செய்திகள் (Tamil News)

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் மண்ணின் மைந்தன் மதுசூதனனை வெற்றி பெற செய்யுங்கள்: ஓ.பி.எஸ்.

Published On 2017-04-06 10:55 GMT   |   Update On 2017-04-06 10:55 GMT
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் மண்ணின் மைந்தனான அண்ணன் மதுசூதனனை ஆதரித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓபன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளராக கழக அவைத் தலைவர் இ.மதுசூதனன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து இரட்டை மின் விளக்கு கம்பம் சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

பிரசாரத்தின்போது உங்கள் வீட்டு பிள்ளையான என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று வீடு வீடாக சென்று பெண்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளர் இ.மதுசூதனனை ஆதரித்து தொகுதி முழுவதும் வீதி வீதியாக திறந்த ஜீப்பில் சென்று பல்வேறு கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரசாரத்தின்போது அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை மின் விளக்கு கம்பம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொண்டார்.

முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளர் இ.மதுசூதனனை ஆதரித்து 43-வது மேற்கு வட்டம் கும்மாளம்மன் கோவில் தெரு, தாண்டவராயன் தெரு, தண்டையார்பேட்டை மார்க்கெட் சந்திப்பு உள்பட பல்வேறு இடங்களில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். பிரசாரத்தின் போது அவர் பேசுகையில், “இத்தேர்தல் பணத்துக்கும் பாசத்துக்கும் நடக்கும் தேர்தல். எதிரணியினர் பண பலத்தால் ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களது கனவு நிச்சயம் பலிக்காது.

அம்மாவின் ஆசி பெற்ற எங்களுக்கு தான் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் வாக்களிப்பார்கள். இங்கு போட்டியிடும் அண்ணன் மதுசூதனன் அம்மாவின் ஆசியையும் அன்பையும் பெற்றவர். புரட்சித்தலைவரிடம் விசுவாசம் கொண்டவர். அம்மாவின் அமைச்சரவையில் இடம் பெற்று தொகுதி மக்களின் ஏராளமான கோரிக்கைகளை நிறைவேற்றி தந்தவர்.

தொகுதி மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அம்மாவிடம் கேட்டு பெற்று தந்தவர். மண்ணின் மைந்தனான அண்ணன் மதுசூதனை இரட்டை மின் விளக்கு கம்பம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், பொன்னையன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மற்றும் கே.ஏ.ஜெயபால், வடசென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓ.பன்னீர்செல்வம், வேட்பாளர் இ.மதுசூதனன் ஆகியோர் சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் மாடிகளில் நின்று பூக்களை தூவி வரவேற்றனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பொதுமக்கள் அம்மா ஆட்சியில்தான் இத்தொகுதிக்கு பல்வேறு நன்மைகள் கிடைத்தது. மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது. எனவே அம்மாவின் ஆசி பெற்ற மதுசூதனனுக்கு இரட்டை மின் விளக்கு கம்பம் சின்னத்தில் வாக்களிப்பதாக உறுதி அளித்தனர்.

Similar News