ஆன்மிகம்
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

Published On 2018-10-05 03:58 GMT   |   Update On 2018-10-05 03:58 GMT
திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியாக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படும் குருபகவான் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி விழா கடந்த 1-ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று இரவு 10.05 மணிக்கு குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. அப்போது குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறினார். இதையொட்டி பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி சந்தனகாப்பு அலங்காரத்தில் வெள்ளி அங்கியுடன் காட்சி அளித்தார்.

முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைதொடர்ந்து உற்சவர், 6 கார்த்திகை பெண்கள், 4 முனிவர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். குருப்பெயர்ச்சியான நேரத்தில் மூலவர், உற்சவர் மற்றும் கோபுரம் ஆகியவற்றிக்கு ஒரே நேரத்தில் சிறப்பு மகா தீபாராதனைகள் நடந்தது.

குருப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் நேற்று நீண்டவரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்திருந்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராம.வீரப்பச்செட்டியார் குடும்பத்தினர் செய்திருந்தனர். 
Tags:    

Similar News