திருக்குவளை தியாகராஜசுவாமி கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
- தியாராஜசுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
- தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் கோவிலை அடைந்தது.
நாகை மாவட்டம் திருக்குவளையில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தியாகராஜசுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டு தோறும் தியாகராஜசுவாமிக்கு பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவை முன்னிட்டு சுப்பிரமணியர் உற்சவம், சந்திரசேகர் பட்டோற்சவம் உள்ளிட்ட பல்வேறு உற்சவம் நடந்தது அதனைதொடர்ந்து, பூதவாகனம், யானை வாகனம், ரிஷபவாகனம் ஆகிய வாகனங்களில் சாமி வீதி உலாவும், சகோபுர தரிசனமும், ஓலைச்சப்பரம், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக தியாராஜசுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதையடுத்து தேரை தருமபுர ஆதீன கட்டளை விசாரணை மாணிக்கவாசகர் தம்பிரான் வடம் பிடித்து இழுத்தது தொடங்கி வைத்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் கோவிலை அடைந்தது.