கோவில்கள்

ஜடோலி சிவன் கோவில்- இமாச்சலப் பிரதேசம்

Published On 2022-12-15 07:12 GMT   |   Update On 2022-12-15 07:12 GMT
  • இந்த ஆலயத்தைக் கட்டி முடிக்க சுமார் 39 ஆண்டுகள் ஆனது.
  • 100 படிக்கட்டுகளுடன் அமைந்த மலைப்பாதையின் இந்த கோவில் அமைந்திருக்கிறது.

இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் சோலன் என்ற இடத்தில் உள்ளது, ஜடோலி சிவன் கோவில். இந்த ஆலயத்தைக் கட்டி முடிக்க சுமார் 39 ஆண்டுகள் ஆனதாக கூறுகிறார்கள். 100 படிக்கட்டுகளுடன் அமைந்த மலைப்பாதையின் நுழைவுப் பகுதியில் இந்த கோவில் அமைந்திருக்கிறது.

தென்னக கட்டிடக்கலை பாணி இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடா்ந்து மூன்று பிரமிடுகளால் ஆனது போல் கோவிலின் மேற்புற அமைப்பு இருக்கிறது. முதல் பிரமிடின் மேற்பகுதியில் கணபதி உருவமும், இரண்டாம் பிரமிடு மேற்பகுதியில் ஆதிசேஷன் உருவமும் காணப்படுகிறது.

இமாச்சல பிரதேசத்தின் எழில் கொஞ்சும் மாவட்டமாக திகழ்ந்து வரும் சோலனில் முக்கிய தெய்வமாக வழிபடப்படும் சோலொனி தேவி என்னும் இந்து தெய்வத்தின் பெயரை அடிப்படையாக கொண்டு இந்த இடம் இப்பெயரைப் பெற்றது. இந்த இடம் முழுவதையும் அடர்ந்த காடுகளும், உயர்ந்த மலைகளும் சூழ்ந்து காட்சியளிக்கின்றன. யுங்ட்ரங் திபெத்திய மடம், சோலொன் தேவி கோவில், கூர்க்கா கோட்டை மற்றும் ஜடோலி சிவன் கோவில் ஆகியவை சோலன் நகரின் முக்கிய சுற்றுலா தளங்களில் சில.

ஹிமாச்சல்பிரதேஷ்,சோலோனின் பிரபலமான புனிதத் தலங்களில் ஒன்றாக ஜடோலி சிவப்பரம்பொருள் திருக்கோவில் அமைந்துள்ளது. நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் ஏராளமான யாத்ரீகர்களை அற்புதமான வடிவமைப்பு கொண்ட இத்திருக்கோவில் ஈர்க்கிறது. இத்திருக்கோவிலின் கலை மற்றும் கட்டடக்கலை அற்புதத்தை அங்கு செல்லும் எவரும் புறக்கணிக்க முடியாது.

ஆசியக் கண்டத்தில் உள்ள சிவபெருமானின் மிக உயரமான கோவில்.சோலனில் உள்ள ஜடோலி திருக்கோவில். ஜடோலி கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தெய்வீக சந்நிதி. இந்தக் கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.அதன் நுழைவாயிலுக்கு பல நூறு படிக்கட்டுகள் ஏறிச் செல்லவேண்டும். கோவிலின் பெயர் 'ஜடோலி'. இச்சொல், சிவப்பரம்பொருளின் ஜடாமுடியைக் குறிக்கிறது.அதாவது 'நீண்ட ஜடா ' என்பதன் அர்த்தத்திலிருந்து பெறப்பட்டது.

இந்த கோவில் கட்டடக்கலை பலரும் வியந்து போற்றும் சிறப்பாகும். திராவிடர் கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பு பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கோவிலில் மூன்று விமானங்கள் உள்ளன, மிக உயர்ந்த விமானம் சிகரம் என்றும், இரண்டாவது மிக உயர்ந்த விமானம் விமான என்றும், மூன்றாவது உயரமான விமானம் திரிசூல் என்றும் அழைக்கப்படுகின்றன. விநாயகர் திரிசூல் விமானத்திலும் பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் விமானத்திலும் உள்ளனர்.

கோவிலின் மூன்று சிகரங்களில் பிரமிடுகளிலும் செதுக்கப்பட்ட பல பிரபலமான தெய்வங்களும் உள்ளன. சிவப்பரம்பொருள் கோவிலுக்குள் ஒரு குகை உள்ளது, அங்கு பார்வையாளர்கள் சென்று இறைவனின் ஆசீர்வாதம் பெற அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு காலத்தில் சிவப்பரம்பொருள் தங்கியிருந்த இடம் இதுதான் என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள். குகையில் அன்னையின் திருமேனியும் உள்ளது.

கோவிலிலிருந்து சில மீட்டர் தொலைவில், கருப்பு நிற சிவலிங்கத் திருமேனியும் வெண்விடையின் திருமேனியும் உள்ளன. ஜடோலி சிவன் கோவிலில் மரம் மற்றும் கற்களால் ஆன ஒரு பெரிய சிவன் சிலை உள்ளது. கோவிலின் கூரையில் தங்கத்தால் ஆன ஒரு மிக நீண்ட கம்பியும் உள்ளது. ஜடோலி கோவிலுக்குள் தண்ணீர் ஊற்று உள்ளது.இதனை 'ஜல் குண்ட்' என்று அழைக்கிறார்கள். உள்ளூர்வாசிகள்.திருக்கோவிலுக்கு வருபவர்கள்,அதிலிருந்து நீர் எடுத்து அங்கிருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

Tags:    

Similar News