செய்திகள்

தங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் வக்கீல் மனு

Published On 2018-06-22 07:41 GMT   |   Update On 2018-06-22 07:41 GMT
நீதிபதியை பற்றி கடும் விமர்சனம் செய்துள்ள தங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று ஐகோர்ட்டு வக்கீல் சூரிய பிரகாசம் தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பி உள்ளார். #ThangaTamilSelvan

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை. அவரை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கதமிழ்ச்செல்வன் உள்பட 18 பேர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்திருந்தார்.

இதை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறி இருந்தனர்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் எடுத்த நடவடிக்கை செல்லும் என்று கூறி இருந்தார். மற்றொரு நீதிபதியான சுந்தர் அளித்த தீர்ப்பில் சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று கூறி இருந்தார்.

நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு பற்றி சமூக வலை தளங்களில் மட்டுமின்றி பல்வேறு கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்திருந்தனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் தலைமை நீதிபதியின் தீர்ப்பை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.


அரசுக்கு ஆதரவாக தலைமை நீதிபதி செயல்படுகிறார். கோர்ட்டில் இனி நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. அதனால் வழக்கை வாபஸ் பெற போகிறேன் என்று கூறி இருந்தார். மேலும் பல்வேறு கருத்துக்களையும் வெளிப்படுத்தினார்.

இது தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று ஐகோர்ட்டு வக்கீல் சூரிய பிரகாசம் தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பி உள்ளார். மேலும் தலைமை பதிவாளர் சக்திவேலை நேரில் சந்தித்தும் மனு கொடுத்துள்ளார்.

தலைமை நீதிபதியை பற்றி கடும் விமர்சனம் செய்துள்ள தங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு தாமாக முன்வந்து அவதூறு வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் அல்லது எனது மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறி உள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா? இல்லையா? என்பது விரைவில் தெரிய வரும். #ThangaTamilSelvan

Tags:    

Similar News