- சான்மலி என்னும் நாட்டில் வாழ்ந்த விருத்தசிரவரன் என்கிற முனிவருக்கு சண்டன், பிரசண்டன் என்கிற இரு மைந்தர்கள் தோன்றினர்.
- அவ்விருவரும் முன்செய்த தீவினைத் தொடர்பால் கழுகுப் பறவைகளின் உருவம் பெற்றனர்.
சான்மலி என்னும் நாட்டில் வாழ்ந்த விருத்தசிரவரன் என்கிற முனிவருக்கு சண்டன், பிரசண்டன் என்கிற இரு மைந்தர்கள் தோன்றினர்.
அவ்விருவரும் முன்செய்த தீவினைத் தொடர்பால் கழுகுப் பறவைகளின் உருவம் பெற்றனர்.
அவர்களை விருத்தசிரவரன் ''நீங்கள் பறவைகளுக்கு அரசாக விளங்கி இருங்கள்'' என்று கூறினான்.
அவர்கள் ''எங்களுக்கு அரசாட்சி செய்வதிலும் இல்லற வாழ்விலும் விருப்பம் இல்லை.
ஞான முறையால், பரமசிவனை அடையத்தக்க முத்திப்பேற்றினைச் சொல்லுங்கள்'' என்று வேண்டினர்.
விருத்தசிரவரன் மகிழ்ந்து, சிவபூசை முறையினை உணர்த்தி ''திருக்கழுக்குன்றம் சென்று பரமசிவத்தை வணங்குங்கள்'' என்று அனுப்பினான்.
சண்டன், பிரசண்டனாகிய கழுகு உருவமுடைய அவ்விருவரும் வேத வெற்பை அடைந்து நறுமணமுள்ள மலரினாலும் நீரினாலும் பரவுதல் செய்து பூசித்தனர்.
பரமசிவம் அவர்கள் முன் தோன்றி, ''உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள்'' என்றார்.
அவர்கள் ''ஒப்பில்லாத முத்தியே அடியேங்களுக்கு வேண்டியது'' என்றார்கள்.
சிவபெருமான் ''இந்தக் கிரேதாயுகம் சென்றபின் உங்களுக்கு முத்தியை அளிக்கிறோம் அதுகாறும் நம் பேரவையில் சிவகணங்களுக்குத் தலைவராய் இருங்கள்'' என்றருள்பாலித்தார். அவர்களும் அவ்வாறிருந்து முத்தி எய்தினார்கள்.