செய்திகள் (Tamil News)

சசிகலா முதல்வர் ஆவதற்கு எதிராக பன்னீர் செல்வம் சதி: நவநீத கிருஷ்ணன்

Published On 2017-02-10 13:33 GMT   |   Update On 2017-02-10 13:33 GMT
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வர் ஆவதற்கு எதிராக பன்னீர் செல்வம் சதி செய்வதாக அக்கட்சியின் எம்.பி. நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆளுநர் இதுவரை எதுவும் தெரிவிக்காத நிலையில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் போயஸ் கார்டன் மற்றும் முதல்வர் பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் குவிந்து காணப்படுகின்றனர்.

போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநிலங்களவை எம்.பி. நவநீத கிருஷ்ணன் சசிகலா முதலமைச்சர் ஆவதற்கு எதிராக பன்னீர் செல்வம் சதி செய்வதாக தெரிவித்தார்.

மேலும், “தான் மிரட்டப்பட்டதாக தவறான தகவலை பன்னீர் செல்வம் பரப்புகிறார். தான் மிரட்டப்பட்டதாக கூறும் நபர் முதலமைச்சர் பதவிக்கு அருகதையற்றவர் என்று சுப்ரமணியன் சுவாமி கூறியிருக்கிறார். காலங்கடத்தாமல் சசிகலாவை முதலமைச்சர் பதவியேற்க ஆளுநர் வித்யாசாகர் அழைக்க வேண்டும்” என்று கூறினார்.

இதனிடையே, காவல்துறை ஆணையத்தில் எம்.எல்.ஏ சண்முக நாதன் புகார் அளிக்க சென்றது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக நிர்வாகி வி.பி.கலைராஜன், “சண்முக நாதனை யாரோ விலை கொடுத்து வாங்கிட்டார்கள். அதிமுக தலைமை, போயஸ் கார்டனை கைப்பற்ற நினைத்தால் விடமாட்டோம்” என்று தெரிவித்தார்.

Similar News