என் மலர்
நீங்கள் தேடியது "காலநிலை மாற்றம்"
- தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களையும் காலநிலை மாற்றக் கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த வேண்டும்.
- இனிவரும் மாதங்களில், கடுமையான வெப்ப அலைகளை நாடு சந்திக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழ்நாடு கால நிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மெய்யநாதன், பழனிவேல் தியாகராஜன், செந்தில் பாலாஜி, சிவசங்கர் பங்கேற்றனர்.
தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மின் துறை, தொழில்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
காலநிலை அபாயங்களை அதிக அளவில் எதிர் கொள்ளக் கூடிய உலகின் ஐம்பது இடங்களின் பட்டியலில் இந்தியாவில் மட்டும் 9 இடங்கள் இருக்கின்றன என்று தரவுகள் சொல்கின்றன. தமிழ்நாடு 36-வது இடத்தில் இருக்கிறது என்கிறது இந்தத் தரவு. இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டு உணர்த்தும் என்று நான் நம்புகிறேன். பிப்ரவரியில் இந்த தரவுகள் வெளியாவதற்கு முன்பே அதாவது கடந்த டிசம்பர் மாதம் மாண்டஸ் புயல் சென்னையைக் கடந்து கொண்டிருந்த வேளையில்தான் நான் தமிழ்நாட்டின் "காலநிலை இயக்கத்தையும்" காலநிலை உச்சி மாநாட்டையும் தொடங்கி வைத்தேன்.
நான் ஏன் இந்த நிகழ்வுகளை குறிப்பிடுகிறேன் என்றால், இந்த நிர்வாகக் குழுவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக மட்டுமல்ல, இந்த அரசு வருமுன் காக்கக்கூடிய அரசாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை உங்களுக்கு அறியத் தருவதற்கும்தான்.
அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, இலஞ்சி, உறை கிணறு, ஊருணி, ஊற்று, ஏரி, ஓடை எனத் தன்மைக்கும் தேவைக்கும் ஏற்ப 47 வகையான நீர் நிலைகள் இருந்த வளமான அறிவுச் சமூகம்தான் தொன்மையான தமிழ்ச் சமூகம்.
இன்று இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் இந்த அரசு, காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கும், தகவமைத்துக்கொள்ளவும், விரைவாகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டின் காடுகளின் பரப்பளவை 21 விழுக்காட்டில் இருந்து 33 விழுகாடாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் உயர்த்த திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்னர் துவக்கிவைத்தேன். இதுவரை சுமார் 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் பதியன் போடப்பட்டு, அவற்றை நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் பசுமைப் போர்வையை அதிகரிப்பதோடு, கார்பனை உள்வாங்கவும் பயன்படும்.
ஒரு மாநிலத்தை கார்பன் சமநிலையை எட்டிய மாநிலமாக அறிவிக்க வேண்டுமெனில், அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் கார்பன் சமநிலையை அடையவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 10 கிராமங்களை மீள்தன்மையுடைய கிராமங்களாக மாற்றுவதற்கான திட்டம் இன்று துவக்கப்படுகிறது. கால நிலை மாற்றம் குறித்து பள்ளி-கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர் என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கொண்டுசேர்க்க "காலநிலை அறிவு இயக்கத்தை" செயல்படுத்தப் போகிறோம்.
அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும். கடல் அரிப்பைத் தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரியத்தைப் பேணவும் பனை மரங்களை நடும் திட்டம் செயல்படுத்தப்படும்.
கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு சதுப்புநிலம்தான் இருந்தது. அதை நாங்கள் 13-ஆக உயர்த்தியுள்ளோம். இதைத் தவிர, அருகிவரும் உயிரினங்களான கடற்பசு, தேவாங்கு உள்ளிட்ட உயிரினங்களைப் பாதுகாக்க சரணாலயங்களை ஏற்படுத்தி உள்ளோம்.
மக்கள் கடைகளுக்கு செல்லும்போது வீட்டிலிருந்தே பைகளை எடுத்துச் செல்லவேண்டும் என்பதற்கான குறியீடாக "மீண்டும் மஞ்சப்பை" இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செயல்படுத்தாத, ஏன், ஒன்றிய அரசுகூட உருவாக்காத "காலநிலை மாற்ற நிர்வாகக் குழு" எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுதான் தமிழ்நாடு எப்போது கார்பன் சமநிலையை அடையவேண்டும் என்பதை தீர்மானிக்கப்போகிறது.
வளர்ச்சி ஒரு கண் என்றால்-காலநிலை மாற்றம் பற்றிய சிந்தனை இன்னொரு கண். ஆகவே இந்த இரு கண்களும் மாநிலத்தின் முன்னேற்றத் திற்கு தேவை. அதற்கான பாதையை இந்தக் குழு வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இனிமேல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களையும் காலநிலை மாற்றக் கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த வேண்டும் என்று துறை அமைச்சர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
இனிவரும் மாதங்களில், கடுமையான வெப்ப அலைகளை நாடு சந்திக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களை கையாளுவது போல், நாம் வெப்ப அலைகளையும், புதிய புதிய நோய்களையும் கையாளத் தயாராக வேண்டும். இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையும் எவ்வளவு கார்பனை வெளியிடுகின்றன என்பதை அறிவியல்பூர்வமாக வெளியிட உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உலகின் 20 வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடுகள் விளைவித்துள்ளன.
- இந்திய போன்ற வளரும் நாடுகளால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
சென்னை:
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் அரசு காலநிலை மாற்ற நடவடிக்கை குழுவை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்படுகிறது.
இதன் தொடக்க விழா தி.நகர் பஸ்நிலையம் அருகே இன்று நடந்தது. பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிய துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:- உலகின் 20 வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடுகள் விளைவித்துள்ளன. இந்திய போன்ற வளரும் நாடுகளால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால் மக்கள் பாதிக்க கூடிய சூழல் உள்ளது.
தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் சுற்று சூழலுக்காக பல்வேறு குழுக்களை அமைத்துள்ளது. அந்த குழுக்களின் செயல்பாடுகள் சரியாக இல்லை. இதை தீவிரப்படுத்த வேண்டும்.
இதை தனிமனிதரால், சாத்தியப்படுத்த முடியாது. மத்திய-மாநில அரசுகள் இணைந்து புதிய திட்டத்தை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப் பாளர் மு.ஜெயராமன், பசுமைத்தாயம் மாநில செயலாளர் அருள், இணை செயலாளர்கள் எஸ்.கே.சங்கர், சத்ரிய சேகர், ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, முத்துக்குமார், அடையார் வடிவேல், சவுமியா அன்பு மணியின் மகள் சுஞ்சத்ரா சவுமியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக சட்டம் நிறைவேற்றம்.
- சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதியை மீண்டும் விண்வெளிக்கு திருப்புதல் உள்ளிட்ட வழிமுறைகள் குறித்து ஆராயப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், "காலநிலை மாற்றங்களிலிருந்து நமது பூமியை காப்பாற்ற சூரிய ஒளியை எவ்வாறு தடுப்பது" என்பது குறித்து ஆராய்வதற்கு, ஒப்புதல் அளித்திருக்கிறது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை அலுவலகம், சூரிய புவி-பொறியியல் குறித்த அறிக்கையை வெள்ளை மாளிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், புவி வெப்பமடைதலை விரைவுபடுத்துவது சூரியக் கதிர்கள்தான் என்பதால், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை ஒரு குழு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய புவி பொறியியல் ஆராய்ச்சி குறித்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக 2022ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தகைய ஆராய்ச்சிகள் குறித்து அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பூமியின் சிக்கலான அமைப்புகள் குறித்து வளர்ந்து வரும் புரிதலின் அடிப்படையில், இவற்றினால் ஏற்படப்போகும் நன்மைகள் மற்றும் அபாயங்கள் ஆகியவற்றை தெரிந்துகொள்ள ஒரு ஆராய்ச்சிக்கான தேவை இருக்கிறது. சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதியை மீண்டும் விண்வெளிக்கு திருப்புதல், சூரிய கதிர்களை பிரதிபலிக்கும் வகையில் கடல் மேகங்களை பிரகாசமாக்குதல், சிரஸ் மேக ஆய்வு போன்ற வழிமுறைகள் குறித்து ஆராயப்படுகிறது.
இந்த ஆராய்ச்சியானது, தொழில்நுட்பங்களை காட்டிலும், 'சூரிய கதிர்வீச்சு மாற்றியமைத்தல் முறைகள்' (Solar Radiation Modification) ஏற்படுத்தப்போகும் தாக்கங்களைப் பற்றிய ஒரு புரிதலை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது. இதன் பெரும்பகுதி அடிப்படை காலநிலை செயல்முறைகள் மற்றும் "மனித கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகள்" (Human Greenhouse Gas Emissions) ஏற்படுத்தப்போகும் விளைவுகள் குறித்தும், காலநிலைக் கொள்கையின் ஒரு அங்கமாக சூரிய கதிர்வீச்சு மாற்றியமைத்தல் முறைகள் விளைவிக்கக் கூடிய அபாயங்கள் மற்றும் நன்மைகள் ஆகியவற்றை குறித்தும் சிறந்த முடிவுகளை செயல்படுத்த வழிவகுக்கும்.
வரும் காலங்களில், பொது அல்லது தனியார் நிறுவனங்களால் இந்த வழிமுறை (SRM) பயன்படுத்தப்படுவதற்கு அமெரிக்காவை தயார்படுத்தவும் உதவும். இதன் மூலம் சில வருட காலங்களுக்கு நமது கிரகமான பூமியை கணிசமாக குளிர்விக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது.
- தமிழ்நாட்டில் வாஸ்கா 2.0 செயலாக்கத்திற்கு தருமபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- வாஸ்கா 2.0 செயலாக்க திட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தகவமைப்பு-2.0 திட்ட செயலாக்கம் குறித்த மாவட்ட அளவிலான வழிநடத்துதல் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்றது.
நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தகவமைப்பு என்பது இந்திய - ஜெர்மன் இருதரப்பு திட்டம் ஜெர்மன் மத்திய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தால் (GIZ) இந்திய அரசாங்கத்தின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (MORD) மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் (MOJS) ஆகியவற்றுடன் இணைந்து நியமிக்கப்பட்ட ஒரு இருதரப்பு திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தருமபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. புவியியல் தகவல் அமைப்பு (GIS) மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக்கான நீர்வள மேலாண்மை மற்றும் செறிவூட்டல் திட்டத்தினை தயாரித்து, இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டம் 2019-2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டது.
இப்போது இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் (வாஸ்கா-2) 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. இது 17 மாநிலங்களை உள்ளடக்கிய 15 வேளாண் காலநிலை மண்டலங்களில் நிலையான இயற்கை வள மேலாண்மை மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
அவற்றில் கிழக்கு கடற்கரை சமவெளி மற்றும் மலை மண்டலத்தின் கீழ் வரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.
தமிழ்நாட்டில் வாஸ்கா 2.0 செயலாக்கத்திற்கு தருமபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
வாஸ்கா 2.0 செயலாக்க திட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் மற்றும் இதர ஒருங்கிணைப்புப் பணிகளுக்கு வாஸ்கா திட்டச் சான்றுகள் அடிப்படையிலான அறிவியல் அணுகுமுறை (புவியியல் தகவல் அமைப்பு) முன்மொழியப்படும்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, வன அலுவலர் அப்பல நாயுடு, வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, ஜெர்மன் மத்திய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சக தொழிற்நுட்ப ஆலோசகர் ராதா பிரியா, சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ரங்கலட்சுமி மற்றும் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்டத்தில் பசுமை பரப்பு அதிகரிக்கும் நோக்கத்தை பற்றியும், அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடினார்கள்.
- காலநிலை மாற்றத்தால் எந்தவிதமான இடர்பாடுகள் வரலாம் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் காலநிலை மாற்ற பயிலரங்கம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமையில் நடைபெற்றது. இப்பயிலரங்கில் காஞ்சிபுரம் மாவட்ட காலநிலை மாற்றத்தை குறித்தும், இந்த ஆண்டிற்கான மழைப்பொழிவின் மாறுதலை பற்றியும், மாவட்டத்தில் பசுமை பரப்பு அதிகரிக்கும் நோக்கத்தை பற்றியும், அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடினார்கள்.
இதில் பல்வேறு துறைகளில் இருந்து அரசு அலுவலர்கள் கலந்து கொண்டதால் காலநிலை மாற்றத்தால் எந்தவிதமான இடர்பாடுகள் வரலாம் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது. இப்பயிலரங்கில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்ககம் துணை இயக்குநர் மணிஷ் மீனா, மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி ஆட்சியர் சங்கீதா கலந்து கொண்டனர்.
- டெல்லியின் முன்கேஸ்பூர் பகுதியில் இன்று சுமார் 52.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டு பதிவான 49.2 டிகிரி செல்ஸியஸ் என்பதே அதிகபட்சமாக வெப்பநிலையாக இருந்தது.
காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் ஏற்படத் தொடங்கியிருக்கும் அசாதாரணமான பருவநிலை இந்தியாவிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. இயல்பாகவே அதீத காலநிலை நிலவும் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நகரம் முழுவதும் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் வரலாறு காணாத வகையில் இந்தியாவில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை டெல்லியில் இன்று (மே 29) பதிவாகியுள்ளது. அதன்படி டெல்லியின் முன்கேஸ்பூர் பகுதியில் இன்று சுமார் 52.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய வானிலை மைய வட்டார இயக்குனர் குல்தீப் ஸ்ரீவத்சவா, ராஜஸ்தானில் இருந்துவீசும் வெப்பக் காற்றானது டெல்லியின் புறநகர் பகுதிகளை முதலில் தாக்குவதால் ஏற்கனவே நகரத்தில் நிலவில் அதீத வெப்பநிலையுடன் வெளியில் இருந்து வரும் இந்த வெப்பக்க காற்றானது இணைந்ததில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

52.3 டிகிரி செல்ஸியஸ் என்பது டெல்லியில் இன்று சராசரியாக கணிக்கப்பட்ட வெப்பநிலையை விட 9 டிகிரி அதிகமாக பதிவாகியுள்ளது. கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டு பதிவான 49.2 டிகிரி செல்ஸியஸ் என்பதே அதிகபட்சமாக வெப்பநிலையாக இருந்தது.
சுமார் 30 மில்லியன் மக்கள் வாழும் டெல்லியில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த கால நிலை மாற்றத்தின் தாக்கம் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. ஹீட் ஸ்டார்க் உள்ளிட்ட வெப்ப பாதிப்புளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி தவிர்த்து இன்று ராஜஸ்தானில் 51 டிகிரி செல்சியஸும், அரியானாவில் 50.3 டிகிரி செல்சியஸும் அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது. இதற்கிடையில் கடும் வெப்பத்துக்கு மத்தியிலும் இன்று மாலை வேலையில் டெல்லியின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளதால் மக்கள் சற்று ஆசுவாசம் அடைந்துள்ளனர்.
- அதிக வெப்பம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகள் இந்தியாவில் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன.
- வெயில் காலம் தொடங்கியதிலிருந்து ஒடிசாவில் மட்டும் இதுவரை 141 ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
காலநிலை நிலை மாற்றத்தால் மக்கள் மறைமுகமாக பாதிக்கப்பட்ட காலம் மாறி துரதிஷ்டவசமாக நேரடியாகவே பாதிக்கட்டும் காலம் வந்துவிட்டது. உலகம் முழுவதும் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சம், பசி , பட்டினி, போர் ஆகியவற்றால் கொத்துக்கொத்தாக மக்கள் செத்துக்கொண்டிருக்கும் வேலையில் இயற்கையால் ஏற்படுத்தத்ப்பட்ட புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களாலும் சமீப காலங்களில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனோடு அதிக வெப்பம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகள் இந்தியாவில் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன.
முக்கியமாக வட மாநிலங்களில் நிலவிவரும் வரலாறு காணாத வெளியில் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். வடகிழக்கு மாநிலமான ஒடிசாவில் கடந்த மே 30ஆம் தேதி ஒரே நாளில் ஹீட் காரணமாக 42 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்த 72 மணி நேரத்தில் மற்றும் 99 பேர்ஹீட் ஸ்டார்க் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
வெயில் காலம் தொடங்கியதிலிருந்து ஒடிசாவில் மட்டும் இதுவரை 141 ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடம் இந்தியாவில் ஹீட் ஸ்ட்ரோக்கால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 250 ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கிரீன்லாந்தில் உள்ள பனி மூடிய ஆர்டிக் பிரதேசத்தில் ராட்சத வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- இந்த ராட்சத வைரஸ்கள் 2.5 மைக்ரோ மீட்டர்கள் என்ற அளவில் பாக்டீரியாவை விட பெரிதாக உள்ளன.
கிரீன்லாந்தில் உள்ள பனி மூடிய ஆர்டிக் பிரதேசத்தில் ராட்சத வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை வைரஸ்கள் 1981 இல் முதன்முறையாக கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஐஸில் இப்போதுதான் முதன்முறையாக கடண்டுபிடிக்கப்படுள்ளது.
பொதுவாக பாக்டீரியாவை விட 1000 மடங்கு சிறிய அளவில் உள்ள வைரஸ்கள் 20- 200 நானோ மீட்டர்கள் அளவே இருக்கும்.ஆனால் இந்த ராட்சத வைரஸ்கள் 2.5 மைக்ரோ மீட்டர்கள் என்ற அளவில் பாக்டீரியாவை விட பெரிதாக உள்ளன. இவை மனிதக் கண்களால் மட்டும் இன்றி சிறிய வகை மைக்ரோஸ்கோப்பினாலும் பார்த்தறிய முடியாதவை ஆகும்

இந்த வைரஸ்களால் நன்மையே விளையும் என்று டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதாவது இந்த ராட்சத வைரஸ்கள் பனிக்கட்டிகள் உருகுவதைத் தடுக்க மறைமுகமான ஆயுதங்களாக செயல்படுகிறதாம். பனியின் மேற்பரப்பில் இருந்தும், துளைகளில் இருந்தும் இந்த வைரஸ்களின் டிஎன்ஏ க்கள் சேகரிக்கப்பட்டு மேற்கொண்டு ஆராய்ச்சி செயப்பட்டு வருகிறது.

மைக்ரோ பையோம் உயிரியல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில், இந்த ராட்சத வைரஸ்கள் பனியை சேதப்படுத்தும் ஆல்கே - களை அழித்து பனிக்கடி உருகாமல் இருக்க உதவுகிறது. ஆனால் இந்த ராட்சத வைரஸ்கள் எந்த அளவுக்கு வீரியத்துடன் செய்யப்படும் என்பதில் சந்தேகம் உள்ளது. மேற்கொண்டு ஆராய்ச்சி செய்வதன் மூலமே அதைத் தெளிவுபடுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் ஆர்டிக் பிரதேசத்தில் பணிக்கட்டிகள் வேகமாக உருகி வரும் நிலையில் இந்த ராட்சத வைரஸ்கள் அதற்கு தீர்வாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- நன்கு சமைத்த, சூடான மற்றும் சுகாதாரமான உணவை உண்ணுங்கள்.
- கோதுமை, பார்லி மற்றும் பருப்பு வகைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
மாறிவரும் காலநிலையால், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. குளிர்காலமாக இருந்தாலும் அல்லது கோடைகாலமாக இருந்தாலும், காலநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி மற்றும் இருமலுடன் சில சமயங்களில் சுவாசப் பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நம் உடலில் வரும் எந்த நோயையும் எதிர்த்து போராட முடியும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இரண்டு முக்கியமான விஷயங்கள் உடற்பயிற்சி மற்றும் தூக்கம். ஆனால் அதைவிட முக்கியமானது சரியான ஊட்டச்சத்து.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடிய சில பொதுவான உணவுகள் பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா கூறுகையில்,
நன்கு சமைத்த, சூடான மற்றும் சுகாதாரமான உணவை உண்ணுங்கள். அதிகப்படியான மிளகாய் கொண்ட கொழுப்பு மற்றும் காரமான உணவு அனைவருக்கும் பொருந்தாது. எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.
தயிர்:
தயிரில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. எனவே உணவில் தயிர், லஸ்ஸி, தயிர் பச்சடி, மோர், பனீர் ஆகியவற்றை எப்போதும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அக்ரூட், பாதாம் பருப்புகள்:
பூசணி, சூரியகாந்தி விதைகள், அக்ரூட், பாதாம் பருப்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைட்டமின் ஈ மற்றும் பி6 மற்றும் மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது. உணவில் இந்த கலந்த விதைகளை 1 டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பழங்கள் - காய்கறிகள்
சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவைகளிலும் ப்ரோக்கோலி, உருளைக்கிழங்கு, குடைமிளகாய் மற்றும் பச்சை இலை காய்கறிகளிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
பருப்பு வகைகள்
கோதுமை, பார்லி மற்றும் பருப்பு வகைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அவை உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, ஊட்டச்சத்துக்களால் உடலை நிரப்புகின்றன.
- அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது
- தமிழகத்தில் சராசரியாக வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 33.4 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது
காலநிலை மாற்றம் :
உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் தண்ணீர் பஞ்சம், வெப்ப அலை என்ற ரூபங்களில் ருத்ர தாண்டவம் ஆடத்தொடங்கியுள்ளது. ஒருபுறம் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்கள் தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் காலநிலை குழப்பத்தால் வெயிலுடன் சேர்ந்து திடீரென கொட்டித்தீர்க்கும் கனமழையும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அதிகரிக்கும் வெப்பத்தால் தமிழகமும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழக மக்களுக்கு பீதியைக் கிளப்பும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஆய்வு முடிவுகள் :
அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, தொடர் நகரமயமாக்கல் காரணமாக தமிழக நகரங்கள் உட்பட இந்தியாவில் உள்ள 21 நகரங்களில் அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரித்து 2050 வாக்கில் தற்போது வெயில் காலத்தில் உள்ளதை விட இரண்டு மடங்கு வெப்பம் வருடத்தின் 8 மாதங்களுக்கும் வீசி மக்களை தாங்கமுடியாத அவதிக்குள்ளாக்கும் என்று தெரியவந்துள்ளது.

தமிழகத்துக்கு என்ன பாதிப்பு?
தமிழகத்தில் கடந்த 30 வருடங்களாக சராசரியாக வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 33.4 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது. மேலும் சராசரி மழைப்பொழிவு 763 மி.மீ முதல் 1432 மி.மீ ஆக உள்ளது.
தற்போதுள்ள சராசரி வெப்பநிலை 2050 இல் 0.4 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும் என்றும் 2080 இல் 1.3 டிகிரி அளவுக்கு செல்ஸியஸ் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 2100 ஆம் ஆண்டு வாக்கில் சராசரி வெப்ப நிலை 1.7 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும்.

தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வரும் காலங்களில் அதிக வெப்பம் பதிவாகும். அதுமட்டுமின்றி சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் வெப்ப அலை தற்போது உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக வீசும். குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிக பாதிப்பு இருக்கும்.

வெயில் மட்டுமின்றி வழக்கத்துக்கு மாறான மழைப்பொழிவும் தமிழகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் இயல்புக்கு மாறாக குறிகிய காலத்திலேயே அதிக மழை கொட்டித்தீர்க்கும். 2050 இல் சராசரி மழைப்பொழிவு 4 சதவீதமும், 2080 இல் 11 சதவீதமும், 2100 இல் 16 சதவீதமும் அதிகரிக்கும்.

மாசுபாடு அதிகமாகும் பட்சத்தில் இதுவே 2050 இல் 7 சதேவீதமாகவும், 2100 இல் 26 சதவீதமாகவும் கூட அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் இந்த சராசரி மழைபொழிவின் மாற்றம் கண்கூடாக தெரியும். 24 மணிநேரத்தில் 6 முதல் 7 சென்டிமீட்டர் என்ற அளவில் கூட மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
- பனிப்பாறைகள் வெள்ளை நிறத்தில் காட்சியளித்தன.
- புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
காலநிலை மாற்றத்தின் பாதிப்பு காரணமாக உலகின் பல நாடுகளிலும் பனிப்பாறைகள் இழந்து வருகின்றன. இந்நிலையில் இதனை உணர்த்தும் வகையில் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக டங்கன் போர்ட்டர் என்ற பயனர் எக்ஸ் தளத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், 15 வருடங்களுக்கு முன்பு அவர் ஒரு பெண்ணுடன் சுவிட்சர்லாந்தில் உள்ள ரோன் பனிப்பாறையின் முன்பு நின்று கொண்டு எடுத்த புகைப்படம் உள்ளது.
அதில், பனிப்பாறைகள் வெள்ளை நிறத்தில் காட்சியளித்தன. 2-வது புகைப்படத்தில் அவர் தற்போது அதே பனிப்பாறையின் முன்பு நின்று எடுத்த புகைப்படம் உள்ளது. அதில் பனிப்பாறை பொலிவிழந்து காணப்படுகிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- சுமார் 100 டன்களுக்கும் அதிகமான மீன்கள் இதுவரை கரை ஒதுங்கியுள்ளன.
- இதனால் அங்கு ஒரு மாத காலத்துக்கு அவசர நிலை அறிவிக்கும் அளவுக்கு நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது.
கிரீஸ் நாட்டில் மத்திய பகுதியில் உள்ள துறைமுக நகரமான வோலோஸ் [Volos] நகரத்தில் உள்ள கடற்கரை மற்றும் நீர் நிலைகளிலிருந்து மீன்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து மிதப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு ஒரு மாத காலத்துக்கு அவசர நிலை அறிவிக்கும் அளவுக்கு நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது.
சுமார் 100 டன்களுக்கும் அதிகமான மீன்கள் உயிரிழந்து மிதக்கின்றன. காலநிலை மாற்றம் காரணிகளால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகப்படியான மீன்களின் உயிரிழப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அழுகிய மீன்களால் உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயமும் உள்ளது.
உயிரிழந்த மீன்களை அகற்றும் பணியில் உள்ளூர் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே இறந்த நிலையில் மீன்கள் கரை ஒதுங்கி குமிந்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.