கிரிக்கெட்

உலகின் 8-வது அதிசயம் பும்ரா: விராட் கோலி புகழாரம்

Published On 2024-07-05 04:31 GMT   |   Update On 2024-07-05 04:31 GMT
  • கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
  • இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா தான் முக்கியமான காரணம் என்பதை மீண்டும் மீண்டும் விராட் கோலி தெரிவித்து பாராட்டினார்.

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா வெற்றியை நோக்கி வேகமாக சேசிங் செய்தது. 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய அந்த அணி 15 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்திருந்தது. 15-வது ஓவரில் 24 ரன்கள் குவித்த அந்த அணி பெரிய அளவில் தன்னம்பிக்கையை பெற்றது.

ஆனால், 16 வது ஓவர் மற்றும் 18வது ஓவரை வீசிய பும்ரா அந்த இரண்டு ஓவர்களில் மொத்தமே ஆறு ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். பும்ராவின் பந்துவீச்சை சந்திக்க தென்னாப்பிரிக்கா அணி திணறியது. அதன் காரணமாக, அந்த அணிக்கு இருந்த அழுத்தம், இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. கடைசியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. 17 ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இதையடுத்து, கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

பாராட்டு விழாவில், பும்ராவை 'உலகின் எட்டாவது அதிசயம்' மற்றும் 'தேசிய பொக்கிஷம்' என்று அழைக்கும் மனுவில் கையெழுத்திடுவீர்களா என்று கேட்டதற்கு, கோலி சிறிதும் தயங்காமல் கையெழுத்திடுவேன் என்று விராட் கோலி கூறினார். மேலும் அவர் கூறியதாவது:- மைதானத்தில் இருந்த அனைவரையும் போலவே ஒரு கட்டத்தில் இந்த உலகக் கோப்பையும் கையை விட்டு நழுவுகிறது என்று நினைத்தோம். ஆனால், கடைசி ஐந்து ஓவரில் என்ன நடந்ததோ அது மிகவும் அற்புதமானது. நாம் அனைவரும் இந்த போட்டியில் நம்மை மீண்டும் வெற்றியை நோக்கி கொண்டு வந்த வீரரை பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் இந்த தொடரில் மீண்டும், மீண்டும் அதை செய்தார். அந்த கடைசி ஐந்து ஓவரில் பும்ரா இரண்டு ஓவர்களை வீசினார். அது அற்புதமாக இருந்தது என்றார்.

இதனிடையே இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா தான் முக்கியமான காரணம் என்பதை மீண்டும் மீண்டும் விராட் கோலி தெரிவித்து பாராட்டினார்.

Tags:    

Similar News