கிரிக்கெட்

"சூப்பர் 8" சுற்றுக்கு முன்னேற பாகிஸ்தான் போராட வேண்டியிருக்கும்: வாசிம் அக்ரம்

Published On 2024-06-07 11:46 GMT   |   Update On 2024-06-07 11:46 GMT
  • அமெரிக்கா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
  • பாகிஸ்தான, இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணிகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அணிகளுக்கு உலகக் கோப்பையில் அதிர்ச்சி அளிப்பது ஒன்றும் பெரிதல்ல. அந்த வகையில்தான் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை அமெரிக்கா வென்று சாதனைப் படைத்துள்ளது.

இந்த போட்டி "டை"யில் முடிய சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் அமெரிக்கா வெற்றி பெற்றது. கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி சகஜம்தான். ஆனால் குரூப் "ஏ" பிரிவில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெறுமா? என்பது அச்சம் பாகிஸ்தானுக்கு எழுந்துள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தோல்வி குறித்து வாசிம் அக்ரம் கூறியதாவது:-

பரிதாபத்திற்குரிய செயல்பாடு. அமெரிக்காவுக்கு எதிராக விளையாடியதால் நான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் வெற்றி பெறும் என நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் அமெரிக்கா வெற்றி பெற்றார்கள். அவர்கள் விளையாடிய விதம் பாராட்டுக்குரியது.

சூப்பர் ஓவரில் 19 ரன்கள் விட்டுக்கொடுப்பது ஒரு ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுப்பதாக நான் அர்த்தம் கொள்கிறேன். பாகிஸ்தான் "சூப்பர் 8" சுற்றுக்கு முன்னேற போராடி வேண்டியிருக்கும். ஏனென்றால் இந்தியா மற்றும் இன்னும் இரண்டு சிறந்த அணிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இவ்வாறு அக்ரம் தெரிவித்துள்ளார்.

குரூப் "ஏ" பிரிவில் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து அணிகள் உள்ளன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

தற்போது அமெரிக்கா கனடா, பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இந்தயா அயர்லாந்தை வீழ்த்தியுள்ளது. அமெரிக்கா இன்னும் இந்தியா, அயர்லாந்து அணிகளுடன் விளையாட வேண்டும். இதில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும்.

இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்தால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாமல் போகும்.

Tags:    

Similar News