ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் நாளை நடக்கிறது

Published On 2019-01-19 05:20 GMT   |   Update On 2019-01-19 05:20 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம் பெருமாள் உத்திர வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

திருவிழாவின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உப நாச்சியார்களுடன் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் உள்திருவீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதியை வந்தடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று(சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடி அறை சென்றடைந்தார்.

இன்று காலை 7.30 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது.

21-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா நிறைவு நாளான 22-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். 
Tags:    

Similar News