கோவில்கள்

பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் நிலக்கோட்டை மாரியம்மன்

Published On 2023-04-05 05:50 GMT   |   Update On 2023-04-05 05:50 GMT
  • மனவேதனை நீங்கியதற்காக வாழைப்பழங்களை பக்தர்கள் சூறையிடுகின்றனர்.
  • நிலக்கோட்டை மாரியம்மன் அருளால், பக்தர்களின் வாழ்வில் இடர்பாடுகள் நீங்குகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திகழ்கிறது. இந்த கோவில், இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்டதாகும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு தென்மாவட்டங்களில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அங்கு வசித்த நாடார் சமூகத்தினர், சுமார் 1850-ம் ஆண்டு காலக்கட்டத்தில் வாழ்வாதாரம் தேடி நிலக்கோட்டைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில், நிலக்கோட்டை பகுதியில் வசித்த மக்கள் காலரா, அம்மை, பிளேக் போன்ற நோய் தாக்குதலுக்கு ஆளாகி சிரமப்பட்டனர். இதனை அறிந்த நாடார் சமூகத்தை சேர்ந்த பெரியவர்கள், இந்த நோய் தாக்குதலுக்கு மாரியம்மனின் கோபம் தான் காரணம் என்று கருதினர். எனவே அம்மனுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்த அவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நிலக்கோட்டையில் மிக சிறிய அளவில் மாரியம்மனுக்கு கோவிலை கட்டினர். கோவிலின் அருகே தெப்பக்குளம் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவிலின் ஒரு பகுதியில் பீடம் அமைத்து, பொதுமக்கள் அம்மனை வேண்டி வணங்கி வந்தனர். இதன் எதிரொலியாக, நிலக்கோட்டை பகுதியில் ஏற்பட்ட நோய் தாக்குதல்கள் விரைவாக குறைந்தன.

அம்மனின் அருளால் தான் இந்த அற்புதங்கள் நடந்தது என்று நாடார் சமூகத்தினர் நம்பினர். அதன்பிறகு கடந்த 1912-ம் ஆண்டில், இந்த கோவிலில் அம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தினார்கள். அன்று முதல் இன்று வரையிலும், நிலக்கோட்டை இந்து நாடார் உறவினர் காரியதரிசிகள் கோவிலை நிர்வாகம் செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் 75 ஆண்டுகளுக்கு பிறகு 1987-ம் ஆண்டு கலைநயத்துடன் கூடிய பல்வேறு வேலைபாடுகளுடன் திருப்பணிகள் நடத்தி கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு கடந்த 2009-ம் ஆண்டு கோவிலின் முன்புறம் புதிதாக 5 நிலைகள் கொண்ட 50 அடி உயர ராஜகோபுரம் அமைத்து, மிக பிரமாண்டமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கோவில் வளாகத்தில் முதல் கடவுள் விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, அருணாச்சலேஸ்வரர், பைரவர், லிங்கோத்துபவர், ஆஞ்சநேயர் மற்றும் ஒரே இடத்தில் ரங்கநாதர், மகாலட்சுமி, கருடாழ்வார் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளின் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வேண்டி வழிபட்டு வருகின்றனர். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி தரும் தெய்வமாக மாரியம்மன் வீற்றிருக்கிறார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

வாழைப்பழம் சூறையிட்டு வழிபாடு

நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதேபோல் வாழைப்பழ சூறையிடும் நிகழ்ச்சி திருவிழாவில் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.

மனவேதனை நீங்கியதற்காக வாழைப்பழங்களை பக்தர்கள் சூறையிடுகின்றனர். இதற்காக கோவில் முன்பு வாழைப்பழங்களை குவியலாக வைத்து, சூறையிட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபடுகின்றனர். இந்த வேண்டுதல் நிகழ்ச்சி, பல ஆண்டுகளாக நடந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

கரும்புத்தொட்டில் சுமக்கும் தம்பதிகள்

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி மனமுருகி நிலக்கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைப்பார்கள். அவர்களது கோரிக்கையை அம்மன் நிறைவேற்றுவார். இவ்வாறு வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதிகள் புத்தம் புதிய சேலையை மஞ்சள் நீரில் நனைத்து, அதன் மூலம் கரும்புகளில் தொட்டில் கட்டுவார்கள். குழந்தையை அதில் படுக்க வைத்து நிலக்கோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக சுமந்து வந்து, பின்பு கோவிலை 3 முறை சுற்றி நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

அதன் பின்னர் தொட்டில் கட்டிய கரும்புகளை கோவில் முன்புள்ள நிர்வாகிகளிடம் காணிக்கையாக செலுத்துவார்கள். மாரியம்மன் கோவிலை பொறுத்தவரை ஆண்டுதோறும் விழாவில் கரும்பு தொட்டில்களில் நேர்த்தி கடன் செலுத்தும் தம்பதிகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பெருகிய வண்ணம் இருக்கிறது.

நோய்களுக்கு அருமருந்தாகும் தீர்த்தம்

நிலக்கோட்டை மாரியம்மன் அருளால், பக்தர்களின் வாழ்வில் இடர்பாடுகள் நீங்குகிறது. பல்வேறு நோய்களும் தீர்ந்து வருகிறது. கோடைக்காலத்தில் பரவும் நோய்களில் ஒன்றான அம்மை நோய் மற்றும் பல்வேறு கொடிய நோய்கள் ஏற்பட்டால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் நோய்கள் தீர அம்மனை மனதார வேண்டி கொள்வார்கள். குறிப்பாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கோவிலில் வழங்கப்படுகிற தீர்த்தத்தை 3 நாட்கள் தொடர்ந்து அருந்தினால் அம்மை நோய் குணமாகும் என்பது ஐதீகம். இதேபோல் பிற நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் இக்கோவிலின் தீர்த்தம் உள்ளது.

Tags:    

Similar News