ஆன்மிகம்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது

Published On 2018-10-03 07:33 GMT   |   Update On 2018-10-03 07:33 GMT
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக போற்றப்படுகிறது. திருஞானசம்பந்தரால் தேவார பாடல் பாடப்பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு நாளை(வியாழக்கிழமை) இரவு 10.05 மணிக்கு பெயர்ச்சியடைகிறார். இதனை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்ள வருவார்கள் என்பதால் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவின் பேரில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் உத்தரவின் பேரில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் மேற்பார்வையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையரும், தக்காருமான கிருஷ்ணன், அறநிலைய உதவி ஆணையரும், செயல் அலுவலருமான தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News