செய்திகள் (Tamil News)
டிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு
டிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேர் அ.தி.மு.க. கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். #ADMK #TTVDhinakaran
சென்னை:
அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்குப் பிறகு டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் தனித்து செயல்பட்டு வருகிறார். அத்துடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை தோற்கடித்து தனது செல்வாக்கை காட்டியுள்ளார். இதையடுத்து, டிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டு வருகின்றனர்.
அவ்வகையில், காஞ்சிபுரம் மத்தியம், வேலூர் மேற்கு, கடலூர் கிழக்கு, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 9 நிர்வாகிகளின் கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மத்திய மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம். கோதண்டபாணி, வேலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணிப் பொருளாளர் பொறுப்பிலும், குடியாத்தம் தொகுதி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பிலும் இருக்கும் திருமதி சி. ஜெயந்தி பத்மநாபன்,
கடலூர் கிழக்கு மாவட்டம், விருத்தாசலம் நகரக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.டி.கலைச்செல்வன், தேனி மாவட்ட மருத்துவ அணி துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் கே. கதிர்காமு, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன், சிவகங்கை மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் எஸ்.மாரியப்பன் கென்னடி,
ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் எஸ்.முத்தையா அவர்களும், தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.சுந்தரராஜ், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஒன்றியக் கழக இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திருமதி கு.உமாமகேஸ்வரி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #ADMK #TTVDhinakaran #tamilnews