திருப்பதியில் ராமானுஜரின் 1008-வது அவதார மகோற்சவம் இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது
- மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை ராமானுஜர் குறித்த இசை நிகழ்ச்சி நடக்கிறது.
- இன்று மாலை 5.30 மணிக்கு ராமானுஜரின் அவதார மகோற்சவம் தொடங்குகிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வைணவ ஆச்சாரியார் ராமானுஜரின் 1008-வது அவதார மகோற்சவம் திருப்பதியில் உள்ள அன்னமாச்சாரியார் கலையரங்கில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டத்தின் சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 25-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கின்றன. அதையொட்டி 3 நாட்களும் மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை ராமானுஜர் குறித்த இலக்கிய சொற்பொழிவு மாநாடு மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இன்று மாலை 5.30 மணிக்கு திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் ராமானுஜரின் அவதார மகோற்சவம் தொடங்குகிறது. ராமானுஜரின் மகிமைகள் என்ற தலைப்பில் திருப்பதி ஆச்சார்ய சக்கரவர்த்தி ரங்கநாதன் சொற்பொழிவாற்றுகிறார். திருப்பதியைச் சேர்ந்த ரேவதி குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.