ஆன்மிகம்

புரட்டாசியில் நவராத்திரி ஏன்?

Published On 2018-10-11 08:26 GMT   |   Update On 2018-10-11 08:26 GMT
வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்கா பூஜை, தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிட ரீதியான காரணமும் உண்டு.
வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்கா பூஜை, தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிட ரீதியான காரணமும் உண்டு. நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை ‘கோள்சாரம்’ என்றும் குறிப்பிடுவர். இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.

இவர் புரட்டாசி மாதத்தில் புதன் கன்னி ராசியில் சஞ்சரிப்பார். புதன் கல்வி, கலைகளுக்கு உரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்பு நலன்களைத் தருபவராகவும் இருப்பவர். அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலை மகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.

இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், ‘அட்சர அப்யாசம்’ என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜய தசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்த நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து ‘சாரதா நவராத்திரி’ என்று அக்காலத்தில் அழைத்தனர். (சரஸ்வதிக்கு, சாரதா என்ற பெயரும் உண்டு).

கல்வி மட்டுமல்லாமல் செல்வமும், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அவற்றை பெற்று வாழ்வு வளம் பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.

Tags:    

Similar News