கோவில்கள்

சிறுவாபுரி பாலசுப்பிரமணியப் பெருமான் தலவரலாறு

Published On 2022-08-20 06:07 GMT   |   Update On 2022-08-20 06:07 GMT
  • இந்த ஆலய இறைவனை, அருணகிரிநாதர் சிறப்புற புகழ்ந்து பாடியிருக்கிறார்.
  • இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளை கொண்டதாக உள்ளது.

சென்னைக்கு வட மேற்கே சென்னை- கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33-வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பிரியும் சாலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் தோரண வாயில் (நுழைவாயில்) நம்மை வரவேற்கிறது. இந்தத் தோரண வாயிலில் இருந்து மேற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் சின்னம்பேடும் எனத் தற்போது அழைக்கப்படும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியப் பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.

நுழைவாயிலைக் கடந்து ஆலயம் நோக்கி செல்கையில், சாலையின் இரு பக்கமும் பசுமையான நிலங்கள், வீசியாடும் நெற்கதிர்கள், குலுங்கிக்குலை தள்ளி ஆடும் வாழைத் தோப்புகள், கிராமத்தின் நுழைவாயிலில் சப்தமாதர் கோவில் நடுநாயகமாக அகத்தீஸ்வரர் கோவில், மேற்கே பெருமாள் கோவில், பெருமாள் கோவிலுக்குப் பின்னால் விஷ்ணு, துர்க்கை கோவில்கள், வடக்கே வாயு மூலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் கம்பீரமாக நம் கண்ணுக்கு காட்சி தருகிறது. இவ்வூரில் ராமர் கோவில், விநாயகர் கோவில், ஜைனர் 22-வது தீர்த்தங்கரர் பள்ளி என கோவில் பல இருப்பதை, அருணகிரிநாதர், ஆடகம்பயில் கோபுரம் மாமதில் ஆலயம் பலவீதியுமே நிறைவான தென்சிறுவாபுரி எனத் திருப்புகழில் பாடியுள்ளார்.

சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜகோபுரம் 5 நிலைகளுடன் கம்பீரமாக வருக! வருக! எனக் கட்டியம் கூறி நம்மை வரவேற்கிறது. ஐம்பொறிகளையும், ஐம்பூதங்களையும் அடக்கு, அடக்கு! என ராஜகோபுரம் நம்மிடம் கூறுவது போல் உள்ளது. உயரமான கொடிமரம், கொடிமரத்துக்கு முன்னால் அழகே திருஉருவம் கொண்டதுபோல் மரகதப் பச்சைமயில் கொலுவாக வீற்று இருக்கிறது. இதுபோல் சிறந்த வடிவமைப்புள்ள மரகத மயில் உலகிலும் வேறு எங்கும் இல்லை என உறுதியாக கூறலாம்.

கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகத கல்லில் சூரியனார் ஒளி வீசிக்கொண்டு இருக்க, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட கம்பீரமான ராஜகணபதி மரகத கல்லில் பச்சைப் பசேல் என மன்னிட மரகத விநாயகர் என்ற நாம கரணத்துடன் வேண்டுவதை, அளிக்க அழகுக் கோலத்துடன் வீற்று இருக்கிறார். பின் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரர், ஆதிமூலவர் (முன் இருந்த பாலசுப்பிரமணிய சுவாமியின் விக்ரகம்), நாகர், பைரவர், நவக்கிரகம் என பரிவார தேவதைகள் புடைசூழ சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார்.

இங்கு நவக்கிரகம் ஒன்பதும் வாகனத்துடன் இருப்பது சிறப்பாகும். சந்ததமும், அடியார் சிந்தையில் குடியிருக்கும் முருகப்பெருமான், நம் சிந்தையைக் கவர்கிறார்.

முக மண்டபத்தில் அருணகிரிநாதர் சிறுவை பாலசுப்பிரமணிய பெருமானை கண்ட பெருமிதத்துடன் திருப்புகழ் பாடி நிற்கும் கோல வடிவைக் காணலாம்.

முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் மரகதப்பச்சையில் கரும்பச்சை வைரம் போல் பிரகார ஜோதியாகக் காட்சி அளிக்கிறார். இத்துணை பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை.

அருணகிரிநாதர் திருவண்ணாமலைக்கு மயிலுமாடி நீயுமாடி வரவேணும் என்று பாடியதற்கு இணையாக, இங்கு மைந்துமயில் உடன் ஆடிவர வேணும் என பாடி உள்ளதால் அண்ணாமலையாரும், உண்ணமுலை அம்மையும் இங்கு எழுந்தருளி இருக்கிறார்கள். அருணாசலேசுவரர், அபீதகுஜாம்பிகை (உண்ணாமுலை) இருவருக்கும் நடுவே அற்புதத் தோற்றமாய், அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன் கூடிய வள்ளிநங்கை தம் மணவாளப் பெருமான் முருகனை தைத்தலம் பற்றும் திருமண காட்சியாய் எழுந்தருளி இருக்கிறார்.

கைத்தலம் பற்றுகின்ற பொழுது இயற்கையாய் பெண்ணுக்கு ஏற்படும் கூச்சம், நாணம், பயிர்ப்பு காரணமாக வள்ளி ஒய்யாரமாக லேசாக முன் சாய்ந்து, ஒரு கண்மூடிய நிலையில் நிற்கின்ற கோலத்தைக் காணக்கண் கோடி வேண்டும். பின்புறத்திலிருந்து நோக்கும் பொழுது வள்ளி கள்ளத்தனமாக அரைக்கண் பார்வையாக முருகனை நோக்குவது போல் சிற்பி சிலையை வடித்திருக்கிறார். மிக நேர்த்தியான வேலைப்பாடு. இதுபோன்ற சிலை வடிவம் வேறு எங்கும் இல்லை. ஓவியமாக வள்ளி மலையில் இருக்கும் கோலத்தை, சிலை வடிவமாக இங்கு அமைத்து இருப்பது மிகச்சிறப்பாக வள்ளி மணவாளப்பெருமானின் அழகைக்காண கண்கோடி வேண்டும்.

இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை. முருகன் சிலை கூட முன்பு மரகதபச்சை கல்லில் இருந்து காலப்போக்கில் பின் நிறுவப்பட்டபோது கருங்கல்லில் செய்யப்பட்டிருக்கலாம். இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரதகப்பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக்கோவிலிலும் இல்லை.

அருணகிரிநாதர் நான்கு திருப்புகழ்களினால் இந்த ஸ்தலத்தைப் பாடியுள்ளார். அருணகிரிநாதர் பாடிய 10000 திருப்புகழ்களில் நம் கைக்கு கிடைத்து இருப்பவை 1330 திருப்புகழ்தாம். அவற்றுள் 224 ஸ்தலங்களை பாடியுள்ளார். திருப்புகழ் பாடல் பெற்ற ஸ்தலங்களில் 9 இடங்கள் இதுவரை கண்டறியப்படாமல் இருக்கின்றன. கண்டறியப்பட்ட 215 ஸ்தலங்களில் 35 ஸ்தலங்களைச் சிறப்பாக பாடியுள்ளார். 8 ஸ்தலங்களில் 4 திருப்புகழ் பாடி இருக்கிறார். 6 ஸ்தலங்களுக்கு அர்ச்சனை திருப்புகழ் பாடியுள்ளார்.

திருப்புகழில் பாடப்படும் நாயகனாக முருகன் இல்லாமல் 6 பாடல்களில் பாடும் நாயகனாக விநாயகப் பெருமானை பாடியுள்ளார். மேற்கண்ட திருப்புகழ் ஆய்வின்படி 6 அர்ச்சனைத் திருப்புகழில் ஒன்றாக சிறுவைக்கு சீதளவாரிஜ பாதா நமோ நம: என ஒரு பாடலுடன் நான்கு திருப்புகழ் பாடிய 8 ஸ்தலங்களில் ஒன்றாக சிறுவாபுரியும், அமைந்து இருப்பது சிறப்பு.

அண்டர்பதி குடியேற என்ற முதல் திருப்புகழில் மகிமீற, மகிழ்கூர, மகிழ்வாக, மகிகூற, இன்பமுற என ஐந்து இடங்களில் மகிழ்ச்சிப் பெருக்கு கூறப்பட்டது போல் வேறு எந்த திருப்புகழிலும் சிறப்பாக ஐந்து முறை சொல்லப்படவில்லை என்பது இன்னும் ஒரு சிறப்பு. இந்த திருப்புகழின் ஈற்றடியில் கடைசியில் சொற்கள் ஒரு வாக்கியமாக பொருள்பட அமைந்து இருப்பதும் ஓர் அரிய சிறப்பாகும். அருளாலே, மகிழ்வாக, எதிர்காண, வரவேணும், உயர்தோளா, வடிவேலா, முருகேசா, பெருமாளே! என ஒரு வாக்கியமாக அமைவதுபோல் வேறு எந்த ஒரு திருப்புகழிலும் அமையவில்லை.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ஸ்தலத்துக்கு வருபவர் கடுமையான விரதமாக பசி பட்டினி இருந்து நோன்பு நோற்று இறைவனை அடைய வேண்டியதில்லை. சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான தண் சிறுவைதனில் மேவு பெருமாளே! என்று இவரை எப்போதும் நினைத்தாலே போதும் அடியவர்க்கு எளிமையாக முருகன் எழுந்தருளி வருவார் எனக்கூறுகிறார் அருணகிரிநாதர்.

இரண்டாவது திருப்புகழ் அர்ச்சனை திருப்புகழாக இருப்பது சிறப்பு. பழனிக்கு நாதவிந்து கலாதி நமோ நம என்றும் திருப்புகழைப்போல் சிறுவைக்கு சீ தள வாரிஜ பாதா! நமோ நம எனும் திருப்புகழை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

அர்ச்சனை திருப்புகழ் 6-ல் சரணாகதியின் மேன்மையான முருகனின் பாத சரணத்தைக் குறித்து சிறுவைக்கு எழுதி இருப்பது சிறப்பு. வானவர் ஊரினும் வீறாகிலீறளகாபுரி வாழ்வினும் மேலாக திருவாழ் சிறுவாபுரி வாழ்வே சுதாரிபர் பெருமாளே எனப்பாடி இங்கு வருபவர்கள் தேவேந்திர பட்டணத்தை காட்டிலும் வளமாக வாழ்வர் என அழுத்தம் திருத்தமாக எடுத்துச்சொல்கிறார். மூன்றாவது திருப்புகழில் மானிடப்பிறப்பின் துன்பம் எல்லாம் நீங்குவதற்கு வழிகூறுகிறார் அருணகிரி நாதர்.

நான்காவது திருப்புகழில் ஜெயமதான நகர் என்று சிறுவையே வெற்றி கொண்டநரம் என்கிறார். ஜெயமதான நகர் அளகை போல வளமிகுந்த சிறுவைமேலி வரமிருந்த பெருமாளே என வெற்றியை தன்னிடம் அமைத்துக் கொண்ட சிறுவை நகரம். குபேரப்பட்டணம் என அழைக்கப்பட்ட அளகாபுரி போல் எல்லா வளங்களும் அதிகமாகக் குடிகொண்டுள்ள சிறுவாபுரியில் குடிகொண்டு உள்ள சிறுவை முருகன் வரம் அதிகம் தன்னிடம் இருப்பு உள்ளவன் என அருணகிரிநாதர் சொல்வது. வரமிகுந்தவனை அடிக்கடி நாடி வந்து அவனிடம் இருப்புள்ள வரங்களைப் பெற்று செல்ல வாருங்கள், வாருங்கள்! என அழைப்பதுபோல உள்ளது.

இந்த ஆலய இறைவனுக்கு, ஒரு மண்டலம் (48 நாட்கள்), நெல்லி முள்ளி பொடி கொண்டு அபிஷேகம் செய்து வந்தால், தீராத நோயில் இருந்தும் விடுபடலாம். 48 நாட்களும் ஆலயத்திற்கு வரவேண்டும் என்பது இல்லை. கோவில் அர்ச்சகரிடம், அந்த பொடியைக் கொடுத்து அபிஷேகத்தில் சேர்க்க செய்தால் மட்டுமே போதுமானது.

இந்த ஆலய இறைவனான பாலசுப்பிரமணியரை மனமுருகி வேண்டி வந்தால், சொந்தமாக வீடு கட்டும் வாய்ப்பு அமையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தல மூலவரை செவ்வாய்க்கிழமை தோறும், தொடர்ந்து ஆறு வாரங்கள் வழிபாடு செய்து, வள்ளி மணவாளப் பெருமானை வணங்கி வந்தால் திருமணத் தடை நீங்கும். செல்வ வளம் பெருகும், நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். இந்த தலத்தில் உள்ள மூலவரை ஆறு முறை வலம் வரவேண்டும் என்கிறார்கள். அப்படி வலம் வந்தால், மாற்றங்கள் நிறைந்த இன்பம் வாழ்வு உண்டாகும்.

அமைவிடம்

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சென்னைக்கு வடக்கே 34 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னை சென்ட்ரல் முதல் கும்முடிபூண்டி ரெயில் மார்க்கத்தில் 39 கிலோ மீட்டர் தூரத்திலும், கவரப்பேட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது சிறுவாபுரி.

Tags:    

Similar News