வழிபாடு

அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.

ஸ்ரீகாளஹஸ்தி தர்மராஜா கோவிலில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி

Published On 2023-07-01 05:47 GMT   |   Update On 2023-07-01 05:47 GMT
  • திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
  • எலுமிச்சை பழங்களை பக்தர்கள் பிரசாதமாக எடுத்து சாப்பிட்டனர்.

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான திரவுபதி சமேத தர்மராஜா கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மாலை அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.

உற்சவர் அர்ஜுனன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து வெளியே ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டார். கோவில் வளாகத்தில் நடப்பட்ட பனை மரத்துக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.

அர்ஜுனன் வேடமணிந்தவர் கீர்த்தனைகள் பாடி அர்ஜுனனுக்கு பாசுபதம் பெற தபசு மரத்தில் ஏறினார். அவர், அந்த மரத்தின் மேலிருந்து எலுமிச்சை பழங்களை கீழே வீசினார். எலுமிச்சை பழங்களை பக்தர்கள் பிரசாதமாக எடுத்து சாப்பிட்டனர். அந்த எலுமிச்சை பழத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அர்ஜுனன் தபசு நிகழ்ச்சியில் சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு, கோவில் நிர்வாக அதிகாரி கே.வி.சாகர்பாபு ஆகியோர் பங்கேற்று வழிபட்டனர். இருவரும், உற்சவர் அர்ஜுனன் சாமியை தோளில் வைத்து ஊர்வலமாக சுமந்து சென்றனர்.

பிரம்மோற்சவ விழாவையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அக்னி குண்ட மஹோற்சவம் நடக்கிறது. அதில் 10 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதிக்கின்றனர். தீ மிதிக்கும்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்படும்.

பல்ேவறு இடங்களில் கேமராக்களை பொருத்தி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். விழாவில் பங்கேற்று தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது, என்று கோவில் அறங்காவலர் குழு தலைவர் ெதரிவித்தார். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Similar News