ஹூண்டாய் ஐ20 டீசல் விற்பனை நிறுத்தம்?
- ஹூண்டாய் நிறுவனம் தனது ஐ20 மாடலின் டீசல் வேரியண்ட் விற்பனையை நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய புகை விதிகள் அமலுக்கு வர இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் புதிய பிஎஸ்6 புகை விதிகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக பல்வேறு காம்பேக்ட் மற்றும் மிட்-சைஸ், சில ஆடம்பர வாகனங்களில் டீசல் என்ஜின்கள் நிறுத்தப்பட்டது. அதிக முதலீடு மற்றும் டீசல் திறன் வாகனங்களுக்கான மோகம் குறைவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதே போன்று அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி புதிய புகை விதிகள் அமலுக்க வர இருக்கிறது. அடுத்த ஆண்டு ரியல் டிரைவிங் எமிஷன் விதிகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சிறிய டீசல் என்ஜின் கொண்ட வாகனங்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருக்கிறது.
இவ்வாறு புதிய புகை விதியில் பாதிக்கப்படும் முதல் கார் மாடலாக ஹூண்டாய் ஐ20 டீசல் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது ஹூண்டாய் ஐ20 மற்றும் டாடா அல்ட்ரோஸ் என இரு ஹேச்பேக் கார்கள் மட்டும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் டைக்கின்றன. முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 நியோஸ், ஆரா மாடல்களின் டீசல் வேரியண்ட் விற்பனையை நிறுத்தியது.
இவற்றில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட 75 பிஎஸ் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருந்தது. ஹூண்டாய் ஐ20 மாடலில் தற்போது இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின்கள் மற்றும் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.