கிரிக்கெட் (Cricket)
null

ஆனந்த கண்ணீர் வடித்த அனுஷ்கா, விராட் கோலி- வீடியோ வைரல்

Published On 2024-05-19 05:51 GMT   |   Update On 2024-05-19 06:14 GMT
  • நடப்பு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 37 சிக்சர்கள் அடித்துள்ளார்.
  • ஐ.பி.எல். போட்டியில் ஒரே மைதானத்தில் 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை அணியை வீழ்த்து 7-வது வெற்றியை பெற்று 14 புள்ளிகளை எட்டியது. புள்ளிகளில் சம அளவில் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் சென்னையை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 9-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றவுடன் வீரர்கள் உற்சாக மிகுதியில் இருந்தனர். விராட் கோலியும் உற்சாகத்தில் இருந்தார். அவர் முகத்தில் புன்னகையுடன் கண்களில் இருந்து கண்ணீர் சிந்துவதைக் காண முடிந்தது. கோலி மட்டுமல்ல, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் தனது கணவரின் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதைக் கண்டு மிகுந்த உணர்ச்சிவசத்தில் இருந்தார்.

இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடப்பு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 37 சிக்சர்கள் அடித்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் இந்த மைதானத்தில் 89 ஆட்டங்களில் ஆடி இருக்கும் அவர் 3,005 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டியில் ஒரே மைதானத்தில் 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

விராட் கோலி 33 ரன்னை தொட்டபோது ஒட்டுமொத்த டி20 போட்டியில் இந்திய மண்ணில் 9,000 ரன் மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்திய மண்ணில் விராட் கோலி மொத்தம் 268 டி20 போட்டிகளில் ஆடி 9,014 ரன்கள் எடுத்துள்ளார்.


Tags:    

Similar News