தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்
- 20-ந்தேதி தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.
- 22-ந்தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.
தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் முக்கியமான ஒன்றாகும். இந்த விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது.
10.30 மணிக்கு கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் அம்பாள் பித்தளை சப்பரம், கிளி வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்மவாகனம், வெள்ளிமயில் வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், கமல வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்டவற்றில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 20-ந்தேதி காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 21-ந் தேதி இரவு 7 மணிக்கு பாகம்பிரியாள் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூப்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 22-ந்தேதி இரவு 8.30 மணிக்கு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.