செய்திகள் (Tamil News)

பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு வெளிநாடுகள் மீது பழி சுமத்தக்கூடாது - கமல்ஹாசன்

Published On 2018-05-21 08:30 GMT   |   Update On 2018-05-21 08:30 GMT
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு வெளி நாடுகள் மீது பழி போட்டு விட்டு தப்பிக்கக்கூடாது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். #KamalHaasan #Petrol #Diesel

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று கேரளாவில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள சென்றார். அப்போது கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனை சந்தித்தார்.

இன்று சென்னை திரும்பிய கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து இருக்கிறது. இதை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி வெளி நாடுகள் மீது பழி போட்டு விட்டு தப்பிக்கக்கூடாது.

குமரி மாவட்ட மீனவர்கள் பிரச்சனையை அரசு முறையாக கவனிக்க வில்லை. இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் தேவை என்ன என்பதை கேட்டு அறிந்து செயல்பட வேண்டும். அவர்களுடன் கலந்துரையாடினால் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்.

அரசு ஏற்கனவே அறிவித்துள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதன் பிறகு புதிய திட்டங்களை அறிவித்து நிறைவேற்ற வேண்டும்.


தற்போது குடிநீர் பிரச்சனை எழுவதாக கூறினீர்கள். கிராமசபை சிறப்பாக செயல்பட்டால் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எளிது. வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கிராம மக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும். இதை நாங்கள் வற்புறுத்தி வருகிறோம்.

அடுத்த மாதம் கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி மாநாடு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறேன். அவர் தான் தேதி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #Petrol #Diesel

Tags:    

Similar News