கிரிக்கெட்

ஷாருக்கான் அதிரடி அரைசதம்: மதுரையை வீழ்த்தி கோவை அணி அபார வெற்றி

Published On 2024-07-24 01:11 GMT   |   Update On 2024-07-24 01:11 GMT
  • மதுரை பாந்தர்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின.
  • ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நெல்லை:

8-வது டி.என்.பி.எல். தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் தற்போது நெல்லையில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். சாய் சுதர்சன் ஓரளவு விளையாடி 34 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

19-வது ஓவரில் கோவை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 4 ரன்களை எடுத்தது. கேப்டன் ஷாருக் கான் 5 சிக்சர், 2 பவுண்டரி விளாசி 26 பந்தில் 51 ரன்கள் குவித்து அவுட்டானார்.

இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது.

மதுரை அணி சார்பில் அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டும், மிதுன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 164 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி கோவையின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் மதுரை அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கோவை அணி சார்பில் கவுதம் தாமரை கண்ணன் 4 விக்கெட்டும், சித்தார்த் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசி 1 விக்கெட்டும் வீழ்த்திய ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்போட்டியின் மூலம் குவாலிபியர் போட்டிகளுக்கு முதல் அணியாக கோவை தகுதி பெற்றது.

Tags:    

Similar News