ஆன்மிகம்
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பைரவர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு பூஜை

Published On 2018-06-07 03:21 GMT   |   Update On 2018-06-07 03:21 GMT
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி காலையில் காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை, பத்மகிரீசுவரர்-அபிராமி அம்மனுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து மாலையில் பைரவருக்கு சந்தனம், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் சுவாமியின் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதேபோல் பழனி அடிவாரம் பாதவிநாயகர் கோவில் அருகே மீனாட்சி மண்டபத்தில் உள்ள ஷேஸ்திரபால பைரவர், சண்டிகாதேவி ஆகியோருக்கு பூஜை நடந்தது. அப்போது, சிறப்பு அலங்காரத்தில் பைரவர்-சண்டிகாதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் சந்தனம், மஞ்சள், இளநீர், தேன், பால் உள்ளிட்ட பொருட்களால் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திண்டுக்கல் மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பட்டிவீரன்பட்டியில் உள்ள சுயம்பு நாகேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதில் சாமிக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர், குங்குமம், விபூதி உள்பட 16 வகையான பொருட் களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சொர்ண ஆகர்ஷண பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் குடைமிளகாய் தீபம், எலுமிச்சை தீபம், தேங்காய் விளக்கு தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும் செய்திருந்தனர். இதே போல் சாவடி பஜாரில் பகவதியம்மன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
Tags:    

Similar News