அப்போது வேளாண்மை இணை இயக்குநர் முரளிதரன், வேளாண்மை துணை இயக்குனர் கண்ணன், விற்பனை குழு செயலாளர் சரசு, திருச்சி வேளாண் விற்பனை வாரிய பொறியாளர் சக்திவேல் மற்றும் வேளாண்மை விற்பனை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • ஏக்கருக்கு 700 கிலோ வரை விதை போட்டால், 8 ஆயிரம் கிலோ விளைச்சல் கிடைக்கும்.
    • தொடர் நஷ்டத்தை சந்திக்க விரும்பாத பெரும் பாலான விவசாயிகள் வாழை, பாக்கு என பயிர் சாகுபடியை மாற்றினர்.

    கோவை,

    தமிழகத்தில் அன்றாட சமையலில் சின்ன வெங்காயத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

    இதற்கு உணவில் சுவை சேர்க்கும் மகத்துவம் உண்டு. அதுவும் தவிர உடலுக்கு குளிர்ச்சி தரும். எனவே பொதுமக்கள் உணவில் அதிகமாக சேர்த்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், வேடப்பட்டி, மாதம்பட்டி, ஜாகீர்நாயக்கன்பாளையம், தாளியூர், தீத்திப்பாளையம், தென்கரை, ஆலாந்துறை, மத்வராயபுரம், தென்னமநல்லூர், கலிக்கநாயக்கன்பட்டி, தேவராயபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி நடைபெற்று வந்தது.

    இது மிதமான தட்பவெப்பநிலை நிலவும் பகுதிகளில் செழிப்பாக வளரும் 70 நாள் பயிர். ஆண்டுக்கு 2 முறை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு 4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

    ஏக்கருக்கு 700 கிலோ வரை விதை போட்டால், 8 ஆயிரம் கிலோ விளைச்சல் கிடைக்கும். ஆனால் கடந்த ஆண்டில் வெங்காயம் சாகுபடி செய்த பெரும்பாலான விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வில்லை.மேலும் தொடர் மழையால் வெங்காய்தை அறுவடை செய்வதிலும், அதனை பாதுகாப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. கடந்த முறை கிலோ ரூ.35 வரை வியாபாரிகளால் சின்ன வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது.

    இதன் காரணமாக தற்போது சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய பெரும்பாலான விவசாயிகள் தயக்கம் காட்டி உள்ளனர். தொடர் நஷ்டத்தை சந்திக்க விரும்பாத பெரும் பாலான விவசாயிகள் வாழை, பாக்கு என பயிர் சாகுபடியை மாற்றினர்.

    இதன் காரணமாக நடப்பாண்டில் 40 சதவீத விவசாயிகள் மீண்டும் சின்ன வெங்காயம் பயிர் செய்வதை தவிர்த்து உள்ளனர். இதனால் அதன் தட்டுப்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வரும் சின்ன வெங்காயம் வரத்தும் குறைய தொடங்கி யுள்ளது. முன்பெல்லாம் அதனை உரித்தால் தான் கண்ணீர் வரும் என்பார்கள். ஆனால் தற்போது அதன் விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை உள்ளது.

    அந்தளவிற்கு அதன் விலையானது உச்சத்ததை எட்டி உள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.180க்கு மேல் விற்பனை யாகி வருகிறது. இதனால் சமையலில் சின்ன வெங்கா யத்தை பயன்படுத்துவதும் குறைந்து வருகிறது.

    தற்போது ஜூன் மாத தொடக்கத்தில் ஒரு சில விவசாயிகள் மீண்டும் சின்ன வெங்காய சாகு படியை தொடங்கினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி பருவமழை தொடங்கவில்லை.

    கடந்த ஆண்டு ஒரு கிலோ விதை வெங்காயம் ரூ.15 முதல் 20க்கு விற்பனை யானது. தற்போது அதன் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

    முன்பெல்லாம் சின்ன வெங்காயம் பயிரிட்டால் ஒரு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் மட்டுமே செலவாகும். ஆனால் தற்போது ரூ.1.5 லட்சம் வரை செலவாகிறது. அப்படியே செலவு செய்தாலும் தற்போது ஏக்கருக்கு 4 டன் வரை மட்டுமே மகசூல் கிடைத்து வருகிறது.

    மேலும் சின்ன வெங்காயத்தில் தற்போது நுனிக ருகல், பூஞ்சை தாக்குதல் அதிகளவில் உள்ளது. எனவே பயிர்களை காய்ப் பாற்ற 4 தடவைகள் கூடுதலாக மருந்து தெளிக்க வேண்டி உள்ளது.

    இதுகுறித்து கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    பருவமழையை நம்பி காத்திருந்ததால் சின்ன வெங்காயம் சாகுபடி தள்ளிபோனது. ஜூனில் கிலோ ரூ.65க்கு விற்ப னையான சின்ன வெங்காயம் தற்போது கிலோ ரூ.145க்கு விற்பனையாகிறது. கடந்தாண்டு அறுவடை நேரத்தில் பருவமழை தொடங்கியது.

    இதனால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த சின்ன வெங்காயத்தை அறு வடை செய்வதில், எங்களுக்கு பெருத்த சிரமநிலை ஏற்பட்டது. விளைச்சலும் போதிய அளவுக்கு இல்லை.

    இந்த ஆண்டு பருவமழை போதியளவு பெய்ய வில்லை. 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஊட்டியை போன்ற சீதோஷ்ண நிலை வேண்டும். தற்போது விவசாயிகளிடத்தில் சின்ன வெங்காயம் இருப்பு இல்லை.

    எனவே ஆகஸ்டு மாதம் வரைக்கும் வெங்காய தட்டுப்பாடு என்பது தொடரும். இதனால் விலையேற்றமும் நீடிக்கும்.

    வேளாண்துறை, வேளாண் விற்பனைத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகியவை ஒன்றிணைந்து மாநிலம் முழுவதும் விவசாயிகள் என்னென்ன பயிரிடுகின்றனர்.

    எவ்வளவு ஏக்கரில் பயிரிடுகின்றனர். மாநிலத்தின் தேவை எவ்வளவு, அறுவடை செய்தால் கிடைக்கும் மகசூலின் அளவு போதுமானதாக இருக்குமா, விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்குமா, நஷ்டம் ஏற்படுமா, இருப்பு வைத்து விற்றால் லாபம் கிடைக்குமா என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு அதனை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    மேலும் காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் உரிய விலை கிடைக்கும் பயிர்களை சாகுபடி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால் தடுப்பாடும் வராது. விலையும் உயராது.

    கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டுக்கு முன்பு வரை சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இங்கு 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மட்டுமே பயிரிடப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டை விட 10 ஏக்கர் சாகுபடி பரப்பு குறைந்து விட்டதால் தற்போது பயிரிட்டுள்ள வெங்காயத்தை ஆகஸ்டு மாத இறுதியில் மற்றும் செப்டம்பர் மாத துவக்கத்தில் தான் அறுவடை செய்ய முடியும்.

    அதுவரை தட்டுப்பாடு நிலையே நீடிக்கும். கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து வரும் வெங்காயமும் குறைந்து விட்டதால் தமிழகத்திற்கு வரும் அளவு படிப்படியாக குறைய தொடங்கும். இதனால் வெங்காயம் விலை தற்ச மயம் குறைய வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 50 முதல் 60 டன் சின்ன வெங்காயம் வந்த நிலையில் திடீரென வரத்து குறைந்தது.
    • தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விலை பொதுமக்களை கண்ணீர் வரச் செய்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்தது. வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து சென்னைக்கு குறைவாகவே வருவதால் விலையேற்றத்து டன் காணப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனைக்கே தக்காளி கிலோ ரூ.100-க்கு இன்று விற்கப்பட்டது. இதனால் காய்கறி கடைகளில் சில்லரை விற்பனை ரூ.130 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது.

    தக்காளி இப்போது அபூர்வ உணவு பொருளாக மாறி விட்டது. வீட்டு சமையல்களில் தக்காளியை பெயர் அளவுக்குதான் பயன்படுத்துகின்றனர். தக்காளியை போல இஞ்சி கிலோ ரூ.300-க்கும், பச்சை மிளகாய் ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சமையலில் குறைந்த அளவில் இதன் பயன்பாடு இருந்தாலும் கூட கட்டாயம் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. சில்லரை கடைகளில் பச்சை மிளகாய் 10 ரூபாய்க்கு கேட்டால் 4 அல்லது 5 எண்ணி தருகிறார்கள்.

    இந்த நிலையில் சின்ன வெங்காயம் விலையும் எகிறியது. கடந்த மாதம் ரூ.50-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் படிப்படியாக ரூ.100 வரை உயர்ந்தது. இன்று கிலோ ரூ.230-க்கு விற்கப்படுகிறது. வரலாறு காணாத அளவிற்கு சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 50 முதல் 60 டன் சின்ன வெங்காயம் வந்த நிலையில் திடீரென வரத்து குறைந்தது. 20 டன் அளவில் சின்ன வெங்காயம் வருவதால் தட்டுப்பாட்டின் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விலை பொதுமக்களை கண்ணீர் வரச் செய்துள்ளது. மற்ற பச்சை காய்கறிகளான கேரட், அவரை, முட்டை கோஸ், கத்திரிக்காய் போன்றவை விலை குறைவாக இருந்த போதிலும் இவற்றின் விலை குறையாமல் தொடர்ந்து நீடித்து வருவதால் பொதுமக்கள் மிக குறைந்த அளவிலேயே வாங்குகின்றனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று பச்சை மிளகாய் கிலோ மொத்த விற்பனைக்கு ரூ.60, பீன்ஸ் கிலோ 90-க்கு விற்கப்பட்டது. பச்சை மிளகாய் விலை சற்று குறைந்து உள்ள நிலையில் பீன்ஸ் விலை சில்லரையில் ரூ.120 வரை விற்கப்படுகிறது.

    பொதுமக்கள் அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான காய்கறிகளின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டதால் கூலி தொழிலாளர்கள், குறைந்த வருவாய் உடையவர்கள் பெரும் சவாலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • இந்தியாவில் மிக எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் வெங்காயம் ஒன்றாகும்
    • நீரிழிவு நோயாளிகள் உணவைப் பற்றி மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    உடலில் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். இதனால் நீரிழிவு நோயாளிகள் உணவைப் பற்றி மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    நீரிழிவு நோயைத் தவிர்க்க உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், ஆரோக்கியமான உணவு தேவை. நார்ச்சத்து நிறைந்த உணவை நீங்கள் சேர்க்க வேண்டும். வெங்காயத்தையும் சேர்க்கலாம்.

    இந்தியாவில் மிக எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் வெங்காயம் ஒன்றாகும், இது கிட்டத்தட்ட எல்லா உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

    ஒரு வெங்காயத்தில் கிட்டத்தட்ட 44 கலோரிகள் இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, போலெட், பொட்டாசியம், சல்பர் போன்றவை அதிகமாக இருக்கிறது. வெங்காயத்தில் கிட்டத்தட்ட 17 வகையான பிளாவினாய்ட்ஸ், (ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ்) இருக்கிறது. இதன் சர்க்கரை உயர்தல் குறியீடு 11 ஆகும். இது மிகக் குறைந்த அளவு என்பதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    வெங்காயத்தில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ், குறிப்பாக ஆன்தோசயனின் மற்றும் கொர்சிட்டின், செல்களின் அழற்சியை குறைத்து நீரிழிவு நோய், இதய நோய், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு ஆகியவற்றை தடுக்கிறது. மேலும் கொர்சிட்டின், கணையம், கொழுப்பு, கல்லீரல் மற்றும் தசைகள் உள்ள செல்களுடன் ஒருங்கிணைந்து சர்க்கரை அளவை குறைக்க வழிவகுக்கிறது.

    கோடையில் வெங்காயம் சாப்பிடுவதோ அல்லது அதன் சாற்றைக் குடிப்பதோ வெப்பத்தை ஏற்படுத்தாது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை நிலையானதாக வைத்திருக்கும்.

    வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. இதில் உள்ள அதிகமான வைட்டமின் சி நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக எஸ்சர்சியா, ஸ்டபைலோகாக்கஸ் போன்ற பாக்டீரியாக்களின் தொற்றுக்கள் வராமல் ஓரளவு தடுக்கிறது. வெங்காயத்தில் உள்ள 'ஆனயானின் ஏ' என்ற வேதிப்பொருள் புற்றுநோய் வராமல் தடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    வெங்காயத்தில் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதாலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் பிளவினாய்ட்ஸ் அதிகமாக இருப்பதாலும், சர்க்கரை உயர்தல் குறியீடு மிகவும் குறைவாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் அதை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    - நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன்

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • பீன்ஸ், கத்தரிக்காய், அவரைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மாநிலம் புங்கனூர், வி-கோட்டா, பலமனேர், குப்பம், மதனப்பள்ளி மற்றும் கர்நாடகா மாநிலம் கோலார், ஒட்டுப்பள்ளி, சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.

    தினசரி 55 முதல் 60 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.30-க்கு விற்கப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் வெங்காயத்தின் விலையும் சற்று அதிகரித்து உள்ளது. ரூ.15-க்கு விற்கப்பட்ட பெரியவெங்காயம் இன்று ரூ.20-க்கு விற்பனை ஆனது. வரும் நாட்களிலும் இதே விலை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக பீன்ஸ், கத்தரிக்காய், அவரைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்து உள்ளது.

    இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.80-க்கும், உஜாலா கத்தரிக்காய் ரூ.65-க்கும், வரி கத்தரிக்காய் ரூ.45-க்கும், அவரைக்காய் ரூ.60-க்கும் விற்பனை ஆனது.

    தக்காளி விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறும்போது, கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து விட்டது. இதனால் தக்காளி விலை அதிகரித்து உள்ளது. நேற்று 40 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்த நிலையில் இன்று 50 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்து இருக்கிறது என்றார்.

    • மதுரை வெங்காய மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 50 டன்னுக்கு குறையாமல் வெங்காய மூட்டைகள் வருகின்றன.
    • எங்களுக்கு பல்லாயிரக் கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது என வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    மதுரை:

    வெங்காயம் இல்லாத உணவை வீடுகளில் பார்க்க முடியாது. சமையலின் அத்தியாவசிய பொருட்களான வெங்காயம் தமிழகத்தில் போதிய அளவு விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    மதுரையில் கீழவெளி வீதியில் வெங்காயம் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த மார்க்கெட்டுக்கு வரும் வெங்காயம் பல்வேறு பகுதிகளுக்கு மூட்டை மூட்டையாக விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    வெங்காயம் குளிர்கால பருவ பயிராகும். தற்போது இந்தியா முழுவதும் கோடை காலம் என்பதால் வெங்காய பயிர் விளைச்சல் குறைந்துள்ளது. இருப்பினும் அண்டை மாநிலங்களில் இருந்து மதுரை வெங்காய மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 50 டன்னுக்கு குறையாமல் வெங்காய மூட்டைகள் வருகின்றன.

    அவ்வாறு வரும் வெங்காயம் இங்கு நிலவும் அதிக வெப்ப சூழ்நிலை காரணமாக அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் இருந்து மதுரைக்கு லாரிகளில் வந்த சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் அழுகிவிட்டன. இதன் காரணமாக அதனை வைத்துக் கொள்ள முடியாமல் வியாபாரிகள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டினர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தில் போதிய விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்கிறோம். ஆனால் இங்கு நிலவும் வெப்பம் காரணமாக வெங்காயம் தாக்குபிடிக்க முடியாமல் அழுகி விடுகிறது. இதனால் எங்களுக்கு பல்லாயிரக் கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது என கவலையுடன் தெரிவித்தனர்.

    ×