செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால்தான் என் உயிர் அடங்கும்- வைகோ

Published On 2018-05-25 09:06 GMT   |   Update On 2018-05-25 09:06 GMT
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால் தான் தன் உயிர் அடங்கும் என்று நெல்லையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார். #SterliteProtest #BanSterlite #Vaiko
நெல்லை:

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நெல்லையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு திட்டமிட்ட சதி. போராட்டத்தில் ஒரு போலீசாருக்கு கூட உயிர் சேதம் ஏற்படவில்லை என்பதில் இருந்தே திட்டமிட்ட சதி என்பது தெரிகிறது. சீருடை இல்லாமல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கி சூட்டிற்கு நியாயம் கூறவே வாகனங்களை போலீசாரே தீ வைத்துள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் தீ வைத்ததும் போலீசாரும் அதிகாரிகளும் தான். ஆஸ்பத்திரியில் காயம் அடைந்தவர்களை பார்க்கவிடாமல் அவர்கள் உறவினர்கள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தியுள்னர்.

நான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 1996-ம் ஆண்டு முதல் போராடி வருகிறேன். இதற்காக 6 முறை கைது செய்யப்பட்டுள்ளேன். 7 முறை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியுள்ளேன். 3 முறை மறியல் செய்துள்ளேன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அதை மூடும் உத்தரவை பெற்றேன். அதை சுப்ரீம் கோர்ட் திறக்க உத்தரவிட்டது. இப்போது இந்த அரசு ஆலையை மூடுவதாக அறிவித்துள்ளது கண்துடைப்பு நாடகம். 15 நாட்கள் மட்டும் மூடிவிட்டு மீண்டும் திறந்து விடுவார்கள். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான கலெக்டர், எஸ்.பி.யை பணியிட மாற்றம் செய்தால் போதாது. அவர்களை பணியிடை நீக்கம் செய்யவேண்டும். சுதந்திர போராட்டத்தில் வ.உ.சி.கைது செய்யப்பட்ட போது ஏற்பட்ட புரட்சி தற்போது ஏற்பட்டுள்ளது.


ஆலையை மீண்டும் திறந்தால் ஸ்டெர்லைட் ஆலை முன்பு சென்று போராடுவோம். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு கைது செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால் தான் என் உயிர் அடங்கும். நிரந்தரமாக மூடும்வரை இளைஞர்கள் போராடவேண்டும்.

முதல்வர் சென்னையில் இருந்து பேசுவதைவிட தூத்துக்குடி வந்து மக்களை பார்க்க வேண்டும். தமிழ் மண்ணை காக்க கட்சி பாகுபாடு இல்லாமல் வீரமாக போராடுகிறார்கள். அவர்களுடன் நானும் இணைந்து போராடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார். #SterliteProtest #BanSterlite #Vaiko
Tags:    

Similar News