என் மலர்
நீங்கள் தேடியது "TN Assembly election"
- வியர்வை சிந்தி உழைத்த மக்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது.
- தி.மு.க.தான் தங்களுக்கு போட்டி என நடிகர் விஜய் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து.
சின்னாளபட்டி:
100 நாள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், பழனி, நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆத்தூர் சட்ட மன்றத்திற்குட்பட்ட பித்தளைப்பட்டி பிரிவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில்,
தமிழகத்திற்கு தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் கடந்த 4 மாதமாக வழங்க வேண்டிய ரூ.4039 கோடியை மத்திய அரசு வழங்காமல் உள்ளது. இதனால் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வரவு வைக்கப்படாமல் உள்ளது. கிராமப்புற பெண்கள் இத்தொழில் மூலம் சுய சார்பு நிலையை அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு தினசரி ரூ.240 முதல் ரூ.270 வரை சம்பளம் கிடைக்கிறது. வியர்வை சிந்தி உழைத்த மக்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது.
தமிழகத்திற்கு இதேபோல் கல்வி நிதியை வழங்காமலும், மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. தமிழகம் அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் மத்திய அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தும் துறை சார்ந்த அமைச்சருக்கு மனு அளித்தும் இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை. எனவே மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்தும் பிரதமர் மோடியின் செவிகளுக்கு விழும்வரை எங்களது போராட்டம் தொடரும்.
நிதியை விரைவில் ஒதுக்காவிட்டால் எங்களது அடுத்தகட்ட போராட்டமும் தொடரும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி, ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் மீடியா சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுககு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடிகர் விஜய் கூறியதைபோல தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடைபெறவில்லை. மன்னர் ஆட்சி என்றால் எப்படி இருக்கும் என்று அவருக்கு தெரியாது. மக்கள் வாக்களித்து அவர்களுக்காக செயல்படும் திராவிட மாடல் அரசாக தி.மு.க. விளக்கி வருகிறது. தி.மு.க.தான் தங்களுக்கு போட்டி என நடிகர் விஜய் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு யாரும் போட்டி கிடையாது. மக்கள் ஆதரவுடன் மீண்டும் வருகிற தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும்.
- தி.மு.க. அரசின் செயல்பாடுகளால் மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
புதுடெல்லி:
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர் தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு மிக மிக முன்னேறிய மாநிலம் ஆகும். ஆனால் சமீப காலமாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி முழுமையாக பின்தங்கி உள்ளது. அதற்கு தி.மு.க. அரசின் தவறான கொள்கைகளால் ஏற்பட்டு இருக்கும் குழப்பங்கள்தான் முக்கிய காரணம் ஆகும்.
தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை. அங்குள்ள தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு ஓடிக் கொண்டு இருக்கின்றன. அந்த மாநிலத்தில் பலருக்கும் அதிக மாத சம்பளம் கிடைக்கிறது. என்றாலும் அவர்கள் கூட வேறு மாநிலத்துக்கு செல்வதையே விரும்புகிறார்கள்.
தமிழ்நாட்டில் தற்போது நடந்து வரும் தி.மு.க. ஆட்சி மக்களுக்கு எதிராக நடந்து வருகிறது. மொழி கொள்கையை முன்வைத்து அவர்கள் பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழில் நடத்துமாறு நாங்கள் கூறினோம். அதற்கு இதுவரை அவர்கள் பதில் சொல்வதில்லை.
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் உள்ள பாடப்புத்தகங்களை இன்னும் அவர்கள் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யவில்லை. தி.மு.க. ஊழலில்தான் மிதக்கிறது. அதனால்தான் தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன.
தி.மு.க. அரசின் செயல்பாடுகளால் மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மக்கள் நினைப்பதை உணர முடிகிறது. சமீப காலமாக அங்கு சென்று வரும்போது இதை உணர்ந்து இருக்கிறேன்.
எனவே 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும். தி.மு.க.வை மக்கள் நிச்சயம் பதவியில் இருந்து அகற்றுவார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக தொடர்ந்து பேசி வருகிறது.
பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் உரிய தகவல்கள் வெளியிடப்படும். தற்போது பேச்சுவார்த்தை திருப்திகரமாக சென்று கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜ.க. சொல்லும் குற்றச்சாட்டுகளை திசை திருப்பும் நோக்கத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்துகிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசுகிறார்கள். மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு பற்றி இதுவரை எதுவும் சொல்லவும் இல்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்படி இருக்கும் போது தி.மு.க. ஏன் இதை பிரச்சனையாக இப்போது எழுப்ப வேண்டும். 2026-ம் ஆண்டு தேர்தலை மனதில் கொண்டு தான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள். 5 ஆண்டுகளாக ஊழலில் திளைத்தவர்கள் இப்போது திடீரென விழித்துக் கொண்டு இப்படி செயல்பட ஆரம்பித்து உள்ளனர்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் மேற்கொள்ளப்படும் போது அந்த சமயத்தில் யாருக்கும் நிச்சயம் அநீதி ஏற்படாது. இதை என்னால் .0001 சதவீதம் உறுதியாக தமிழக மக்களுக்கு சொல்ல முடியும்.
இந்தி திணிப்பு என்றும் தி.மு.க. ஆட்சியாளர்கள் போர்க்கொடி உயர்த்துகிறார்கள். தமிழகத்தில் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளை தமிழில் நடத்தாமல் இருப்பதுதான் உண்மையில் தமிழுக்கு எதிரானது.
மத்திய அரசின் கல்வி கொள்கை தாய்மொழியை வளர்ப்பதாகவே அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக மக்கள் மத்தியில் தி.மு.க. அரசு மீது எந்த அளவுக்கு வெறுப்பு உள்ளது என்பதை அறிய முடிகிறது.
- துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க. என்ற மன்னர் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை தொடர்ந்து நடைபெறும்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
தமிழகத்தில் 32 ஆண்டு காலம் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஆட்சியில் அமர்ந்து முத்தான பல்வேறு திட்டங்களை, வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை தந்தது அ.தி.மு.க.தான். ஆனால் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. 4 ஆண்டுகள் முடியும் தருவாயில் கூட மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரிச்சுமைகளை மக்கள் மீது திணித்து வருகிறார்கள். அமைதி பூங்காவான தமிழகம் இன்றைக்கு அமளிக்காடாக மாறி இருக்கிறது. இதனை மாற்றும் சக்தி வாக்காளர்களாகிய மக்களிடம் உள்ளது.
எனவே தான் கடந்த கால அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும், தி.மு.க. ஆட்சியில் தொடரும் வேதனைகளையும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் எடப்பாடியாரின் வழிகாட்டுதலோடு அம்மா பேரவை சார்பில் வீதிவீதியாக, வீடு, வீடாக சென்று திண்ணை பிரசாரம் என்ற பெயரில் துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி வருகிறோம். அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் திண்ணைப் பிரசாரம் நடந்து வருகிறது.
இதுவரை 5 வாரங்கள் நடத்தப்பட்டுள்ளது. அடுத்த வெள்ளிக்கிழமை 6-வது வாரமாக 82 பகுதியிலும் நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு லட்சம் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம். இதில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வமாக பங்கேற்கிறார்கள். வியாபாரிகள் பொதுமக்களும் எங்களின் துண்டு பிரசுரங்களை ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்கிறார்கள்.
இதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் தி.மு.க. அரசு மீது எந்த அளவுக்கு வெறுப்பு உள்ளது என்பதை அறிய முடிகிறது. எனவே இந்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க. என்ற மன்னர் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை தொடர்ந்து நடைபெறும்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் வரை தொடர்ந்து இந்த திண்ணை பிரசாரம் நடக்கும். ஒவ்வொரு வாரமும் வேறு மாதிரியான துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது. வருகிற 2026 பொது தேர்தலில் மக்கள் அ.தி.மு.கவை மீண்டும் தமிழக ஆட்சி அரியணையில் ஏற்றுவார்கள். பொதுச் செயலாளர் எடப்பாடியார் மக்களின் முதலமைச்சராக பதவியேற்பார். அப்போது தி.மு.க. அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. அரசின் வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்கள் அனைத்தும் மீண்டும் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கும்.
வரிச்சுமையும் மக்களிடம் இருந்து இறக்கி வைக்கப்படும். எனவே இந்த மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திட அம்மா பேரவை நடத்தி வரும் திண்ணை பிரசாரம் ஒரு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதற்கும் அவர் முடிவு செய்திருக்கிறார்.
- தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகிறது.
அந்த வகையில் கமல்ஹாசன் நாளை முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியினருக்கு முக்கிய அறிவுரைகளை வழங்குகிறார்.
வருகிற ஜூலை மாதம் தி.மு.க. சார்பில் மேல்சபை எம்.பி.ஆக இருக்கும் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.
இதற்காக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதற்கும் அவர் முடிவு செய்திருக்கிறார். அப்போது தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றியும் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் தி.மு.க.வுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமல்ஹாசனையும் களமிறக்க தி.மு.க. தலைவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களில் கமல்ஹாசனை அதிக அளவில் சுற்றுப்பயணம் செய்ய வைத்து அவருக்கு பதிலடி கொடுக்கலாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் 2026-ம் ஆண்டு தேர்தல் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட இருப்பதாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- எங்களின் ஒரே அரசியல் எதிரி தி.மு.க. தான்.
- தி.மு.க. உடைத்தால் மண்குடம். நாங்கள் உடைத்தால் பொன் குடமா?
மதுரை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் ஒருபோதும் அ.தி.மு.க. கூட்டணி அமைக்காது என்று கூறி வந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிருபர்கள் சந்திப்பில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு அது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இது அரசியல் களத்தில் சில அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் மனமாற்றம் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறி இருக்கிறார். அதில் எந்த தவறும் இல்லை. எங்களின் தலைவர் புரட்சித்தலைவி அம்மா தி.மு.க. என்ற தீய சக்தியை ஒழிக்க உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வை லட்சியத்தோடு வளர்த்தார்.
எங்களின் ஒரே அரசியல் எதிரி தி.மு.க. தான். அன்றைக்கு காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணியை முறித்தபோது இனியொரு போதும் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை. அப்படி கூட்டணி வைத்தால் அது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என்று கருணாநிதி கூறினார். ஆனால் அதே கருணாநிதி தான் சொன்னதையும் மீறி காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டார் .
தி.மு.க. உடைத்தால் மண்குடம். நாங்கள் உடைத்தால் பொன் குடமா? தற்கொலைக்கு சமம் என்று சொன்ன கருணாநிதியே தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு காங்கிரசுடன் கூட்டணி வைத்தார். அந்த அளவுக்கு கூட எங்கள் அண்ணன் (எடப்பாடியார்) இப்போது தெரிவிக்கவில்லை. எனவே தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
செல்லூர் ராஜூவின் இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களிலும், அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
- 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்கிற முனைப்போடு விஜய் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
- 2 அணிகளுக்கு போட்டியாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் 3-வது அணியும் களம் காண்கிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக திகழும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள விஜய் தேர்தலை சந்திக்க முழு வீச்சில் தயாராகி வருகிறார்.
இதற்கு முன்னோட்டமாக கடந்த ஆண்டு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தனது கையால் பரிசு வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டும் அதற்கான விழா வருகிற 28-ந் தேதியும், அடுத்த மாதம் 3-ந்தேதியும் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
விஜயின் இந்த உதவி மற்றும் பாராட்டு எதிர்கால இளம் வாக்காளர்களாகிய மாணவ-மாணவிகளின் மத்தியிலும், அவர்களது பெற்றோர்களின் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்கு தகுதிவாய்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் பலரும் விஜயின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். இதையெல்லாம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்கிற முனைப்போடு விஜய் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

தமிழக அரசியல் களத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் உள்ளன.
இந்த 2 அணிகளுக்கு போட்டியாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் 3-வது அணியும் களம் காண்கிறது. இந்த அணிகளுக்கெல்லாம் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் விஜயின் அரசியல் நடவடிக்கைகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சக்கணக்கான ரசிகர்கள், பெண்கள் மற்றும் பொதுவான வாக்காளர்கள் என பலதரப்பட்டவர்களும் விஜயின் அரசியல் வருகையை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இதுவே வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜயின் வெற்றிக்கு கை கொடுக்கும் என்று அரசியல் நோக்கர்களும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதுபோன்ற வாக்காளர்களால் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 20 சதவீதம் அளவுக்கு வாக்குகளை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் விஜய் கைகோர்க்க வாய்ப்பு இருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் விஜய்யும், சீமானும் ஒன்று சேர்ந்து தேர்தலில் சந்தித்தால் அது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இப்படி தமிழக வெற்றிக் கழகமும், நாம் தமிழர் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அது நிச்சயம் திராவிட கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிரான புதிய கூட்டணியாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 28 சதவீத வாக்குகளை பெற்று இந்த புதிய கூட்டணி ஆட்சியை கைப்பற்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருப்பவர்கள் அரசியல் களத்துக்கு புதியவர்கள். இதனால் அனுபவம் வாய்ந்த பலரையும் விஜய் தனது அரசியல் பயணத்துக்கு துணையாக சேர்த்துக் கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் சீமானின் அரசியல் அனுபவம் விஜயின் தேர்தல் வெற்றிக்கு நிச்சயம் உதவும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி அமைப்பதற்கு அ.தி.மு.க. பெரிதும் விரும்பியது. ஆனால் சீமான் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று தெரிவித்துள்ள விஜய் புதியவர்களோடு சேர்ந்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று ஏற்கனவே கூறியுள்ளார்.
எனவே விஜயுடனான கூட்டணி என்பதில் சீமானுக்கும் எந்தவித சங்கடத்தையும் ஏற்படுத்தாது என்பதே நாம் தமிழர் கட்சியினரின் கருத்தாக உள்ளது.
இப்படி இருவரும் கைகோர்த்தால் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இதனால் தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம் ஏற்படுமா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்படத் தொடங்கி உள்ளது.
- பாராளுமன்ற தேர்தலில் சரியாக கூட்டணி அமைக்காததே நாம் தோல்வி அடைவதற்கு காரணமாக அமைந்து விட்டது என்று பெரும்பாலான நிர்வாகிகள் குற்றம் சாட்டினார்கள்.
- கூட்டணி பற்றிய கவலையை விட்டு விட்டு ஒற்றுமையோடு பணியாற்றுங்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது ஏன்? என்பது பற்றி அந்த கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த 10-ந்தேதி அன்று தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று 3-வது நாளாக நடைபெற்றது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல் நாள் அன்று ஆலோசனை நடத்தப்பட்டது.
2-வது நாளான நேற்று சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
3-வது நாளான இன்று காலையில் முதலில் அரக்கோணம் தொகுதியை சேர்ந்த நிர்வாகிகளுடனும், பின்னர் தஞ்சை தொகுதி நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அரக்கோணம் தொகுதி நிர்வாகிகளின் கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த கூட்டம் 11.45 மணியளவில் முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கட்சியின் வளர்ச்சி பணி பற்றியும் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்தும் எடப்பாடி பழனிசாமி முன்னணியில் காரசாரமான கருத்துக்களை தெரிவித்தார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் சரியாக கூட்டணி அமைக்காததே நாம் தோல்வி அடைவதற்கு காரணமாக அமைந்து விட்டது என்று பெரும்பாலான நிர்வாகிகள் குற்றம் சாட்டினார்கள். பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் பிரசாரம் செய்ததும் கட்சியினர் ஒருங்கிணைப்பு இல்லாததும் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் என்று நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்து அதற்கேற்ற வகையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும். அப்போது தான் அவர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள். 2026 -ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கும் இப்போதே அனைவரும் பணியாற்ற தொடங்கி விடுங்கள்.
அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி குறையாமல் அப்படியே தான் உள்ளது. எனவே தோல்வியை கண்டு துவண்டு விடாமல் வெற்றி பெற வேண்டும் என்று பணியாற்றுங்கள். தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பெண் வாக்காளர்களும் தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். அதனை பயன்படுத்தி வருகிற சட்டசபை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். கூட்டணி பற்றி இங்கு பலரும் குறிப்பிட்டு பேசினீர்கள். 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வெற்றி வியூகத்தை நான் அமைத்து வைத்திருக்கிறேன்.
எனவே நிச்சயம் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையும். அதனால் கூட்டணி பற்றிய கவலையை விட்டு விட்டு ஒற்றுமையோடு பணியாற்றுங்கள். மாவட்ட நிர்வாகிகள் சிலர் கீழ் மட்டத்தில் உள்ள கட்சியினரை மதிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் சில இடங்களில் உள்ளன. அவற்றையெல்லாம் சரி செய்து மாவட்ட செயலாளர் கூறும் தொகுதியில் உள்ள முன்னணி நிர்வாகிகளும் கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அரக்கோணம் மாவட்ட செயலாளரான ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-
23 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.வில் நடைபெறும் இந்த நேர்காணல் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சி கட்டிலில் அமர வைக்கும் நேர்காணலாக அமைந்துள்ளது.
1999-ம் ஆண்டு அப்போது கட்சியை வழி நடத்திய ஜெயலலிதா இதைபோன்று நேர்காணல் நடத்தினார். அதன் பின்னர் 2001-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார்.
அதேபோல வருகிற தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவது உறுதி. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 18 அமாவாசைகள் உள்ளன. இன்று நடந்த நேர்காணலின் போது எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனக்கூறி எங்கள் அனைவருக்கும் பூஸ்ட் கொடுத்துள்ளார். எனவே அ.தி.மு.க. வினர் உற்சாகமாக பணியாற்றி எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் அனைவரும் மறந்து விட்டோம்.
- 2026-சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார்.
மதுரை:
மதுரையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி கே.கே.நகர் ரவுண்டானா பகுதியில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
அனுபவி ராஜா அனுபவி, இருக்கும்போதே அனுபவி என ஆட்சியில் இருக்கும் போதே அனைத்தையும் அனுபவிப்பதில் கலைஞர் குடும்பம் சிறந்த குடும்பம். மக்கள் வறுமையிலும், வறட்சியிலும் இருந்தபோது தள்ளாத வயதில் மானாட மயிலாட பார்த்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று சைக்கிள் ஓட்டி விளம்பரம் செய்கிறார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு தனது மகனோடு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பெண் அதிகாரியான மாவட்ட கலெக்டரை இருக்கையில் இருந்து எழ வைத்திருக்கிறார். இந்த ஆட்சியில் அதிகாரிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.
உலகத் தமிழ் மாநாடு தி.மு.க. நடத்திய போது உலகத்திலிருந்து வந்த அறிஞர்கள் எல்லாம் கீழே அமர வைக்கப்பட்டார்கள். கலைஞர் குடும்பம் மட்டும் மேடையில் அமர வைக்கப்பட்டார்கள். அனுபவிக்கிறார்கள், அனுபவிக்கட்டும். இன்னும் ஒரு வருடம் தான். அதற்கடுத்து மக்கள் இவர்களை எங்கே வைப்பார்கள் என்று தெரியாது. ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் அனைவரும் மறந்து விட்டோம்.
எம்.ஜி.ஆரை யாரும் வென்றது கிடையாது. கடவுளை யாரும் கண்டது கிடையாது. 2026-சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுபான்மையின மக்களின் வாக்குகளை குறிவைத்து கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. தனியாக நின்றது.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலால் தமிழகத்தில் என்ன மாற்றம் நடந்து விடப்போகிறது.
மதுரை:
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மதுரை வருகை தந்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருச்செந்தூரில் பேசுகையில் திருப்பதி சென்றால் ஒரு நாள் முழுவதும் காத்திருக்கிறார்கள். இங்கே சில மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய முடியாதா? என்று தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் லட்சணம் இதிலிருந்தே தெரிகிறது.
பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகிறது. பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சவுகரியங்களை கோவில் வளாகத்தில் ஏற்படுத்த வேண்டும். 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் போது தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை இருக்காது. தி.மு.க. ஆட்சி இன்னும் 15 அமாவாசைகள் தான் தாங்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிக்கும் வரை எத்தனை அமாவாசை வரும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். ஐந்து முறை ஆண்ட கட்சியான அ.தி.மு.க., அண்ணாமலை சொன்னதால்தான் கூட்டணி முறிவு ஏற்பட்டது என்று கூறுவதை நான் ஏற்க மாட்டேன். சிறுபான்மையின மக்களின் வாக்குகளை குறிவைத்து கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. தனியாக நின்றது.
தி.மு.க. மீது பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தால் மக்களின் கோபம் தெரியும். வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்த சமய அறநிலையத்துறையை அகற்றுவோம் என்ற எங்களது கருத்துக்கு எத்தனை கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும் என்று தெரியவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கொள்கை ரீதியில் இணையும் கட்சியுடன் தேர்தலை சந்திக்க உள்ளோம். பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பேசியிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின்போது 36 பக்க வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ரூ.ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர்கள் கண், காதுகளை திறந்து வைத்து பார்க்க வேண்டும். பிப்ரவரி மாதம் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் தமிழகத்திற்கு பெரிய அளவிலான திட்டங்களுக்கு நிதிகள் ஒதுக்கப்படும். ஆனால் வேண்டுமென்றே இவர்கள் ஆட்சியினுடைய லட்சணத்தை மறைப்பதற்காக தினமும் மத்திய அரசின் மீது குறை சொல்வதை மட்டுமே ஒரு முழு நேர வேலையாக தி.மு.க. செய்து வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலால் தமிழகத்தில் என்ன மாற்றம் நடந்து விடப்போகிறது. இடைத்தேர்தல், இடைத்தேர்தலுக்கு இடைத்தேர்தல், இப்போது ஒரு தேர்தல் என ஐந்து வருடத்தில் நான்கு முறை மக்கள் வாக்களித்தால் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் குறையும், தேர்தலால் மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
பிரதமர் தமிழகம் வரும் போது, முதலமைச்சர் போட்டி போட்டுக்கொண்டு சந்திக்கிறார். இந்த சந்திப்பு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அரசின் மீது இருக்கும் வெறுப்பை மறைப்பதற்காகவே கவர்னரை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர். கவர்னர் குறித்து அவதூறாக தி.மு.க.வினர் போஸ்டர் ஒட்டி வருகிறார்கள்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் வேண்டும் என்று மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியே கூறியிருக்கிறார். பா.ஜ.க. நிர்வாகிகள் மீது போலீசார் வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சீட் குறைந்தாலும் மு.க. ஸ்டாலின்தான் ஆட்சி அமைப்பார்.
- முக்கியமாக புகழ்ந்து பேசுபவர்களை அருகில் வைத்து கொள்ளாதீர்கள்.
கேரள மாநிலம் ஸ்ரீசூரிய மங்கலம் ஸ்ரீ பகளா முகி தேவி கோவில் குருஜி ஜோதிடப்படி 2026-ல் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்று கணித்து கூறியிருக்கிறார். அதை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பிரபலமான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஜாதகங்களை சேர்த்து அஷ்டமங்கள பிரசன்னமும் பார்த்த பலன்களைத்தான் சொல்கிறேன்.
தி.மு.க. ஜாதகப்படி 2026 அக்டோபர் மாதம் வரை சுக்கிர திசை நடக்கிறது. சுக்கிரன் லக்னத்தோடு 11-ம் இடத்தில் இருக்கிறது. ஆட்சி எப்படி கையில் வந்தது என்றால் 2021 மே மாதத்தில் சனி புத்திகாலமாக இருந்தது. அதுவும் சுக்கிரனோடு 11-ம் இடத்தில் இருந்ததால் அதிகமான சீட் வாங்கி ஆட்சி அமைக்க முடிந்தது.
2025 ஆகஸ்டு முதல் 2026 அக்டோபர் மாதம் வரைக்கும் சுக்கிர திசை காலத்தில் கேது புத்திகாலமாகும். தசாநாதனோடு 12-ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் இருக்கிறது. சனி பார்வை, செவ்வாய் பார்வை உள்ளது.
கேது புத்தி காலத்தில் தேர்தல் வருவதால் நிச்சயமாக மறுபடியும் தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும். ஆனால் சீட் குறையும். கூட்டணியில் சில கட்சிகள் வெளியே போகும். சில கட்சிகள் உள்ளே வரும்.

சீட் குறைந்தாலும் மு.க. ஸ்டாலின்தான் ஆட்சி அமைப்பார். அந்த ஆட்சி காலம் முடிவதற்குள் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
அ.தி.மு.க.வுக்கு சனி திசை காலம் நடக்கிறது. 6-ல் இருக்கும் சனி அவ்வளவு நல்லதல்ல. அதுமட்டுமல்ல மேடையில் ஏறி தலைவர்களெல்லாம் ஜெயலலிதா அம்மையாரை கடவுளுக்கு மேலாக புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் அந்த அம்மையாரின் ஆத்ம சாந்திக்கு ஏதாவது செய்தார்களா? கஷ்டமல்லவா? கட்சி இப்போதும் ஒவ்வொரு நாளும் சீரழிந்து கொண்டு தான் வருகிறது.
அதற்கு காரணம் அந்த அம்மையாரின் ஆத்மாவுக்கு சாந்தி கிடைக்கவில்லை. இன்னமும் அந்த ஆத்மா அலைந்து கொண்டுதான் இருக்கிறது. முதலில் மறைந்த பிறகு ஆட்சிக்கு வந்ததும் சாஸ்திர விதிப்படி அதை முதலில் செய்து இருக்க வேண்டும்.
அம்மையார் ஆஸ்பத்திரியில் இருந்தபோது கோவில் கோவிலாக சென்றார்கள். ரோட்டில் வைத்து கூட ஹோமம் நடத்தினார்கள். அதெல்லாம் நாடகம்தான். அதனால் எந்த பலனும் கிடைக்காது. சாஸ்திர விதிப்படி, ஆத்ம சாந்தி நடத்தினால்தான் கட்சியில் ஒற்றுமை ஏற்படும்.
அதில்லாமல் இப்போது நாங்கள் ஆட்சிக்கு வரலாம். தி.மு.க.வை கீழே இறக்கலாம் என்று நினைத்தால் எதுவும் நடக்காது. தி.மு.க.வுக்கும் கேது புத்தி நல்லதல்ல. ஆனால் அ.தி.மு.க. பலவீனமாக உள்ளது. அஷ்ட பிரசன்னபடியும் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். ஆனால் சீட் குறையும் அவ்வளவுதான்.
அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலக்கத்தில் சீட்டுக்கு மேலாக போகாது. ஆத்ம சாந்தி செய்துவிட்டு இப்போது இருக்கும் தலைமையின் மைனசை மாற்ற வேண்டும். ஆனாலும் ஆட்சிக்கு வர முடியாது. சீட் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும்.
என்ன மாதிரி கூட்டணி வைத்தாலும் மாற்றம் வராது. தி.மு.க.வினரை பார்த்து கடவுள் நம்பிக்கை கிடையாது என்கிறார்கள். நான் அதை நம்பவில்லை. அவர்களில் பலர் என்னிடம் வருகிறார்கள். பரிகாரங்கள் செய்கிறார்கள். எனவே தி.மு.க.காரர்களெல்லாம் நாத்திகர்கள் என்பதும் மூடத்தனம்தான்.
மறுபடியும் நாங்கள் தான் என்ற அகங்காரம் கூடாது. முக்கியமாக புகழ்ந்து பேசுபவர்களை அருகில் வைத்து கொள்ளாதீர்கள். உங்கள் மைனசை எடுத்து சொல்பவர்களை அருகில் வைத்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அருகருகே அமர்ந்தும் ராமதாஸ்- அன்புமணி பேசிக்கொள்ளவில்லை.
- கடந்த மாதம் நடந்த சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் மேடையிலேயே இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்தது.
சேலத்தில் இன்று நடந்த பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி பேசினார்.
அப்போது, வரவிருக்கும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களாக அன்புமணி கூறியதாவது:-
நெக்ஸலிசம் என்று ஒன்று தமிழ்நாட்டில் இல்லாமல் போனதுக்கு காரணம் மருத்துவர் அய்யா. எவ்வளவோ இருக்கு.. பேசிக்கிட்டே போகலாம்... எவ்வளவு செய்தீர்கள் என்று மக்களுக்கு சொல்லலாம் என்றார்.
அப்போது ஒரு நிர்வாகியின் பெயரை குறிப்பிட்டு உன்னையும் தான் சேர்த்து சொல்றேன். உன் தொகுதியில வாங்குனியே ஓட்டு... உட்காரு. 52ஆயிரம் ஓட்டு வாங்குன தொகுதி அதெல்லாம். இது எல்லாருக்கும் தான் சொல்றேன். 10 மாதம் தான் இருக்கு... களத்துல இறங்கணும். வெறி வரணும். கோபம் வரணும்... என்றார் மீண்டும் அதே நிர்வாகியிடம் வருமா? என கேட்டு பின், உன் முகத்த பார்த்தா வெறி வர மாதிரி தெரியலயே எனக்கு... களத்தில் இறங்குகள். இரண்டில் ஒன்று பார்த்துக்கலாம். என்று சொல்லிக்கொண்டு மற்றொரு நிர்வாகியின் பெயரை குறிப்பிட்டு என்ன கோவம் வந்துருச்சா என கேட்டார்.
இதனிடையே, பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அருகருகே அமர்ந்தும் ராமதாஸ்- அன்புமணி பேசிக்கொள்ளவில்லை. கடந்த மாதம் நடந்த சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் மேடையிலேயே இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொரு பகுதிகளிலும் ஆயிரம் வாக்காளர்களை கவர்வதற்காக 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
- தி.மு.க. இளைஞர் அணியினரும் தமிழக அரசின் சாதனைகளை சொல்லி தற்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
ஆளும் கட்சியான திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதனை மனதில் வைத்து தி.மு.க. தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி மக்களை மீண்டும் தி.மு.க.வுக்கு வாக்களிக்க செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஒவ்வொரு பகுதிகளிலும் ஆயிரம் வாக்காளர்களை கவர்வதற்காக 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு தலைமை தாங்குபவராக ஒருவர் இருப்பார். அவருக்கு கீழே 10 பேர் செயல்படுவார்கள்.
இதுபோன்று தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில வீடுகளை கணக்கெடுத்து அந்த வீடுகளில் வசித்து வரும் ஆயிரம் வாக்காளர்களை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு குழுவினரிடமும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதன்படி இந்த 11 பேர் கொண்ட குழு தீவிரமாக களமிறங்கி தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு சென்று வாக்களிப்பவர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களிடம் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி மீண்டும் தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கள்.
தமிழக அரசின் சாதனைகள் தொடர்வதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சி நீடிப்பதற்கும் திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்பது போன்ற பிரசாரங்களை இப்போதே மேற்கொண்டு வருகிறார்கள்.
இதே போன்று தி.மு.க. இளைஞர் அணியினரும் தமிழக அரசின் சாதனைகளை சொல்லி தற்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள். இது தொடர்பாக ஒவ்வொரு பகுதிகளிலும் இளைஞரணி நிர்வாகிகளின் கூட்டத்தை போட்டு அவர்களுக்கு முக்கிய அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்ட செயலாளர்களின் ஆலோசனையின் பெயரில் தமிழகம் முழுவதும் இது போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இளைஞர் அணியில் உள்ள இளம் வயது உடைய வாலிபர்கள் தங்களது பகுதிகளில் உள்ள இளம் வாக்காளர்களையும் பெண்கள், முதியவர்களையும் கவரும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தி.மு.க. இளைஞர் அணியினர் பம்பரமாக சுழன்று பணியாற்றத் தொடங்கி இருக்கிறார்கள். இப்படி 2026-ம் ஆண்டு தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்கிற கணக்கை போட்டு தி.மு.க. நிர்வாகிகள் கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கி இருக்கிறார்கள்.
இதன் மூலம் தி.மு.க. நிர்வாகிகள் முன்கூட்டியே சுறுசுறுப்புடன் தேர்தல் பணியை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.