சமையல்

ஊட்டச்சத்து நிறைந்த கருப்பு கவுனி அரிசி லட்டு

Published On 2024-01-21 08:12 GMT   |   Update On 2024-01-21 08:12 GMT
  • சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
  • கல்லீரலில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது.

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வெள்ளை அரிசியை உபயோகப்படுத்துவதைப் போல பண்டைய காலத்தில் பல வகையான அரிசிகளை உபயோகப்படுத்தினார்கள். அவ்வாறு அந்த அரிசிகளை உபயோகப்படுத்தி உண்ணும் பொழுது அவர்களின் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த அரிசிகளில் ஒன்று தான் கருப்பு கவுனி அரிசி. கருப்பு கவுனி அரிசியை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் லட்டு எப்படி செய்வது என்று தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

கருப்பு கவுனி அரிசியை முறையாக உட்கொள்ளும் பொழுது மூளையை சிறப்பாக செயல்படுத்த உதவுகிறது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் கல்லீரலில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மைகளை வெளியேற்றுகிறது. உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் இதய ஆரோக்கியத்திற்கும், நரம்பிற்கும் சிறந்ததாக திகழ்கிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் செரிமான பிரச்சினைகள் அனைத்தும் நீங்குகிறது.

தேவையான பொருட்கள்:

கருப்பு கவுனி அரிசி -ஒரு கப்

வெல்லம்- அரை கப்

துருவிய தேங்காய் -கால் கப்

ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

நெய் - 4 டேபிள் ஸ்பூன்

முந்திரி மற்றும் திராட்சை -தேவையான அளவு

செய்முறை:

அரிசியை சுத்தப்படுத்தி தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி அதை ஒரு பருத்தித் துணியில் கொட்டி, ஒரு மணி நேரத்துக்கு நிழலில் உலர்த்த வேண்டும். அதன்பிறகு அந்த அரிசியை வாணலியில் கொட்டி வாசனை வரும் வரை 3 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வறுக்க வேண்டும். பின்னர் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி மீண்டும் 5 நிமிடங்களுக்கு வறுக்க வேண்டும். பின்னர் அதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும்.

மீண்டும் வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அதில் முந்திரி, திராட்சையைப் போட்டு மிதமான தீயில் வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஏலக்காய் பொடி, துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும்.

அரிசியை மிக்சி ஜாரில் போட்டு மென்மையான பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் வெல்லத்தை சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும்.

இந்த கலவையை வாணலியில் இருக்கும் கலவையுடன் கொட்டி மிதமான தீயில் நன்றாகக் கிளறி இறக்க வேண்டும். மீதமிருக்கும் நெய்யை லேசாக சூடுபடுத்தி இந்த கலவையில் ஊற்றி கலக்க வேண்டும். கலவை சூடாக இருக்கும்போதே சிறு சிறு உருண்டைகளாகப்பிடிக்க வேண்டும். இப்போது சுவையான கருப்பு கவுனி அரிசி லட்டு தயார்.

Tags:    

Similar News