செய்திகள் (Tamil News)

சபாநாயகரை பதவியில் இருந்து நீக்ககோரும் தீர்மானம்: சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு

Published On 2017-03-22 05:31 GMT   |   Update On 2017-03-22 05:31 GMT
சபாநாயகரை பதவியில் இருந்து நீக்ககோரும் தீர்மானத்தின் மீது சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. சட்டசபையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சபையை நடத்துவார்.
சென்னை:

சட்டசபையில் கடந்த மாதம் 18-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

அப்போது பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ், ஓ.பன்னீர் செல்வம் அணியினர் வற்புறுத்தினர். இதை சபாநாயகர் தனபால் ஏற்கவில்லை. இதனால் அமளி ஏற்பட்டு 2 முறை சபை ஒத்தி வைக்கப்பட்டது.

இதன் பிறகு தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை வெற்றி பெற்றது.

இது தொடர்பாக கவர்னர் வித்யாசாகர் ராவிடம் தி.மு.க. புகார் செய்தது. அதன் பிறகு தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு அளித்தனர். சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என்று அறிவிக்க கோரினர்.

இதைத்தொடர்ந்து கடந்த 9-ந் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் சபாநாயகரை நீக்க கோரும் தீர்மானத்தை கொண்டு வருவதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடருக்காக சட்டசபை கடந்த 16-ந் தேதி கூடியது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து சபாநாயகரை நீக்க கோரும் தீர்மானம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த சபாநாயகர் தனபால், கடந்த 9-ந்தேதி கடிதம் தந்துள்ள நிலையில் 14 நாட்கள் கழித்து இதை எடுக்க வேண்டும். எனவே இந்த கூட்டத்தொடரிலேயே தீர்மானத்தை எடுத்துக் கொள்கிறேன் என்றார்.


இதன்படி இன்றுடன் (22-ந்தேதி) 14 நாட்கள் நிறைவு பெறுகிறது. எனவே நாளை (23-ந் தேதி) சட்ட சபையில் சபாநாயகர் தனபாலை நீக்க கோரும் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அப்போது சட்டபையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நடத்துவார்.

அப்போது தீர்மானத்தின் மீது பேசுவதற்கு முதலில் தி.மு.க.வுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

இதே போல் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சியும் பேச வாய்ப்பு கேட்டால் அதற்கும் அனுமதி கொடுக்கப்படும்.

அதன் பிறகு தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும். ரகசிய வாக்கெடுப்புக்கு பேரவை விதியில் இடமில்லை என்பதால் குரல் அல்லது டிவி‌ஷன் வாரியான வாக்கெடுப்பு முறையில் முடிவு அறிவிக்கப்படும்.

Similar News