ஆன்மிக களஞ்சியம்

கழுகுகள் வரலாறு-பூடா, விருத்தா

Published On 2024-08-21 12:19 GMT   |   Update On 2024-08-21 12:19 GMT
  • பரமசிவம் கட்டளையிட்டபடி வேதகிரியில் தம் மூக்குகளால் கீறினர். இதனால் தடாகம் உண்டாகியது.
  • அதில் மூழ்கி மலையை வலம் வந்து இறைவனைப் பூசித்துக் கொண்டிருக்கலாயினர்.

கலியுகம் தொடங்கியது முதல் திருக்கழுக்குன்றத்தில் பூடா, விருத்தா என்கிற இருமுனிவர் நெடுங்காலம் தவம் செய்தார்கள். இளையவனும் மூத்தவனும் அரிய தவஞ்செய்த அளவில் சிவபெருமான் திருவுளம் மகிழ்ந்து, ''உங்களுக்கு நம்முடைய திருமேனியருள் செய்தோம். ஒருகற்ப காலம் அந்தப் பதவியில் இருங்கள்.

அவ்வாறிருந்தால் பிறகு முத்தியையும் அளிக்கிறோம்'' என்றருளிச் செய்தார்.

அவர்கள் ''அதுவரைக்கும் ஐம்பொறிகள் நன்மார்க்கத்தில் இருப்பதை யார் கண்டார்கள்? நிருமல மூர்த்தியே! இப்போதே எங்களுக்கு முத்திப்பேற்றினை அளித்தருள வேண்டும்'' என்றார்கள்.

சிவபெருமான் ''நம்முடைய திருமேனிபோல் உருவந்தரித் திருத்தலையும் விரும்பாதவர்களாய், நம்முடைய திருவருளால் உரைத்த ஏவலையும் ஏற்றுக் கொள்ளாது நீக்கி விட்டீர்கள். ஆதலால், நீங்கள் கழுகுருவமாகப் பிறந்து கடல் சூழ்ந்த உலகில் திரியுங்கள்'' என்று சபித்தார்.

அந்த இருவரும் பயந்து 'எங்கள் குறையைப் பொறுத்தருளும்'' எனப் பணிந்து, ''கழுகு உருவமாகப் பிறந்தாலும் உம்முடைய திருவடித் தொண்டில் மயக்கம் இல்லாமையும் இந்தச் சாபத்தின் முடிவும் கட்டளையிட்டருள வேண்டும்'' என்று விண்ணப்பித்தனர்.

சிவபெருமான் ''நீங்கள் காசிபமுனிவரிடத்தில் கழுகுகளாய்ப் பிறந்து, உங்களுடைய மூக்குகளால் இந்த மலையினைக் கீறினால் அதில் ஆகாய கங்கை அலைவீச உண்டாகும்.

அந்தத் தீர்த்தத்தில் முழுகி விருப்பத்துடன் எம்மைப் பூசியுங்கள். அவ்வாறு பூசித்துக் கலியுக முடிவில் முத்தியடையுங்கள்'' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இவ்வாறு அருளியவுடன் அவ்விருவரும் கை குவித்துத் தொழுது, காசிப முனிவரிடத்தில் போய் சம்பு & ஆதி என்ற பெயருடன் கழுகுகளாய்ப் பிறந்து, பரமசிவம் கட்டளையிட்டபடி வேதகிரியில் தம் மூக்குகளால் கீறினர். இதனால் தடாகம் உண்டாகியது. அதில் மூழ்கி மலையை வலம் வந்து இறைவனைப் பூசித்துக் கொண்டிருக்கலாயினர்.

கழுகு முனிவர்கள் முறையே பூசித்துக் கொண்டு வருவதால் இப்பதிக்கு திருக்கழுக்குன்றம் எனும் பெயருண்டாகியது.

Tags:    

Similar News