ஆன்மிகம்
திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில் மலை உச்சியில் ரோகிணி தீபம் ஏற்றப்பட்டபோது எடுத்த படம்.

வாமனபுரீஸ்வரர் கோவிலில் ரோகிணி தீபம் ஏற்றம்

Published On 2018-11-26 03:23 GMT   |   Update On 2018-11-26 03:23 GMT
கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில் மலை உச்சியில் ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது. இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழியில் பிரசித்தி பெற்ற வாமனபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனையும், இரவு சாமி வீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.

பொதுவாக சிவன்கோவில்களில் பரணி நட்சத்திரத்தன்று தீபம் ஏற்றப்படும். ஆனால் வாமனபுரீஸ்வரர் கோவிலில் மட்டும் பரணி நட்சத்திரத்துக்கு மறுநாள் வரும் ரோகிணி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றப்படும். அதன்படி இந்த ஆண்டு ரோகிணி நட்சத்திரமான நேற்று முன்தினம் கோவிலின் முன்புள்ள மலை உச்சியில் ரோகிணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி வாமனபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணிக்கு மங்கள வாத்திய இசை ஒலிக்க கோவில் முன்புறம் உள்ள மலை உச்சியில் ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது.

அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து கோவில் அருகே வைக்கப்பட்டிருந்த 5 சொக்கப்பனைகள் கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
Tags:    

Similar News