search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏசு"

    எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை தவிர்த்து அநியாயத்துக்கு எதிராகவே எப்பொழுதும் நின்று கண்முன் நடக்கும் அநீதியை கண்டு கோபமுற்ற இயேசுவின் அறச்சீற்றம் இத்தவக்காலத்தில் நமதாகட்டும்.
    கோபம் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அது வராமல் காக்க வேண்டும். மனிதனிடம் என்னென்ன குணங்கள் உண்டோ அவையெல்லாம் இயற்கையானவை. மனிதனுக்கு தேவை என்பதால் தான் இறைவன் அந்த குணங்களை படைத்திருக்கிறான். அந்த குணங்களுள் ஒன்று கோபம். கோபம் கொள்ளாத மனிதன் இருக்க முடியாது. கோபமிருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பது பழமொழி. மனிதர்கள் கோபப் படுகிறார்கள் சரி. இயேசுவே விவிலியத்தில் கடுமையாக கோபத்தை வெளி படுத்துகிறார் (யோவான் 2:13-25). என் தந்தையின் இல்லத்தை, கோவிலை வணிக கூடாரமாக்காதீர்கள் என கோபம் கொண்டு அடித்து விரட்டுகிறார். ஆலயம் என்பது காசு பார்க்கும் இடமல்ல. அது இறைவேண்டலின் வீடு என்று சீறுகிறார். இது கோபத்தை தாண்டிய அறச்சீற்றம் என்கிறார்.

    ஒருவனுக்கு கோபமே வராது என்றால் அவனுக்கு எதுவுமே வராது. அன்பு கொண்ட மனம் தான் கோபம் கொள்ளும். கோபம் கொண்ட மனம் தான் அன்பு கொள்ளும். எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை தவிர்த்து அநியாயத்துக்கு எதிராகவே எப்பொழுதும் நின்று கண்முன் நடக்கும் அநீதியை கண்டு கோபமுற்ற இயேசுவின் அறச்சீற்றம் இத்தவக்காலத்தில் நமதாகட்டும்.

    - வில்லியம், பங்குத்தந்தை, தூய லூர்து அன்னை ஆலயம், வடகரை. 
    இயேசுவை நம் வாழ்வில் நாம் அனுமதிக்கும் போது நிச்சயமாக அவர் போதுமான பலத்தை நமக்கு தருவார். னைத்து துயரங்களில் இருந்தும் நம்மை விடுவிப்பார்.
    நற்செய்தியில் இயேசுவை அன்பு செய்து அவரை பின்பற்றியது, பெத்தானியாவில் இருந்த மரியா, மார்த்தா, லாசர் என்பவர்களின் குடும்பம். இவர்கள் இயேசுவின் சீடர்களாக, நண்பர்களாக விளங்கினார்கள். ஆண்டவரே, உன் நண்பர் லாசர் நோயுற்று இருக்கின்றார் என்று இயேசுவுக்கு செய்தி மட்டுமே அனுப்பப்பட்டது. இயேசு அவர்களை அன்பு செய்ததால், நட்போடு பெத்தானியாவுக்கு சென்றார். ஆனால் அதற்குள் லாசர் இறந்து நான்கு நாள் ஆயிற்று.

    இயேசுவை கண்ட லாசரின் சகோதரிகள் அழுது புலம்பினார்கள். அவர்களின் துயரத்துக்கு செவி சாய்த்து, அவர்களோடு அழுது, துக்கத்தில் தோள் கொடுத்து, உள்ளம் குமுறி நொந்தார் இயேசு. இதுதான் அவருடைய அன்பு. இறைத்தந்தையால் நாம் வாழ்வு பெற அனுப்பப்பட்ட ஆண்டவர், நமக்கு செவிசாய்த்தார். நாம் விடுதலை பெற நமக்காக கண்ணீர் சிந்தினார். நம் பாவங்களுக்காக அவர் காயப்பட்டார்.

    இயேசுவின் நண்பனாக இருக்க, லாசர்களாக, நெருக்கமானவர்களாக நம்முடைய செயல்பாடுகள் மாற வேண்டும். லாசரின் கல்லறை கல்லை அப்புறப்படுத்தி, அவரை உயிர்த்தெழ செய்தார் இயேசு. ஆனால் நாம் கோபம், ஆணவம், பொறாமை உள்பட பல்வேறு காரணங்களால் பலருக்கு கல்லறை கட்டி, அவர்கள் வாழ்வை இழக்க காரணமாக இருக்கின்றோம்.

    இயேசுவை நம் வாழ்வில் நாம் அனுமதிக்கும் போது நிச்சயமாக அவர் போதுமான பலத்தை நமக்கு தருவார். அத்துடன் பலருக்கு நாம் கட்டிய கல்லறைகளின் கல்லை அப்புறப்படுத்த துணை புரிவார். அனைத்து துயரங்களில் இருந்தும் நம்மை விடுவிப்பார். எனவே, இத்தவக்காலத்தில் மட்டுமல்ல என்றுமே இயேசுவின் நண்பனாக வாழ நாம் முற்படுவோம்.

    அருட்பணி. அ.ஜோசப் செல்வராஜ், முதன்மை செயலாளர்,

    திண்டுக்கல் மறைமாவட்டம். 
    விவிலியத்தில் ரத்தம் என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ரத்தம் எனும் குறியீடு உணர்த்துகின்ற சிந்தனைகள் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் நிறையவே உண்டு.
    விவிலியத்தில் ரத்தம் என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ரத்தம் எனும் குறியீடு உணர்த்துகின்ற சிந்தனைகள் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் நிறையவே உண்டு.

    ‘ரத்தம்’ என்பது விவிலியத்தில் முன்னூறு முறைக்கு மேல் பயன்படுத்தப்படுகிறது. ‘ரத்தம் என்பது உயிர்’ என விவிலியம் குறிப்பிடுகிறது. ‘உயிர்களின் ரத்தத்தை, உயிராகிய ரத்தம்’ என விவிலியம் கூறுகிறது.

    “எந்த உடலையும் குருதியோடு உண்ணாதீர்கள்” ஏனெனில், எல்லா உடலின் உயிரும் குருதியே” என லேவியர் 17:14 குறிப்பிடுகிறது. ரத்தம் என்பது வாழ்வுக்கு சமமாக குறிப்பிடப்படுகிறது.

    பழைய ஏற்பாடு, ரத்த பலிகளை அங்கீகரித்தது. எனவே தான், ரத்தம் பூமியில் சிந்தப்படலாம், ஆனால் அதை உணவாக உட்கொள்ளக் கூடாது என விவிலியம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

    கடவுள் தனது சாயலாக மனிதனைப் படைத்து, தனது உயிர்மூச்சையே வாழ்வாகக் கொடுத்தார். எனவே கடவுள் விரும்புகிற பண்பு களை வெளிப்படுத்துகிற வாழ்வு உடையவனாக மனிதன் வாழவேண்டும். அதையே இறைவன் விரும்புகிறார்.

    கடவுள் ஒரு நல்ல தலைவராக, நல்ல முதலாளியாக இருக்கிறார். நாம் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்குரிய அத்தனை வசதிகளையும் செய்து தருகின்றார்.

    “கடவுள் படைத்தது அனைத்தும் நல்லதே. நன்றி உணர்வுடன் ஏற்றுக்கொண்டால் எதையும் விலக்க வேண்டியதில்லை” என்கிறது 1 திமோத்தேயு 4:4.

    கடவுளால் படைக்கப்பட்ட எல்லாம் நல்லது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கடவுள் ஒரு சிலவற்றை விலக்கவேண்டுமென காலப்போக்கில் சட்டங்களை தருகிறார். கடவுள் படைத்தவை அனைத்தும் நல்லவை, ஆனால் அவை படைத்தவரின் கட்டுப்பாட்டில் பயன்படுத்த வேண்டும் எனும் சிந்தனையை அது தருகிறது.

    கடவுளின் கட்டுப்பாட்டை மீறிய வகையில் எதையும் உணவாக்கிக் கொள்ள முடியாது என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி. அப்படி மீறி உட்கொள்வது பாவமாகி விடுகிறது. “பெருந்தீனிக்காரரைப் போல உணவு உண்ணாதே” என விவிலியம் அத் தகைய மனிதரை எச்சரிக்கிறது.

    “வீரர்கள் கொள்ளைப் பொருட்கள் மேல் பாய்ந்து, ஆடுகளையும், மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையில் போட்டு, அடித்து, அவற்றை ரத்ததோடே உண்டார்கள்” என 1 சாமுவேல் 14:32 கூறுகிறது. இது ஆண்டவருக்கு எதிரான பாவமாக மாறிவிட்டது.

    2 சாமுவேல் 23-ம் அதிகாரம் தாவீது மன்னனையும் அவருடைய வலிமை மிகு வீரரையும் பற்றிய ஒரு செய்தியை விவரிக்கிறது. போர் காலம்- தாவீதுக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. அப்போது அவரது வீரர்கள் அவருக்கு தன்ணீர் கொண்டு வர முடிவெடுக்கிறார்கள். எதிரிகளின் எல்லைகளுக்குள் புகுந்து போய் தண்ணீர் கொண்டு வருகின்றனர். ஆனால் அதை தாவீது பருக மறுத்து விடுகிறார்.

    “தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்றவர்களின் ரத்தமன்றோ இது! ஆண்டவரே, இதை நான் எவ்வாறு குடிக்க முடியும்?’ என்று சொல்லி, அதை குடிக்காமல் விட்டார் தாவீது.

    தண்ணீரைக் கூட ரத்தத்தைப் போல பாவித்து, அதைக் கூட குடிக்க மனமில்லாமல் இருந்தார் தாவீது. அந்த அளவுக்கு மனச்சான்றோடு வாழ்ந்தார், தாவீது.

    மனிதனுடைய செயல்களை மூன்றாகப் பிரிக்கலாம்.

    1. அறிவு சார்ந்த செயல்: ஒரு விஷயம் சரியா, தவறா என்று ஆராய்ந்து பார்த்து செய்கின்ற செயல் இது என சொல்லலாம்.

    2. உணர்வு சார்ந்த செயல்: ‘இந்த செயலைச் செய்ய விரும்புகிறேன், எனது உணர்வு இதை எனக்கு பரிந்துரை செய்கிறது’ என முடிவெடுக்கின்ற செயல்.

    3. மனச்சான்று சார்ந்த செயல்: நான் எதைச் செய்யலாம் என மனசாட்சி சார்ந்து முடிவெடுப்பது.

    தாவீது எடுத்த முடிவு, மனசாட்சி சார்ந்து எடுக்கப்பட்ட முடிவு. இந்த மனசாட்சிகளையும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

    1. துர்மனசாட்சி: நமது துர்மனசாட்சியை விட்டு இறைவனை நோக்கி திரும்பி வரவேண்டும். எப்படி தாவீது சரியான ஒரு செயலைக் கூட மனசாட்சிக்கு விரோதமாய் செய்யாமல் இருந்தாரோ, அப்படிப்பட்ட மனசாட்சி நமக்கு வேண்டும்.

    2. மாசு படிந்த மனசாட்சி: ‘கடவுளை அறிந்திருப்பதாய் சொல்லிக் கொள்கின்றனர், ஆனால் அவர்களுடைய செயல்கள் அதை மறுதலிக்கின்றன’ என மாசு படிந்த மனசாட்சி உடையவர்களை விவிலியம் சித்தரிக்கிறது.

    3. வலுவற்ற மனசாட்சி: இது நல்ல சிந்தனைகள் இருந்தாலும் அதைச் செய்வதற்குரிய வலு இல்லாத மனசாட்சியைப் பற்றியது. இதைப் பற்றியும் விவிலியம் பேசுகிறது. பாவம் செய்ய வேண்டாம் என முடிவெடுத்தாலும் மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுகின்ற நிலமை வலுவற்ற மனசாட்சியின் வெளிப்பாடு.

    நாம் நமது வாழ்க்கையில் இருக்கின்ற தீய, மாசுபடிந்த, வலுவற்ற மனசாட்சியை விலக்கி விட்டு நல்ல, தூய்மையான வலிமையான மனசாட்சியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். உயிர் எனும் ரத்தம், இந்த சிந்தனைகளைக் கொண்டிருக்கும் போது கடவுள் விரும்பும் குணாதிசயங்களை நாம் வெளிப்படுத்த முடியும்.
    குழப்பத்தில் வழிகாட்டவும், சோர்வில் உற்சாகமூட்டவும், பாவத்தை உணரவும், எப்போதும் இறைவனை நினைக்கவும் திருப்பாடல்கள் துணை செய்கின்றன.
    விவிலியம்! கிறிஸ்தவத்தின் புனித நூல். இறைவனின் ஏவுதலால் மனிதர்களால் எழுதப்பட்ட நூல் இது. இந்த உலகம் தோன்றும் முன்பு தொடங்கி, அழிவதற்குப் பின்பு வரையிலான நிகழ்வுகள் இந்த நூலில் உண்டு.

    ஆதிமனிதன் பாவத்தால் ஏதேனை விட்டு வெளியேறுகிறான், கடைசியில் மனிதன் மீட்பினால் இறைவனை அடைகிறான். ஆதியில் சாத்தான் ஏதேனுக்குள் நுழைகிறான். கடைசியில் இறைவனால் அவனும் அவன் தூதர்களும் அழிகின்றனர்.

    மனிதன் இறைவனின் அருகாமையை விட்டு வெளியேறுகிறான் என்பதில் ஆதியாகமம் பயணிக்கிறது. அப்படி பாவத்தின் பிடியில் விழுந்த மனிதனை இறைவன் எப்படி வழிநடத்துகிறார், மீட்கிறார் என்பதில் பைபிள் நிறைவடைகிறது.

    பைபிள் என்பது, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, இணை திருமறைகள் எனும் மூன்று பிரிவுகளின் தொகுப்பு. ஒவ்வொரு தொகுப்பிலும் பல நூல்கள் உண்டு. பழைய ஏற்பாட்டில் 39 நூல்களும், புதிய ஏற்பாட்டில் 27 நூல்களும், இணைதிருமறையில் 9 நூல்களும் உள்ளன.

    இந்த நூல்களில் மிக முக்கியமான நூல்களில் ஒன்று தான் திருப்பாடல்கள்! கிறிஸ்தவர்களால் அதிகம் பயன் படுத்தப்படும் நூல்களில் ஒன்று திருப்பாடல்கள். “வாழ்த்துப் பாடல்களின் தொகுப்பு” என்று இந்த நூலை அழைக்கின்றனர்.

    திருப்பாடல்கள் 150 பாடல்களின் தொகுப்பு. பைபிளில் உள்ள நூல்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் எழுதுவது தான் வழக்கம். அல்லது ஒருவர் சொல்லச் சொல்ல இன்னொருவர் எழுதுவதுண்டு. ஆனால் திருப்பாடல் களைப் பொறுத்தவரை பல எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

    தாவீது மன்னர் இந்த சங்கீதங்களில் சுமார் 73 பாடல்களை எழுதியிருக்கிறார். எனவே பொதுவாக இதை தாவீது மன்னனின் சங்கீதங்கள் என அழைப்பதுண்டு. இவற்றைத் தவிர மோசே ஒரு பாடலையும், ஆஸாப் பன்னிரண்டு பாடல்களையும், கோராவின் மகன்கள் 10 பாடல்களையும், ஹெர்மான் ஒரு பாடலையும், எசேக்கியா பத்து பாடல்களையும், ஏதேன் ஒரு பாடலையும், சாலமோன் இரண்டு பாடல்களையும் எழுதியுள்ளனர். மிச்சமுள்ள பாடல்களின் ஆசிரியர்கள் யார் என்பதில் மாற்றுக்கருத்துகள் உள்ளன.

    சுமார் ஆயிரம் ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு இது என்பது இந்த நூலுக்கு இன்னும் வலிமையும், அழகும் சேர்க்கிறது. கி.மு. பதினான்காம் நூற்றாண்டு முதல், கி.மு. நான்காம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதிகாரங்களைப் பொறுத்தவரையில் சங்கீதங்கள் தான் நீளமான நூல். வார்த்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் எரேமியா நூல் பெரியது என்கிறது புள்ளி விவரம்.

    ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்த நூலில் பல்வேறு இறை சிந்தனைகள் விரவிக் கிடக்கின்றன. இறைவனை நோக்கி எழுப்பப்படுகின்ற விண்ணப்பங்களாகவும், இறைவனை நோக்கி முறையிடுகின்ற மன்றாட்டுகளாகவும், எதிரியைப் பழிவாங்குமாறு கடவுளிடம் வேண்டுவதாகவும், இறைவனைப் புகழ்ந்து பாடுவதாகவும், பிறருக்கு அறிவுரை சொல்வதாகவும், வரலாற்று பாடல்களாகவும், தீர்க்கதரிசனங்களாகவும் பல்வேறு முகம் காட்டுகின்றன திருப்பாடல்கள்.

    பழைய ஏற்பாட்டு நூல்களின் ஒன்றான திருப் பாடல்களின் வசனங்கள் புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. பழைய ஏற்பாட்டு நூல்களிலேயே அதிக முறை கோடிட்டுக் காட்டப்படும் நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இயேசுவும் தனது போதனைகளில் திருப்பாடல்களை குறிப்பிடுவதால் இது சிறப்பிடம் பிடிக்கிறது.

    திருப்பாடல்களின் வரலாறு இப்படி இருந்தாலும் இது இன்றைக்கும் ஆன்மிகத்தைச் செழுமைப்படுத்தும் நூலாக அமைவதால் இதன் முக்கியத்துவம் நீடிக்கிறது. இந்தப் பாடல் களிலுள்ள வசனங்கள் வழியாக இறைவன் நம்முடன் நேரடியாகப் பேசும் அனுபவம் கிடைக்கிறது. துயரத்தின் பிடியில் இருக்கிறோமா? ஆனந்தத்தின் வழியில் நிற்கிறோமா? பாவத்தின் பாதையில் நடக்கிறோமா? எல்லா தருணங்களுக்கும் ஏற்ற பாடல்கள் இதில் உண்டு.

    இது கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் யூதர்களும் பயன் படுத்தும் நூலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இனிமையாக, இசையோடு இணைந்து பாடுவதற்கு உகந்த பாடல்களாக அமைந்துள்ளன. வார்த்தைகளின் ஒலி அடிப்படையிலான பாடல்களாக இல்லாமல், கருத்துகளின் ஒருங்கிசைவு அடிப்படையிலான பாடல்களாய் இவை அமைந்துள்ளது இனிமையானது.

    திருப்பாடல்கள் நமது வாழ்வின் முக்கியமான அங்கமாக மாறிவிட்டது. அதை மனதார விரும்பி ஏற்றுக்கொள்பவர்களுக்கு துயர் துடைக்கும் தோழனாக, வழிகாட்டும் ஆசானாக, புதியவை சொல்லும் ஆசிரியராக, வரம் தரும் இறைவனாக நம்மோடு பயணிக்கும்.

    திருப்பாடல்கள் பிரபலமாய் இருக்க முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இறைமகன் இயேசுவின் வருகையை தீர்க்க தரிசனமாய் சொல்கிறது. இயேசுவின் பிறப்பு, பாடுகள், மரணம், உயிர்ப்பு எல்லாமே திருப்பாடல்களில் மறைமுகமாய் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    இரண்டு, வாழ்வின் எல்லா சூழல்களிலும் ஆறுதல் தரக்கூடிய பாடல்களாக இவை இருக்கின்றன. குழப்பத்தில் வழிகாட்டவும், சோர்வில் உற்சாகமூட்டவும், பாவத்தை உணரவும், எப்போதும் இறைவனை நினைக்கவும் திருப்பாடல்கள் துணை செய்கின்றன.

    ‘திருப்பாடல்கள்’ - ஆன்மிகத்தின் தேடல்கள், வாழ்வின் பாடங்கள்.

    சேவியர், சென்னை. 
    கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூரும் இந்த நாட்களில் சிலுவையின் மேன்மை குறித்து தியானிப்போம்.
    கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூரும் இந்த நாட்களில் சிலுவையின் மேன்மை குறித்து தியானிப்போம். தேவனுடைய சாயலிலே படைக்கப்பட்ட மனிதன் பாவத்தின் மூலமாக தேவனோடு இருந்த நெருங்கிய உறவை இழந்து பாவியானான். ஆபிரகாமின் மூலமாக வரக்கூடிய சந்ததியின் மூலமாக முழு உலகையும் தேவன் ரட்சிக்கவும், பரிசுத்தமுள்ள ஒரு சந்ததியை உருவாக்கவும் விரும்பினார். மனிதனிடம் பரிசுத்தமுள்ள வாழ்வை எதிர்பார்த்த தேவன் மோசேயின் மூலமாக சீனாய் மலையிலே வைத்து இஸ்ரவேலருக்கான நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார்.

    நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதமும், நியாயப்பிரமாணத்தை மீறினால் தண்டனையும், ஆக்கினை தீர்ப்பும் வரும் என்றும் மோசேயின் மூலம் கூறினார். நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு பரிசுத்த ஜாதியாக இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்ந்தாலும் மாமிச பலவீனத்தினால் அநேகரால் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொள்ள இயலவில்லை.

    நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டாலும் ஒன்றிலே தவறினாலும் அவர்கள் குற்றவாளிகளாகவும், தேவனுடைய தண்டனைக்குரியவர்களாகவும் மாறினர். நியாயப்பிரமாணத்தைக் காத்து நடந்து தேவனைக் கிட்டிச் சேர வேண்டிய இஸ்ரவேலர்கள் நாளுக்கு நாள் பிரமாணங்களை மீறி தேவனுக்கு தூரமானார்கள். ஆனால் மாமிச பலவீனத்தினால் இஸ்ரவேலர் செய்ய முடியாததை கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றி, தம் சொந்த மாமிசத்தினாலே தேவனையும் ,தூரமாயிருந்த தேவ ஜனங்களையும் ஒப்புரவாக்கினார்.

    எபே:2:13-16-ல் முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் ரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இரு திறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாமிசத்தினாலே ஒழித்து, இரு திறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இரு திறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார் என்று பைபிளில் கூறுவது போல சிலுவையில் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் ரத்தம் எல்லோருக்குமான மீட்கும் பொருளாக மாறி எல்லோரையும் தேவனோடுகூட ஒப்புரவாக்கியது. நாமும் அந்த மேன்மையான ரத்தினால் நம் பாவங்கள் கழுவ ஒப்புக்கொடுத்து நாமும் தேவனோடு ஒப்புரவாவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

    - போதகர்.அமல்ராஜ்
    ‘உலகின் அனைத்து மக்களுக்கும் நானே கடவுள்’ என்பதைக் குறிப்பிடவே அவர் மோசேயிடம் இதைச் சொல்கிறார். அதில் நீங்களும் நானும் அடக்கம்.
    இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து அழைத்து வர மோசேயைக் கடவுள் தேர்ந்தெடுக்கிறார். மோசேயை அழைக்கும் போது, அவரிடம் ‘நான் உன் முற்பிதாக்களின் கடவுள்’ என அறிமுகம் செய்து கொள்கிறார்.

    ‘உலகின் அனைத்து மக்களுக்கும் நானே கடவுள்’ என்பதைக் குறிப்பிடவே அவர் மோசேயிடம் இதைச் சொல்கிறார். அதில் நீங்களும் நானும் அடக்கம்.

    கடவுளின் அழைப்பை ஏற்று முன் பின் பரிச்சயமற்ற ஒரு நாட்டிற்குச் சென்றவர் ஆபிரகாம். அவருக்கும் இவர் கடவுள்.

    வரலாற்றில் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெறாமல் போனவர் ஈசாக்கு. அவருக்கும் இவர் கடவுள்.

    மூத்தவனுக்கு வரவேண்டிய தந்தையின் ஆசியைத் தந்திரமாய் பறித்தவர் யாக்கோபு, அவருக்கும் இவர் கடவுள்.

    பணிந்து நடக்கும் நல்லவருக்கும், வரலாற்றில் சிறப்பிடம் பெறாமல் போகிறவனுக்கும், தந்திரக்காரனுக்கும் இவரே கடவுள்.

    மோசே கடவுளின் அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. நான்கு எதிர்ப்புகளை அவர் தெரிவிக்கிறார்.

    முதலாவது, “நான் தகுதியற்றவன்” என்கிறார். நான் எம்மாத்திரம் என தன்னைப் பற்றி மோசே கூறுகிறார். கடவுளோ, “பயப் படாதே, நான் உன்னோடு இருப்பேன்” என அவருக்கு உறுதி கொடுக்கிறார். “நான் தகுதியற்றவன்” எனும் சிந்தனை நம்மை வலுவிழக்கச் செய்யலாம். ஆனால் இறைவன் நம்மோடு இருக்கிறார் எனும் சிந்தனை நம்மை வலுவூட்டும் செய்தியாக மாறிவிடுகிறது.

    இரண்டாவது, எதிர்ப்பு, ‘கடவுளுடைய பெயர் என்ன?’ எனும் சிந்தனை. கடவுள் யார் என்பது எனக்கே தெரியாவிட்டால் நான் எப்படி அடுத்தவர்களுக்குச் சொல்ல முடியும்.

    எகிப்தில் வாழ்ந்தவர் தான் மோசே. அங்கே பல கடவுள்களை வணங்கிய பழக்கம் அவருக்குத் தெரியும். அதனால் தான் “கடவுளின் பெயர் என்ன?” என்பதை அவர் அறிந்து கொள்ள விரும்பினார்.

    மூன்றாவது, ‘என்னை நம்புவார்களா?’ எனும் கேள்வி. நான் ஆண்டவரின் பணியை செய்யச் செல்லும் போது மக்கள் என்னை நம்பு வார்களா எனும் கேள்வி காலம் காலமாய் எழுகின்ற ஒரு கேள்வியே. இறைவன் செய்கின்ற வல்ல செயல்கள் மட்டுமே மக்களுக்கு சட்டென ஒரு நம்பிக்கையை உருவாக்கித் தருகிறது.

    பைபிளில் வருகின்ற, கிதியோனுடைய வாழ்க்கை இதற்கு ஒரு உதாரணம். “நான் வெட்ட வெளியில் ஒரு கம்பளி விரித்து வைக்கிறேன். நிலம் காய்ந்திருந்து, கம்பளி மட்டும் ஈரமாய் இருந்தால் உம்மை நம்புவேன்” என கடவுளிடம் சொல்கிறார் கிதியோன். அப்படியே நடக்கிறது.

    எனினும் நம்பிக்கை வரவில்லை, “நாளை கம்பளி மட்டும் காய்ந்து இருக்க வேண்டும் நிலம் ஈரமாய் இருக்கட்டும். அப்படி நடந்தால் உம்மை நம்புவேன்” என்கிறார். அப்படியே நடக்கிறது. இப்படிப்பட்ட வல்ல செயல்களே இறைவன் மீதான நம்பிக்கைகளை வளமையாக்குகின்றன.

    நான்காவது, ‘நான் திக்குவாயன்’ என்கிறார் மோசே. இது வெகு சகஜமாக இன்றும் நாம் கூறுகின்ற வார்த்தை. “எனக்கு பேச தெரியாதும்மா?”. நம்மையே நாம் குறைத்து மதிப்பிடுகின்ற செயல் தான் இது.

    இன்று சிலுவை நிழலில் நமக்குரிய சிந்தனை இந்த மறுப்புகளைத் தாண்டுகின்ற சிந்தனைகளால் அமைகிறது.

    1. பலவீனங்களைத் தாண்டிய பலம்.

    எப்போதெல்லாம் நான் எனும் எண்ணத்துடன் திரிகிறோமோ அப்போதெல்லாம் பலவீனராய் மாறிவிடுகிறோம். என்னை நம்புகிறார்களா? நம்மை நம்புவார்களா? என்பதெல்லாம் சுய பலத்தின் மீதான நம்பிக்கை. ‘நம்மை அனுப்பிய கடவுளை நம்புவார்களா?’ என்பதே கேட்கப்படவேண்டிய கேள்வி.

    ‘எனக்கு வலிமையில்லை, நான் சிறியவன், சமூகத்தில் முக்கியமற்றவன்’ என நாம் நினைக்கும் போதெல்லாம் நமக்கு சிலுவை பலம் தருகிறது. ‘பேசத் தெரியாது’ என சொன்ன மோசே தான் மாபெரும் விடுதலை வீரரானார். ‘பேசத்தெரியாத சிறுபிள்ளை நான்’ என்று சொன்ன எரேமியா தான் மாபெரும் தீர்க்கதரிசி ஆனார்.

    2. ஒத்துழைக்க வேண்டுமென எதிர்பார்க்கும் பலம்

    இருவர் இணைந்து பணி செய்வதை இறைவன் அனுமதிக்கிறார். மோசேக்கு துணையாய் ஆரோனை அனுப்புகிறார். எலியாவுக்குத் துணையாக எலிசா இருக்கிறார். பின்னாளில் எலிசா மாபெரும் தீர்க்க தரிசியாய் மாறினார். நாமும் இறைவனுக்கு ஒத்துழைப்பு நல்கும் மனிதர்களாக இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.

    3. அற்பமானவை ஆச்சரியமாய் மாறும் பலம்

    எதிரி மன்னனுக்கு முன்னால் நின்ற மோசே தண்ணீரை ரத்தமாய் மாற்றிக் காட்டினார். இது ஒரு அடையாளமாய் மாறியது. மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தப் போகும் அடையாளம்.

    தாவீது எனும் சின்னப் பையனின் கையில் இருந்த சாதாரண கூழாங்கற்கள் கோலியாத் எனும் மாவீரனைச் சாய்த்தது. கூழாங்கல் அடையாளம், இறைவன் அதை ஆச்சரியமாய் மாற்றுகிறார்.

    அன்று எகிப்தின் எல்லைக்கோட்டை இஸ்ரயேல் மக்கள் தாண்ட ரத்தமாய் மாறிய தண்ணீர் அடையாளமாய் அமைந்தது.

    இன்று பாவம் எனும் எல்லைக்கோட்டைத் தாண்ட, சிலுவையின் ரத்தம் நமக்கு மீட்பின் அடையாளமாய் இருக்கிறது. 
    பொதுவாக காத்திருக்கிற நேரம் மிகவும் கடினமான நேரம் தான், என்றாலும் நம்முடைய ஆண்டவர் ஜெபத்தைக் கேட்கிறார். ‘ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்’ (சங்கீதம் 65:2) என தாவீது கூறுகிறார்.
    நான் இனிக்கர்த்தருக்காகக் காத்திருக்க வேண்டியது என்ன? (II ராஜாக்கள் 6:33).

    ஏதோ ஒரு அற்புதத்துக்காகவோ அல்லது ஆசீர்வாதத்துக்காகவோ நீண்ட காலமாய் காத்திருந்து, அது கிடைக்கவில்லையே, என்ற ஆதங்கத்தோடு மேற்கண்ட வசனத்தில் ராஜா குறிப்பிட்டது போல நீங்களும் சில நாட்களாகவே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கலாம். உங்கள் கேள்விகளுக்கு நிச்சயம் அருமை ஆண்டவர் பதில் கொடுப்பார்.

    அவசரப்பட்டு தேவனுடைய சித்தத்திற்கு மாறாக செயல்பட ஒருபோதும் இடம் கொடுத்து விடாதீர்கள். அது பல வேதனைகளையும், இழப்புகளையும் கொண்டு வந்துவிடும். உதாரணமாக ‘நீ செய்ய வேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழு நாள் காத்திரு என்றான்’. (I சாமுவேல் 10:18)

    அன்றைக்கு சவுலைப் பார்த்து இவ்விதமாய் கூறினார் சாமுவேல்.

    ஆனால் அவசரப்பட்டு, சற்றும் காத்திருக்காமல் சாமுவேல் சொல்லாததை, தேவன் விரும்பாததை சவுல் செய்து விட்டான் என I சாமுவேல் 13:8-14 வரை உள்ள வார்த்தைகள் கூறுகிறது. இதனால் அவருடைய ராஜ்யபாரம் நிலைத்து நிற்காமல் போனது.

    அநேக வேளைகளில் தேவன் அற்புதம் செய்யும் வரைக்கும் காத்திருக்க மனதில்லாமல் அவசரப்பட்டுச் செய்யும் காரியங்கள் நிமித்தம் பல வேதனைகளையும் கஷ்டங் களையும் சந்திக்கிறோம். ஏற்ற வேளையில் நிச்சயம் கர்த்தர் உங்களுக்கு அற்புதம் செய்வார் என்று மனதார விசுவாசியுங்கள்.

    ரட்சிப்பு நிறைவேற காத்திருங்கள்

    ‘கர்த்தாவே, உம்முடைய ரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன்’. (ஆதியாகமம் 49:18)

    மேற்கூறிய வார்த்தையை அன்றைக்கு யாக்கோபு கூறினார். இன்றைக்கு உலக மனிதர்கள் தங்கள் காரியங்களுக்காக காத்திருக்கத் தயங்குவதில்லை.

    ஆனால் தேவ பிள்ளைகளோ கர்த்தருக்கடுத்த காரியத்தில் காத்திருக்க முடியாமல் ஆசீர்வாதத்தை இழக்கிறார்கள். நீங்கள் பெற்ற ரட்சிப்பு நிறை வேறக் காத்திருக்க வேண்டும். உங்களைச் சார்ந்தவர்கள் நீங்கள் எதிர்பார்த்தபடி ரட்சிப்புக்குள் அவர்கள் வராமல் இருந்தால் சோர்ந்து போகாதீர்கள். நிச்சயம் கர்த்தர் ஏற்ற நேரத்தில் அவர்களை ரட்சிப்பார்.

    அதே வேளையில் வசனம் கூறுகிறது, ‘நாம் விசுவாசிகளானபோது ரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமா யிருக்கிறது’ (ரோமர் 13:11).

    ஆம், நீங்கள் பெற்ற ரட்சிப்பு சமீபமாய் இருக்கிறது என்பதை மறந்து போகாதீர்கள். ஆகவே தான் முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே ரட்சிக்கப்படுவான் என விசுவாசிக்கிறோம். மட்டுமல்ல, ‘உங்கள் ரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுங்கள்’ என (பிலிப்பியர் 2:12) பவுல் கூறுகிறார்.

    ரட்சிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் நீங்கள் அடைந்த சந்தோஷம் இன்று உங்களில் காணப்படுகிறதா? அவ்வாறு இல்லாவிட்டால் மீண்டும் ஆதி அன்புக்குத் திரும்புங்கள்.

    ஏனென்றால் ரட்சிப்பு இலவசம் என்றாலும் அது ஒரு அவசரமாகும். ஒரு பக்கம் உங்கள் ரட்சிப்பு நிறைவேற அதிக பிரயாசப்படுங்கள், மறுபக்கம் உங்களைச் சார்ந்தவர் களுடைய ரட்சிப்புக்காக விசுவாசத்தோடு காத்திருங்கள்.

    தேவன் நிச்சயம் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார்.

    ஜெபத்துக்கு பதில் வரும் வரை காத்திருங்கள்

    ‘கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன், என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்’ (சங்கீதம் 38:15).

    பொதுவாக காத்திருக்கிற நேரம் மிகவும் கடினமான நேரம் தான், என்றாலும் நம்முடைய ஆண்டவர் ஜெபத்தைக் கேட்கிறார். ‘ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்’ (சங்கீதம் 65:2) என தாவீது கூறுகிறார்.

    ‘நம்முடைய சகல தேவைகளை ஜெபத்தின் மூலம் தேவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும்’ என வேதம் கூறுகிறது. அதே வேளையில் ஏற்ற நேரத்தில் பதில் வராதபோது உடனே நாம் சோர்ந்து போய் விடுகிறோம். ‘கர்த்தாவே உமக்குக் காத்திருக்கிறேன். நீர் மறு உத்தரவு கொடுப்பீர்’ என்பது தான் தாவீதின் விசுவாசம்.

    மேலும், ‘கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன், அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்’ (சங்கீதம் 40:1).

    சாத்தான் அநேக வேளைகளில் நம்முடைய பொறுமையை இழக்க பலவிதமான அவிசுவாசம், எதிர்மறையான எண்ணங்கள், குழப்பங்களைக் கொண்டு வருவான். என்றாலும் நாம் மனம் தளராமல் என் ஜெபத்திற்கு பதில் வரும்வரை நான் காத்திருப்பேன் என அறிக்கைச் செய்து தேவனை மகிமைப்படுத்துங்கள். நிச்சயம் உங்களுக்கு பதில் வரும்.

    ‘இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தங்கள் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது’ (சங்கீதம் 123:2).

    -சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன்,

    ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54. 
    மன்னிப்பிற்கு எவ்வித தடையோ, எல்லையோ கிடையாது என்பதே இறை உண்மை. இதை உணர்கின்ற ஒவ்வொரு மனிதனும் தெய்வம் ஆகலாம்.
    1830-ம் ஆண்டு ஜார்ஜ் வில்சன் என்ற கொள்ளைக்காரன், அரசு ஊழியர் ஒருவரை கொலை செய்தான். இதற்காக அந்த கொள்ளைக்காரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவன் மேல் கருணை கொண்ட அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஆன்ட்ரு ஜாக்சன், தனது சிறப்பு உரிமையை பயன்படுத்தி கொள்ளைக்காரனுக்கு மன்னிப்பு வழங்கினார்.

    இதனை ஏற்க மறுத்த அந்த கொள்ளைக்காரன், தன்னை தூக்கிலிடுமாறு அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு மனு அளித்தான். அந்த மனுவை பெற்றுக்கொண்ட உச்சநீதி மன்றத்தின் அன்றைய முதன்மை நீதிபதி, மன்னிப்பு என்பது ஒரு காகித துண்டு அல்ல. அதனுடைய மதிப்பை நிர்ணயிப்பது அதை ஏற்றுக்கொள்கிற நபரை பொறுத்தது. எனவே கொள்ளைக்காரன், மன்னிப்பை ஏற்கவில்லை, தூக்கிலிடுவதை மறுக்கவில்லை. எனவே ஜார்ஜ் வில்சனை தூக்கிலிடுங்கள் என்று கூறினார். அவனும் தூக்கிலிடப்பட்டான்.

    கிறிஸ்துவ மறையின் பண்புகளில் மன்னிப்பதும், மன்னிப்பை பெறுவதும் மிக அடிப்படையானது. இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிய போது கடைசியாக, தனது தந்தையாகிய கடவுளைப்பார்த்து, ‘தந்தையே இவர்களை மன்னியும், இவர்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்‘ என்றார். இயேசு போதித்த போதனைகளும், அவருடைய செயல்பாடுகளும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

    கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் ஜெப, தவ, தர்ம நற்செயல்கள் செய்வதால் இறைவனிடம் இருந்து பாவமன்னிப்பையும், அதன் வழியாக புதிய நிலை வாழ்வையும் பெறுகிறார்கள். அதுபோன்று பாவமன்னிப்பை பெற வேண்டுமெனில், நீங்கள் ஒருவரை ஒருவர் மன்னிக்க வேண்டும் என்ற அன்பு கட்டளையை இயேசு விதித்தார். மேலும் ‘எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் மன்னித்தது போல, எங்கள் பாவங்களையும் மன்னியும்‘ என்று தன் சீடர்களுக்கு கற்றுக்கொடுத்த ஜெபத்திலும் எடுத்துரைத்தார்.

    எவரொருவர் இறைவனுடைய மன்னிப்பை மிக அழகாக உணர்கிறாரோ, அவ்வளவு தூரம் பிறருடைய குற்றங்களையும் அவரால் எளிதில் மன்னிக்க இயலும். இந்த உண்மை ‘கெட்ட ஊழியன்‘ என்ற கதை மூலமாக இயேசு விளக்கி உள்ளார். அந்த கதையின் முடிவில், நீங்கள் ஒருவரை ஒருவர் மன்னிக்காவிட்டால், விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார் என்று உரைத்தார். மன்னிப்பிற்கு எவ்வித தடையோ, எல்லையோ கிடையாது என்பதே இறை உண்மை. இதை உணர்கின்ற ஒவ்வொரு மனிதனும் தெய்வம் ஆகலாம்.

    அருட்பணி. ஜான்பிரகாசம், சேசு சபை, திண்டுக்கல். 
    அன்று நிலைக்கால்களில் ரத்தம் பூசப்பட்டதது. இன்று நிரந்தரமாக சிலுவையில் நமக்காய் சிந்திக்கொண்டிருக்கிறது. அந்த ரத்தம் தற்காலிக மீட்பைத் தந்தது. இந்த ரத்தம் நிரந்தர மீட்பை நல்குகிறது.
    எகிப்தில் அடிமைகளாய் இருந்த மக்களை மோசே எனும் தலைவர் மூலமாக இறைவன் மீட்டுக் கொண்டு வந்த கதை அனைவரும் அறிந்ததே. அங்கே மோசேயுடன் துணையாகச் சென்றவர் ஆரோன் என்பவர்.

    மோசேயிடம் கடவுள், ‘ஆரோன் உனக்கு வாய் போல இருப்பான், நீ அவனுக்குக் கடவுளாய் இருப்பாய்’ என்கிறார்.

    அவர்கள் பார்வோன் மன்னனிடம் செல்ல வேண்டும். இப்போது கடவுள் மோசேயிடம், “உன்னை பார்வோனுக்குக் கடவுளாக ஏற்படுத்துகிறேன்” என்கிறார். பார்வோனின் மனதில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக அவர் அப்படிச் சொல்கிறார்.

    எகிப்தில் மாந்திரீக செயல்கள் அதிகம். அதுதான் மதம் என அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அதற்கு ஒரு மாற்றுச் சிந்தனையாகத் தான் கடவுள் அங்கே ஆச்சரியங்களைச் செய்ய முடிவெடுக்கிறார்.

    மோசேயின் கையிலிருந்த கோல் ஒரு அடையாளமாய் இருந்தது. இஸ்ரயேல் மூப்பர்களையும், எகிப்தின் மந்திரவாதிகளையும் நம்ப வைப்பதற்காக அந்தக் கோலை தரையில் போட்டார் மோசே. அது பாம்பாக மாறியது. ஆனால் எகிப்தின் மந்திரவாதிகளும் அதே போல செய்தார்கள்.

    ஆரோனின் கோல் அவர்களுடைய கோல்களை விழுங்கி விட்டது என விவிலியம் குறிப்பிடுகிறது. இதன் மூலம், மாந்திரீகமும் அதன் சக்திகளும் கடவுளல்ல. உண்மைக் கடவுளுக்குள் அதெல்லாம் அடக்கம் எனும் சிந்தனை உறுதியாகிறது.

    மேய்ப்பனின் கோல், மந்திரவாதியின் கோல்களை அழிக்கிறது. அங்கே பத்து வாதைகள் நிகழ்கின்றன. கடைசியாக தலைச்சன் பிள்ளைகளும் மாண்டு போகின்றனர். ஆனால் இஸ்ரயேல் மக்கள் இழப்புகளின்றி தப்புகின்றனர்.

    அதற்காக அவர்கள் பலி செலுத்தி அந்த ரத்தத்தை நிலைக்கால்களில் பூசுகின்றனர். அந்த ரத்தம் இருந்த இஸ்ரயேலரின் வீடுகள் தப்புகின்றன. ரத்தம் மீட்பைக் கொடுத்தது.

    இந்த ரத்தம் இருளிலிருந்து விடுதலை அளிக்கிறது. “தலைப்பேறானவர்களை அழிக்க வந்தவன் இஸ்ரயேலரைத் தீண்டாதபடி ரத்தத்தைத் தெளித்ததும் நம்பிக்கையினால் தான்” என்கிறது எபிரேயர் 11:28

    ஒட்டு மொத்த மனித சமூகத்திலிருந்து பிரிந்து இறைவனின் அன்போடு இணைந்திருக்கிறோம். நமக்குக் கிடைத்திருக்கும் சிறப்பு உரிமை இது. நாம் புனிதமானவர்கள் என்பதல்ல அதன் பொருள், அவருக்குப் பிரியமானவர்கள் என்பதே அதன் பொருள்.

    இறைவனுடைய வார்த்தை வலிமையானது. அது படுபாவிகளையும் மீட்கும் வலிமையும், ஆசையும் கொண்டது. சிலுவையில் இறைமகன் இயேசு சிந்திய ரத்தம் மறைத்துக் காக்கும் ஆற்றல் கொண்டது.

    இறைவனின் அன்பையும், இயல்பையும் பல வகைகளில் கூறலாம்.

    1. கன்மலை இடுக்கில் மறைத்துக் காக் கிறவர்

    “என் மாட்சி கடந்து செல்கையில், நான் உன்னைப் பாறைப்பிளவில் நிறுத்திவைப்பேன். நான் கடந்து செல்லும்வரை என் கையால் உன்னை மூடிமறைப்பேன்” (விடுதலைப்பயணம் 33:22) எனும் விடுதலைப்பயணம் நம்மை அவர் முழுமையாய் பாதுகாப்பவர் என்பதைச் சொல்கிறது.

    சிலுவையை நாம் ஏறெடுத்துப் பார்க்கும் போது இது நம்மைக் காப்பாற்றும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதற்கு அவருடைய பரிவும், இரக்கமும் காரணமாய் இருக்கிறது.

    2. சிறகு அடியில் புகலிடம் தரும் சிலுவை

    “கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்; இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன்.” (திருப்பாடல்கள் 57:1)

    இறைவனின் அன்பு, சிறகின் அடியில் பறவை தனது குஞ்சுக்கு தருகின்ற இதமான பாதுகாப்பைப் போன்றது. அழிவுக்கு மத்தியிலே வாழ்ந்து கொண்டிருந்தாலும் புகலிடமாகும் இடம் இறைவனின் சிறகுகளே. இடர்கள் முழுமையாய் நீங்கும் வரை அது நம்மைக் காக்கிறது.

    3. நிழலிலே அடைக்கலம் தரும் சிலுவை

    “உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர் என்கிறது சங்கீதம். புயல் காற்றும், கடும் வெப்பமும் அழித்து விடாதபடி நம்மைக் காக்கின்ற நிழல் இறைவனின் அன்பு எனும் நிழல். இந்த நிழலில் அடைக்கலம் கொள்ளும் போது காப்பாற்றப் படுகிறோம். சிலுவையின் நிழல் நம்மை பாவ வெயிலில் இருந்து மனமாற்றத்தின் நிழலில் இளைப்பாற வைக்கிறது.

    4. கை நிழலிலே மறைவு சிலுவை

    “நான் வானங்களை விரித்துப் பரப்பினேன்; மண்ணுலகிற்கு அடித்தளம் அமைத்தேன்; சீயோனை நோக்கி, “நீ என் மக்கள்” என்றேன்; என் சொற்களை உன் நாவில் அருளினேன்; என் கை நிழலில் உன்னை மறைத்துக்கொண்டேன்.” (ஏசாயா 51:16)

    கைகளின் நிழலில் நம்மைக் காக்கும் கடவுளாக இறைவன் இருக்கிறார். நாம் பாவத்தில் மாண்டு போகாமல் நம்மை அது காக்கிறது. அழிப்பவன் அசுர வேகத்தில் பாய்வான், சிலுவையோ நம்மை நிதானமாய்க் காக்கும். சரணடைதல் ஒன்றே அதை சாத்தியமாக்கும்.

    அன்று நிலைக்கால்களில் ரத்தம் பூசப்பட்டதது. இன்று நிரந்தரமாக சிலுவையில் நமக்காய் சிந்திக்கொண்டிருக்கிறது. அந்த ரத்தம் தற்காலிக மீட்பைத் தந்தது. இந்த ரத்தம் நிரந்தர மீட்பை நல்குகிறது. 
    அநேக கிறிஸ்தவர்களுக்கு நரகம் என்றால் என்ன? என்று தெரியும். இயேசு அநேக இடங்களில் நரகத்தைப்பற்றி வேதாகமத்தில் எச்சரித்தும் இருக்கிறார்.
    மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன். ஆமென். நான் மரணத்திற்கும், பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளி 1:18). அநேக கிறிஸ்தவர்களுக்கு நரகம் என்றால் என்ன? என்று தெரியும். இயேசு அநேக இடங்களில் நரகத்தைப்பற்றி வேதாகமத்தில் எச்சரித்தும் இருக்கிறார். நரகம் மனிதர்களுக்கு உருவாக்கப்பட்டது அல்ல.

    அது சாத்தானுக்காகவும் அவனுடைய சகாக்களுக்காகவும் கடவுளை எதிர்த்ததினால் உருவாக்கப்பட்டது. எப்பொழுது மனிதன் கடவுளுக்கு கீழ்படியாமல் போனானோ அன்றிலிருந்துதான் மனிதனுக்கும் அதில் பங்கு ஏற்பட்டுவிட்டது. இயேசு நரகத்தை அழியாத அக்கினி என்று குறிப்பிடுகிறார். அது கேடு (மத்தேயு 7:13) புறம்பான இருள் (25:30) அக்கினி சூளை (13:50). இயேசு பாதாளத்தின் வாசல்களை தன் சீடர்களுக்கு சொல்லுகையில் நரகத்தில் தள்ளப்படுவதை பார்க்கிலும் இரு கைகளும், கண்களும் இல்லாமல் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும் என்கிறார்.

    இயேசு தன் சீடர்களுக்கு பணக்காரன் மரித்த பின் நரகம் செல்வதையும் மற்றும் ஏழை லாசுரு ஆபிரகாமின் மடியில் சொர்க்கத்தில் சேருவதின் கதை மூலமாக விவரிக்கிறார். (லூக்கா 16:19-31). இயேசு நம் எல்லோருக்காகவும் பாவமானார், சாபமானார். நமது பாவங்களுக்காக அவர் சிலுவையில் அறையப்பட்டார் . ஆனால் இயேசு என்னை நரகத்திற்கு போகாமல் தடுக்க முடியுமா? முடியும்!

    ஆனால் என்னுடைய பாவத்திற்கான ஈடுபொருளை அவரிடம் மன்றாடி கேட்கும் பொழுது அதைப்பெற்றுக் கொள்வேன். நான் பாவி, என் பாவத்திற்காக நான் வருந்துகிறேன் என்று நான் அறிக்கையிட்டு, இயேசுவின் ரத்தத்தினால் என்னை மூடி என் பாவத்திற்காக அவர் ஈடுபொருளை செலுத்தாதவரை நான் விசுவாசி. பயப்படுகிறவர்களும், ஆவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலை பாதகரும், சூனியக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி 21:8). முடிவு நம் கையில் ஆமென்! 
    தனிமனித அறத்தின் வழிநின்று எதிர்த்து நின்றால், நாமும் இயேசுவை போல் துன்பத்தை எதிர்க்கும் தைரியத்துடன் செயல்பட்டால் வெற்றி பெற முடியும்.
    ஒவ்வொரு நாளும் நாம் பல விதமான பிரச்சினைகளை சந்திக்கிறோம். சிலவற்றுக்கு தீர்வும், பலவற்றுக்கு விடையும் கிடைப்பதில்லை. அதனால் நாம் கவலைப்படுகிறோம். நம் நிம்மதி குலைந்து விடுகிறது. ஒருவர் நடக்கையில் சில குரங்குகள் துரத்த அவர் வேகமாக நடக்க முற்படுகிறார். குரங்குகள் அவரை நெருங்கும் போது, ஒரு பெரியவரின் குரல் கேட்டது.

    “ஓடாதே. எதிர்த்து நில்“. ஓடியவர் திரும்பி எதிர்த்து நிற்க வந்த வழியே திரும்பி ஓடிவிட்டன குரங்குகள். நமக்கு வருகிற துன்பங்கள், சவால்கள், எதிர்ப்புகள் கூட இப்படி குரங்குகள் போன்றவை தான். எதிர்த்து நின்றால் ஓடிவிடும். இயேசுவுக்கும் எதிர்ப்புகள் பல வடிவங்களில் வந்தன. உண்மையை பேசி, தவறு செய்தவர்களை எதிர்த்து நின்று, உழைக்கும் வர்க்கத்தை சுரண்டிய, அன்றைய யூத தலைவர்களை தனிமனிதனாக சத்தியத்தின் வழியில் நின்று சத்தமாக குரல் கொடுத்தார் இயேசு.

    வெளியில் நடமாட முடியாதவாறு அவரை கொலை செய்ய யூத தலைவர்கள் திட்டம் வகுத்தனர் (யோவான் 7:1-2). பிரச்சினைகள், துன்பங்கள், மிரட்டல்கள் எந்த வடிவில் வந்தாலும் நாம் பயப்படவேண்டியதில்லை. தப்பித்து ஓட எண்ண வேண்டியதில்லை. அவற்றை பகுத்துப் பார்த்து தனிமனித அறத்தின் வழிநின்று எதிர்த்து நின்றால், நாமும் இயேசுவை போல் துன்பத்தை எதிர்க்கும் தைரியத்துடன் செயல்பட்டால் வெற்றி பெற முடியும் என்பதை அறிந்து இத்தவக்காலத்தில் செயல்பட வேண்டும்.

    - வில்லியம், பங்குத்தந்தை, தூய லூர்து அன்னை ஆலயம், வடகரை.
    இயேசுவை இறைமகனாகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்கின்ற ஒவ்வொருவரும், அவரது வார்த்தைகளைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க கடமைப்பட்டவர்கள்.
    இறைமகன் இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, தந்தையாகிய கடவுளிடம் தனிமையில் ஜெபித்தார் என்று பைபிள் கூறுகிறது.

    ‘இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறை வனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்’ (மாற்கு 1:35) என்றும், இயேசு தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின் மேல் ஏறினார். பொழுது சாய்ந்த பிறகும் அங்கே அவர் தனியே இருந்தார் (மத்தேயு 14:23) என்றும் வாசிக்கிறோம்.

    இயேசு கிறிஸ்து தம் வாழ்வில் கடவுளிடம் தனிமையில் ஜெபிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை ஆண்டவர் இயேசு கற்றுத்தந்திருக்கிறார். ‘நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்று கொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்’ (மத்தேயு 6:5,6) என்று அவர் கூறு கிறார்.

    தங்களை பக்தியுள்ள மனிதர்கள், கடவுளுக்கு நெருக்கமான பிள்ளைகள் என்று காட்டும் எண்ணத்துடன், விளம்பரம் செய்கின்ற வகையில் ஜெபிக்கிறவர்களை இயேசு கிறிஸ்து கண்டிக்கிறார். தெருக்களிலும் ஆலயங்களிலும் வீண் பகட்டுக்காக சத்தம் போட்டு, ஜெபிப்பது போல நடிக்கின்றவர்களை ஆண்டவர் வெளிவேடம் போடுகிறவர்கள் என்று குறை கூறுகிறார். இப்படி செய்கிறவர்களுக்கு கைமாறாக, ஏற்கனவே தண்டனைத் தீர்ப்பு கிடைத்து விட்டது என்றும் அவர் கூறு கிறார்.

    ஆனால், தனிமையில் வைக்கப்படும் மறைவான வேண்டுதலை கடவுள் இரக்கத்தோடு கேட்டு, அவர்களுக்குத் தேவையானதை செய்வார் என்றும் ஆண்டவர் உறுதி அளிக்கிறார்.

    இயேசு கிறிஸ்து தொடர்ந்து சொல்வதைக் கேளுங்கள்: “நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம். மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் விண்ணகத் தந்தை அறிந்திருக்கிறார்.” (மத்தேயு 6:7,8)

    நாம் கேட்பதற்கு முன்பே கடவுள் நமது தேவைகளை அறிந்திருக் கிறார் என்று இயேசு கூறுவதை நாம் உறுதியாக நம்ப வேண்டும். ஒருவர் அறிந்த காரியத்தைப் பற்றி நாம் அதிகமாக விளக்கம் அளிப்பது தேவையற்ற ஒன்று.

    நமக்கு கடவுள் மீது முழுமையான நம்பிக்கை இருந்தால், ஜெபிக்கும் வேளையில் மிகுதியான சொற்களை பயன்படுத்தக் கூடாது என்பதே இயேசு தரும் போதனை.

    மிகுதியான வார்த்தைகளைக் கொண்டு பிதற்றுவதில் அல்ல, கடவுள் மீது நாம் கொள்கின்ற நம்பிக்கையின் மூலமே நமது தேவைகளுக்கு பதில் கிடைக்கும் என்பதே அவரது வழிகாட்டுதல்.

    ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: “விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்” (மத்தேயு 6:9-13) என்று இயேசு கற்பித்தார்.

    ஒரு ஜெபத்தில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்களை, ஆண்டவர் கற்பித்த இந்த ஜெபத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்கிறோம்.

    முதலில் நாம் கடவுளை மகிமைப்படுத்த வேண்டும். அவரது பெயரைப் போற்றி, அவரது ஆட்சியை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். நமது விருப்பத்திற்கும் மேலாக கடவுளின் விருப்பத்தை நாட வேண்டும். பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்ப்பதற்கல்ல, அன்றாட உணவுக்காக மட்டுமே ஜெபிக்க வேண்டும்.

    நாம் பிறரை மன்னித்த பிறகே, நமக்கான கடவுளின் மன்னிப்பை கேட்க வேண்டும். சோதனைக்கு உட்படாமல் இருக்கவும், தீமையில் இருந்து விலக்கி காக்குமாறும் நாம் கடவுளிடம் கேட்க வேண்டும். ஏனெனில், ஆட்சியும் மாட்சியும் என்றென்றும் அவருடையன.

    நமது வாழ்வும் ஜெபமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே இயேசு கிறிஸ்துவின் போதனையாக இருந்தது. ஆகவேதான், அவர் கற்றுக்கொடுத்த இந்த ஜெபத்தில் ஒரு வாழ்வியல் பாடத்தையும் பொதிந்து வைத்துள்ளார்.

    “மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னித்தால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையாகிய கடவுளும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்” என்ற எச்சரிக்கை மிகுந்த அறிவுரையையும் ஆண்டவர் வழங்குகிறார்.

    இயேசுவை இறைமகனாகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்கின்ற ஒவ்வொருவரும், அவரது வார்த்தைகளைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க கடமைப்பட்டவர்கள். தங்கள் தேவைகளை ஆண்டவரிடம் கூறுவது மட்டுமே ஜெபம் என்ற தவறான சிந்தனையில் இருந்து விடுபட்டு, நமது வாழ்வால் கடவுளை மகிமைப்படுத்துவதே ஜெபம் என்பதை உணர்வோம்.

    “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல் படுபவரே செல்வர்” (மத்தேயு 7:21) என்பதே இயேசு கிறிஸ்துவின் எச்சரிக்கை.

    ஆகவே, வெளிவேடம் மிகுந்த ஜெபங்களை விடுத்து, நமது தூய வாழ்வால் கடவுளுக்கு மாட்சி அளிப்போம்.

    டே. ஆக்னல் ஜோஸ் 
    ×