ஆன்மிகம்
காந்திமதி அம்பாளுக்கு ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடந்ததையும், திரளான பக்தர்கள் கலந்து கொண்டதையும் காணலாம்.

நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு ஆடிப்பூர முளைகட்டு திருவிழா

Published On 2018-07-18 03:07 GMT   |   Update On 2018-07-18 03:07 GMT
நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன.

கடந்த 11-ந் தேதி மதியம் 12 மணியளவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது. அன்று இரவு காந்திமதி அம்பாள் 4 ரதவீதிகளையும் சுற்றி கோவிலை அடைந்தார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டு திருவிழா நேற்று இரவு நடந்தது. இதையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 7 மணியளவில் அம்பாள் ஊஞ்சல் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு அம்பாளுடைய வயிற்றில் முளை கட்டிய பாசிப்பயிறு கட்டப்பட்டது. அம்பாள் முன்பு பலகாரங்கள் படைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்பிறகு வயிற்றில் கட்டி வைக்கப்பட்டு இருந்த முளைகட்டிய பாசிப்பயிறு அங்குள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ரோஷினி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்றுடன் ஆடிப்பூர திருவிழா நிறைவடைந்தது. 
Tags:    

Similar News